news
தமிழக செய்திகள்
சிறாருக்கான நம்பிக்கை வளர் மாநாடு

திண்டுக்கல் மறைமாவட்டத்தில் யூபிலி 2025-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மாணவர்களுக்கான நம்பிக்கை வளர் மாநாடு ஜூன் மாதம் 7-ஆம் நாள் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள், “மாணவர்கள் இந்த யூபிலி ஆண்டில் இறைநம்பிக்கையில் வளர்ந்து நல்ல கிறித்தவ மாணவர்களாக, இயேசுவுக்குச் சான்றுபகர்கின்றவர்களாக வாழவேண்டும்என்று எடுத்துரைத்தார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுவின் பொதுச்செயலர் அருள்பணி. பெனடிக்ட் ஆனலின்சிறார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில், “நாம் எல்லாரும் கடவுளின் அன்பான பிள்ளைகள்; நம்மோடு வாழும் எல்லா உயிர்களும் நம் சொந்தங்கள்; நாம் பூமியைப் பண்படுத்தி, பாதுகாத்து அதனுடன் பயணிக்கப் பிறந்தவர்கள்என்ற கருத்தை முன்வைத்தார். திண்டுக்கல் மறைமாவட்டக் குருகுல முதல்வர் பேரருள்பணி. . சகாயராஜ் அவர்களும், மரியன்னை பள்ளி இல்ல அதிபர் அருள்பணி. மரிவளன் சே.. அவர்களும் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வாழ்த்திப் பேசினார்கள். இம்மாநாட்டில், மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலிருந்து 850-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் கலந்துகொண்டனர். புனித தோமா அருள்பணி மைய இயக்குநர் அருள்பணி. . சூசை ஆரோக்கியதாஸ் மற்றும் யூபிலி ஆண்டு ஒருங்கிணைப்பாளரும், புனித வளனார் பேராலயப்  பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான அருள்பணி. இரா. மரிய இஞ்ஞாசி ஆகியோர் இம்மாநாட்டைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.

news
தமிழக செய்திகள்
‘கல்பனா சாவ்லா’ விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு!

துணிவு மற்றும் சாகசச் செயல் புரிந்த வீரப் பெண்ணுக்குகல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. வரும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ள இந்த விருதுக்கு அரசு இணையதளம் (http://awards.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களையும் அந்த இணையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.             

- தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு

news
தமிழக செய்திகள்
அன்புடன் வரவேற்கின்றோம்!

ஊட்டி மறைமாவட்டம், கூடலூர் பங்கைச் சார்ந்தவர் அருள்பணியாளர் ஜேக்கப் குரு சங்கர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைக் கோயம்புத்தூரில் உள்ள நல்லாயன் குருமடத்தில் பயின்றவர். 2021, மே 11-ஆம் நாள் ஊட்டி மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர். புனித சூசையப்பர் ஆலயம்-வெலிங்டன், புனித சூசையப்பர் ஆலயம்-ஆழ்வார்பேட்டை, புனித அந்தோணியார் திருத்தலம்-குன்னூர் ஆகிய மூன்று பங்குகளில் உதவிப் பங்குத்தந்தையாகத் திறம்படப் பணியாற்றியுள்ளார். சிறந்த சிந்தனையாளர்; மறையுரையாளர். ‘வழிகாட்டும் அருள் ஒளிஇதழில் பல கட்டுரைகளை இவர் படைத்துள்ளார்.

அருள்பணியாளர் பிரின்ஸ் கன்னியாகுமரி மாவட்டம், வர்த்தான்விளை பங்கைச் சார்ந்தவர். இவர் அமலமரி தூதுவர் சபையைச் சார்ந்த அருள்பணியாளர். தன்னுடைய மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை அருள்வனம் குருமடம், மதுரமங்கலம் மற்றும் பழஞ்சூர், MMI இறையியல் கல்லூரியில்  பயின்ற இவர், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர். புனித யோசேப்பு பல்கலைக்கழகம், நாகலாந்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டப் படிப்பு (MSW) பயின்றவர். இவர் முட்டம் கே.எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் ஓராண்டும், பழஞ்சூர், புனித யோசேப்பு பல்கலைக்கழகத்தில் ஓராண்டும் பணியாற்றியுள்ளார். பல கத்தோலிக்க இதழ்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இவ்விரு அருள்பணியாளர்களும் நம் வாழ்வின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்ற முன்வந்துள்ளனர். இருவரையும்நம் வாழ்வுமகிழ்வோடு வரவேற்கிறது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவர்களை மனமுவந்து அளித்துள்ள உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கும், அமலமரி ஊழியர் சபையின் நிறுவுநர் அருள்முனைவர் E. அருள்ராஜ் அவர்களுக்கும், சபைத்தலைவர் அருள்பணி. வில்லியம் MMI அவர்களுக்கும் மற்றும் சென்னை மாகாணத் தலைவர் அருள்பணி. ஆன்றனி ஜெரால்டு MMI அவர்களுக்கும் உளங்கனிந்த நன்றியைநம் வாழ்வுதெரிவித்துக்கொள்கிறது.

