news
உலக செய்திகள்
மறைந்து மலர்ந்து, மணம்பரப்பும் சிறுமலர் தெரேசா (வாழ்த்துச் செய்தி)

சேர் என ஆன்மாக்களைச் சேர்த்து,

மகிழ் என மனங்களை மயங்கவைத்து,

பெருவழியில்லாமல் சிறுவழி தொடர்ந்த

சிறுமலர் தெரேசாவின் நூற்றாண்டு விழா!

நான் ஆண்டவருக்கு முற்றும் உரிமையானவள். அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாய் இருந்து, இறை விருப்பத்தை அன்பினால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை இறைவார்த்தைப் பின்னணியில் வாழ்ந்து காட்டியவர் சிறுமலர் தெரேசா. இறைவன் அன்பாக இருக்கிறார்; அன்பின் முழுவடிவமாக இருக்கிறார் எனத் தன் இதயத் துடிப்பிலும் பேச்சிலும் மூச்சிலும் இறைவனை அன்பால் அனுபவித்தவர்.

மண்ணகத்தில் நன்மைகள் செய்து விண்ணகத்தை இரசித்தவர்!

மதிநுட்பமுள்ள அன்பு மகளாய் எழுந்து நின்று, அன்பினால் அனைத்தையும் வென்று, ‘விண்ணிலிருந்து மலர் மாரிப் பொழிவேன்என்று ஓங்கி ஒலித்த வார்த்தையே இன்று செயல்வடிவம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. நதியானது ஓரிடத்தில் ஊற்றெடுத்துப் பல பாதைகளில், பல வேகங்களில், பல கோணங்களில், காடு மேடு கடந்து, கடலோடு சேர்ந்து எழுச்சி காண்பதுபோல, மனத்தை எளிமையாலும் செபங்களாலும் முழு இறைநம்பிக்கையாலும் நனைத்து, விண்ணக வீட்டை எட்டிப்பிடித்தவர் பிரான்ஸ் நாட்டின் சின்ன ராணி! இன்று 21-ஆம் நூற்றாண்டு புனிதையாக இளையோர் மனத்தில் எழுச்சியூட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒளிநிறைந்த அருள்விளக்கு உன்னதத்தில்!

தெரேசா கூறுவார், “நான் தூய திரு அவையின் குழந்தை. நான் செல்வத்தையோ, பெயரையோ, புகழையோ கேட்கவில்லை; என் அன்னையாம் திரு அவையின் முகத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் பிரதிபலிப்பாகவே என் மகிமை இருக்கும். தாயாம் திரு அவையின் அருள்கொடைகளின் வாய்க்காலாக இருக்க விரும்புகிறேன்.” கார்மேல் மடத்தின் நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, சாதாரணமான வாழ்வு வாழ்ந்த நம் சிறுமலர் சகோதரி ஏற்படுத்திய இந்தத் தாக்கம் நம்மை எழுச்சிகொள்ளச் செய்கிறது.

தெரேசா பொதுவாழ்வை விட்டு விலகாமல் தன் பணியை மிகவும் பெருந்தன்மையுடனும் உறுதியுடனும் நிறைவேற்றினார். அதனால் அவர் வீரமிக்க ஒரு துறவற வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் என்று திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர் கூறுகிறார். தெரேசா அன்பின் சிறுவழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். அமைதியையும் நட்பையும் விதைக்கும் ஒரு புன்னகையாக அல்லது ஓர் அன்பு செயல் நம்மை விட்டு நழுவிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார். ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைச்சாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, நம் துறவற இல்லங்களில் மேற்சொல்லும் செபங்கள் வழியாக அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை இயேசு தனக்கு உணர்த்தினார் என்று தனது குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

பாரில் மறைந்தும் மணம் பரப்பும் சின்ன இராணியின் விழுமியங்கள் நூற்றாண்டைக் கொண்டாடும் காலகட்டத்தில், நம் கார்மேல் இல்லங்களிலும் மலரட்டும்! வளரட்டும்!  ‘இயேசு மட்டுமே என் ஒரே அன்புஎன்ற தெரேசாவின் வார்த்தை நம்மை இறையன்பில் இணைக்கட்டும்.

news
உலக செய்திகள்
எதிர்கொள்ளும்வரை எதையும் மாற்ற முடியாது!

