news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு (23-02-2025) (மூன்றாம் ஆண்டு) 1சாமு 26:2,7-9,12-13,22-23; 1கொரி 15:45-49; லூக் 6:27-38

திருப்பலி முன்னுரை

அன்றாடம் அனைவரையும் அன்பு செய்து, நாம் பேறுபெற்ற மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பகைவருக்கு அன்பைக் கொடுக்கவும், வெறுப்போருக்கு நன்மை செய்யவும், சபிப்போருக்கு ஆசி வழங்கவும், இகழ்ந்து பேசுவோருக்காக இறைவேண்டல் செய்யவும், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டவும்எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுக்கவும், இரக்கத்தோடு வாழவும், மன்னிப்பு கேட்க முந்திக்கொள்ளவும், எவரையும் தீர்ப்பிடாமல் இருக்கவும் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இந்த மதிப்பீடுகளின்படி வாழ்ந்தாலே நாம் வாழும் இடம் சொர்க்கமாகிவிடும். இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த மிகப்பெரிய கொடை! நாளை என்பது நமது கரங்களில் இல்லை. அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்வோம். ஒவ்வொரு நாளும் அடுத்திருப்போருக்கு நன்மை செய்வதில் கவனமாய் இருப்போம். இயேசுவின் அன்பை அனுதினமும் சுவைத்து, அதை அனைவருக்கும் கொடுக்கும் செயல்வீரர்களாக மாறுவோம். கடவுளிடமிருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற்றுக்கொண்ட நாம், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழ்வோம். நாம் எதை விதைக்கிறோமோ அதை மட்டுமே அறுவடை செய்வோம். நற்செயல்களை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

தனக்கு இன்னாது செய்த சவுலை வெறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய முற்படவில்லை. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்கள் அவருக்குரியவர்கள். அவர்கள் பணிவாழ்வில் துணையாய் இருப்பது நமது கடமை. இறைவனின் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை இறைவனே காப்பார் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஒருவர் தம்மை ஆதாமின் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார். ஆதலால், கிறிஸ்துவின் இயல்பில் வாழும்போது, பேறுபெற்ற மக்களாக ஆசிர்வதிக்கப்படுகிறார். திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட நாம் இறுதிவரை அவரோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பின் இறைவா! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த இவர்களின் பணிவாழ்விற்கு நாங்கள் துணையாய் இருக்கவும், அவர்களின் துன்ப நேரங்களில் துணையிருக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) எம்மோடு வாழும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களுக்கும், பங்கிற்கும்  நீர் செய்த அனைத்து வல்ல செயல்களுக்காகவும் நன்றி கூறுகின்றோம். எங்களின் சிந்தனை, சொல், செயல்களால் அடுத்திருப்போருக்கு நன்மைகளை மட்டும் செய்து, பேறுபெற்ற மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) எம்மை நேசிக்கும் ஆண்டவரே! இன்றைய திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைவார்த்தையையும், மறையுரையையும் கேட்கும் நாங்கள் அவற்றின்படி வாழவும், தகுந்த தயாரிப்போடு திருப்பலியில் பங்குகொள்ளவும், ஒப்புரவு என்ற அருளடையாளத்தால் எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கி தூய மக்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எமது குடும்பத்திற்கு ஆசிர்வாதமாய் நீர் கொடுத்த எமது குழந்தைகளுக்காய் நன்றி கூறுகின்றோம். அவர்களை ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையிலும் இறைஞானத்திலும் நாங்கள் வளர்க்கவும், அழைத்தல் என்ற உன்னதக் கொடையின் முக்கியத்துவத்தை அவர்கள் மனத்தில் விதைக்கவும் தேவையான வரத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 17:5-8; 1கொரி 15:12,16-20; லூக் 6:17,20-26

