news
தமிழக செய்திகள்
சாதி மற்றும் ஆணவப் படுகொலைக்கு எதிராக உறுதிமொழி!

கோட்டாறு மறைமாவட்டத்தின் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தினர் சாதியை மறுத்தும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வலியுறுத்தியும் பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் முகமூடிகள் அணிந்து உறுதிமொழி எடுத்தனர். இதில் கோட்டாறு மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டம் கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்க இயக்குநர் பணி. எடிசன் கலந்துகொண்டு, ‘ஆணவப் படுகொலைகளும் சாதிய மனநிலைகளும் - இளைஞரின் பதிலிறுப்புஎன்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை ஆண்டுக் கூட்டம்!

தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை ஆண்டுக் கூட்டம், பூண்டியில் அமைந்துள்ள பூண்டி மாதா தியான இல்லத்தில் ஜூலை 6, 2025 அன்று தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் நாளில்கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்என்னும் தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. தனசீலி திவ்யநாதன் அவர்கள் சிறப்புக் கருத்தூட்டாளராக அழைக்கப்பட்டிருந்தார். பெண்களின் தலைமைத்துவம், சமஉரிமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு, திரு அவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு, முழுமையான பங்களிப்பு என்னும் தலைப்புகளில் சிந்தனைகள் வழங்கப்பட்டன. மேலும், 16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு அறிக்கையின் வழி நின்று, திரு அவையில் நிகழ்ந்திருக்கும் பெண்களுக்கான பல பங்கேற்பையும் தலைமைத்துவ பணி நியமனத்தையும் சுட்டிக்காட்டிய கருத்தூட்டாளர், திரு அவையில் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து பயணிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகளையும், அடுத்து இரண்டு, ஐந்து, ஏழு ஆண்டுகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகாலப் பணித் திட்டங்களையும் முன்னிறுத்திக் கருத்துகளை வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து ஆயர்களும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் அனைத்துப் பணிக்குழுச் செயலர்களும். தமிழ்நாடு-பாண்டிச் சேரி மறைமாவட்டங்களின் மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர்களும், ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட அருள்பணிப் பேரவைப் பிரதிநிதிகளும், பொதுநிலையினர் பணிக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

news
தமிழக செய்திகள்
‘The Face of the Faceless’ திரைப்பட வெளியீட்டு விழா

2025, ஜூலை 8 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க பூண்டி மாதா பேராலயத்தில், தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC), தமிழ்நாடு துறவிகள் கூட்டமைப்பு (TNCRI) உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழாவில், 107-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதும், ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற்றதுமான இயக்குநர் டாக்டர் ஷெய்சன் பி. ஊசூப் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் சாண்ட்ரா டிசூசா இராணா அவர்களின் பெருமுயற்சியோடு உருவாக்கப்பட்ட சமூக நீதிக்காகத் தன்னை அர்ப்பணித்த அருளாளர் இராணி மரியாவின் வாழ்வை உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கும்The Face of the Facelessதிரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை உருவாக்க உதவிய அருள்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களுக்கும், மாதா டிவி குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுஆசிர்வதிக்கப்பட்ட இராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை நினைவூட்டும் இத்திரைப்படம் மன்னிப்பு, நம்பிக்கை மற்றும் சமூகநீதி போன்ற கிறித்தவ மதிப்பீடுகளை மக்களிடையே பரப்புகிறது. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

news
தமிழக செய்திகள்
மதுரை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் நியமனம்

1960-ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்த பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் 2024-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மதுரை உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். தற்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு துறவியர் பேரவையின் ‘மண்ணைக் காக்கும் பேரியக்கம்!’

தமிழ்நாடு துறவியர் பேரவை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராம மக்கள் இணைந்து 02.07.2025 அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஆகாச பைரவ பீட குளத்தைத் தூர்வாரி, நீர் வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இப்பணியில் பொதுமக்கள், குழந்தைகள், விவசாய முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு. துரை மற்றும் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி மற்றும் துறவியர் பலரும் இணைந்துகொண்டனர். இயற்கை வளங்களைக் காப்பது என்பது மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதைத் தமிழ்நாடு துறவியர் பேரவையின்மண்ணைக் காக்கும் பேரியக்கம்உணர்த்தியுள்ளது.

news
தமிழக செய்திகள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ‘முதல் பசிலிக்கா’

தமிழ்நாட்டில் 11-வது பேராலயமாகவும், இந்தியாவின் 35-வது பேராலயமாகவும், உலகளவில் 1933-க்கும் மேற்பட்ட பேராலயங்களின் வரிசையில் சென்னை புனித தோமையார் மலை - புனித தோமையார் திருத்தலம் அகில இந்தியத் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தந்தையின் அறிவிப்பினைத் தமிழில், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் வாசித்தார்கள்.

03.07.2025 அன்று மாலை 4 மணிக்குத் திருத்தல வளாகத்தில் நடந்த இப்புனித நிகழ்வில் மேன்மை பொருந்திய நமது திருத்தந்தையின் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தூதர் பேராயர் லியோ போல்தோ ஜிரெல்லி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அவரோடு ஐதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா, மும்பை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியஸ் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்றனர். விழா நிறைவில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர். இராஜேந்திரன், சா.மு. நாசர், மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.