news
தமிழக செய்திகள்
நன்றியுணர்வோடு ‘நம் வாழ்வு’ வாழ்த்தி வழியனுப்புகிறது!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழின் துணை ஆசிரியராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாய்ப் பணியாற்றிய அருள்பணி. அருண் பிரசாத் அவர்கள், தற்போது பணி மாறுதலாகித் தன் சொந்த மறைமாவட்டப் பங்குப் பணிக்குச் செல்கிறார். அருள்பணி. அருண் பிரசாத் அவர்கள்நம் வாழ்வுஇதழில் திருத்தந்தையின் முழக்கம், வத்திக்கான் திரு அவைச் செய்திகள், ‘சிந்தனைச் சிதறல்கள்எனத் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கி வாசகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றவர். ‘கல்விச் சுரங்கம்எனும் மாணவர் மாத இதழில்அறிவியல் அறிவோம்எனும் தலைப்பில் மாணவர்களுக்கு அறிவியல் தகவல்களைக் கொடுத்தவர். அண்மையில் திருச்சியில்நம் வாழ்வு - வாசகர் வட்டம்நிகழ்வைத் திறம்பட நடத்தியவர். இவரை இப்பணிக்காக அளித்த திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு. முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கும், மறைமாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாகவும்நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இறையருள் எந்நாளும் இவருக்குத் துணையிருக்கநம் வாழ்வுவாழ்த்தி வழியனுப்புகிறது.                                                                                      

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
“சமயத்தின் வழியே இயற்கையைப் பாதுகாத்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்!”

தமிழ்நாடு துறவியர் பேரவையும், சென்னை மாநில சேசு சபை குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு, சென்னை இலயோலா கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  அப்போதுதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராக இருந்தாலும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களால் மட்டுமல்லாது, அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக இருந்தவர்எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும், “2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அன்பு, அமைதி, இரக்கம், எளிமை ஆகிய நற்பண்புகளின் அடையாளமாகவும் உலக அமைதி, மனிதநேயம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்என்றும், முற்போக்குச் சிந்தனைகள் கொண்டு கத்தோலிக்கத் திரு அவையை வழிநடத்திப் பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். மேலும், அகதிகள் பிரச்சினை பற்றியும், புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும், திரு அவையின் மேல்மட்ட நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும், மரண தண்டனைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாது என்றும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்என்றும் திருத்தந்தையின் மானுடநேயப் பண்புகளை விவரித்துக் கூறினார்.

அவ்வாறே, “பூமி மற்றும் அதன் பலன்களைக் காப்பாற்ற வேண்டியது மதக்கடமை என்றும், இயற்கை வளங்களை  அழிப்பது பெரும் பாவம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்சமயத்தின் வழியே இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்திய மாபெரும் செயல் வீரர் என்றும், அனைத்து மதங்களையும் ஒன்றாகக் கருதுகிற தன்மை, இரு நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் எழுகின்றபோது அமைதியை ஏற்படுத்தும் தூதுவராகவும், இஸ்லாமிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு உடன் தோழர்களாக அவர்களை அரவணைத்துக் கொண்டதும் பல்சமய உரையாடலுக்கான அவருடைய முன்னெடுப்புகளும் கத்தோலிக்க ஊடகத்தையும் தாண்டி அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தனஎன்றும் நினைவுகூர்ந்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் உயர்திரு. நாசர், திருச்சி கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருள்முனைவர் ஜோ.அருண், இலயோலா கல்லூரி அதிபர் அருள்முனைவர் இராபின்சன், சென்னை மாநில சேசு சபைத்  தலைவர் அருள்முனைவர் செபமாலை ராஜா, தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி பிலோ, தூய பிரான்சிஸ்க்கு சகோதரிகள் சபையின் தலைவர் அருள்சகோதரி ஆரோக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- செய்தி: திருமதி. டாரத்தி, நம் வாழ்வுசென்னை மண்டல செய்தியாளர்

news
தமிழக செய்திகள்
கடையருக்கும் எழுந்தேற்றம்!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நன்றி!

அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், ஏப்ரல் மாதம் 16-ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.   இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில் இந்த மசோதாக்கள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கின்றன.

இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 நபர்கள், கிராமப் பஞ்சாயத்துகளில் 12913 நபர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 388 நபர்கள், மாவட்ட ஊராட்சிகளில் 37 நபர்கள் என, சுமார் 14,000 மாற்றுத் திறனாளிகள் உரிமை பெறுவர். இது மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 667 கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் ரூபாய் 1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நம் சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் மாற்றுத்திறன் படைத்த சகோதர- சகோதரிகளுக்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் அதிக உரிமைகளையும் சமூக நலன்களையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

கடையருக்கும் எழுந்தேற்றம்என்ற குறிக்கோளோடு சமூக நீதிக்கான அரசாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கும் சிறப்பாக, தமிழ்நாடு முதல்வர் திரு. மு. . ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக குறிப்பாக, கிறித்தவ மக்கள் சார்பாக தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை சிறப்பான நன்றியை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு மக்கள் அனைவரின் நலனுக்காகவும் பணிகள் செய்து இந்த அரசு தொடர்ந்து உதவிட வேண்டும், உழைத்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை மற்றும்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்