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம்  ஆறாம் ஞாயிறு, பேறுபெற்ற மக்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுபேறுபெற்ற மக்கள் யார்?’ என்பதையும், ‘சாபத்துக்குரிய மக்கள் யார்?’ என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோம்; இறைவனும் நாம் மகிழ்வுடன் வாழ்வதையே விரும்புகிறார். எளிமை, பசி, வருத்தம், கண்ணீர், வெறுப்பு ஆகியவற்றால் வாடும் மக்களைப் பார்த்துநீங்கள் பேறுபெற்றவர்கள்என்கிறார். காரணம் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், பசியால் வாடுவோர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மனிதர்களை அல்ல; மாறாக, கடவுளை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். இறைவன் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இறைவன்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கைதான் அவர்களை அன்றாடம் வாழ வைக்கிறது. பணம், பதவி, பட்டம், பகட்டு, வீண்பெருமை, ஆடம்பரம், சொத்து சேர்த்தல், மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி காணுதல், மற்றவர்களை ஏளனமாகப் பேசுதல், பணத்தை வைத்து மனிதர்களை எடைபோடுதல், ஆடை ஆபரணங்களைப் பார்த்து மரியாதை கொடுத்தல்பகிர்ந்து கொள்ளாமையார் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று வாழும் மந்த உள்ளம் போன்ற குணங்களைக் கொண்டோர் பேறுபெற்ற மக்களாக வாழும் தகுதியை இழந்துவிட்டனர் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நம் மனம் கோவிலானால் அது நமக்கு நல்லது; நம் குணம் கோவிலானால் அது அனைவருக்கும் நல்லது. நமது மனத்தையும், குணத்தையும் பலருக்கு மன அமைதி கொடுக்கும் கோவிலாக மாற்றுவோம். நாமும் பேறுபெற்றவர்களாக, இறைவனின் ஆசி பெற்ற மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்பிக்கை என்ற சொல் மட்டுமே மனிதனின் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. சிலர் மனிதர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்கிறார்கள். ஏமாற்றம் அடையும்போது மிகுந்த வருத்தம் அடைந்து வாழ்வையே இழக்கிறார்கள். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காமல் காத்து வரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்போது, நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். ஆண்டவரே அவர்களது நம்பிக்கை என்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கொரிந்து நகர மக்களை அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்துவின் உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் அன்றாடம் வளர வேண்டும். இறந்து உயிருடன் எழுப்பப்பட்டு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) எங்களோடு வாழும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். நீர் அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்த அழைத்தல் வாழ்வில் உம்மை அனுதினமும் அனுபவித்து வாழவும், இயேசுவின் மதிப்பீடுகளை விதைத்து வாழவும் தேவையான வரத்தைத் தந்து காத்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களின் மீது நம்பிக்கை வைக்காமல், உண்மைச் செல்வமாகிய உம்மில் நம்பிக்கை வைத்து வாழவும், அனைத்து நிலைகளிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ந்துவிடாமல் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ‘உங்களைக் கைவிடமாட்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! இந்த யூபிலி ஆண்டில் எங்களிடம் உள்ள அன்பு, கருணை, இரக்கம், உடனிருத்தல் போன்ற பண்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து, துன்பப்படும் அனைவருக்கும் துணை நிற்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். எம் தலைவர்கள் தன்னலம் மறந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும்மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும், நாட்டில் வன்முறை ஒழிந்து மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழவும், விவசாயமும், விவசாய மக்களின் வாழ்வும்  செழிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 9, 2025, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 6:1-8; 1கொரி 15:1-11; லூக் 5:1-11

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு ஆண்டவரின் கரம் பற்றி வாழ  ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஆண்டவருக்குள் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம்ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறோம்என்கிறார். அப்படியே செய்து பெருந்திரளான மீன்களைப் பிடிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள், துயரங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், புரிந்துகொள்ளாத நிலைகள் போன்ற நேரங்களில் நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று பயணிப்போம்; அப்போது  நம்முடைய வாழ்க்கையிலும் ஏராளமான அற்புதங்களைக் காண்போம். அன்றாடம் அளவற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். மனநிறைவோடு ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய் விடும்என்கிறார். சீமோன் பேதுரு அறிக்கையிட்டது போல நமது இயலாமையை நினைத்துஆண்டவரின் பாதத்தில் அறிக்கையிட்டுச் சரணடைவோம். நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதையெல்லாம் விடுத்து அனைத்தையும் நல்லதெனக் காண்போம்.   உலகச் செல்வங்களைவிட உன்னதச் செல்வமாகிய இயேசுவைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அளவில்லாத  அருள்வரங்களைக் கொடுக்க நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இறைவனிடம் நம்மையும், நம் பங்கிலுள்ள குடும்பங்களையும் ஒப்புக்கொடுத்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

