news
ஞாயிறு தோழன்
இறைவனின் தாய் பெருவிழா (01-01-2025) - எண் 6:22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையாம் திரு அவை இன்றுஅன்னை மரியா இறைவனின் தாய்என்ற விழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர், அழகு நிறைந்தவர், இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை, வாழ்வோர் அனைவரின் தாய், நாம் அனைவரும் வானுலகை அடையும் வழி, மாசுபடிந்த மனுகுலத்தின் மங்காத மகிமை, தன்னைப் படைத்த இறைவனுக்கே தாயானவர். மீட்பு வரலாற்றின் மையமாகவும் இருப்பவர். எனவேதான் நம் திருத்தந்தை பிரான்சிஸ்அன்னை மரியாவைத் தன்னுடைய தாயாக ஏற்றுக்கொள்ளாத எவரும் இந்த மண்ணுலகில் ஆன்மிக அநாதைகள்என்கிறார். இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கவும், இந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, நமது ஆன்மிகத் தாயான அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

2025 ஆண்டு முழுவதும் ஆண்டவர் நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும், தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நன்மைகளாலும் நம்மை நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். இறைவனின் அளப்பரிய ஆசிர்வாதத்தைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் ஆவியைப்பெற்ற நாம் அனைவரும் அனைத்துவிதமான துன்பங்களிலிருந்தும் மீட்கப் பெறுவோம். சோதனையோ, இன்னலோ, நெருக்கடியோ, நோயோ எதுவும் நம்மை நெருங்க முடியாது. ஏனெனில், கடவுள் நமக்குத் தாயாக, தந்தையாக இருந்து நம்மை வழிநடத்துகிறார் எனக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஆண்டவரே! எம் திரு அவைக்கு ஆசிர்வாதமாய் நீர் கொடுத்த தலைவர்களுக்காய் நன்றி கூறுகின்றோம். ஒவ்வொரு நாளும் உமது அன்பின் பாதையில் இறைமக்களை வழிநடத்தவும், இமைப்பொழுதும் உம்மை விட்டுப் பிரியாது வாழவும், தங்கள் பணிகளைக் காலத்திற்கேற்ப கருத்தாய்ச் செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவரே! உமது பேரன்பை நினைத்து நன்றி கூறுகின்றோம். இங்கு ஒரே குடும்பமாய் கூடியுள்ள நாங்கள் அனைவரும், எந்தச் சூழ்நிலையிலும் உம்மை விட்டுப் பிரியாதிருக்கவும், நீர் எங்களோடு வாழ்கிறீர் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வாழவும் எங்களுக்குத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆண்டவரே! இப்புதிய ஆண்டிலே எந்தக் கொடிய நோய்களும், பேரிடர்களும், வன்முறைகளும், பேராபத்துகளும் எம் மக்களைத் தாக்காது நீரே பாதுகாக்க வேண்டுமென்றும், அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி நிலைத்திட அருள்புரிய வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு வழங்கும் ஆண்டவரே! உம் தாயை எமக்குத் தாயாக தந்த உமது கருணைக்காக நன்றி கூறுகின்றோம். அன்னை மரியைப்போன்று இயேசுவை எமது வாழ்க்கையால் சுமந்து இவ்வுலகிற்கு அறிவிக்கவும், எமது குடும்பங்களில் உள்ள குழந்தைகளை இறையன்பிலும், பிறரன்பிலும் நாளும் வளர்க்கவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
திருக்குடும்ப ஞாயிறு (3-ஆம் ஆண்டு) (29-12-2024) 1சாமு 1:20-22,24-28; 1யோவா 3:1-2,21-24; லூக் 2:41-52

