news
தமிழக செய்திகள்
எதிர்நோக்கின் நம்பிக்கை நட்சத்திரங்களின் யூபிலிக் கொண்டாட்டம் - 2025

சனவரி 26 அன்று சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம், வளரும் குழந்தைகளின் மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளான நம் குழந்தைகளின் எதிர்நோக்கு என்ன?’ என்ற பொருளில் குழந்தைகளுக்கான யூபிலிக் கொண்டாட்டக் கூடுகை சாந்தோம் பள்ளியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர் அருள்பணி. அனலின் மற்றும் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர். ‘உன்னையும் உன்னை வழிநடத்தும் இறைஆற்றலையும் நம்புஎன்ற தலைப்பில் அருள்பணி. பீட்டர் தும்மா அவர்களும், ‘நாம் ஏன் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என அழைக்கப்படுகிறோம்? நாம் எப்படி நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன முடியும்?’ என்ற தலைப்பில் அருள்பணி. சதிஷ்பால் .. அவர்களும், ‘கடவுளுக்கு மகிமை - குழந்தைகள் ஆற்றலோடும் துடிப்போடும் இருப்பதுபோன்ற கருத்தாழமிக்க தலைப்பிலே திருமதி. பவுலின் ரோஸ் அவர்களும் கருத்துரை வழங்கினர். பாடல்கள், கதைகள், திறன் கண்டறியும் விளையாட்டுகள், நம்பிக்கைச் சுவரில் தங்கள் எண்ணங்களை வெளியிடல் எனப் பல குழந்தைகளுக்கான மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அருள்பணி. ரேமண்ட் பீட்டர் அவர்கள் மறைக்கல்வி பிள்ளைகள் தங்கள் வாழ்விலே இயேசுவையே மையப்புள்ளியாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் 12 மறைவட்டங்களிலுள்ள 96 பங்குகளிலிருந்து 3478 மறைக்கல்வி பயிலும் குழந்தைகள், 565-க்கும் மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பெஸ்கி, அருள் கடல், இளங்குருமடம், திரு இருதய குருத்துவப் பயிற்சி இல்லங்களிலிருந்து குருமட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

news
தமிழக செய்திகள்
மகிழ்ச்சியான செய்தி! - சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ‘TET’ அவசியமில்லை!

தமிழ்நாடு அரசு, சிறுபான்மையினர் பள்ளிகளில் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) கட்டாயமாக்கல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுக்களைத் (Special Leave Petition –SPL) திரும்பப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ளதால், இதன்மூலம், சிறுபான்மையினர் பள்ளிகளில் TET இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலும், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த SLP-களைத் திரும்பப்பெற்றதன் மூலம், 15.11.2011 முதல் 12.01.2023 வரை TET இல்லாமல் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

இந்த வழக்கில் மேமிகு சென்னை-மயிலைப் பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் உடனிருப்புக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அருள்பணி. அந்தோணிசாமி, (செயலாளர் -TANCEAN) அவர்களுக்கும், சட்டப் பணிகளை மேற்கொண்ட மூத்த சட்ட ஆலோசகர் முனைவர் A. சேவியர் அருள்ராஜ் அவர்களுக்கும், அருள்சகோதரி அருள்மேரி மற்றும் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்ட சட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.        

- TANCEAN & சட்டப் பணி தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ, மாணவியர் அறிந்துகொண்டு, கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிகுந்தவர்களாக விளங்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்குத் திருக்குறளை மனனம் செய்தல், அது குறித்துப் பயிற்சி அளித்தல் மற்றும் கருத்தமர்வுகளில் பங்கேற்கச் செய்தல் என ஊக்குவிக்க வேண்டும்.”

- உயர்திரு. ஒளவை . அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்

உலகில் பல மொழிகள் வழக்கொழிந்து போனாலும், இன்றளவும் தனித்து இயங்கும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. உலகில் இரும்பின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதால், உலகின் இரும்பு மனிதனாகத் தமிழன் திகழ்கிறான். தமிழன் என்ற பெருமை நாவளவில் மட்டுமில்லாமல், உணர்விலும் கொண்டு வாழ்வியலில் தனித்தமிழைப் பழக  அனைவரும் முன்வர வேண்டும்.”