எலியா தன்னுடைய குறையை உணர்கின்றார். ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகின்றார். தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். ‘இதோ என்னை அனுப்பும்என்று சரணடைகின்றார். அழைப்பு என்பது குருக்கள், துறவியருக்கு மட்டுமல்ல; மாறாக, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நம் அனைவருக்குமே உரியதுஅழைப்பின், அர்ப்பணிப்பின் மகத்துவத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய பவுல், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன்என்கிறார். இந்த மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய அறிவால், ஆற்றலால் அல்ல; மாறாக, இறைவன் கொடுத்த அருளால்தான் வாழ்கிறோம். அவரின் அருளில் நிலைத்து, திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உம் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அழைத்தலின் மகத்துவம் அறிந்து காலத்தின் தேவைக்கேற்ப கருத்தாய் பணிபுரிய தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, மக்கள் நலனைக் கண்முன் கொண்டு வாழவும், போர், வறுமை, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அன்பும், மன்னிப்பும், மனிதநேயமும் கொண்ட வார்த்தைகளைப் பேசவும், எம் வாழ்வுக்கு ஒளியாக இருக்கும் இறைவார்த்தையைப் படித்து, சிந்தித்து அதனை வாழ்வாக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அளவின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! நீர் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நன்றிகூர்கின்றோம். ஆலயத்தில் மட்டும் உம்மைத் தேடாமல் அடுத்தவரிலும் உம் முகம் கண்டு மகிழவும், ‘நான், ‘எனது, ‘எனக்குஎன்பதிலிருந்து விடுபடவும், இருப்பதில் நிறைவு காணவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 2, 2025, ஆண்டின் பொதுக்காலம்; 4 ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 3:1-4; எபி 2:14-18; லூக் 2:22-40 - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

திருப்பலி முன்னுரை

இன்று அன்னையாம் திரு அவை ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த நாளைச் சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு என்ற ஒளியைக் கையில் ஏந்தியவுடன், சிமியோன் மீட்பைக் கண்டுகொள்கின்றார். அவ்வாறே திருமுழுக்கு என்ற ஒளியால் நாம் ஆண்டவரின் மக்களாக  இணைக்கப்பட்டுள்ளோம். அன்றாடம் திருப்பலியின் வழியாக இயேசுவை நாம் சுவைத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசுவை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவை? சிந்திப்போம். மேலும், இன்று துறவியர் தினத்தைக் கொண்டாட திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. திரு அவையில் பணிபுரியும் அனைத்துத் துறவியர்களையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்கவும், பணி வாழ்வில் உடன் பயணிக்கவும், இறையழைத்தல் பெருகவும் செபிப்போம். நம் குழந்தைகளை மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக மாற்றவேண்டும் என்று நினைப்பதோடு, அதற்காக அன்றாடம் உழைக்கின்றோம். ஆனால், நமது குழந்தைகளை அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணிசெய்வதற்கு அனுப்ப நாம் முயற்சி எடுத்துள்ளோமாமீட்பின் ஒளியைக் கையில் ஏந்தியுள்ள நாம் ஒளியின் மக்களாக வாழ்ந்து, இயேசு என்ற ஒளியை அகத்தில் ஒளிர்வித்து, உண்மைச் சீடர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்என்கிறார் படைகளின் ஆண்டவர். நமது வாழ்வும் வார்த்தையும் எப்போதும் ஆண்டவரை அறிவிப்பதாக இருக்க வேண்டும். ஆண்டவர் எப்போதும் நம்முடன் பயணிக்கிறார் என்று கூறி, ஆண்டவரில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவர் பணியை நாம் செய்யத் துவங்கும் போது அவர் நம் அருகில் இருப்பார். அனைத்துவித மான நன்மைத்தனங்களாலும் நம்மை நிரப்புவார். நாம் கேட்பதற்கு மேலாக நமக்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்தும் இறைவனின் பேரன்பில் திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பு ஆண்டவரே! உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும்அவர்கள் அனைவரும் அழைத்தலின் மகத்துவத்தையும் நோக்கத்தையும் அன்றாடம் அறிந்து, உமது வழியில் பயணிக்கத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் பங்கிற்கும் குடும்பத்திற்கும் நீர் கொடையாகக் கொடுத்த எமது குழந்தைகளுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். ஒவ்வொரு நாளும் இறைப்பற்றிலும் இறைநம்பிக்கையிலும் அவர்கள் வளரவும், அவர்கள் எதிர்காலம் சிறக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ஒளியின் ஊற்றே எம் இறைவா! ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த இந்த நாளில் எங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மில் வாழவும், இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, அன்பு, நீதி, உண்மை, நேர்மை போன்ற பண்புகளில் நாளும் வளர்ந்து சான்றுபகரத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் இறைவா! துறவியர் தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில் உலகில் உள்ள அனைத்துத் துறவியரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதியும். அவர்களுடைய பணிவாழ்வில் நாங்கள் துணையாக இருக்கவும், எமது குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு இறையழைத்தலை ஊக்குவிக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 26, 2025 ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - நெகே 8:2-4,5-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21

