news
தமிழக செய்திகள்
இரங்கல் தீர்மானம்

கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகவும் பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது அகவையில் 21-04-2025 அன்று வத்திக்கான் நகரில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார், துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தன. அன்னாரது மறைவினால் அவரை இழந்து துயருற்றிருக்கும் வத்திக்கான் கத்தோலிக்கத் திரு அவைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.”

- தமிழ்நாடு சட்டமன்றம்

news
தமிழக செய்திகள்
எளிய மக்களின் குரல்!

கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் இறைவனிடம் மீண்டார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறோம். கத்தோலிக்கக் கிறித்தவத்திற்கு மட்டுமின்றி, இந்த இழப்பு ஆன்மிக உலகிற்கும் ஏற்பட்ட இழப்பாகும்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் இலத்தீன் அமெரிக்கத் திருத்தந்தை எனும் வரலாற்றுத் தடத்தைப் பதித்தார். இறைப்பணி, தேவாலயங்களின் சேவை, மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

அன்பு, நம்பிக்கையுடன் கூடிய துணிவையும் தனது செயல்பாடாகக் கொண்டு இயங்கியவர். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டியவர் அவர். அதனாலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது பணிகளில் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தார்.

சமூக நீதிக்கொள்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர். அதனாலேயே எளிய மக்களின் குரலாகவே அவரது குரல் ஒலித்தது. அடிமைத்தனத்தை அறுத்தெறிய வேண்டும் என்பதைத் தொடர்ந்து முழங்கியவர். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, வத்திக்கானில் பெண்களுக்குப் பதவிகளையும் வழங்கினார்.

போரிடும் கெட்ட உலகத்தை வேரோடு சாய்ப்போம்என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். போர் இல்லாத அமைதியான உலகைச் மைப்பதைப் பெரிதும் விரும்பியவர். அதனாலேயே பாலஸ்தீனம் மீதான இஸ்ரயேலின் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துப் போர் நிறுத்தத்தை வேண்டினார்.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவச் சகோதரர்களின் இழப்பின் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பிய போர்களற்ற அமைதியான உலகம் மைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

- மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ, மாநிலத் தலைவர்,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு, புதுச்சேரி

 

news
தமிழக செய்திகள்
எல்லாருக்குமான ஒரு தலைவர்!

ஏழைகளின் தந்தையாக, புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஆதரவுக் குரலாக, புலம்பெயர்ந்தோரின் காவலராக வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். புனித வாரத்தில் நோயுற்று இருந்தபோதும்கூடநான் என் மக்களைப் பார்க்க வேண்டும்என்று கூறி, சக்கர நாற்காலியில் வந்து பார்த்தவர். எப்போதுமே புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்று கூறியவர். புனித வியாழன் பாதங்கள் கழுவும் சடங்கின் நிகழ்வில் யாருமே தொடத் தயங்குகிற புண்களும் அசுத்தமும் இருக்கக் கூடிய தொழுநோயாளர்களின் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டவர். சிறைக்கைதிகள் மற்றும் பால்வினை நோயாளர்களின் பாதங்களையும் தொட்டு முத்தம் செய்தவர்.

இவர் கத்தோலிக்கத் திரு அவைக்கு மட்டும் தலைவரல்லர்; உலகத்துக்கே மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, “ஏழைகளை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்என்று கூறிய உடன் கர்தினாலின் வார்த்தையைக் கடைசிவரை வாழ்வில் செயல்படுத்தியவர். 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸின் பெயரை ஏற்று, அவரைப்போல எளிமையையும் ஏழ்மையையும் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். நூறு ஆடுகளுள் ஒன்று தவறினாலும்கூட தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு தவறிய அந்த ஓர் ஆட்டைத் தேடுகிறவர்தான் உண்மையான தலைவர் என்பதை எண்பித்துக்காட்டியவர். தெருக்களில் அகதிகளாக, ஏழைகளாக, விளிம்பு நிலை மக்களாக வாழ்வாதாரம் ஏதுமின்றிக் கதறிக் கொண்டிருந்த மக்களைத் தேடிச்சென்று, அவர்கள் எல்லாருக்கும் ஒரு தலைவராக இருந்தவர்.