- உயர்திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

வழக்குரைஞராகப் பணிபுரிபவர்கள் மூன்று கடமைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தன்னிடம் வரும் வழக்காளியிடம் வழக்கின் தன்மை, வழக்கை நடத்துவதால் கிடைக்கும் நன்மை குறித்து விளக்க வேண்டும்; வழக்கில் எதிராளியாக உள்ளவருக்கு அவரது வழக்குரைஞர் மூலம் வழக்கின் தன்மையை விளக்க முயற்சிக்க வேண்டும்; நீதிமன்றத்திற்கும் உண்மையுடன் செயல்பட வேண்டும். இந்த மூன்றும் அறம் சார்ந்து இருக்க வேண்டும்; ஒரு நல்ல சமுதாயம் அமைய குற்றவியல் வழக்குகள் குறைந்து, உரிமையியல் வழக்குகள் பெருக வேண்டும்.”

- உயர்திரு. எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் ‘நம் வாழ்வு’ வார இதழின் பொன்விழாக் கொண்டாட்டம்

1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் - ‘நம் வாழ்வுவார இதழின் பொன்விழாக் கொண்டாட்டமானது ஜனவரி 22, புதன்கிழமை அன்று மதுரை உயர் மறைமாவட்டம் ஞானஒளிவுபுரம், தூய பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆயர்கள் அனைவருடைய தலைமையில் கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருப்பலிக்குத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையேற்க, ‘நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத்தின் தலைவர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் மறையுரையை வழங்கினார். மறையுரையின்போதுநற்செய்தியாக இருக்கும் கிறிஸ்துவை, அவர் வழங்கிய நற்செய்தியை மற்றும் இறையரசு பற்றிய மதிப்பீடுகள் கொண்ட விழுமியங்களை எடுத்துரைக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணியைக் கடந்த அரை நூற்றாண்டாக மேற்கொண்டு வரும் நம் வாழ்வின் ஊடகப் பணி பாராட்டத்தக்கது. இப்பணி தொடர வாழ்த்துவதோடு, இந்த வார இதழைக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் அரசியல், சமூக, விழிப்புணர்வு பெறுவதற்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டும்எனவும், “தொடர்ந்து இன்னும் பல வாசகர்களை, சந்தாதாரர்களை அறிமுகப்படுத்த வேண்டும்எனவும் கேட்டுக் கொண்டார்.

விழாவிற்குத் தலைமை வகித்த மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயர் மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், “நம் வாழ்வு வார இதழானது சிறுபான்மைச் சமூகமான கத்தோலிக்கக் கிறித்தவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய உரிமைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஊடகமாக அது பயணித்து வந்திருப்பது பாராட்டத்தக்கதுஎனப் புகழாரம் சூட்டினார்.

விழாவிற்கு முன்னிலை வகித்த பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், “ஆட்சியாளர்களின் கரங்களில் மற்றும் அரசியல் தலைவர்களின் கரங்களில் பத்திரிகைகள் சிக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ‘நம் வாழ்வுவார இதழ் தனித்துவம் பெற்று எச்சூழலிலும் எவருக்கும் சமரசமின்றிக் கருத்துகளை முன்வைத்து வருவது, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எடுத்துச் சொல்லும் உன்னதச் செயல்எனப் புகழாரம் சூட்டினார்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், கிறித்தவர்களின் முகமாகத் தமிழ்நாடு அரசியலில் அடையாளம் காணப்படுகின்றவருமான உயர்திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள், “ஒவ்வொரு கிறித்தவக் குடும்பத்திலும் இவ்விதழ் இடம்பெற வேண்டும்; அதற்குப் பங்குத்தந்தையர்கள், இறைமக்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார். “இந்த இதழ் இன்று காலத்தின் கட்டாயம்; கிறித்தவ மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு பேராயுதம்எனவும் குறிப்பிட்டார்.

நம் வாழ்வுஇதழோடு நெடும் பயணம் மேற்கொண்ட  பழம்பெரும் எழுத்தாளர்களுக்குப் பொன்விழா விருதும் பாராட்டும் வழங்கப்பட்டது. ஏறக்குறைய 80 அருள்பணியாளர்கள், 100 அருள்சகோதரிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேலான இறைமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வை, தமிழ் நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநரும், இவ்விதழின் முதன்மை ஆசிரியருமான அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களும், துணை ஆசிரியர்களான அருள்பணி. ஞானசேகரன், அருள்பணி. அருண் பிரசாத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைப்பணி நிலையத்தின் இயக்குநரும், பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளருமான அருள்பணி. பால் பிரிட்டோ அவர்கள் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.

