news
உலக செய்திகள்
போர் நிறுத்தம்: பாகிஸ்தான் திரு அவை மகிழ்ச்சி!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக இடம்பெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பாகிஸ்தான் திரு அவை, மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க பேச்சுவார்த்தைகளும் நிலையான அமைதி முயற்சிகளும் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.  மே 11-ஆம் தேதி பாகிஸ்தான் ஹைதராபாத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஒப்புரவு ஏற்பட வேண்டும் எனச் செபங்களை அர்ப்பணித்த பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சாம்சன் சுக்கார்தின், இடைக்காலப் போர்நிறுத்தம் வழியாக, பெரிய போரிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், போர் என்பது தீர்வாக முடியாது என்பதால் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாக அறிவித்தார். தென் ஆசியப் பகுதியில் அமைதியான வருங்காலம் இடம்பெற வேண்டுமெனில் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கொருவர் மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் பேராயர் ஜோசப் அர்ஷாத்.

news
உலக செய்திகள்
குழந்தைகளின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் காக்கப்பட வேண்டும்!

உலகில் பத்தில் ஒரு சிறார் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசரத் தேவையாக உள்ளதுஎன .நா.வில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. இன்று உலகில் பல நாடுகளில் சிறுவர் தொழிலாளர் முறை தொடர்வது குறித்தும், சிறார் ஆயுத மோதல்களுக்கெனத் திரட்டப்படுவது குறித்தும் திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறிய அவர், சிறார் போர்க்களத்தில் வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுவது, கட்டாயத் திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள் உள்பட பல்வேறு உரிமை மீறல்களிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் எனவும் திருப்பீடம் விண்ணப்பிப்பதாகத் தன் உரையில் வலியுறுத்தியுள்ளார்.

news
உலக செய்திகள்
“கடன் கொடுப்பதில் நீதிக்கான மதிப்பீடு இருக்க வேண்டும்”- வத்திக்கான் பிரதிநிதி

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் .நா. அமைப்புகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பலஸ்த்ரேரோகடன் நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான உரிமைஎன்ற தலைப்பில் நீதி, கருணை மற்றும் புதுப்பித்தலின் காலமாகிய யூபிலி ஆண்டில் ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் நீக்கப்பட வேண்டியதன் ஒழுக்க ரீதிக் கடமைகள் குறித்து ஜெனிவாவில் இடம்பெற்ற .நா. கூட்டத்தில் உரையாற்றினார். பல கோடி மக்களின் வருங்காலம் வெளிநாட்டுக் கடன் சுமையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்ற கவலையை வெளியிட்ட பேராயர், வளர்ச்சி நெருக்கடி என்பது வெளிநாட்டுக் கடன் நெருக்கடியோடு பிரித்துப் பார்க்க முடியாதது எனத் தெரிவித்தார். மேலும், பேராயர் பலஸ்த்ரேரோ, மனித மாண்புக்கும் பொதுநலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல், கடன் கொடுத்தலிலும் பெறுவதிலும் நன்னெறிக் கடமைகள், நீதிக்கான மதிப்பு, உலக அளவிலான ஒருமைப்பாடு போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.

news
உலக செய்திகள்
திரு அவையின் 267-வது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வாழ்க்கை வரலாறு

14-09-1955 அன்று அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட்.

இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர்தாயார் Mildred Martinez இஸ்பானிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martin மற்றும் John Joseph என்னும் இரு சகோதரர்கள் உள்ளனர்

புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் சேர்ந்து கல்வி பயின்ற இவர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார்.

1977, செப்டம்பர் 1-ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார்.

1978, செப்டம்பர் 2 அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981, ஆகஸ்டு 29 அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.

சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற இவர், தனது 27-வது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

1982, ஜூன் 19-ஆம் நாள் சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1984-ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற இவர், அடுத்த ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார்.

1987-ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இவர், இலினாய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ளநல்லாலோசனை அன்னைஎன்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறையழைத்தல் இயக்குநராகவும் மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

1999-ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறையாகவும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு சிகாகோவின் அகுஸ்தீன் சபையின் முதல் ஆலோசகர், இறையழைத்தல் இயக்குநர்.

2014, நவம்பர் 3-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவன்று அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2015, செப்டம்பர் 26 அன்று சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018, மார்ச் மாதம் பெரு நாட்டு ஆயர் பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதில் இவர் பொருளாதாரக் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

2020, ஏப்ரல் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

2023, செப்டம்பர் 30 அன்று கர்தினாலாக உயர்த்தப்பட்டு, ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2025, மே 8 அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அகுஸ்தீன் சபையைச் சார்ந்த இவர்பதினான்காம் லியோஎன்னும் பெயரினைத் தனது பெயராக ஏற்றுள்ளார்.

news
உலக செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் மறைவு: உலகத் தலைவர்களின் இரங்கல்

உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களால் கருணை, பரிவு, ஆன்மிகத்தின் கலங்கரை விளக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் அர்ப்பணிப்பால் பெரிதும் நான் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவருடைய அன்பு எப்போதும் போற்றப்படும்.”

- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

போப்  பிரான்சிஸ் அமைதியாக உறங்கட்டும்! அவருக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்!

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பியூனஸ் அயர்ஸ் முதல் உரோம் வரை ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவர வேண்டும் எனப் போப் பிரான்சிஸ் விரும்பினார். மனிதர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.”

- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்

மனிதநேயம் மற்றும் நீதியின் உறுதியான பாதுகாவலராகப் போப் பிரான்சிஸ் விளங்கினார். பழைமைவாத மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்த அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

- இரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்

போப் பிரான்சிஸ் உக்ரைனுக்காகவும் உக்ரைன் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்தவர். அவரின் மறைவு கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி, அனைத்துக் கிறித்தவர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

- உக்ரைன் அதிபர் வொலோ திமீர் ஸெலன்ஸ்கி

போப் பிரான்சிஸ் ஆழ்ந்த நம்பிக்கையும், அளவற்ற இரக்கமும் கொண்டவர். மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.”

- இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

பணிவையும் ஏழைகளுக்கு அன்பையும் காட்டியதன் மூலம், கத்தோலிக்கத் திருச்சபைக்கு அப்பாற்பட்டு, கோடிக்கணக்கான மக்களைப் போப் பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.”

- ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண் டெர்லியென்

போப் பிரான்சிஸின் மனிதநேயம் ஆழமானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். அவர் காட்டிய இரக்கத்தின் நினைவு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.”

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி

அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், சிறந்த நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளார். உலகமும் திரு அவையும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை எதிர்கொண்டபோது, தனது துணிச்சலான தலைமையாலும் பணிவாலும் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையாக அவர் இருந்தார்.”

- பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர்

நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாத வர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.”

- நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்

போப் பிரான்சிஸ் காசாவில் இஸ்ரயேலின் இனப் படுகொலையைக் கண்டித்து, மனிதாபிமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவரது நினைவு சுதந்திரத்தை விரும்புவோரின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

- ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

போப் பிரான்சிஸ் அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தின் குரலாக விளங்கினார். அவர் மாபெரும் மனித பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.”

- எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிஸி

அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதற்கான உறுதிப்பாட்டுடன் வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஸ்காட்லாந்து பிரதமர் ஜான் ஸ்வின்னி

ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இரக்கம், அமைதி மற்றும் மனித மாண்பைக் காட்டியவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின்

முக்கியமான உலகளாவியப் பிரச்சினைகளில் பகிரப்பட்ட மனிதநேயத்திற்கான காரணமாக இருந்தவர்.”

- அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ்

இரக்கத்தையும் அமைதிக்கான திருத்தந்தையின் ஆதரவையும், குறிப்பாக, புனித வெள்ளி ஒப்பந்தமும் நினைவுகூரத்தக்கது.”

- வடக்கு அயர்லாந்தின் பிரதமர் மிஷேல் நீல்

சமூக நீதி மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் திருத்தந்தையின் சிறப்பு அக்கறையை எடுத்துரைத்ததுடன், கனடாவில் உள்ள பூர்வகுடி மக்களின் சார்பாகப் பல முயற்சிகளை மேற்கொண்டவர்.”

- கனடா பிரதமர் மார்க் கார்னி

உலகளாவியத் தார்மீகத் தலைவராக விளங்கியவர்; பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையே உறவு பாலத்தைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருந்தவர்.”

- மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான திருத்தந்தை பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார். அன்பு மற்றும் மனிதநேயம் பற்றி தனது போதனைகளால் மதங்களைக் கடந்து கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.”

- உயர்திரு. இராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர், இந்தியா

 

news
உலக செய்திகள்
மியான்மர் நிலநடுக்கம் - உதவிக்கரம் நீட்டுவோம்!

மியான்மரில் மார்ச் 31 அன்று பேரழிவு தரும் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் 1,644 பேர் உயிரிழந்தனர்; 3,408 பேர் காயமடைந்தனர்; 130 பேர் காணாமல் போயுள்ளனர். 6.3 மில்லியன் குழந்தைகள் உள்பட 20 மில்லியன் மக்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர். அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  உலக நாடுகள் உணவு, மருந்து, உறைவிடம் போன்ற தேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.  திருத்தந்தை பிரான்சிஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.