news
தமிழக செய்திகள்
வித்தியாசமான திருப்பயணம்

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் சார்பாக ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் சமூக நீதிக்கான யூபிலி திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மறைமாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புப் போராட்டம் வெற்றிபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் மத ஒற்றுமையைப் பாதிக்க முயன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தனர். கொடைக்கானலில் நற்கருணை ஆராதனையில் பங்கெடுத்து, இயேசுவின் பாடுகளையும், சமூக நீதிப் போராளிகள் ஸ்டேன் சுவாமி, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரின் வாழ்க்கையையும் தியானித்தனர். இந்நிகழ்வைத் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் அருள்பணி. எடிசன் ஒருங்கிணைத்தார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள்!

கிறித்தவர்களின் சமய விழாக்களில் நம்பிக்கையை ஆழமாகப் புடமிடும் நாள்புனித வெள்ளி.’ இறைமகன் இயேசு இம்மனுக்குல மீட்புக்காக, மானிடரின் பாவங்களை மன்னிப்பதற்காகச் சிலுவை சுமந்து, கல்வாரி மலை நோக்கிச் சென்று, கரம் விரித்து சிலுவையில் மரித்து, உயிர் துறந்ததை ஆழமான நம்பிக்கையோடும் பக்தி நிறைந்த செப உணர்வோடும் கொண்டாடும் நாள் புனித வெள்ளி. புனித வாரச் சிறப்பு நாள்களில் குறிப்பிடத்தக்க நாள் இப்புனித வெள்ளி. இந்நாளில் தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடிட தமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக, முதலமைச்சருக்குக் கிறித்தவர்கள் அன்போடு வேண்டும் கோரிக்கை இது.

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் முக்கியச் சிறப்பு நாள்களில் மதுபானக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கப்படுவதுபோல, கிறித்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி அன்றும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பது கிறித்தவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு-புதுவை கத்தோலிக்கப் பொதுநிலையினர் பேரவையின் தற்போதைய தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயருமான முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்குச் சபைகளின் இயக்குநர் அருள்பணி. ஜெயந்தன் அவர்களும் பிற கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட பரிந்துரைக்குமாறு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் வழிகாட்டுதலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மின் அஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இயேசு இறந்த தியாக நாளாம் புனித வெள்ளி நாளில் கேரளா மற்றும் டெல்லி மாநிலங்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுபோல, தமிழ்நாடு அரசும் கிறித்தவ மக்களின் உணர்வினை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில அனைத்துக் கிறித்தவப் பெருமக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைக்குச் செவிமடுப்பார் என்றே நம்புகிறோம்!

news
தமிழக செய்திகள்
ஐக்கிய ஆலயத்தில் பொன்விழா கொண்டாட்டம்

உரையாடலின் மூலம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி மனிதத்தைக் காத்து வரும் மையம் ஒற்றுமையின் ஆலயம்என்று பொருள்படுவது ஐக்கிய ஆலயம். 1974-ஆம் ஆண்டு அருள்பணி. இக்னேசியஸ் இருதயம் சே.. அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் பொன்விழா, சென்னை, அருள் கடலில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாள்களில்உரையாடலை மீட்டெடுப்பது-ஒற்றுமையை அரவணைப்பதுஎன்ற தலைப்பில் பல்சமய தேசியக் கருத்தரங்கம்  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தென்னிந்தியத் திரு அவையின் மேனாள் பேராயர் தேவசகாயம், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் டி. ஹரி பரந்தாமன், ஆற்காடு அறக்கட்டளையின் நிறுவுநர் மற்றும் அறங்காவலர் மாண்புமிகு. இளவரசர் நவாப் சாதா முகமது ஆசிப் அலி, சென்னை மறை மாநிலத் தலைவர் அருள்பணி. செபமாலை ராசா சே.., முனைவர் புஷ்பராஜன், முனைவர் ஜேம்ஸ் பொன்னையா எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

வத்திக்கானில் உள்ள பல்சமய உரையாடல் துறையின் இயக்குநர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் உரையாடலின் முக்கியத்துவத்தைக் குறித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்தக் கருத்தமர்வில் முனைவர் ராஜ் இருதயா எழுதியுள்ள ‘The Fiery Word: A Perspectival Approach’, அருள்கடலார் எழுதியுள்ளமக்கள் அனுபவத்தில் மலர்ந்திடும் இறையியலாக்கம், முனைவர் ராபின் சகாயசீலன் எழுதியுள்ளDiving Deep: Engaging Religious Symbols in Interfaith Dialogueஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்தப் பொன்விழா பல்சமய தேசியக் கருத்தமர்வை ஐக்கிய ஆலய இயக்குநர் முனைவர் ராஜ் இருதயா, சே.. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.             

news
தமிழக செய்திகள்
மதுரையில் நிகழ்ந்த மத நல்லிணக்க மாநாடு

முச்சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்திருப்பது திருப்பரங்குன்றம் மலை. இம்மலையில் இந்துகள், முஸ்லிம்கள், சைனர்கள் ஆகியோர் நீண்ட காலமாக அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இம்மக்களின் அமைதியைச் சீர்குலைக்கச் சில மதவாத அமைப்புகள் அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டன.

