news
தமிழக செய்திகள்
மக்கள் இவரை யாரென்று சொல்கிறார்கள்?

ரொம்ப நல்லவர். நாடுகளுக்கிடையே சமாதானத்திற்கு வழிகாட்டியவர். ஆன்மிகத்தில் தளராத பக்தி கொண்டவர். ஏழைகளிடமும், குழந்தைகளிடமும் எப்போதும் அன்பு செலுத்தியவர்.” 

- செல்வி. காணிக்கைமேரி, பாகாயம், வேலூர்

எளிமையின் வடிவம். மிகுந்த பக்தி. அவரைப் பார்க்கும்போது தெரியும் அவருடைய இரக்கமும் மன தைரியமும். அவரை நேரில் பார்க்கக்கூடிய பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.”

- திரு. அலெக்ஸாண்டர், கூடல்நகர், மதுரை

சிறைச்சாலை கைதிகளின் பாதத்தைக் கழுவியதை நினைக்கும்போது அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. விளிம்புநிலை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர். சாதி, மதம், இனம் கடந்து எல்லாவித மக்களாலும் விரும்பப்பட்டவர்.”

- திருமதி. ரோஸ்லின்மேரி, பொன்மலை, திருச்சி

ஏழை மற்றும் நலிந்த மக்களுக்காக வாழ்ந்த ஆன்மிகவாதி. உலகில் சமாதானத்துடன் மக்கள் வாழ பல முயற்சிகள் செய்தவர். உக்ரைன் போரின்போது அவரது உரை மக்கள்மீது அவர் எவ்வளவு அன்பு செய்தார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.”

- திரு. ஜோசப் பீட்டர், விருதுநகர்

எளிமையானவர், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். திரு அவை வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தவர். இளைஞர்களைக் கிறித்தவத்தில் வளர பல முயற்சிகள் மேற்கொண்டவர். உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்.”

- திரு. அந்தோணிசாமி, பாண்டிச்சேரி

சமூகப்பற்றாளர், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று அதிகம் விரும்பியவர். தன்னுடைய வருமானத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டவர்எளிமையானவர்.”

- திரு. கிறிஸ் அன்டோஸ், நெல்லை

சுற்றுச்சூழல் மீது அதிகம் அக்கறை கொண்டவர். ரொம்ப எளிமையானவர் என்பதற்கு அவருடைய இறுதி அடக்கம் பற்றி அவர் கூறியிருப்பதே சிறந்த உதாரணம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.”

- திருமதி அருள்மேரி அருளானந்தம், உடுமலை

அன்புக்கும் சமாதானத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எல்லா மக்களையும் விரும்பக்கூடியவர். கிறித்தவ சாட்சிய வாழ்விற்கு மிகுந்த சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.”

- திருமதி. மெர்சி, தஞ்சாவூர்

அவருடைய மரண செய்தியைக் கேட்டபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நல்ல மனிதர். மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர். மிகவும் மென்மையானவர்.”

- திரு. ஜோசப்ராஜ், மாம்பலம், சென்னை

எளிமையான வாழ்க்கைக்குச் சிறந்த முன்னோடி. அரபு நாடுகளுக்கு முதன் முதலில் சென்ற திருத்தந்தைஅவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை அன்போடு சந்தித்துப் பேசக்கூடியவர். மனிதநேயம் கொண்டவர்.”

- திரு. ஜேம்ஸ், ஈரோடு

 

news
தமிழக செய்திகள்
‘மாற்றங்களை முன்னெடுத்த முற்போக்காளர்’ (திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்குத் தமிழ்நாடு தலைவர்கள் இரங்கல்)

அமைதி, இரக்கம் மற்றும் பணிவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர், வறுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேவைக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.”

- ஆளுநர் ஆர்.என். ரவி

அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்களிடம் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு சென்றவர்.”

- திரு. எடப்பாடி பழனிசாமி (.தி.மு..)

தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சேவைக்காகவும், சமூகச் சமத்துவத்துக்காகவும், மத நல்லிணத்துக்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்தவர் போப் பிரான்சிஸ்.”

- திரு. நயினார் நாகேந்திரன் (பா...)

உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் போப் பிரான்சிஸ்.”

- மருத்துவர் . இராமதாஸ் (பா...)

இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தியவர். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையே உரையாடலை மேற்கொள்ள அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தன.”

- முதல்வர் மு.. ஸ்டாலின்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.”

- திரு. கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)

போப் பிரான்சிஸ் மறைவு கிறித்தவர்களுக்கு மட்டுமன்றிசகோதரத்துவம் மற்றும் உலக அமைதிஆகிய வற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.”

- திரு. தொல். திருமாவளவன் (வி.சி..)

