news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (15-12-2024) - செப் 3:14-18; பிலி 4:4-7; லூக் 3:10-15

திருப்பலி முன்னுரை:

அன்பான இறைமக்களே! இன்று திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. அன்னையாம் திரு அவை ஆண்டவருக்குள் மகிழ்வோடு வாழவும், மற்றவருக்கு மகிழ்வை வழங்கிடவும்மகிழ்ச்சி என்ற திரியை உள்ளத்தில்  ஒளிர்விக்க நம்மை அழைக்கிறது. இன்றைய நற்செய்தியானது ஆண்டவர் இயேசுவின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தனக்குத் தகுதியில்லை என்று கூறி, திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்திக் கொண்டதையும்தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஆண்டவரை முன்னிலைப்படுத்தியதையும், ‘நான் ஒளி அல்ல; ஒளியைக் குறித்து சான்றுபகர அனுப்பப்பட்டவர் என்பதைத் தயக்கமின்றி முழக்கமிட்டதையும் சிந்திக்க அழைக்கிறது. இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானைப் போன்று நாம் நம்மைத் தாழ்த்தும்போதும், நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழும்போதும், ‘நான் என்பதை விடுத்து, ‘நாம் என்று வாழும்போதும், அனுதினமும் திருப்பலியில் தூய உள்ளத்துடன் ஆண்டவரைச் சுவைக்கும்போதும், உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும்போதும், எவரிடத்தும் பகைமை பாராட்டாத தூய உள்ளத்துடன் வாழும்போதும் நமது உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எனவே, மகிழ்ச்சியை வெளியே தேடாமல் நமக்குள்ளே தேடுவோம். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். எனவே, மகிழ்ச்சியை மற்றவர்கள் வாழ்வில் விதைத்து, நாமும் மகிழ்ந்திருக்க   வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம்மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்  என்று கூறி ஆண்டவரில் மகிழ்ந்திருக்க நம்மை அழைக்கிறது. ஆயிரம் முறை தவறுகள் செய்து, அண்டிவரும்போதெல்லாம் அணைக்கின்ற தெய்வத்தின் மீட்பு பற்றியும், அவரது உடனிருப்பு பற்றியும் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

பொன், பொருள், பட்டம், பதவி, வசதியான வாழ்க்கை இவற்றை நினைத்து அதிகமாகவே நாம் கவலைப்படுகின்றோம். நாளைய தினத்தைப் பற்றி அதிகமாகக் கவலைகொண்டு இன்றைய தினத்தை அனுபவித்து வாழ மறந்து விடுகின்றோம். உங்கள் கவலைகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுங்கள், ஆண்டவர் அண்மையில் உள்ளார்; எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி நம் வாழ்க்கைக்குப் பலம் கொடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. எம்மைக் காக்கும் ஆண்டவரேதிரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்  அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மை, நீதி, நேர்மை போன்ற மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, அதன் வழியில் மக்களை வழிநடத்தவும், அழைத்தல் வாழ்வில் ஞானத்தோடு பணி செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2, எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! கிறித்தவ மக்கள் அனைவரும் செபத்தில் நிலைத்திருந்து அனுதினமும் உமக்கு நன்றி கூறி, மகிழ்ச்சியோடு வாழ்ந்து, தங்கள் உடலையும், உள்ளத்தையும் குற்றமின்றிக் காக்க தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இமைப்பொழுதும் எம்மை விட்டு நீங்காத ஆண்டவரே! கிறிஸ்துவின் வருகையானது நோயாளிகளுக்கு உடல் நலத்தையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், மனச்சோர்வோடு வாழ்பவர்களுக்கு மனபலத்தையும், நம்பிக்கையின்றி வாழ்பவர்களுக்கு நம்பிக்கையையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! எம் பங்கில் வாழும் இளைஞர்-இளம்பெண்கள் அனைவரும் தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைந்து போகாமல், ஆன்மாவைக் காக்கவும், திருமுழுக்கு யோவானைப்போல் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு - 08-12-2024 (3-ஆம் ஆண்டு) பாரூக் 5:1-9; பிலி 1:4-6, 8-11; லூக் 3:1-6