திருப்பலி முன்னுரை

இன்று அன்னையாம் திரு அவை இயேசு, மரியா, யோசேப்பு இவர்களின் திருக்குடும்பப் பெருவிழாவைச் சிறப்பிக்கிறது. குடும்பம் என்பது கோவில், இது அன்பின், மகிழ்ச்சியின், உறவின், பகிர்வின், விட்டுக்கொடுத்தலின், நம்பிக்கையின் பிறப்பிடம். திருக்குடும்பம் இதற்குச் சிறந்த சான்று. திருக்குடும்பத்தின் தலைவர் யோசேப்பு நீதிமானாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மையாளராகவும், பொறுமை குணம் கொண்டவராகவும், அமைதியின் இருப்பிடமாகவும், இறைத்திட்டத்திற்குப் பணிந்தவராகவும் இருந்தார். ஒவ்வொரு கணவரும் இத்தகைய நற்பண்புகளைக் கொண்டு வாழ வேண்டும். ஒவ்வொரு மனைவியும் அன்னை மரியாவிடம் மிளிர்ந்த  தாழ்ச்சி, எளிமை, ஆடம்பரம் இல்லாத வாழ்வு, அதிர்ந்து பேசாத குணம், ஆழமான அன்பு, இறைத் திட்டத்திற்குஆம்என்று பணிதல் போன்ற பண்புகளைத் தனதாக்கிட வேண்டும். குழந்தைகள், இயேசுவைப் போன்று அறிவிலும், ஞானத்திலும் வளர்ந்து, பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, செபமாலை, குடும்பச் செபம், திருப்பலி என இறைப்பக்தியில் வளர்ந்து நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாற வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் அன்னா, ஆண்டவரிடம் செபித்ததால் இறைவன் கொடுத்த குழந்தைச் செல்வத்திற்காக நன்றி கூறியும், வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குப் பணி செய்ய தன் குழந்தை சாமுவேலை அர்ப்பணித்ததையும் பற்றிக் கூறுகிறது. ஆண்டவர் நமக்குக் கொடுத்த மிகச்சிறந்த செல்வம் நம் குழந்தைகள். அவர்களை இறைப்பற்றில் வளர்த்து, இறைப்பணிக்கு அர்ப்பணிப்பது பெற்றோர் கடமை என்பதை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுளோடு இணைந்திருப்பவர்கள் அன்பை அடித்தளமாகவும், படைப்பு அனைத்தையும் நேசிப்பவர்களாகவும், அனைத்திற்கும் நன்றி சொல்பவர்களாகவும்மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் இருப்பார்கள்ஏனெனில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவரோடு கடவுள் இணைந்திருக்கிறார் என்று கூறி, இறையோடு இணைந்து வாழ அழைக்கும் 2-ஆம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எம்மை மீட்க வந்த ஆண்டவரே! திரு அவை என்ற குடும்பத்தை வழிநடத்திவரும் தலைவர்களுக்கு ஆற்றலையும் ஞானத்தையும் தந்து காத்திடவும், திரு அவையில் அன்பும் ஒற்றுமையும் நிலவிடவும், சமத்துவமும் சகோதரத்துவமும் வளர்ந்திடவும், இந்த மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கும் அனைவரையும் காத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! எங்கள் பங்கு என்ற குடும்பத்தில் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். பங்கிலுள்ள நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் மக்கள் என்ற உணர்வுடன் வாழவும், துவங்கியிருக்கிற இந்த யூபிலி ஆண்டில் எங்கள் நம்பிக்கை வாழ்விலும், ஆண்டவரைப் பற்றி அறிவதிலும் நாளும் வளரவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. குட்டித் திரு அவையாகிய எங்கள் குடும்பங்களைப் பாதுகாத்து வரும் ஆண்டவரே! திருக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அமைதி, பகிர்வு, இறைப்பற்று, நிறைகுறையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமது குடும்பங்களிலும் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அமைதியைக் கொடுக்க வந்த ஆண்டவரே! எமது உலகில் பஞ்சம், போர், வன்முறை, நோய் அனைத்தும் நீங்கிடவும், வரும் புத்தாண்டு அனைத்து வளங்களையும், வரங்களையும் தரும் ஆண்டாக மலர்ந்திடவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்துமஸ் பெருவிழா (25-12-2024) எசாயா 9:2-4,6-7; தீத்து 2:11-14; லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