 

news
தமிழக செய்திகள்
இரங்கல் தீர்மானம்

கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகவும் பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது அகவையில் 21-04-2025 அன்று வத்திக்கான் நகரில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார், துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தன. அன்னாரது மறைவினால் அவரை இழந்து துயருற்றிருக்கும் வத்திக்கான் கத்தோலிக்கத் திரு அவைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.”

- தமிழ்நாடு சட்டமன்றம்

news
தமிழக செய்திகள்
எளிய மக்களின் குரல்!

கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் இறைவனிடம் மீண்டார் எனும் செய்தி அறிந்து வருந்துகிறோம். கத்தோலிக்கக் கிறித்தவத்திற்கு மட்டுமின்றி, இந்த இழப்பு ஆன்மிக உலகிற்கும் ஏற்பட்ட இழப்பாகும்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் இலத்தீன் அமெரிக்கத் திருத்தந்தை எனும் வரலாற்றுத் தடத்தைப் பதித்தார். இறைப்பணி, தேவாலயங்களின் சேவை, மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

அன்பு, நம்பிக்கையுடன் கூடிய துணிவையும் தனது செயல்பாடாகக் கொண்டு இயங்கியவர். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டியவர் அவர். அதனாலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது பணிகளில் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தார்.

சமூக நீதிக்கொள்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர். அதனாலேயே எளிய மக்களின் குரலாகவே அவரது குரல் ஒலித்தது. அடிமைத்தனத்தை அறுத்தெறிய வேண்டும் என்பதைத் தொடர்ந்து முழங்கியவர். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, வத்திக்கானில் பெண்களுக்குப் பதவிகளையும் வழங்கினார்.

போரிடும் கெட்ட உலகத்தை வேரோடு சாய்ப்போம்என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். போர் இல்லாத அமைதியான உலகைச் மைப்பதைப் பெரிதும் விரும்பியவர். அதனாலேயே பாலஸ்தீனம் மீதான இஸ்ரயேலின் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துப் போர் நிறுத்தத்தை வேண்டினார்.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவச் சகோதரர்களின் இழப்பின் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பிய போர்களற்ற அமைதியான உலகம் மைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

- மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ, மாநிலத் தலைவர்,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு, புதுச்சேரி

 

news
தமிழக செய்திகள்
எல்லாருக்குமான ஒரு தலைவர்!

ஏழைகளின் தந்தையாக, புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஆதரவுக் குரலாக, புலம்பெயர்ந்தோரின் காவலராக வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். புனித வாரத்தில் நோயுற்று இருந்தபோதும்கூடநான் என் மக்களைப் பார்க்க வேண்டும்என்று கூறி, சக்கர நாற்காலியில் வந்து பார்த்தவர். எப்போதுமே புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்று கூறியவர். புனித வியாழன் பாதங்கள் கழுவும் சடங்கின் நிகழ்வில் யாருமே தொடத் தயங்குகிற புண்களும் அசுத்தமும் இருக்கக் கூடிய தொழுநோயாளர்களின் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டவர். சிறைக்கைதிகள் மற்றும் பால்வினை நோயாளர்களின் பாதங்களையும் தொட்டு முத்தம் செய்தவர்.

இவர் கத்தோலிக்கத் திரு அவைக்கு மட்டும் தலைவரல்லர்; உலகத்துக்கே மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, “ஏழைகளை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்என்று கூறிய உடன் கர்தினாலின் வார்த்தையைக் கடைசிவரை வாழ்வில் செயல்படுத்தியவர். 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸின் பெயரை ஏற்று, அவரைப்போல எளிமையையும் ஏழ்மையையும் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். நூறு ஆடுகளுள் ஒன்று தவறினாலும்கூட தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு தவறிய அந்த ஓர் ஆட்டைத் தேடுகிறவர்தான் உண்மையான தலைவர் என்பதை எண்பித்துக்காட்டியவர். தெருக்களில் அகதிகளாக, ஏழைகளாக, விளிம்பு நிலை மக்களாக வாழ்வாதாரம் ஏதுமின்றிக் கதறிக் கொண்டிருந்த மக்களைத் தேடிச்சென்று, அவர்கள் எல்லாருக்கும் ஒரு தலைவராக இருந்தவர்.

