news
உலக செய்திகள்
உலகெங்கும் ஆயர்கள் யூபிலி ஆண்டைத் தொடங்கினார்கள்!

2025-ஆம் ஆண்டின் யூபிலி ஆண்டை 29-ஆம் தேதி உலகெங்கும் ஆயர்கள் தங்களது மறைமாவட்டப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றித் தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை புனித பேதுரு பேராலயத்தின் புனித கதவுகளைத் திறந்து வைத்து, யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உலகெங்கும் ஆயர்கள் தங்கள் மறைமாவட்டப் பேராலயத்தில் யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளனர். மக்கள் இந்த யூபிலி ஆண்டில் தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளவும், நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த யூபிலி ஆண்டில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வத்திக்கானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். 2026 ஜனவரி 6-ஆம் தேதியுடன் யூபிலி ஆண்டு நிறைவுபெறும்.

news
உலக செய்திகள்
அன்னை மரியாவின் பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு

2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு புனித மேரி மேஜரின் புனிதக் கதவு  டிசம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கர்தினால் ரோலண்டாஸ் மக்ரிகாஸ் அவர்கள், பசிலிக்காவின் ஆன்மிக முக்கியத்துவத்தை விவரித்து, நம்பிக்கையாளர்களைப் புனிதப் பயணத்திற்கு அழைப்பு விடுத்தார். அன்னை மரியாவின் வழிகாட்டுதலுடன், திருப்பயணிகள் ஆழ்ந்த ஆன்மிகப் பயணத்தை அங்குத் தொடங்கியுள்ளனர். யூபிலி ஆண்டான இந்த அருளின் காலத்தில், நம்பிக்கையின் பாதையைத் தொலைக்காமல் தொடரும்படி அனைத்து நம்பிக்கையாளருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

news
உலக செய்திகள்
முதல் முறை சிறையில் புனிதக் கதவு திறப்பு!

உரோமையில் உள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவை டிசம்பர் 26 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் திறந்து வைத்துத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது புனித ஸ்தேவானின் வாழ்க்கையை எடுத்துக் காட்டி, மன்னிப்பும் சுதந்திரமும் பற்றிய மறையுரையை வழங்கிய அவர், சிறை வாழ்க்கையில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். இயேசு மற்றும் புனித ஸ்தேவானின் வாழ்வைச் சுட்டிக்காட்டி, நம்பிக்கை மற்றும் மன்னிப்பின் சக்தி மூலம் நமது சுதந்திரத்தை மீட்க முடியும் என திருத்தந்தை உறுதியளித்தார். குறிப்பாகஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் (திபா 7:60) என்ற ஸ்தேவானின் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, மன்னிப்பின் வழியாக உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இந்த யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில், மன்னிப்பும் சுதந்திரமும் நம்மை அழைத்துச் செல்கின்றன என அறிவித்தார். இயேசு நம்முடைய போராட்டங்களை அறிந்தவர், அவர் நம்முடன் இருக்கிறார் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
அன்பு கொடு, பாதுகாப்புக் கொடு!

திருத்தந்தை பிரான்சிஸ் 2025 பிப்ரவரி 3 -ஆம் தேதி வத்திக்கானில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உலக மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவித்தார். ‘அன்பு கொடு, பாதுகாப்புக் கொடுஎன்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் வல்லுநர்களும் விருந்தினர்களும் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள், பல கோடி குழந்தைகள் இன்னும் உரிமைகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதால், அவர்கள் பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளர வேண்டும் என்பதாகும்.  2025 -ஆம் ஆண்டு ஏப்ரல் 25, 26, 27 -ஆம் தேதிகளில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான ஜூபிலி நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தார்.

news
உலக செய்திகள்
மரணதண்டனைச் சட்டத்திற்கு மரணதண்டனை!

உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனைச் சட்டங்கள் இன்னும் அமலில் இருந்து வருகின்றன. ஆகவே, மரணதண்டனைகளை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பன்னாட்டு நீதித்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ‘சான் எஜிதியோ என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்புஅண்மையில் உரோமையில் கூட்டியது. இந்த 14-வது கருத்தரங்கில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 2010 நபர்கள் தீர்ப்புப் பெற்று, மரணதண்டனைக்காகச் சிறைகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, சவுதி அரேபியா உட்பட 55 நாடுகளில் மரணதண்டனைச் சட்டம் அமலில் இருப்பதாகவும், இந்த நாடுகளின் உலக மக்கள்தொகையில்  பாதிபேர் வாழ்வதாகவும் தெரிவித்துள்ள இந்த அமைப்பு, அனைவரும் ஒன்றிணைந்து மரணதண்டனைச் சட்டத்திற்கு எதிராக உழைத்தால் மட்டுமே இச்சட்டம் மறையும் எனத் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
அருளாளர் கார்லோவுக்குப் புனிதர் பட்டம்

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்படுவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இத்தாலியில் பிறந்த அருளாளர் கார்லோ, ஆன்மிகம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இணையதளத்தில் நற்கருணைப் புதுமைகளைப் பதிவு செய்து, தனது ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 15 வயதில் நோயுற்று இறையடி சேர்ந்த இவர், 2020-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.