நமக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியைக் கொடுக்க, விண்ணக தேவன் மண்ணகம் இறங்கி வந்த கிறிஸ்து பிறப்பு விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அனைத்துப் புண்ணியங்களின் தாயான தாழ்ச்சியின் வடிவமாகவும், நம்மைப் புனிதனாக்கப் புனிதத்தின் ஊற்றான தேவன் குழந்தையின் உருவிலும், அனைத்து மக்களுக்கும் நிலைவாழ்வைக் கொடுக்க வார்த்தையின் வடிவிலும், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வு வழங்க உணவு வடிவிலும், நம் அனைவரையும் விண்ணகம் நோக்கிய பாதையில் வழிநடத்த கடவுள் வடிவிலும், பாவங்களிலிருந்து மனுக்குலத்தை மீட்க மீட்பர் வடிவிலும், பசும்புல் நிலம் நோக்கி நம்மை அழைத்துச்செல்லும் நல்ல ஆயனாகவும் இறைமகன் இயேசு பிறந்துள்ளார். இம்மாபெரும் விழாவில் பங்குகொள்ள மகிழ்ச்சியோடு வருகை புரிந்திருக்கும் நாம் அனைவரும் நட்சத்திரங்களாக ஒளிவீசி, வான தூதர்களைப்போல வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து, இடையர்களைப் போன்று இயேசுவைக் கண்டு, ஞானிகளைப் போன்று கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்க்கைப் பாதையை  மாற்றி, தீவனத்தொட்டியைப் போன்று இயேசுவைச் சுமந்து, மாட்டுத் தொழுவம் போன்று குழந்தை இயேசுவுக்கு இடம் கொடுத்து, அன்னை மரியைப் போன்று ஆண்டவரின் திட்டத்திற்குப் பணிந்து, புனித யோசேப்பைப் போன்று இயேசுவுடன் நடந்து, உள்ளம் என்னும் குடிலில் இயேசுவைப் பிறக்கச் செய்வோம். கிறிஸ்துவின் 2025-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை  ஒரு மாபெரும்  ஜூபிலியின் துவக்கமாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டிலே நாம் அனைவரும் இயேசுவாகப் பிறப்பெடுத்து, அனைத்து மனிதருக்கும் வாழ்வு கொடுக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை: நம்மைப் பேரொளியில் வழிநடத்தவும் துன்பங்களை இன்பமாக்கவும் அனைத்துக் கட்டுகளையும் தகர்க்கவும் சுமைகளைச் சுகமாக்கவும் அடக்கி ஆள்வோரின் ஆணவத்தை அழித்து அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுக்கவும், வன்முறைகளை அழித்து அமைதியை வழங்கவும் ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர்; வலிமைமிகு இறைவன்; என்றுமுள தந்தை; அமைதியின் அரசர் என்று கூறி கடவுளின் பராமரிப்பை உணர்ந்துவாழ அழைப்பு விடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: விஞ்ஞான உலகில் மெய் ஞானமாகிய இறைவனைப் பற்றிக்கொண்டு, தீய நாட்டங்களை மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இவ்வுலகில் வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் நற்செயல்கள் செய்வதில் வளர்ந்து, நம்பிக்கை வாழ்வில் அனுதினமும் நடந்து கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சியைக் கண்டு மகிழ்வோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மீட்பை வழங்க இறங்கி வந்த ஆண்டவரே! உமது மீட்புப் பணியை இந்த அவனியில் செய்வதற்குத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதித்து, அனைத்து நலன்களையும் கொடுத்து, பணிவாழ்வில் உடன் பயணித்து, தாயாக, தந்தையாக இருந்து அவர்களைக் காத்து வழிடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பைக் கொடுக்க அவனிக்கு வந்த ஆண்டவரே! கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் அளவில்லாத உமது அன்பை அனுதினமும் சுவைத்து, அதை அனைவருக்கும் கொடுத்து நல்லுறவோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எம்மைத் தேடிவந்து மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டவரே! நாங்களும் இந்த நல்ல நாளில் ஏழைகள், அனாதைகள், சாலையோரத்தில் வாழும் நண்பர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், முதியோர் இல்லத்தில் இருக்கும் மூத்தோர் அனைவரையும் தேடிச்சென்று, எங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொடுக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் நம்பிக்கையாகப் பிறந்த ஆண்டவரே! இயேசு பிறந்த 2025-ஆம் ஆண்டின் யூபிலி விழாவைத் தொடங்கும் இந்நாளிலே, எம் திருத்தந்தை இந்த ஆண்டில் நம்பிக்கையின் திருப்பயணிகளாக வாழ எமக்கு அழைப்புவிடுத்துள்ளதை அறிந்துள்ள  நாங்கள், இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழவும், உடன்வாழும் அனைவருக்கும் நம்பிக்கையின் தூதுவர்களாகச் செயல்படவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (3 ஆம் ஆண்டு - 22.12.2024) - மீக் 5:2-5; எபி 10:5-10; லூக் 1:39-45