செய்தி: திரு. எட்வின்

news
தமிழக செய்திகள்
பொன்விழா நிகழ்வின் பதிவுகள்

அரசியல்-ஆன்மிக-சமூக வாழ்வியல் விழிப்புணர்வு வார இதழான நம் வாழ்வின் வரவு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நமது கத்தோலிக்க ஆயர்களின் தீர்க்கமான முடிவு. அச்சு ஊடகத்தின் வழியாகக் கத்தோலிக்கத் திரு அவையின் நடப்புச் செய்திகளையும், நடக்கும் நிகழ்வுகளையும் நடக்கப் போகும் நிகழ்வுகளையும் மாநிலம், நாடு, அகில உலகம் என எந்த நிலைகளிலும் திரு அவையையும் உலகையும் கத்தோலிக்க மக்களுக்கு ஐம்பது ஆண்டுகளாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஊடகம், ஆட்சியாளர்கள் அரவணைப்பில் தன்னை அடக்கிக்கொள்ளும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறுபட்டு உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் இறையாட்சியின் மதிப்பீடுகளை எங்கும் அடகு வைக்காமல், யாருக்கும் எந்தச் சூழலிலும் சமரசம் செய்யாமல் தனித்துவ நிலைப்பாட்டோடு ஐம்பது ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கிறதுநம் வாழ்வுவார இதழ். ஊடக உலகில் கத்தோலிக்கத் திரு அவையின் குரல் என்ன என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிப்படுத்திய ஒரே இதழ்நம் வாழ்வுவார இதழ். இதழில் வெளிவரும் செய்திகள் சமூகத்தில், சமூக- பொருளாதார-அரசியல் வாழ்வில்,  பேசுபொருளாகத் தடம் பதித்துள்ளது. கணினி உலக ஊடக ஆதிக்கம் கடந்த இருபது ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்று அச்சு ஊடகத்தை அடக்கும் நிலையில், ‘நம் வாழ்வுவார இதழ் தன்னுடைய தரத்திலும் உறுதியிலும் தாழ்ந்து போகாமல் நடை போட்டு பயணிக்கிறது என்பதைக் காணும்போது, உண்மையிலேயே நான் பெருமை அடைகிறேன். கடினங்கள் சூழ்ந்து நிற்கும் இந்த ஊடக உலகில், காலத்தின் சுழலுக்கும் தேவைக்கும் ஏற்ப நற்செய்தி மதிப்பீடுகளைச் சமரசம் செய்யாமல் உண்மையை எடுத்துரைத்து, நேர்மைக்குக் களங்கம் ஏற்படாமல் செயல்பட்டு, நேரிய வழியில் நிலைத்து நின்று, நெடுங்காலம் இந்த அச்சு ஊடகத்தின் வழியாக இறையாட்சியைப் பரப்பி வரும்நம் வாழ்வுவார இதழ் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.”

- மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டம்

பத்திரிகைகள் என்று எடுத்துக்கொண்டால் இன்றைய சமுதாயத்தில் சினிமாவைப் பற்றிச் சித்தரிக்கின்ற பத்திரிகைகள் உண்டு; அரசியலைப் பற்றிச் சித்தரிக்கின்ற பத்திரிகைகள் உண்டு; அரசியலைக் கேலி செய்து எழுதுகின்ற பத்திரிகைகள் உண்டு; பத்திரிகைகள் விற்க வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதுகின்ற பத்திரிகைகள் உண்டு. இப்படிப்பட்ட பொய்யை மட்டுமே பரப்பும் பத்திரிகைகள் மத்தியில், ஆன்மிகக் கருத்துகளோடு இறைமகன் இயேசுவின் வழியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு வெளிவந்து கொண்டிருக்கிற கத்தோலிக்க வார இதழ்நம் வாழ்வுஇதழ். மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்களுக்குப் பதில் கொடுக்கின்ற, ஆட்சியாளர் எடுக்கின்ற நிலைப்பாடுகளைப் பாகுபாடற்ற பார்வையோடு விமர்சிக்கின்ற, உலக அளவில் கிறித்தவர்களுக்கு என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டுபோய் சேர்க்கின்ற இதழாகவும்நம் வாழ்வுஇதழ் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து உளமாரப் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.” 

- உயர்திரு. இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்

நம் வாழ்வு கடந்து வந்த பாதை கடினமான பாதைதான். ஏனென்றால், எல்லாச் சூழ்நிலைகளிலும் இந்த இதழானது குறைவில்லாமல்  ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது என்பதை நினைக்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தநம் வாழ்வுஇதழை நம்முடைய கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்களிலே நிச்சயமாக வாங்கிப் படிக்க வேண்டும். இன்றைக்கு அரசியல், ஆன்மிக, சமூகக் கருத்துகளை எல்லா மக்களுக்கும் எடுத்துச் செல்கின்ற ஓர் இதழாக இது அமைந்திருக்கிறது. இன்னும் இதனுடைய எண்ணிக்கையானது உயர வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை. இன்றைக்குச் சிறுபான்மையினர்மீது அரசால் திணிக்கப்படும் கருத்துகள், திட்டங்கள் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா? என்பதை நமக்குத் தெரிவிக்கின்ற அரசியல் விழிப்புணர்வைக் கொடுக்கின்ற இதழாக இவ்விதழ் இருக்கிறது. இன்று 50-வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகின்ற வேளையில் நம்முடைய குடும்பங்களில், நம்முடைய நிறுவனங்களில் இந்த இதழ் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.”