இந்த மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டித்து மார்ச் 9-அன்று மதுரை கே.கே. நகரிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில்மத நல்லிணக்க மாநாடுநடைபெற்றது. இம்மாநாட்டுக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “என் இறைவனுக்கும் என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லைஎனக் கூறினார்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் மத நல்லிணக்க மலையாகத் திருப்பரங்குன்றம் மலையைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் கோவிலில் புகுந்து வன்முறையைத் தூண்டிய கட்சிகள், அமைப்புகள்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் மத நல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் போன்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் மேதகு இலாரன்ஸ் பயஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், நெல்லையப்பர் ஆதினம் பதினெண்சித்தர் பீடம் சித்தர் மூங்கிலடியார், அருள் பணி. பெனடிக்ட் பர்னபாஸ், ஹென்றி டிபேன், மீ.. பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

news
தமிழக செய்திகள்
வெள்ளி விழா காணும் ‘உம் வாக்கு என் வாழ்வாக’ மாத இதழ்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின்உம் வாக்கு என் வாழ்வாகஎன்னும் கத்தோலிக்க மாத இதழின் வெள்ளி விழாக் கொண்டாட்டமானது பிப்ரவரி 22-ஆம் நாள் மேய்ப்புப் பணி நிலையத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமையேற்ற சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், “இம்மாத இதழ் 25 ஆண்டுகள் பயணித்து வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது; இறைவனுக்கு நன்றி கூறும் தருணம் இது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் இறைவனுக்கும் முன்னாள் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூறும் தருணத்தோடு அமைந்துவிடாமல், இவ்விதலின் வளர்ச்சியையும், இதனுடைய அவசியத்தையும், இன்னும் இதைப் பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நாம் தீர்க்கமாக அலசிப் பார்க்க வேண்டிய தருணமாகவும் கொள்ளவேண்டும். அன்றாட இறைவார்த்தையை மாதந்தோறும் உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு வரும் இந்த இதழ், எல்லாருடைய கரங்களிலும், எல்லாப் பங்குத் தளங்களிலும் வீடுகளிலும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்எனத் தெரிவித்து, இதனுடைய தற்போதைய ஆசிரியர் தந்தை ராக் சின்னப்பா அவர்களையும், முன்னாள் ஆசிரியர்களையும் மனத்தார வாழ்த்தினார்.  தொடர்ந்து வாழ்த்துரை வழங்கியநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்கள், ‘மாதந்தோறும் இறைவார்த்தையைச் சுமந்து வரும் இந்த இதழ், நம் இல்லம் நோக்கி  தூது வரும் தேவபுறாஎனக் குறிப்பிட்டார். மேலும், இந்த இதழின் பின்னிருக்கும் கடின உழைப்பு, காலத்தின் தேவை, இறை மக்களின் ஆதரவு என முக்கோண உறவு கொண்ட இதழியல் பணியைப் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சிறப்பு வாழ்த்துரையாளர்களாகக் கலந்துகொண்டநியூ லீடர்இதழின் ஆசிரியர் அருள்பணி. பங்குராசு, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் அருள்பணி. E. அருளப்பா ஆகியோருடன், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்தந்தை G.J அந்தோணிசாமி அவர்களும், பொதுநிலையினருக்கான பேராயரின் பதில்குரு பேரருள்தந்தை எம்.வி. ஜேக்கப், குருக்களுக்கான பேராயரின் பதில்குரு - பேரருள்தந்தை பீட்டர் தும்மா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஏறக்குறைய 300 வாசகர்கள் கலந்து கொண்ட இந்த வெள்ளி விழாக் கொண்டாட்டமானதுஉம் வாக்கு என் வாழ்வாகமாத இதழின் ஆசிரியர் அருள்தந்தை ராக் சின்னப்பா மற்றும் அவர்களது ஆசிரியர் குழுவினரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

news
தமிழக செய்திகள்
‘எதிர்நோக்கின் திருப்பயணம்’- இறையியல் கலந்துரையரங்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பினை ஏற்றுயூபிலி-2025’ -ஆம் ஆண்டின் மையச்சிந்தனையானஎதிர்நோக்கின் திருப்பயணிகளாக  திருப்பயணத்தை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை, கருத்தரங்குகளை, கலந்துரையாடல்களை திரு அவை, விவிலியம், இறையியல் தளங்களில் மக்கள் உலகெங்கும் சிந்தனைப் பரிமாற்றம் மேற்கொண்டு வரும் சூழலில், சென்னை - பழஞ்சூர், MMI இறையியல் கல்லூரி, தனது 12-வது இறையியல் கலந்துரையரங்கத்தைஇறை நம்மில் ஆன்மிகம்: எதிர்நோக்கின் திருப்பயணத்தில் இன்றைய திரு அவையும் அதன் செயல்பாடுகளும்என்ற தலைப்பில் பிப்ரவரி 15-ஆம் நாள் மிகச் சிறப்பாக நடத்தியிருந்தது.  இந்த இறையியல் கலந்துரையரங்கத்தின் சிறப்புக் கருத்துரையாளராகநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன்  கலந்துகொண்டு இரு அமர்வுகளை வழிநடத்தினார். இவ்வமர்வுகளைப் புனித பிரான்சிஸ் சவேரியார் மறைமாநிலத் தலைவர் அருள்பணி. ஆண்டனி ஜெரால்டு MMI நெறிப்படுத்தினார். மேலும், ‘எதிர்நோக்கின் திருப்பயணமும் துறவற வாழ்வும்என்ற தலைப்பில் அருள்சகோதரி சகாயராணி DMI அவர்களும்,  ஆன்மிக வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்என்னும் தலைப்பில் அருள்சகோ. ஆரோக்கியசாமி அவர்களும், ‘குடும்ப வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்என்ற தலைப்பில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பெண்கள் பணிக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜாய்ஸ் ஜென்சன் அவர்களும் கருத்துகளை வழங்கினார்கள். ஏறக்குறைய 400 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த இறையியல் கருத்தமர்வு, மக்களின் கேள்வி நேரம், கலந்துரையாடல் எனச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வினை MMI இறையியல் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கிய  சார்லஸ் தலைமையில், அருள்பணி. டேவிட் மற்றும் இறையியல் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.