திருப்பலி முன்னுரை:

இயேசுவின் பணிவாழ்வில் பங்குகொண்டு, உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ  ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஏழைகளிடமிருந்துதான் தம்முடைய பணிவாழ்வை ஆரம்பிக்கிறார். இன்றைய நற்செய்திப் பகுதி வழியாக இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தைத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார். நாமும் ஏழைகள், வறியோர், ஒதுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், இயலாதோர் அனைவருக்கும் துணையாக இருப்போம். ஆண்டவரின் அருள்தரும் ஆண்டான இந்த யூபிலி ஆண்டிலே எவரையும் தனித்துவிடாமலும் உறவைக் கொடுப்பவர்களாகவும், சமத்துவத்தை விதைப்பவர்களாகவும், அனைவரையும் அன்பு செய்பவர்களாகவும், தேடிச்சென்று உதவுபவர்களாகவும், உண்மை உடையவர்களாகவும், கடவுளின் கருணையை நினைத்து நன்றி சொல்பவர்களாகவும், இருப்பதில்  நிறைவு கொண்டவர்களாகவும் வட்டிக்குக் கடன் கொடுக்காதவர்களாகவும் யாரையும் அடிமைப்படுத்தாதவர்களாகவும் மற்றவர்களைப் பற்றி நல்லது மட்டும் பேசுபவர்களாகவும் வாழ்வோம். அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் கண்டு வாழ இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் குரு எஸ்ரா திருச்சட்ட நூலைத் திறந்தபோது மக்கள் கடவுளின் மாட்சியைத் தங்கள் நடுவில் உணர்ந்தனர். அதை வாசிக்கக் கேட்ட பொழுது அழுதார்கள் என்பதைக் கேட்கும்போது நமக்குள்ளும் ஒரு கேள்வி எழுகிறது. நற்செய்தி நூலைத் திறக்கும்போதும் அதை வாசிக்கும்போதும் இதுபோன்ற இறைப் பிரசன்னத்தை உள்ளூர உணர்கின்றோமா? ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை. ஆண்டவருக்குள் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உடலின் உறுப்புகள் பலவாயினும், உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறோம். வாய் உண்ணக் கை உதவுகிறது. கால் நடக்க கண் வழி காட்டுகிறது. உடலில் எங்கே காயப்பட்டாலும் கண் அழுகிறது. பல்லுக்கும் நாவுக்கும் பகைமை என்றால் பேச்சு ஏது? உடலில் உள்ள அங்கங்கள் அனைத்தும் சங்கமத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்துவின் உறுப்புகளாகச் செயல்பட்டு உறவுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:

1) இரக்கமே உருவான இறைவா! தாயாம் திரு அவையை வழிநடத்தும் எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களை  அர்ப்பணித்துக்கொண்ட இவர்கள்  கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டவும், வாழ்க்கையால் மற்றவர்களுக்குப் போதிக்கவும் தேவையான  அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) அன்பின் இறைவா! மனிதரில் எத்தகைய வேற்றுமையும் பாராமல், உலகில் உள்ள அனைவரும் முக்கியமானவர்கள் என்று கருதி சாதி, சமயம், மொழி, இனம், பொருளாதாரம், அறிவுசார்ந்த வேறுபாடுகள் அனைத்தையும்  களைந்து அனைவரோடும் இணைந்து வாழ்ந்து, ஒற்றுமையின் இறையரசைக் கட்டியெழுப்பிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) அன்பின் இறைவா! எசாயா தன் இறை வாக்கின் வழியாக உம் திருமகன் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை அறிந்து அறிவித்தது போல நாங்களும் எங்களுக்கான இறைத் திட்டத்தை ஆவியாரின் உதவியால் சிந்தித்து, தேர்ந்து தெளிந்து அதன்படி வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் இறைவா! குடியரசு தின விழாவைக் கொண்டாடும் எம் தாய்நாட்டை ஆசிர்வதியும்தலைவர்கள் தங்களின் சுயநலப் போக்கினால் ஆட்சி செய்யாமல், பரந்துபட்ட அறிவோடு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஆட்சி அமைத்திடவும், மக்கள் இன்புற்று வாழ வழிகாட்டவும் தேவையான  அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 62:1-5; 1கொரி 12:4-11; யோவா 2:1-12