திருப்பலி முன்னுரை

இன்று திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. அமைதி என்ற ஒளியை நம் அகத்தில் ஒளிர்விக்கும் வாரம். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்கவும், அவருக்காகப் பாதையைச் செம்மையாக்கவும் நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குவது என்பது நமது உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மை செய்வதாகும். நமது உள்ளத்தில் உள்ள கோபம், பகை, ஆணவம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றை அகற்றி, அமைதி என்ற விதையை விதைப்போம். அமைதி நிலவும் உள்ளத்தில்தான் அனைத்து நலன்களும் பெருகும். அமைதி இல்லாத உள்ளம் அழிவுக்கு வித்திடும். மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்ப்போம்; பகையை மறந்து மன்னிப்பு அருள்வோம். நல்லது செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நமக்குத் தீங்கு செய்பவர்களுக்கும் நன்மையை மட்டுமே செய்வோம். அப்போது நமது உள்ளத்திலும், இல்லத்திலும், பங்கிலும் அமைதி நிலவும். அமைதியை அனைவருக்கும் கொடுத்துவாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர்எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்து விடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்து கொள்என்று கூறுகின்றார். பேராசை, ‘நான்என்ற ஆணவம், பல ஆண்டுகளாக மன்னிக்க மறுத்து வாழும் மந்த உள்ளம், மற்றவர்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியும் கலாச்சாரம் போன்ற நமது துன்ப ஆடைகளைக் களைந்து ஆண்டவர் அருளும் அமைதியைச் சுவைக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட படைப்புகள் இறைவன் தன்னை எதற்காகப் படைத்தாரோ அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவைப் பெற்ற மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் அறியாமல் இருக்கிறான். ஆகவே, இறைவனின் சாயலைப் பெற்ற நாமனைவரும் இறைவனைப் பற்றிய அறிவிலும், தேர்ந்து தெளியும் பண்பிலும் சிறப்புற வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே இறைவா! எல்லா மக்களினங்களையும் உம் திருமுன் கூட்டிச் சேர்க்கும் பணியை ஆற்றிடும் திரு அவையின் தலைவர்கள் உம்மைப் பின்பற்றி நல்ல ஆயர்களாகத் திகழ்ந்து மக்களை அமைதியின் பாதையில் வழிநடத்த தேவையான ஞானத்தைத் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணையின் தெய்வமே இறைவா! நடந்து கொண்டிருக்கும் போர்கள் முடிவு பெறவும், அனைத்து மக்களும் நீர் இவ்வுலகிற்குக் கொண்டு வந்த அமைதியை அனுபவிக்கவும், ஒருவர் மற்றவருக்கு அமைதியின் தூதுவர்களாக வாழவும் தேவையான வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதியை விதைத்த ஆண்டவரே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். எம் குடும்பங்களில் அன்பும் அமைதியும் நிலைத்திடவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டு அமைதியோடு வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்என்று மொழிந்த ஆண்டவரே! இத்திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது உடலை உணவாகப் பெற்ற நாங்கள் அனைவரும் எங்கள் சொல்லாலும், செயலாலும் அமைதியை விதைக்க வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
01.12.2024 - திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 33:14-16; தெச 3:12-4:2; லூக் 21:25-28; 34-36