திருப்பலி முன்னுரை

அன்பு நிறைந்த உறவுகளே! திருவருகைக் காலத்தின் இந்த நான்காம் வாரத்தில் அன்பு என்ற ஒளியை அனைவருக்கும் கொடுத்து மகிழ அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கிறது. ஆண்டவரின் பிறப்பிற்காய் தங்களை அர்ப்பணித்த அன்னை மரியாவையும்யோசேப்பையும் தியானித்து நமது வாழ்க்கைப் பாதையைச் சீர்படுத்த இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் அன்பைச் சுவைத்தவர்கள், தன்னலம் மறந்து மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு விரைந்து செல்வார்கள் என்பதற்கு இலக்கணம்  அன்னை மரியா. நமது குடும்ப உறவுக்கும் சமூக உறவுக்கும் நமக்கும் முன்மாதிரியாக இருப்பவரும் இவரே. இளம் வயதில் கருவுற்றிருக்கும் அன்னை மரியா, முதிர்ந்த  வயதில் கருவுற்றிருக்கும் நம்பிக்கையின் விழுதான  எலிசபெத்தைச் சந்தித்து உதவிசெய்து உடனிருக்க விரைந்து செல்கிறார். இந்தச் சந்திப்பு அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, தோழமை, மனஅமைதி, உத்வேகம் எனும் ஆசிர்வாதங்களைக்  கொடுப்பதாக இருந்தது. நமது சந்திப்புகள் தோழமையை உறுதிப்படுத்துவதாக, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக, கவலைகளைத் தீர்ப்பதாக உள்ளனவா? எனச் சிந்திப்போம். அன்னை மரியாவைப் போன்று இறைத் திட்டத்திற்குப் பணிந்துவார்த்தையாலும்  வாழ்க்கையாலும்  இயேசுவைச் சுமந்து, தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவி செய்து, நமது இதமான வார்த்தைகளால் பல இதயங்களுக்கு இன்பம் கொடுத்து அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை: பல்வேறு போராட்டங்கள், மனக்கவலைகள், கடன் தொல்லைகள், வியாதிகள், குழப்பங்கள், புரிந்துகொள்ளாமை, சந்தேகம் என்று பல பிரச்சினைகள் நம்மைச் சூழும்போது கடவுளைசிக்கெனப் பிடித்துக்கொள்வோம். ஏனென்றால், தம் மந்தையை மேய்ப்பதற்கு ஆண்டவர் வலிமையோடும் மாட்சியோடும் வருவார். அவரே அமைதியை அருள்வார். எனவே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார் இறைவாக்கினர் மீக்கா. ஆண்டவரின் வருகை நமக்கெல்லாம் ஆனந்தத்தைத் தரும் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, கடவுள் மறுப்பதை எவராலும் கொடுக்க முடியாது. கடவுளின் திட்டங்கள் நம்முடைய அறிவிற்கு அப்பாற்பட்டவை. இறைவன் நமக்குக் கொடுத்தவை, கொடுப்பவை அனைத்தும்  நன்மைக்கே என்ற அமைந்த மனநிலையோடு  வாழ்வோம். ‘இறைவா! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்என்று கூறி  கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஆண்டவரே! நீரே என்னை அழைத்துள்ளீர், இதோ வருகிறேன் என்று உமது பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைவருக்கும் உமது பிரசன்னத்தைத் தங்களின் வாழ்க்கையாலும், வார்த்தையாலும் கற்பித்து, மக்களை அன்பின் வழியில் நடத்திடத் தேவையான ஞானத்தைத் தந்து காக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை மீட்க மனுவுரு எடுத்த நல்ல ஆயனே இறைவா! உமது திருமுன் கூடியிருக்கும் உமது பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும் உமது அருளாலும் ஆற்றலாலும்  நிறைத்து, எமது குறைகளை நீக்கி, புனிதத்தில் நாளும் நாங்கள் வளர்ந்து, அச்சமின்றி உம்மை அறிவிக்கத் தேவையான ஆசிரைத்  தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் இறைவா! அன்னை மரியாவும் எலிசபெத்தம்மாளும் சந்தித்த நிகழ்வு நிறை மகிழ்ச்சியைக் கொடுத்ததைப் போன்று, எங்களுடைய சந்திப்புகளும் பலன்தருவதாக அமையவும், பகையும் பொறாமையும் நீங்கி, பாசமும் அன்பும் நிறைந்த சந்திப்புகளாக எங்கள் சந்திப்புகள் மாற வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மைக் காக்கும் ஆண்டவரே! நன்மை செய்ய விரைந்து சென்ற மரியாவைப் போன்று, எதிர்பார்ப்பின்றி பிறருக்கு உதவவும், எங்களை நேசிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் அன்பை மட்டுமே கொடுத்து வாழவும், மற்றவர்களை மனதாரப் பாராட்டி ஊக்கப்படுத்தவும் தேவையான உள்ளத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (15-12-2024) - செப் 3:14-18; பிலி 4:4-7; லூக் 3:10-15