வடக்கு அயர்லாந்தில் போர் நிறுத்தத்தின் 31-வது ஆண்டு நினைவு விழா அண்மையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க மேனாள் செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் ஆற்றிய உரை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் கூற்றான, “எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது; மேலும், அதை எதிர்கொள்ளும்வரை எதையும் மாற்ற முடியாது!” என்ற மேற்கோளுடன், “நாம் தொடர்ந்து செழிக்க வேண்டுமென்றால், எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான மற்றும் சரியான சிந்தனை ஏற்பட வேண்டும். நாம் எங்குச் செல்கிறோம்? எப்படி அங்குச் செல்வோம்? என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; நன்றாகச் செய்தால், விளைவுகள் உலகை ஒளிரச் செய்யும். மோசமாகச் செய்தால், மீண்டும் இருள் சூழ்ந்துவிடும்என்று செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் கூறியது சுட்டிக்காட்டப்பட்டது.

news
உலக செய்திகள்
பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்களின் கண்டனம்!

பாகிஸ்தானில் கிறித்தவச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், இஸ்லாமாபாத் நகரில் ஜமியத் உலேமா இஸ்லாம் (JUI) கட்சியின் தலைவர் முஹம்மது 1932-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அண்மையில் அரசு அதிகாரிகளால்பசுமை மண்டலத்தில் அத்துமீறி கட்டப்பட்டுள்ளதுஎன்ற காரணத்தால் இடிக்கப்பட்ட மத்னி பள்ளிவாசல் சம்பவத்தை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவித்தபோது, கிறித்தவ ஆலயங்களும் சில இமாம்பார்காக்களும் (ஷியா தொழுகை மண்டபங்கள்) அத்துமீறி கட்டப்பட்டவை எனக் குற்றம்சாட்டினார். மேலும், ஆலயங்களைகுப்பைக் கிடங்குகள்என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறுப்புரைக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (PCBC) மற்றும் தேசிய நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் நயீம் யூசுப் கில் ஆகியோர் ஆகஸ்டு 14 அன்று கூட்டு அறிக்கை வெளியிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

news
உலக செய்திகள்
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 80,000 குழந்தைகளுக்குக் காலரா அச்சுறுத்தல்!

மழைக்காலத்தால் மோசமடைந்து வரும் தொடர்ச்சியான தொற்று நோய்கள் காரணமாக, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏறத்தாழ 80,000 குழந்தைகள் காலரா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆயிரக்கணக்கான காலரா நோயாளிகளையும், நூற்றுக்கணக்கான இறப்புகளையும் காங்கோ சனநாயகக் குடியரசும் நைஜீரியாவும்  பதிவு செய்துள்ளன என்றும், அவை இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நலவாழ்வுக்கான உதவிகளைத் தீவிரமாக வழங்கி வருகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு காலரா மீட்பு முயற்சிகளை வலுப்படுத்த, 166 கோடி ரூபாய் அளவிற்கு அவசர நிதியைக் கோரியுள்ளது.

news
உலக செய்திகள்
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகள்!

காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 80 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 52 விழுக்காடாக இருந்த இந்த இறப்பு விகிதம் மூன்று மாதங்களுக்குள் 54 விழுக்காடாக அதிகரித்துள்ளது, 100-க்கும் மேற்பட்டோர் பசியால் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 3,20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் மிகக் கடுமையான துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள்  வறுமையின் பிடியிலும், 39 விழுக்காட்டு மக்கள் முழு நாள்களும் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்றும் தனது பெரும் கவலையை .நா. அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

news
உலக செய்திகள்
காசா மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட அழைப்பு

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 11,000 பேர் காணாமல் போய் உள்ள நிலையில், எண்ணற்ற குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஏழைகளின் பக்கம் நின்று,  பிறரன்பு மற்றும் நீதிக் காக உழைத்து வரும் கத்தோலிக்க காரிதாஸ் அமைப்பு, ஒழுக்க ரீதியுடன் கூடிய பன்னாட்டு தலைவர்களின் அவசர நடவடிக்கையைச் சார்ந்தே காசா மக்களின் வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.