news
உலக செய்திகள்
கர்தினால்களாக உயர்த்தப்பட்ட FABC பொறுப்பாளர்கள்

ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் (65) மற்றும் FABC பொதுச்செயலாளர் பேராயர் டார்சிசியோ இசாவோ கிகுச்சி (65) ஆகியோர் கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.  மேதகு ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் மார்ச் 2, 1959 பிலிப்பைன்சில் பிறந்தார். 1983, மார்ச் 12 அன்று சான் பெர்னாண்டோ உயர் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1986 முதல் 1991 வரை பெல்ஜியத்தின் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2006, மே 27 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் சான் பெர்னாண்டோ துணை ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் 14-10-2015 அன்று கலூகன் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCP) தலைவராக 2021, 2023 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆண்டு ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

01-11-1958-இல் பிறந்த டார்சிசியஸ் இசாவோ கிகுச்சி மார்ச் 15, 1986 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். செப்டம்பர் 20, 2004 அன்று நீகாட்டாவின் ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் மேற்கு ஆப்பிரிக்காவின் கானாவில்  மிஷனரியாகப் பணியாற்றினார். 25-10-2017 அன்று டோக்கியோ பேராயராக நியமிக்கப்பட்டார். ஜப்பான் காரித்தாஸ் மற்றும் காரித்தாஸ் ஆசியா ஆகியவற்றின் தலைவராகவும், காரித்தாஸ் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராகவும் உள்ளார். ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 2021, 2024-இல் FABCஇன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். FABC பணியாற்றிய இருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ஆசியத் திரு அவை மகிழ்ச்சி கொள்கிறது.

news
உலக செய்திகள்
நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்!
லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்தித்த திருத்தந்தை, “அழகான இந்த உலகைப் பேணிக் காக்கவும், போற்றவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு அதனை விட்டுச்செல்லவும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிரச்சினையானது மனிதனின் இதயத்தில் எழும் பொருளாதாரத்தின் மேல் உள்ள அதிகப்படியான ஆர்வமே. அளவுக்கதிகமான பணம் எப்போதும் ஆபத்தானது. அது அலகையைப் போல நமது உள்ளங்களில் நுழைந்து விடுகின்றது. எனவே நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்” என மாணவர்களிடம் உரையாற்றினார்.
news
உலக செய்திகள்
பேராசிரியர்கள் கதாநாயகர்கள்!
பெல்ஜியம் நாட்டின் லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தின் 600 -வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், “பல்கலைக்கழகத்தின் முதல் பணி ஒருங்கிணைந்த உருவாக்கத்தை வழங்குவதாகும்; கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் பெருக்குவதற்குப் பதிலாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்வினைப் பற்றி பேசுவதற்குமான இடங்களாகப் பல்கலைக்கழகங்களை உருவாக்குங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
news
உலக செய்திகள்
நாட்டின் மேன்மை!
46-வது திருத்தூதுப் பயணத்தின், முதல் பகுதியாக இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தின் 400 -வது யூபிலி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் திருத்தந்தை. ‘ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதன் நில அளவாலோ, மக்கள் எண்ணிக்கையாலோ, பொருளாதார மேன்மையாலோ குறிக்கப்படுவதில்லை; மாறாக, மக்கள் மீதான பாகுபாடுகளைக் கைவிட்டு, பொதுநலனை மையமாக வைத்து, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து, குடிமக்களை நன்முறையில் வாழவைக்கும் முறைகளாலேயே ஒரு நாட்டின் மேன்மையாக அறியப்படுகிறது’ என அந்நாட்டின் தலைவர்களிடம் கூறினார் திருத்தந்தை.
news
உலக செய்திகள்
கிறிஸ்தவத் தாய்க்கு மரணத் தண்டனை!
நாற்பது வயதான மருத்துவச் செவிலியரான கிரண், சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற புகாரின் அடிப்படையில் இஸ்லாமாபாத்தில் ஜூலை 2021-இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ‘பாரபட்சத்தின் அடிப்படையில் தவறானத் தீர்ப்பு’ என்று கருத்து தெரிவித்தக் கிரணின் வழக்கறிஞர் அப்துல் ஹமீத், ‘ஆதாரங்களைப் பார்க்கவோ அல்லது சரியான பகுப்பாய்வை நடத்தவோ நீதிபதி கவலைப்படவில்லை’ என்றார். மத நிந்தனைச் சட்டங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கும், அப்பாவி மக்களைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
news
உலக செய்திகள்
அணுசக்தியும் அமைதிக்கான பணியும்!
பேராயர் காலகர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டில் அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் பொதுநலன் மற்றும் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டியது என்று தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கும், அமைதியான அணு அறிவியலின் நன்மைகளைப் பரப்புவதற்கும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்பம் கிடைக்க உதவுவதற்கும், திருப்பீடத்தால் கையொப்பமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் எடுத்துரைத்தார். அணுசக்தி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான, இடரற்ற மற்றும் அமைதியான பயன்பாட்டிற்கும் திருப்பீடம் தனது ஆதரவை வழங்கும் என்றார்.