திருப்பலி முன்னுரை:

அன்பான இறைமக்களே! இன்று திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. அன்னையாம் திரு அவை ஆண்டவருக்குள் மகிழ்வோடு வாழவும், மற்றவருக்கு மகிழ்வை வழங்கிடவும்மகிழ்ச்சி என்ற திரியை உள்ளத்தில்  ஒளிர்விக்க நம்மை அழைக்கிறது. இன்றைய நற்செய்தியானது ஆண்டவர் இயேசுவின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தனக்குத் தகுதியில்லை என்று கூறி, திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்திக் கொண்டதையும்தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஆண்டவரை முன்னிலைப்படுத்தியதையும், ‘நான் ஒளி அல்ல; ஒளியைக் குறித்து சான்றுபகர அனுப்பப்பட்டவர் என்பதைத் தயக்கமின்றி முழக்கமிட்டதையும் சிந்திக்க அழைக்கிறது. இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானைப் போன்று நாம் நம்மைத் தாழ்த்தும்போதும், நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழும்போதும், ‘நான் என்பதை விடுத்து, ‘நாம் என்று வாழும்போதும், அனுதினமும் திருப்பலியில் தூய உள்ளத்துடன் ஆண்டவரைச் சுவைக்கும்போதும், உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும்போதும், எவரிடத்தும் பகைமை பாராட்டாத தூய உள்ளத்துடன் வாழும்போதும் நமது உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எனவே, மகிழ்ச்சியை வெளியே தேடாமல் நமக்குள்ளே தேடுவோம். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். எனவே, மகிழ்ச்சியை மற்றவர்கள் வாழ்வில் விதைத்து, நாமும் மகிழ்ந்திருக்க   வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம்மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்  என்று கூறி ஆண்டவரில் மகிழ்ந்திருக்க நம்மை அழைக்கிறது. ஆயிரம் முறை தவறுகள் செய்து, அண்டிவரும்போதெல்லாம் அணைக்கின்ற தெய்வத்தின் மீட்பு பற்றியும், அவரது உடனிருப்பு பற்றியும் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