திருப்பலி முன்னுரை: இன்றைய நாள் இறைஇயல்பில் வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு ஏழை, எளிய மக்களுக்காக இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்குப் பணித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றினார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார். இதுதான் இயேசு தம்முடைய பணியைத் தொடங்கியவுடன் செய்த முதல் அருளடையாளம். திருமண விருந்தில் குறைவை நிறைவாக்கி மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்.  நம்முடைய வாழ்க்கை அன்பு, மன்னிப்பு, இரக்கம், உடனிருத்தல், நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களால் நிரப்பப்படும்போது, நம்முடைய வாழ்விலும் அருஞ்செயல்கள் கட்டாயம் நடக்கும். அன்னை மரியா தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பறிந்து உதவி செய்பவர் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு.  அன்னை மரியாவின் துணையை அன்றாடம்  நாடுவோம். அவர் நமக்காகத் தன்னுடைய மகனிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார். ஆகவே, நமது விருப்பங்களை விடுத்து இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். இந்த யூபிலி ஆண்டிலே  நீண்ட நாள்களாக அமைதியில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு நமது உடனிருத்தலால் அமைதியைக் கொடுப்போம். அப்போது அன்னை மரியின் அரவணைப்பும், இயேசுவின் வழிகாட்டுதலும் நமக்கும், நமது பங்கிலுள்ள குடும்பங்களுக்கும் நிறைவாகக் கிடைக்கும். அத்தகைய அருள் வேண்டி இத்திருப்பலியில் பங்கெடுப்போம்!

முதல் வாசகம் முன்னுரை: கடவுள் இறைவாக்கினர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு எப்சிபா, பெயுலா என்ற புதிய பெயர்களைச் சூட்டி, அவர்களிடமிருந்த பழைய கறைகளைப்போக்கி மகிழ்விக்க இன்றே, இப்பொழுதே வரும் கடவுளாக வெளிப்படுகிறார். “ஆண்டவன் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்என்று இஸ்ரயேல் மக்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டு அவர்களுக்கு ஆசிர் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: தூய பவுல், ‘ஆவியானவர் ஒருவரே! அவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறமைகளை அளிக்கிறார்அதைச் செயலாக்கம் செய்பவரும் அவரே. வரங்களைப் பெற்றுக்கொண்ட நாம் அதை சுயநலத்திற்காக, பெருமைக்காக, புகழுக்காகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, மற்றவர்கள் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்று கூறுகின்றார். நாம் பெற்றுக் கொண்ட வரங்களின் மகத்துவம் அறிந்து வாழ அழைக் கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள், இறைமக்கள் அனைவருக்கும் நம்பிக்கை செய்தியையும், இறைவனின் நல்வாக்கையும் எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களாக வாழவும், பணிவாழ்வில் இடையூறுகள் ஏற்படும்போது அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற உத்வேகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. காத்து வழிநடத்தும் இறைவா! நீர் எங்கள்மீது கொண்டுள்ள அன்பினால் எங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள வரங்களையும் கொடைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், உமது மகிமைக்காக உழைக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களோடு வாழும் இறைவா! கானாவூர் திருமண வீட்டில் தீர்ந்துவிட்ட திராட்சை இரசம் குறித்து  அக்குடும்பத்தார்மீது அக்கறை கொண்ட உம் தாய் உம்மிடம் பரிந்துரைத்து உதவி செய்ததைப்போல நாங்களும் மற்றவர்கள் துன்பத்தைக் கண்டு  மனமுவந்து உதவி செய்திடும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்களை அன்பு செய்யும் ஆண்டவரே! அன்னை மரியா கூறியஅவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்ற வாக்கை எமதாக்கி, அன்றாடம் இறைவார்த்தையை வாசித்து, அவை காட்டுகின்ற வழியில் நடக்கவும், இயேசுவின் அளவற்ற அன்பை நாங்கள் சுவைத்து, மற்றவர்களும் சுவைக்கச் செய்திட தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.