news
தமிழக செய்திகள்
‘The Face of the Faceless’ திரைப்பட வெளியீட்டு விழா

2025, ஜூலை 8 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க பூண்டி மாதா பேராலயத்தில், தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC), தமிழ்நாடு துறவிகள் கூட்டமைப்பு (TNCRI) உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழாவில், 107-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதும், ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற்றதுமான இயக்குநர் டாக்டர் ஷெய்சன் பி. ஊசூப் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் சாண்ட்ரா டிசூசா இராணா அவர்களின் பெருமுயற்சியோடு உருவாக்கப்பட்ட சமூக நீதிக்காகத் தன்னை அர்ப்பணித்த அருளாளர் இராணி மரியாவின் வாழ்வை உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கும்The Face of the Facelessதிரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை உருவாக்க உதவிய அருள்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களுக்கும், மாதா டிவி குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுஆசிர்வதிக்கப்பட்ட இராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை நினைவூட்டும் இத்திரைப்படம் மன்னிப்பு, நம்பிக்கை மற்றும் சமூகநீதி போன்ற கிறித்தவ மதிப்பீடுகளை மக்களிடையே பரப்புகிறது. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

news
தமிழக செய்திகள்
மதுரை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் நியமனம்

1960-ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்த பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் 2024-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மதுரை உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். தற்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு துறவியர் பேரவையின் ‘மண்ணைக் காக்கும் பேரியக்கம்!’

தமிழ்நாடு துறவியர் பேரவை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராம மக்கள் இணைந்து 02.07.2025 அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஆகாச பைரவ பீட குளத்தைத் தூர்வாரி, நீர் வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இப்பணியில் பொதுமக்கள், குழந்தைகள், விவசாய முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு. துரை மற்றும் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி மற்றும் துறவியர் பலரும் இணைந்துகொண்டனர். இயற்கை வளங்களைக் காப்பது என்பது மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதைத் தமிழ்நாடு துறவியர் பேரவையின்மண்ணைக் காக்கும் பேரியக்கம்உணர்த்தியுள்ளது.

news
தமிழக செய்திகள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ‘முதல் பசிலிக்கா’

தமிழ்நாட்டில் 11-வது பேராலயமாகவும், இந்தியாவின் 35-வது பேராலயமாகவும், உலகளவில் 1933-க்கும் மேற்பட்ட பேராலயங்களின் வரிசையில் சென்னை புனித தோமையார் மலை - புனித தோமையார் திருத்தலம் அகில இந்தியத் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தந்தையின் அறிவிப்பினைத் தமிழில், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள் வாசித்தார்கள்.

03.07.2025 அன்று மாலை 4 மணிக்குத் திருத்தல வளாகத்தில் நடந்த இப்புனித நிகழ்வில் மேன்மை பொருந்திய நமது திருத்தந்தையின் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தூதர் பேராயர் லியோ போல்தோ ஜிரெல்லி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அவரோடு ஐதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா, மும்பை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியஸ் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்றனர். விழா நிறைவில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர். இராஜேந்திரன், சா.மு. நாசர், மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.

news
தமிழக செய்திகள்
திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் பாராட்டு!

திருத்தணிக்கு அருகில் உள்ள ஆர்.கே.பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் திருநங்கை ஜென்சி என்பவர். தனது இளங்கலைப் பட்டத்தைத் திருத்தணியில் உள்ள அரசுக் கல்லூரியிலும், தனது முதுகலைப் பட்டத்தை அம்பேத்கர் அரசுக் கல்லூரி வியாசர்பாடியிலும், தொடர்ந்து தனது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை ஆங்கிலத்துறையில் சென்னை, இலயோலா கல்லூரியிலும் முடித்தவர். இன்று அவர் இலயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய இந்தச் செயலுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடையXவலைத்தளத்தில், “வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி, உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும், தடைகளும் புறக்கணிப்பும் கல்வி என்னும் பேராற்றலால் வெல்லட்டும்என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருச்சி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள்இலயோலா மாற்றங்களுக்கான திறவுகோல்என்று அக்கல்லூரியைப் பாராட்டியுள்ளார்.

news
தமிழக செய்திகள்
நெஞ்சம் நிறைந்த நன்றி

கடந்த ஓர் ஆண்டாகஇறைவேண்டலின் பரிமாணங்கள்என்னும் தலைப்பில் மன்னிப்பு, பரிவு, அர்ப்பணம், கொடுத்தல், நற்பணி, அமைதி, உடல், மனம், சொல் எனப் பல்வேறு கோணங்களில் தொடர் கட்டுரை வழங்கிநம் வாழ்வுவாசகர்கள் பலரின் பாராட்டைப் பெற்ற அருள்முனைவர் குமார் ராஜா அவர்களுக்குநம் வாழ்வுதனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. தந்தை அவர்களின் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுப் புதிய நூலாக வெளிவர உள்ளது. பிரதிகளை விரும்புவோர்நம் வாழ்வுதலைமைச் செயலகத்தைத் தொடர்புகொள்ளவும். தந்தை அவர்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறோம்.  

- முதன்மை ஆசிரியர்