திருப்பலி முன்னுரை

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. இது அன்பின் காலம்; நம்பிக்கையின் காலம்; மகிழ்வின் காலம்; இறைமகனின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் காலம். நம் அகத்தை தூய்மை செய்து மீட்பரின் வருகையை ஆனந்தமாக எதிர்நோக்கும் காலம். “தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு  நெருங்கி வருகின்றதுஎன்ற நற்செய்தி வார்த்தைக்கேற்ப நமது மீட்பரின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் அனைத்திலும், அனைவரிலும் இறைவனைக் காணவும், நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றிப் பயணிக்கவும்  இந்த முதல் வாரம் நம்மை அழைக்கிறது. இறைவன் தந்த இந்த மகத்தான திருவருகைக் காலத்தில் அனைவரையும் மன்னித்து நல்லுறவோடு வாழவும், இல்லாதவர்கள், இயலாதவர்கள் அனைவருக்கும் நமது உடனிருப்பைக் கொடுக்கவும், ஒருவர் மற்றவருக்கு உறவின் பாலமாக வாழவும், மற்றவரின் தேவை அறிந்து உதவி செய்யவும், உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு என்னும் அருளடையாளத்தால் தூய்மை செய்து, குழந்தை இயேசு தங்கும் இல்லமாக மாற்றவும், ஒருவர் மற்றவருக்கு நற்செய்தியின் தூதுவர்களாக வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்என்று ஆண்டவரின் வருகையைப் பற்றியும், அவர் கொண்டு வரும் விழுமியங்களைப் பற்றியும்  கூறுகிறது இன்றைய முதல் வாசகம். நீதியும், நேர்மையும் நலிந்து கொண்டிருக்கும் இச்சமூகத்தில், அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற கருத்தை வலியுறுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கிறித்தவ வாழ்வின் ஆணிவேர் அன்பு. கடவுள் எவ்வாறு எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் நம்மை அன்பு செய்கிறாரோ, அவ்வாறே  நாமும் நம்முடன் வாழும் சகோதர-சகோதரிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்ய வேண்டும்இத்தகைய அன்பில் நாளும் வளர வேண்டும். இந்த அன்பு வாழ்வில் குற்றமின்றித் தூய்மையாக வாழ இறைவனே நமக்குப் பலம் கொடுப்பார் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே இறைவா! திரு அவையை வழிநடத்தும்  தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும்.   அவர்கள்  உமது வார்த்தையை வாழ்க்கையால் போதிக்கவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை ஞானத்தோடு வழிநடத்தவும், அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கைக் கொண்டு வாழவும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! இந்நாள் வரை எம்மைக் காத்து வழிநடத்திய மேலான அருளுக்காக நன்றி கூறுகின்றோம். எம்முடன் வாழும் சகோதர- சகோதரிகளின் துன்ப நேரங்களில் நாங்கள் துணையிருந்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்ற வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பு இறைவா! கிறித்தவன் / கிறித்தவள் என்ற முகவரியைக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் அன்பு, அமைதி, மன்னிப்பு, சமத்துவம், சகோதரத்துவம்  போன்ற விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ தேவையான அருள்வரத்தை   தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையே இறைவா! இந்தத் திருவருகைக் காலத்தில்  வாழ்வு கொடுக்கும் உன்னத செல்வமாகிய உம்மை அதிகமாகத் தேடவும், திருப்பலி, குடும்ப செபம், அன்பியங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (24-11-2024) தானியேல் 7:13-14; திருவெளிப்பாடு 1:5-8; யோவான் 18:33-37

திருப்பலி முன்னுரை

உலகத் தலைவர்களிடையே நிலவும்யார் பெரியவர்?’ என்ற போட்டியால் உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும், போர்களும், வன்முறைகளும் பெருகியுள்ளன. மூன்றாவது உலகப் போர், உலகின் பல பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாக ஆரம்பித்துள்ளதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த நிலையில் திருத்தந்தை 11 -ஆம் பயஸ் 1925 -இல்நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்என்று அக்டோபர் கடைசி ஞாயிறு அன்று சிறப்பிக்க அழைப்பு விடுத்தார். 1960-இல் திருத்தந்தை 23-ஆம் யோவான், இதனைப் பெருவிழாவாக  அறிவித்தார். திருத்தந்தை 6 -ஆம் பவுல்நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்  என்று திருவழிபாட்டு ஆண்டின் நிறைவாகக் கொண்டாடுமாறு ஆணையிட்டார். அன்று முதல் இன்றுவரை இத்திருவிழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆயர், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கின்றோம். ஆனால், இன்று அவரை அரசராகப் பார்க்க நமக்குத் திரு அவை அழைப்பு விடுக்கின்றது. அரசனின் முதன்மையான பணி தன் ஆட்சி அதிகாரத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். எங்கு அமைதியிருக்கின்றதோ அங்கேதான் வளர்ச்சி இருக்கின்றது. அமைதியான ஆட்சிதான் நிலையான ஆட்சியாக, முடிவில்லா ஆட்சியாக அமையும். எனவே, இறைவன் தருகின்ற அமைதியான ஆட்சியில் நாமெல்லாம் நல்ல குடிமக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