பொன், பொருள், பட்டம், பதவி, வசதியான வாழ்க்கை இவற்றை நினைத்து அதிகமாகவே நாம் கவலைப்படுகின்றோம். நாளைய தினத்தைப் பற்றி அதிகமாகக் கவலைகொண்டு இன்றைய தினத்தை அனுபவித்து வாழ மறந்து விடுகின்றோம். உங்கள் கவலைகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுங்கள், ஆண்டவர் அண்மையில் உள்ளார்; எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி நம் வாழ்க்கைக்குப் பலம் கொடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. எம்மைக் காக்கும் ஆண்டவரேதிரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்  அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மை, நீதி, நேர்மை போன்ற மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, அதன் வழியில் மக்களை வழிநடத்தவும், அழைத்தல் வாழ்வில் ஞானத்தோடு பணி செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2, எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! கிறித்தவ மக்கள் அனைவரும் செபத்தில் நிலைத்திருந்து அனுதினமும் உமக்கு நன்றி கூறி, மகிழ்ச்சியோடு வாழ்ந்து, தங்கள் உடலையும், உள்ளத்தையும் குற்றமின்றிக் காக்க தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இமைப்பொழுதும் எம்மை விட்டு நீங்காத ஆண்டவரே! கிறிஸ்துவின் வருகையானது நோயாளிகளுக்கு உடல் நலத்தையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், மனச்சோர்வோடு வாழ்பவர்களுக்கு மனபலத்தையும், நம்பிக்கையின்றி வாழ்பவர்களுக்கு நம்பிக்கையையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! எம் பங்கில் வாழும் இளைஞர்-இளம்பெண்கள் அனைவரும் தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைந்து போகாமல், ஆன்மாவைக் காக்கவும், திருமுழுக்கு யோவானைப்போல் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு - 08-12-2024 (3-ஆம் ஆண்டு) பாரூக் 5:1-9; பிலி 1:4-6, 8-11; லூக் 3:1-6

திருப்பலி முன்னுரை

இன்று திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. அமைதி என்ற ஒளியை நம் அகத்தில் ஒளிர்விக்கும் வாரம். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்கவும், அவருக்காகப் பாதையைச் செம்மையாக்கவும் நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குவது என்பது நமது உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மை செய்வதாகும். நமது உள்ளத்தில் உள்ள கோபம், பகை, ஆணவம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றை அகற்றி, அமைதி என்ற விதையை விதைப்போம். அமைதி நிலவும் உள்ளத்தில்தான் அனைத்து நலன்களும் பெருகும். அமைதி இல்லாத உள்ளம் அழிவுக்கு வித்திடும். மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்ப்போம்; பகையை மறந்து மன்னிப்பு அருள்வோம். நல்லது செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நமக்குத் தீங்கு செய்பவர்களுக்கும் நன்மையை மட்டுமே செய்வோம். அப்போது நமது உள்ளத்திலும், இல்லத்திலும், பங்கிலும் அமைதி நிலவும். அமைதியை அனைவருக்கும் கொடுத்துவாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர்எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்து விடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்து கொள்என்று கூறுகின்றார். பேராசை, ‘நான்என்ற ஆணவம், பல ஆண்டுகளாக மன்னிக்க மறுத்து வாழும் மந்த உள்ளம், மற்றவர்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியும் கலாச்சாரம் போன்ற நமது துன்ப ஆடைகளைக் களைந்து ஆண்டவர் அருளும் அமைதியைச் சுவைக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட படைப்புகள் இறைவன் தன்னை எதற்காகப் படைத்தாரோ அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவைப் பெற்ற மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் அறியாமல் இருக்கிறான். ஆகவே, இறைவனின் சாயலைப் பெற்ற நாமனைவரும் இறைவனைப் பற்றிய அறிவிலும், தேர்ந்து தெளியும் பண்பிலும் சிறப்புற வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே இறைவா! எல்லா மக்களினங்களையும் உம் திருமுன் கூட்டிச் சேர்க்கும் பணியை ஆற்றிடும் திரு அவையின் தலைவர்கள் உம்மைப் பின்பற்றி நல்ல ஆயர்களாகத் திகழ்ந்து மக்களை அமைதியின் பாதையில் வழிநடத்த தேவையான ஞானத்தைத் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணையின் தெய்வமே இறைவா! நடந்து கொண்டிருக்கும் போர்கள் முடிவு பெறவும், அனைத்து மக்களும் நீர் இவ்வுலகிற்குக் கொண்டு வந்த அமைதியை அனுபவிக்கவும், ஒருவர் மற்றவருக்கு அமைதியின் தூதுவர்களாக வாழவும் தேவையான வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதியை விதைத்த ஆண்டவரே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். எம் குடும்பங்களில் அன்பும் அமைதியும் நிலைத்திடவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டு அமைதியோடு வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்என்று மொழிந்த ஆண்டவரே! இத்திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது உடலை உணவாகப் பெற்ற நாங்கள் அனைவரும் எங்கள் சொல்லாலும், செயலாலும் அமைதியை விதைக்க வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.