இந்தத் திரு அவை யாருக்கானது? எந்த மக்களுக்கானது? என்பதை உலகுக்கு உணர்த்தியவர். ‘கொரோனாநேரத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு வத்திக்கானையே திறந்துவிட்டவர். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனக்கான வத்திக்கான் மாளிகையில் தங்கவில்லை. ‘நான் மாளிகையின் தலைவன் அல்ல; குடிசைகளின் தலைவன்என்று கூறி ஆண்டாண்டு காலமாகத் திருத்தந்தையர் தங்கி இருந்த வத்திக்கான் அரண்மனையை விட்டு விட்டு, ஏழைகளைச் சந்திக்கும் விதமாக ஓர் எளிய அறையில் தங்கினார். இப்படிப்பட்ட மிகப்பெரும் திருத்தந்தையின் வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். திரு அவை மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் ஏழைகள், அகதிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் எல்லாருக்குமான ஒரு தலைவராக இருந்து, பெரும் மாற்றங்களைத் திரு அவையில் கொண்டு வந்தார். ‘வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட மக்களைத் தீர்ப்பிட நான் யார்?’ எனக் கேட்டவர். ‘திருத்தந்தை தவறிழைக்க மாட்டார்என்ற கோட்பாட்டை மாற்றி, ‘கடவுள் மட்டுமே தவறிழைக்காதவர்; நான் சாதாரண மனிதர்தான், தவறிழைக்கக்கூடியவர்என்று கூறிய மாமனிதர். வத்திக்கான் வங்கியில் மாற்றம் கொண்டு வந்த புரட்சியாளர்.

இறுதி நேரத்திலும் உலக அமைதிக்காக நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். சமூக நீதி என்னும் சிந்தனையை ஆளும் தலைவர்கள் மனத்திலே விதைத்துச் சென்றிருக்கிறார். ‘இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானதுஎன்று கூறி, இயற்கையைச் சுரண்டும் முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலாளித்துவச் சிந்தனை இருந்தால், இயற்கையை அழித்துவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். நுகர்வு கலாச்சாரத்தால் நம்முடைய வாழ்வு பாதித்துள்ளது என்று கூறி, ‘அதீத முன்னேற்றம் ஆபத்தானதுஎன்று முழங்கியுள்ளார். ‘சாதாரண ஏழைகளுக்கு எல்லாம் கிடைப்பதை உறுதி செய்வதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சிஎன்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழையாக, ஏழைகளுக்காக வாழ்ந்து, ஏழையாகவே இறைமடி சேர்ந்துள்ள தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழைகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

 

news
தமிழக செய்திகள்
சான்று பகர்ந்த வாழ்வு! (தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி)

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை 20-04-2025 அன்று உலகமே கொண்டாடிய வேளையில், தன்னைக் காண புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமி இருந்த மக்களுக்குத் தன்னுடைய திருக்கர ஆசிரை வழங்கி, ‘பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும்; அதுவும் நீதியில் விளையக்கூடிய நிரந்தர அமைதியாய் இருக்க வேண்டும்என்று தன்னுடைய இறைவேண்டலை இறுதியாக இறைவனுக்கு அர்ப்பணித்த நிலையிலே, 21.04.2025 அன்று காலை 7:30 மணி அளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உயிர் இறைவனடி சேர்ந்ததை அறிந்து தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆழ்ந்த இறைவேண்டல் கலந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

கூட்டொருங்கியக்கப் பாதையில் திரு அவையை அழைத்துச் சென்ற மிகப்பெரிய ஆளுமை திருத்தந்தை பிரான்சிஸ். இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அனைவரின் மனங்களுக்கும் இது வேதனை அளித்தாலும், அனைவரின் இதயங்களிலும் குடிகொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஏழை எளிய மக்களுக்கும், புலம் பெயர்ந்து ஆதரவு தேடி வந்த மக்களுக்கும் ஆதரவு தந்தவர், அடைக்கலம் கொடுத்தவர். அகில உலகத்தையும் அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்தவரும் அவர். உலக அமைதி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை போன்ற இன்னும் பலவற்றில் புதிய சிந்தனைகளை விதைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