இந்தத் திரு அவை யாருக்கானது? எந்த மக்களுக்கானது? என்பதை உலகுக்கு உணர்த்தியவர். ‘கொரோனாநேரத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு வத்திக்கானையே திறந்துவிட்டவர். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனக்கான வத்திக்கான் மாளிகையில் தங்கவில்லை. ‘நான் மாளிகையின் தலைவன் அல்ல; குடிசைகளின் தலைவன்என்று கூறி ஆண்டாண்டு காலமாகத் திருத்தந்தையர் தங்கி இருந்த வத்திக்கான் அரண்மனையை விட்டு விட்டு, ஏழைகளைச் சந்திக்கும் விதமாக ஓர் எளிய அறையில் தங்கினார். இப்படிப்பட்ட மிகப்பெரும் திருத்தந்தையின் வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். திரு அவை மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் ஏழைகள், அகதிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் எல்லாருக்குமான ஒரு தலைவராக இருந்து, பெரும் மாற்றங்களைத் திரு அவையில் கொண்டு வந்தார். ‘வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட மக்களைத் தீர்ப்பிட நான் யார்?’ எனக் கேட்டவர். ‘திருத்தந்தை தவறிழைக்க மாட்டார்என்ற கோட்பாட்டை மாற்றி, ‘கடவுள் மட்டுமே தவறிழைக்காதவர்; நான் சாதாரண மனிதர்தான், தவறிழைக்கக்கூடியவர்என்று கூறிய மாமனிதர். வத்திக்கான் வங்கியில் மாற்றம் கொண்டு வந்த புரட்சியாளர்.

இறுதி நேரத்திலும் உலக அமைதிக்காக நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். சமூக நீதி என்னும் சிந்தனையை ஆளும் தலைவர்கள் மனத்திலே விதைத்துச் சென்றிருக்கிறார். ‘இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானதுஎன்று கூறி, இயற்கையைச் சுரண்டும் முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலாளித்துவச் சிந்தனை இருந்தால், இயற்கையை அழித்துவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். நுகர்வு கலாச்சாரத்தால் நம்முடைய வாழ்வு பாதித்துள்ளது என்று கூறி, ‘அதீத முன்னேற்றம் ஆபத்தானதுஎன்று முழங்கியுள்ளார். ‘சாதாரண ஏழைகளுக்கு எல்லாம் கிடைப்பதை உறுதி செய்வதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சிஎன்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழையாக, ஏழைகளுக்காக வாழ்ந்து, ஏழையாகவே இறைமடி சேர்ந்துள்ள தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழைகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

 

news
தமிழக செய்திகள்
சான்று பகர்ந்த வாழ்வு! (தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி)

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை 20-04-2025 அன்று உலகமே கொண்டாடிய வேளையில், தன்னைக் காண புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமி இருந்த மக்களுக்குத் தன்னுடைய திருக்கர ஆசிரை வழங்கி, ‘பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும்; அதுவும் நீதியில் விளையக்கூடிய நிரந்தர அமைதியாய் இருக்க வேண்டும்என்று தன்னுடைய இறைவேண்டலை இறுதியாக இறைவனுக்கு அர்ப்பணித்த நிலையிலே, 21.04.2025 அன்று காலை 7:30 மணி அளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உயிர் இறைவனடி சேர்ந்ததை அறிந்து தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆழ்ந்த இறைவேண்டல் கலந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

கூட்டொருங்கியக்கப் பாதையில் திரு அவையை அழைத்துச் சென்ற மிகப்பெரிய ஆளுமை திருத்தந்தை பிரான்சிஸ். இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அனைவரின் மனங்களுக்கும் இது வேதனை அளித்தாலும், அனைவரின் இதயங்களிலும் குடிகொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஏழை எளிய மக்களுக்கும், புலம் பெயர்ந்து ஆதரவு தேடி வந்த மக்களுக்கும் ஆதரவு தந்தவர், அடைக்கலம் கொடுத்தவர். அகில உலகத்தையும் அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்தவரும் அவர். உலக அமைதி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை போன்ற இன்னும் பலவற்றில் புதிய சிந்தனைகளை விதைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

மக்களின் மனங்களை அறிந்தவன்தான் நல்லாயனாய், நல்ல தலைவனாய் இருக்க முடியும் என்பதைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டியவர். அவரது கனிவான சொற்களும், கள்ளமில்லாச் சிரிப்பும், அவரது அன்பின், இரக்கத்தின், எளிமையின் விழுமியங்களை எல்லாருக்கும் எடுத்துக்கூறின. கத்தோலிக்க மதத்தினுடைய தலைவர் என்ற  அவருடைய 12 ஆண்டு கால உழைப்பானது உலகத்தின் கடைக்கோடி மக்களின் இதயத்திலும் கண்டிப்பாய் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவருடைய இழப்பால் அகில உலகக் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல; இன்னும் நல்ல பல உள்ளங்களும் கண்ணீரைக் காணிக்கையாக்கினாலும், அவரது சான்று பகர்ந்த வாழ்வு, சரியான தலைமைத்துவம், எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் யாருடைய பதிலாளாய் இவ்வுலகில் வாழ்ந்தாரோ அதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை அனைத்திற்கும் நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம். உயிர்த்த ஆண்டவருடைய கரங்களில் அவரது ஆன்மாவை ஒப்படைப்போம். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்; நிலையான ஒளி இவர்மேல் ஒளிரட்டும்!

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமிதலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்