தானியேல் இரவில் கண்ட காட்சி முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. இவ்வுலகத்தில் நடைபெறும் ஆட்சி மாறிக்கொண்டு வருகின்றது. அதிபர் ஆட்சி, இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எந்தக் கட்சியும் நிரந்தரமாக, நிலையான ஆட்சியை இதுவரை தந்தது கிடையாது. ஆனால், இறைவனின் ஆட்சி நிலையானது, அழியாதது என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறந்தோருள் முதலில் உயிர்த்தெழுந்தவர் கிறிஸ்துவே! அவரே இவ்வுலகில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் தலைவர். அரசர்களுக்கெல்லாம் மேலான அரசர். அவரது இரண்டாம் வருகையின் போது மேகங்கள் சூழ வருவார். எல்லாம் வல்லவராகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் வருவார். அவரது ஆட்சி உரிமையில் நாம் பங்குபெறுவோம் என்று நம்பிக்கையோடு இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வழிகாட்டும் வல்ல தந்தையே எம் இறைவா! எம்மை வழிநடத்தும் ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். அவர்களுக்குத் தேவையான ஞானத்தையும், வல்லமையையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நல்ல ஆயனாம் எம் இறைவா! எம் குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோருக்காக மன்றாடுகிறோம். குடும்பத்தை இறைவனின் பாதையில் வழிநடத்திச் செல்ல அனைத்து வரங்களையும், ஆசிரையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தலைமைக் குருவாம் எம் ஆண்டவரே! எங்களின் வாழ்வு செழிக்க உழைத்துக் கொண்டிருக்கும் எம் பங்குத்தந்தைக்காக மன்றாடுகிறோம். நீரே அவருடன் உடனிருந்து எங்களை வழிகாட்ட அருள் வல்லமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களைத் தேடி வந்து மீட்ட எம் இறைவா! நாங்கள் பாவமற்ற வாழ்வை வாழவும், பாவத்திற்கு ஏதுவான செயல்களில் நாங்கள் ஈடுபடாதவாறு எங்களைக் காக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் வாரம் (17-11-2024) - தானியேல் 12:1-3; எபிரேயர் 10:11-14.18; மாற்கு 13:24-32

திருப்பலி முன்னுரை

நாம் அவரை நேசிக்கிறோம்; ஆனால், அவரது வருகைக்குப் பயப்படுகிறோம்என்று இயேசு ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி புனித அகுஸ்தினார் கூறியுள்ளார். ஆண்டவராம் இயேசு முதல் முறை கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, நற்செய்தி அறிவித்து, பாடுபட்டு, இறந்து, உயிர்த்தெழுந்து, விண்ணேற்றம் அடைந்தார். விண்ணேறிச் சென்ற அதே ஆண்டவர் மீண்டும் வருவார் என்று இறைவார்த்தை எடுத்துரைக்கும்போது, நம்மிலே சற்று பயம், தயக்கம் ஏற்படுகின்றது. இரண்டாம் வருகையின் முதல் அறிகுறிகதிரவன் இருண்டுவிடும்.’ ‘கதிரவன் மறைந்தால் என்ன ஆகும்?’ என்று ஸ்காட் சுற்றுச் சூழல் பத்திரிகையாளர் கூறும்போது, ‘சூரியன் மறைந்தால் உடனடி இருள், வெப்பநிலை வீழ்ச்சியடையும், உயிரியல் சுழற்சி பாதிக்கப்படும், விவசாயம் இருக்காது, பசி, பட்டினி போன்றவை ஏற்படும்என்று கூறுகின்றார். இதனைக் கேட்கும்போது நமக்குப் பயமும் தயக்கமும் ஏற்படுகின்றன. கடவுளை அன்பு செய்கின்றோம் என்றால், அவருடைய வருகையைக் கண்டு பயப்படக்கூடாது. துணிவோடு நாம் இறைவனின் வருகையை எதிர்கொள்ளும் விதமாக நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். அதற்கான வல்லமை வேண்டி இணைந்து செபிப்போம், இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

தானியேல் புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இறைவாக்குப் புத்தகம். இதனை, ‘வெளிப்பாடு புத்தகம்என்றும் அழைப்பார்கள். இறுதிக்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை முன்னறிவிக்கின்ற புத்தகம். ‘காவல்தூதர் மிக்கேலின் வருகை, நூலில் பெயர் இடம்பெற்றோர் மீட்புப் பெறுவர்; நூலில் இடம்பெறாதோர் வெட்கத்திற்கு ஆளாவார்கள், வானத்திலிருக்கும் பேரொளி ஞானிகளாக இருக்கின்றார்கள். எனவே, நாமும் ஞானிகளைப் போல திகழ வேண்டும்என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எருசலேமின் வீழ்ச்சியோடு பழைய உடன்படிக்கை உடைபட்டது. அதனால் இனி பயனில்லை. கடவுள் மீண்டும் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவையிலிருக்கிறார் என்று எரேமியா கூறுகிறார். இந்தப் புதிய உடன்படிக்கை இதயத்தில் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. தினமும் பாவம் போக்கும் பலி செலுத்தப்படுகிறது. ஆனால், இறைமகன் தம்முடைய ஒரே பலியினால் பாவத்திலிருந்து நிறைவுள்ளவராக மாற்றியுள்ளார். எனவே, பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலி தேவையற்றது என்றுரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நீதியும் நேர்மையுள்ள இறைவா! திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தவும், வழிகாட்டவும், இறைவனின் இறையாட்சிக் கனவை நிறைவேற்றவும் ஆற்றல் தர வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடவார்என்று மொழிந்த ஆண்டவரே! இருளில் வாழும் மக்களுக்கு ஒளியை நோக்கி வழிகாட்ட அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுகஎன்று கூறிய ஆண்டவரே! எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள் நீங்கி இறைவன் தரும் அமைதியுடன் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! வறுமையோடும், பசியோடும் இருக்கும் மக்களுக்கு உணவு தந்தருள, எங்களுக்குப் பகிர்வு மனப்பான்மையையும், அன்பு உள்ளத்தையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு (10-11-2024) 1அர 17:10-16; எபி 9:24-28; மாற்கு 12:38-44