மக்களின் மனங்களை அறிந்தவன்தான் நல்லாயனாய், நல்ல தலைவனாய் இருக்க முடியும் என்பதைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டியவர். அவரது கனிவான சொற்களும், கள்ளமில்லாச் சிரிப்பும், அவரது அன்பின், இரக்கத்தின், எளிமையின் விழுமியங்களை எல்லாருக்கும் எடுத்துக்கூறின. கத்தோலிக்க மதத்தினுடைய தலைவர் என்ற  அவருடைய 12 ஆண்டு கால உழைப்பானது உலகத்தின் கடைக்கோடி மக்களின் இதயத்திலும் கண்டிப்பாய் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவருடைய இழப்பால் அகில உலகக் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல; இன்னும் நல்ல பல உள்ளங்களும் கண்ணீரைக் காணிக்கையாக்கினாலும், அவரது சான்று பகர்ந்த வாழ்வு, சரியான தலைமைத்துவம், எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் யாருடைய பதிலாளாய் இவ்வுலகில் வாழ்ந்தாரோ அதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை அனைத்திற்கும் நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம். உயிர்த்த ஆண்டவருடைய கரங்களில் அவரது ஆன்மாவை ஒப்படைப்போம். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்; நிலையான ஒளி இவர்மேல் ஒளிரட்டும்!

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமிதலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்

 

news
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டிலிருந்து சிம்லா - சண்டிகர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தின் ஆயராகக் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. சகாய ததேயுஸ் தாமஸ் (54) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 12 அன்று நியமனம் செய்துள்ளார்.

அருள்தந்தை சகாய ததேயுஸ் தாமஸ் 1971-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள சின்னவிளையில் பிறந்தவர். இலக்னோ புனித பவுல் இளங்குருமடத்தில் கல்வி பயின்று, ஜலந்தரில் உள்ள தமத்திரித்துவக் குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். 2001, மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்றார். பாட்டியாலா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் (2006-2008), டெல்லியில் உள்ள இந்திய மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைக் கல்வியில் முதுகலைப் பட்டத்தையும் (2007-2009) பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும் (2010-2013), திருவிவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் (2013-2016).

பங்குப் பணியாளர், குருமட உதவி அதிபர், மறைமாவட்டச் சமூகத் தொடர்பு மற்றும் திருவிவிலிய ஆணையங்களின் இயக்குநர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.

news
தமிழக செய்திகள்
கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம்

கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவில் மார்ச் 29, 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. ஆறு மறைவட்டங்களிலிருந்தும் 74 பங்குகளிலிருந்தும் திருப்பயணமாக இறைமக்கள் திருப்பயணத்தில் பங்கேற்றனர். எதிர்நோக்குப் பற்றிய அறிவுரைச் சிந்தனையும், தொடர்ந்து ஒப்புரவு அருளடையாளமும் தியான மையத்தில் வழங்கப்பட்டன. பின்பு அங்கிருந்து மறைமாவட்ட யூபிலி சிலுவையை ஏந்தி இறைமக்கள் பசிலிக்காவை நோக்கி, புனிதர்கள் மன்றாட்டு மாலை இசைக்கப் பவனியாகச் சென்றனர். முதல் நாளில் திருத்தலத்தில் வட்டார முதன்மைக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறுதி நம்பிக்கை உறுதிப்படுத்துகின்ற கண்காட்சி அரங்கிலும் மற்றும் ஒலி-ஒளிக் காட்சிகளும் இறைமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வாக ஞாயிறு அன்று மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு இறையாசிரோடு திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுகளை மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. அந்தோணி இயேசுராஜ், பேராலயப் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட அதிபர் பேரருள்திரு K.M.C. அருண் மற்றும் தியான மைய இயக்குநர் அருள்பணி அலெக்ஸ் அந்தோணிசாமி ஆகிய மூவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.