news
உலக செய்திகள்
விளையாட்டு வாழ்வின் பாடல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  ‘கொரியர் டெல்லோ ஸ்போர்ட்-ஸ்டேடியோ’வின் 100-வது ஆண்டு நிறைவு விழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “வெற்றியின் உச்சம், வெற்றிக்கான முயற்சி மற்றும் தோல்வியின் இழப்பு ஆகியவற்றிலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வதால், விளையாட்டு வாழ்க்கையில் பாடங்களை வழங்குகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த சலேசிய குருவான அருள்தந்தை லொரென்சோ மாசா அவர்கள் சிறுவர்களுக்காகக் கால்பந்து விளையாட திரு அவையின் கதவுகளைத் திறந்துவிட்டார். இனம், மதம் அல்லது வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டை அணிதிரளச் செய்வதற்கான வழிமுறையாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். மோதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும், விளையாட்டு மக்களை ஒன்றிணைத்து, ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கின்றேன்”  என்று கூறினார்.
news
உலக செய்திகள்
திருத்தந்தையுடன் செலன்ஸ்கி
உக்ரைன் நாட்டின் அரசுத் தலைவர் செலன்ஸ்கி அக்டோபர் 11-ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் ஆகியோருடனான சந்திப்பின்போது, இரஷ்யாவுடனான போரில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் போர் நிலைகள் குறித்தும், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், நீடித்த அமைதியைக் கொண்டு வரவேண்டுமென்றும், போரை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ் ‘அமைதி என்பது வலுவற்ற ஒரு மலர்’ என்ற எழுத்துகளும், மலரின் உருவமும் பொறிக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தியையும், திருத்தந்தை எழுதிய சில ஏடுகளையும், உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கர்கள் குறித்த நூல் ஒன்றையும் அரசுத் தலைவருக்குப் பரிசாகத் திருத்தந்தை வழங்கினார்.
news
உலக செய்திகள்
கர்தினால்களாக உயர்த்தப்பட்ட FABC பொறுப்பாளர்கள்

ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் (65) மற்றும் FABC பொதுச்செயலாளர் பேராயர் டார்சிசியோ இசாவோ கிகுச்சி (65) ஆகியோர் கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.  மேதகு ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் மார்ச் 2, 1959 பிலிப்பைன்சில் பிறந்தார். 1983, மார்ச் 12 அன்று சான் பெர்னாண்டோ உயர் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1986 முதல் 1991 வரை பெல்ஜியத்தின் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2006, மே 27 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் சான் பெர்னாண்டோ துணை ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் 14-10-2015 அன்று கலூகன் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCP) தலைவராக 2021, 2023 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆண்டு ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

01-11-1958-இல் பிறந்த டார்சிசியஸ் இசாவோ கிகுச்சி மார்ச் 15, 1986 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். செப்டம்பர் 20, 2004 அன்று நீகாட்டாவின் ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் மேற்கு ஆப்பிரிக்காவின் கானாவில்  மிஷனரியாகப் பணியாற்றினார். 25-10-2017 அன்று டோக்கியோ பேராயராக நியமிக்கப்பட்டார். ஜப்பான் காரித்தாஸ் மற்றும் காரித்தாஸ் ஆசியா ஆகியவற்றின் தலைவராகவும், காரித்தாஸ் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராகவும் உள்ளார். ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 2021, 2024-இல் FABCஇன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். FABC பணியாற்றிய இருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ஆசியத் திரு அவை மகிழ்ச்சி கொள்கிறது.

news
உலக செய்திகள்
நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்!
லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்தித்த திருத்தந்தை, “அழகான இந்த உலகைப் பேணிக் காக்கவும், போற்றவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு அதனை விட்டுச்செல்லவும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிரச்சினையானது மனிதனின் இதயத்தில் எழும் பொருளாதாரத்தின் மேல் உள்ள அதிகப்படியான ஆர்வமே. அளவுக்கதிகமான பணம் எப்போதும் ஆபத்தானது. அது அலகையைப் போல நமது உள்ளங்களில் நுழைந்து விடுகின்றது. எனவே நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்” என மாணவர்களிடம் உரையாற்றினார்.
news
உலக செய்திகள்
பேராசிரியர்கள் கதாநாயகர்கள்!
பெல்ஜியம் நாட்டின் லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தின் 600 -வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், “பல்கலைக்கழகத்தின் முதல் பணி ஒருங்கிணைந்த உருவாக்கத்தை வழங்குவதாகும்; கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் பெருக்குவதற்குப் பதிலாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்வினைப் பற்றி பேசுவதற்குமான இடங்களாகப் பல்கலைக்கழகங்களை உருவாக்குங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
news
உலக செய்திகள்
நாட்டின் மேன்மை!
46-வது திருத்தூதுப் பயணத்தின், முதல் பகுதியாக இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தின் 400 -வது யூபிலி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் திருத்தந்தை. ‘ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதன் நில அளவாலோ, மக்கள் எண்ணிக்கையாலோ, பொருளாதார மேன்மையாலோ குறிக்கப்படுவதில்லை; மாறாக, மக்கள் மீதான பாகுபாடுகளைக் கைவிட்டு, பொதுநலனை மையமாக வைத்து, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து, குடிமக்களை நன்முறையில் வாழவைக்கும் முறைகளாலேயே ஒரு நாட்டின் மேன்மையாக அறியப்படுகிறது’ என அந்நாட்டின் தலைவர்களிடம் கூறினார் திருத்தந்தை.