news
உலக செய்திகள்
கர்தினால் ஸ்டீசூஃபன் சோவின் அறிவுரை

கர்தினால் ஸ்டீசூஃபன் சோ, ஹாங்காங் மறைமாவட்ட இயேசு சபை அருள்பணியாளர். உணவின் மாண்பை மதிப்பதன் முக்கியத்துவத்தை ஜனவரி 3-இல் சிந்தனை வலைதளத்தில் இவர் பகிர்ந்தார். உணவின் வீணாக்கம் மற்றும் அதன் மேல் நமக்கு உள்ள பொறுப்புகளைப் பற்றிக் கருத்து தெரிவித்த இவர், “நமது கடமை, உணவின் மாண்பை மதிப்பதுஎன்று குறிப்பிட்டார். மேலும், உலகில் அனைத்து உயிர்களும் கடவுளின் அன்பாலும் கருணையாலும் படைக்கப்பட்டன என்றும் கூறி, அவற்றின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பில் கடவுளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். பெரும்பான்மையான விருந்துகளில் உணவுகள் வீணாகும் என்பதைக் கண்டால் உணவின் மாண்பு பாதிக்கின்றது என்பது அர்த்தம். மனிதர்களுக்கான உணவின் அடிப்படையில் நமக்கு ஒரு பொறுப்பும் பண்பும் இருக்க வேண்டும். எதிர்நோக்குடன் வாழும் இந்த யூபிலி ஆண்டில், உணவை வீணாக்காமல், அதை மாண்புடன் மதிக்க வேண்டும் என்று கர்தினால் சோ வலியுறுத்தினார்.

news
உலக செய்திகள்
புனித பவுல் பெருங்கோவிலின் புனிதக் கதவு திறப்பு!

உரோமின் புனித பவுல் பெருங்கோவிலில் புனிதக் கதவு ஜனவரி 5 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திறக்கப்பட்டது. இது கிறிஸ்துவின் மீட்பின் பாதையைக் குறிக்கும் சின்னமாக அமைந்தது என்றார் திருத்தந்தை. திருப்பலிக்குத் தலைமையேற்ற கர்தினால் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வி, “இயேசு இரத்தம் சிந்தி, நம்முடைய பாவங்களை மன்னித்ததால், நாம் கடவுளின் பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளோம்என்றார். யூபிலி ஆண்டின் மூலம் மனிதர்களுக்கு எதிலும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை வழங்குவதாகவும், எதிர்நோக்கு வெறும் விருப்பம் அல்ல; அது கடவுளின் வாக்குறுதிகளின் மீது உறுதி கொண்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது; இந்த யூபிலி ஆண்டில் நம்பிக்கையை விதைப்பவர்களாக இருப்பதற்கான அருமையான காலம் என்றும் கர்தினால் ஹார்வி எடுத்துரைத்தார்.

news
உலக செய்திகள்
உக்ரைனுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் 2025-இல் உக்ரைனுக்குப் பயணம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இப்பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  2024 -ஆம் ஆண்டு திருத்தந்தை உக்ரைனுக்கு வர இயலவில்லை என்றாலும், அவர் தற்போது உக்ரைனின் தலைநகர் கீவ் செல்லத் திட்டமிட்டுள்ளார். திருத்தந்தை உக்ரைனுக்குத் தொடர்ந்து உதவி அளித்துள்ளார். அவரது வருகையால் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

news
உலக செய்திகள்
உலகெங்கும் ஆயர்கள் யூபிலி ஆண்டைத் தொடங்கினார்கள்!

2025-ஆம் ஆண்டின் யூபிலி ஆண்டை 29-ஆம் தேதி உலகெங்கும் ஆயர்கள் தங்களது மறைமாவட்டப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றித் தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை புனித பேதுரு பேராலயத்தின் புனித கதவுகளைத் திறந்து வைத்து, யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உலகெங்கும் ஆயர்கள் தங்கள் மறைமாவட்டப் பேராலயத்தில் யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளனர். மக்கள் இந்த யூபிலி ஆண்டில் தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளவும், நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த யூபிலி ஆண்டில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வத்திக்கானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். 2026 ஜனவரி 6-ஆம் தேதியுடன் யூபிலி ஆண்டு நிறைவுபெறும்.

news
உலக செய்திகள்
அன்னை மரியாவின் பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு

2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு புனித மேரி மேஜரின் புனிதக் கதவு  டிசம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கர்தினால் ரோலண்டாஸ் மக்ரிகாஸ் அவர்கள், பசிலிக்காவின் ஆன்மிக முக்கியத்துவத்தை விவரித்து, நம்பிக்கையாளர்களைப் புனிதப் பயணத்திற்கு அழைப்பு விடுத்தார். அன்னை மரியாவின் வழிகாட்டுதலுடன், திருப்பயணிகள் ஆழ்ந்த ஆன்மிகப் பயணத்தை அங்குத் தொடங்கியுள்ளனர். யூபிலி ஆண்டான இந்த அருளின் காலத்தில், நம்பிக்கையின் பாதையைத் தொலைக்காமல் தொடரும்படி அனைத்து நம்பிக்கையாளருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

news
உலக செய்திகள்
முதல் முறை சிறையில் புனிதக் கதவு திறப்பு!

உரோமையில் உள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவை டிசம்பர் 26 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் திறந்து வைத்துத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது புனித ஸ்தேவானின் வாழ்க்கையை எடுத்துக் காட்டி, மன்னிப்பும் சுதந்திரமும் பற்றிய மறையுரையை வழங்கிய அவர், சிறை வாழ்க்கையில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். இயேசு மற்றும் புனித ஸ்தேவானின் வாழ்வைச் சுட்டிக்காட்டி, நம்பிக்கை மற்றும் மன்னிப்பின் சக்தி மூலம் நமது சுதந்திரத்தை மீட்க முடியும் என திருத்தந்தை உறுதியளித்தார். குறிப்பாகஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் (திபா 7:60) என்ற ஸ்தேவானின் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, மன்னிப்பின் வழியாக உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இந்த யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில், மன்னிப்பும் சுதந்திரமும் நம்மை அழைத்துச் செல்கின்றன என அறிவித்தார். இயேசு நம்முடைய போராட்டங்களை அறிந்தவர், அவர் நம்முடன் இருக்கிறார் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.