திருப்பலி முன்னுரை

பூக்களும் எதிரியாகிப் போனது இவளுக்கு, வசந்தமும் வழிமாறிப்போனது... 

பொட்டுக்கு என்ன வழக்கு,

இவளின் நெற்றியின் மேல்

ஒட்டி உறவாட மறுக்கிறதே...’

என்று கைம்பெண்ணின் நிலைமையைப் புதுக்கவிதையாக வடிக்கின்றார் மன்னர்ராஜ். துணைவனை இழந்து, குழந்தைகளோடு வாழும் இளம் வயது கைம்பெண்களின் வாழ்க்கை என்பது மிகக் கொடுமையானது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டவராகவும், மதிப்பற்றவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நவீன காலத்தில் வீட்டில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இன்றும் கைம்பெண்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. ‘ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தேன்என்று ஆண்டவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைய வாசகங்களில் இடம்பெறும் கைம்பெண்களின் செயல்பாடுகள் உயர்வாகக் காட்டப்படுகின்றன. ‘இறைவன் அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்லர்; மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர்என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைக்கின்றார். பலவீனமானவர்களை ஒதுக்கிவைக்காமல், அவர்களுடன் இணைந்து வாழ்வதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கிறது. கைப்பெண்களைப் புறக்கணிக்காமல், அவர்களுடன் சகோதர அன்புடன் வாழ முயல்வோம். இணைந்து பயணிக்கும், எதிர்நோக்கின் திரு அவையாக நாம் ஒவ்வொருவரும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.…

முதல் வாசக முன்னுரை

சாரிபாத்து என்பது பிற இன மக்கள் வாழும் பெனிசிய துறைமுக நகர். மத்திய தரைக்கடலின் கரையோரத்தில் தீர், சீதோன் நகர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கடவுளின் மக்களை வரவேற்கும் மற்றொரு புற இன நகர். அப்பகுதிக்கு இறைவாக்கினர் எலியா சென்று, கைம்பெண்ணைச் சந்திக்கின்றார். எலியா காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் நிலவியது. அப்பஞ்சத்திலிருந்து கைம்பெண்ணின் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றினார்? அக்குடும்பம் எவ்வாறு இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டது? என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின் குருத்துவ உடன்படிக்கைச் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைஇயேசு மெல்கிசதேக்கின் வழிவந்த உண்மையான குரு, அவர் வழியாக மட்டுமே நிலையான மீட்பு உண்டு. தலைமைக் குரு ஆலயத்திற்குள் நுழைந்து மக்களின் பாவங்களுக்காகப் பரிகாரப் பலி செய்வார். அதனைவிட மேலான பலியை ஆண்டவர் இயேசு நிறைவேற்றிவிட்டார். அவர் மீண்டும் வருவார், பலி செலுத்துவதற்காக அல்ல; மாறாக, அவருக்காகக் காத்திருப்போரை மீட்பதற்காக என எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பே உருவான இறைவா! எம் பகுதியில் ஓரங்கட்டப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை அன்பு செய்து, அவர்களோடு இணைந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவரே இறைவா! கைம்பெண்களுக்கு உரிய நீதியை வழங்கி, அவர்களும் இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து வாழ அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிநடத்தும் ஆயனே எம் இறைவா! எம் பங்கை வழி நடத்தும் எம் பங்குத்தந்தைக்காக மன்றாடுகிறோம். ஆன்மிக வழிகாட்டியாக, எங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொள்ளும் அவருக்கு ஆரோக்கியமான உடல் நிலையையும், மனநிலையையும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்என்று மொழிந்த எம் ஆண்டவரே! இரக்கத்தின் செயல்களைச் செய்து, இரக்கத்தின் சாட்சியாக நாங்கள் வாழ அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.