news
உலக செய்திகள்
அன்பு கொடு, பாதுகாப்புக் கொடு!

திருத்தந்தை பிரான்சிஸ் 2025 பிப்ரவரி 3 -ஆம் தேதி வத்திக்கானில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உலக மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவித்தார். ‘அன்பு கொடு, பாதுகாப்புக் கொடுஎன்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் வல்லுநர்களும் விருந்தினர்களும் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள், பல கோடி குழந்தைகள் இன்னும் உரிமைகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதால், அவர்கள் பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளர வேண்டும் என்பதாகும்.  2025 -ஆம் ஆண்டு ஏப்ரல் 25, 26, 27 -ஆம் தேதிகளில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான ஜூபிலி நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தார்.

news
உலக செய்திகள்
மரணதண்டனைச் சட்டத்திற்கு மரணதண்டனை!

உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனைச் சட்டங்கள் இன்னும் அமலில் இருந்து வருகின்றன. ஆகவே, மரணதண்டனைகளை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பன்னாட்டு நீதித்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ‘சான் எஜிதியோ என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்புஅண்மையில் உரோமையில் கூட்டியது. இந்த 14-வது கருத்தரங்கில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 2010 நபர்கள் தீர்ப்புப் பெற்று, மரணதண்டனைக்காகச் சிறைகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, சவுதி அரேபியா உட்பட 55 நாடுகளில் மரணதண்டனைச் சட்டம் அமலில் இருப்பதாகவும், இந்த நாடுகளின் உலக மக்கள்தொகையில்  பாதிபேர் வாழ்வதாகவும் தெரிவித்துள்ள இந்த அமைப்பு, அனைவரும் ஒன்றிணைந்து மரணதண்டனைச் சட்டத்திற்கு எதிராக உழைத்தால் மட்டுமே இச்சட்டம் மறையும் எனத் தெரிவித்துள்ளது.

news
உலக செய்திகள்
அருளாளர் கார்லோவுக்குப் புனிதர் பட்டம்

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்படுவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இத்தாலியில் பிறந்த அருளாளர் கார்லோ, ஆன்மிகம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இணையதளத்தில் நற்கருணைப் புதுமைகளைப் பதிவு செய்து, தனது ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 15 வயதில் நோயுற்று இறையடி சேர்ந்த இவர், 2020-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

news
உலக செய்திகள்
பன்முகத்தன்மை வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

நவம்பர் 30-ஆம் தேதி, ஸ்ரீ நாராயண தர்ம சங்கோம் நிறுவனத்தின் சமய மாநாட்டில் கலந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், “சமயங்கள் மக்களின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்; மனிதனுக்கிடையே அன்பும் மரியாதையும் வேண்டும்; உலகில் அமைதி மற்றும் ஒருமை உருவாக்க, நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மதங்களிடையே நல்லிணக்கம் கொண்டுவர மரியாதை, கண்ணியம், இரக்கம் போன்ற பண்புகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்என வலியுறுத்தினார்.

news
உலக செய்திகள்
புனித சவேரியாரின் அழியா உடல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புனித சவேரியாரின் உடலைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிப்படுத்தும் நிகழ்வு இவ்வாண்டு நவம்பர் 21 -ஆம் தேதி டெல்லி பேராயர் அனில் கூட்டோ மற்றும் பத்து ஆயர்கள் தலைமையில் பசிலிக்காவில் திருப்பலியுடன் தொடங்கியது. வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள புனிதரின் நினைவுச்சின்னங்கள் இறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடவும் செபம் செய்யவும் அருகிலுள்ள சே கதீட்ரலுக்குக் கொண்டு செல்லப்படவும், 45 நாள்களுக்குப் பிறகு பழைய இடத்திலே வைக்கப்படவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வுகளில் ஏறத்தாழ 8 மில்லியன் மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றன.

news
உலக செய்திகள்
பத்துக் கட்டளைகள் யூத-கிறித்தவப் பொருள் விளக்கம்

இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகள் பற்றிய யூத மற்றும் கிறித்தவக் கண்ணோட்டங்கள் குறித்து கருத்தரங்கு உரோமையில் உள்ள திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்பல்கலைக்கழகமும், அர்ஜெண்டினாவில் உள்ள பியூனர்ஸ் அயர்ஸ் ஈசாக் அபர்பானெல் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ‘ஒரு வெளிப்பாடும் இரண்டு பாரம்பரியங்களும்: பத்துக் கட்டளைகளும் அதன் யூத மற்றும் கிறித்தவப் பொருள் விளக்கங்களும்என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு இரு சமயத்தினருக்கும் இடையே பொதுவாக இருக்கும் மதிப்பீடுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் அமைந்திருந்தது. “இவ்விரு மதங்களும் தங்களுக்குப் பொதுவானவைகள் குறித்து விவாதிக்க வேண்டும்  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.