- மேதகு அந்தோணி பாப்புசாமி, மேனாள் பேராயர், மதுரை உயர் மறைமாவட்டம்

news
தமிழக செய்திகள்
எல்லாருடைய கரங்களிலும் ‘நம் வாழ்வு’ தவழவேண்டும்

அன்புக்குரியவர்களே!

1975-ஆம் ஆண்டு பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் இந்த அழகிய நங்கை இன்று தனது 50-வது அகவையை எட்டியிருக்கும் அவளுக்குப் பாராட்டு விழா எடுப்பது தகுதியும் நீதியுமானது. இத்தருணத்தில் காலங்கள் உருண்டோடினாலும், தன் அழகும் வனப்பும் வசீகரமும் சிறிதேனும் குறையாது, பேரழகு நங்கையாய் அனைவரையும் தன் இனிய தமிழால், தெளிந்த சிந்தனையால், ஆழமான கருத்துகளால், கூர்மையான தொலைநோக்குப் பார்வையால் இளமைத் துடிப்போடு இன்றும் வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.

திரு அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உண்மையையும் நீதியையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உரிமைக்கான குரலையும் பதிவு செய்யும் நோக்குடன் நன்மைகளை மேற்கோள்காட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டி எந்தச் சூழலிலும், எவருக்கும் எவற்றிலும் சமரசமின்றி உண்மையை உரக்கச் சொல்லிநல்லவர்களின் நாடித் துடிப்பாகஇவள் பயணித்து வருவது இவள் கண்ட முதல் சாதனை!

இப்பயணத்தில், ‘நம் வாழ்வுஇதழின் மேனாள் ஆசிரியர்கள், வெளியீட்டுச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய ஆயர் பெருமக்கள், இதன் தொடக்க காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட பெரியவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் யாவரும் இப்பெருமைக்குரியோரே! அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாளே இப்பொன்னாள்!

இந்த இதழை ஏழு ஆண்டுகள் மூன்று மாதங்கள் இதன் ஆறாவது முதன்மை ஆசிரியராகப் பயணித்து வழிநடத்திய காலத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அத்தருணத்தில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். மேலும், தரமான அரசியல் கட்டுரைகளால் கிறித்தவ மக்கள் மட்டுமின்றி எல்லாச் சமயத்தவரும் அரசியல் தலைவர்களும் வாசிக்கும் பொதுவெளி ஊடக இதழாக உயர்ந்து நின்றது. குறிப்பாக, கிறித்தவர்களை அரசியலுக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்கும் கொண்டு செல்லும் இலக்கோடு பயணித்தது. அத்தகைய இதழியல் வேட்கையோடு அது மீண்டும் புத்தெழுச்சி பெற்று வலம் வருவது பாராட்டத்தக்கது

நம் வாழ்வுநம் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை உள்வாங்கி, உண்மையை உரக்கச் சொல்லி வருவது இவ்விதழின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. இனி வரும் காலங்களிலும் இதன் சாதனைப் பட்டியல் நீள வேண்டும், வாசகர்கள் கூட வேண்டும், பத்திரிகை வளர வேண்டும், எல்லாருடைய கைகளிலும் இது தவழ வேண்டும், பலருடைய சிந்தனைகளில் மாற்றம் காண வேண்டும், மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இளையோர் மத்தியிலும், அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் மலர வேண்டும் என்பதே என் ஆவல். இத்தகைய எண்ணத்தில்நம் வாழ்வுஇதழின் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பது சமூக மாற்றத்திற்கான உறுதியான நம்பிக்கையைத் தருகிறது.

இப்பொன்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தநம் வாழ்வுஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரனுக்கும், துணை ஆசிரியர்களுக்கும், அலுவலக அன்பர்களுக்கும், வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

அன்புடன்

மேதகு முனைவர் லூர்து ஆனந்தம்

சிவகங்கை மறைமாவட்ட ஆயர்

தலைவர் - நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம்,

தமிழ்நாடு ஆயர் பேரவை.