news
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டிலிருந்து சிம்லா - சண்டிகர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தின் ஆயராகக் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. சகாய ததேயுஸ் தாமஸ் (54) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 12 அன்று நியமனம் செய்துள்ளார்.

அருள்தந்தை சகாய ததேயுஸ் தாமஸ் 1971-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள சின்னவிளையில் பிறந்தவர். இலக்னோ புனித பவுல் இளங்குருமடத்தில் கல்வி பயின்று, ஜலந்தரில் உள்ள தமத்திரித்துவக் குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். 2001, மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்றார். பாட்டியாலா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் (2006-2008), டெல்லியில் உள்ள இந்திய மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைக் கல்வியில் முதுகலைப் பட்டத்தையும் (2007-2009) பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும் (2010-2013), திருவிவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் (2013-2016).

பங்குப் பணியாளர், குருமட உதவி அதிபர், மறைமாவட்டச் சமூகத் தொடர்பு மற்றும் திருவிவிலிய ஆணையங்களின் இயக்குநர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.

news
தமிழக செய்திகள்
கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம்

கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவில் மார்ச் 29, 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. ஆறு மறைவட்டங்களிலிருந்தும் 74 பங்குகளிலிருந்தும் திருப்பயணமாக இறைமக்கள் திருப்பயணத்தில் பங்கேற்றனர். எதிர்நோக்குப் பற்றிய அறிவுரைச் சிந்தனையும், தொடர்ந்து ஒப்புரவு அருளடையாளமும் தியான மையத்தில் வழங்கப்பட்டன. பின்பு அங்கிருந்து மறைமாவட்ட யூபிலி சிலுவையை ஏந்தி இறைமக்கள் பசிலிக்காவை நோக்கி, புனிதர்கள் மன்றாட்டு மாலை இசைக்கப் பவனியாகச் சென்றனர். முதல் நாளில் திருத்தலத்தில் வட்டார முதன்மைக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறுதி நம்பிக்கை உறுதிப்படுத்துகின்ற கண்காட்சி அரங்கிலும் மற்றும் ஒலி-ஒளிக் காட்சிகளும் இறைமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வாக ஞாயிறு அன்று மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு இறையாசிரோடு திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுகளை மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. அந்தோணி இயேசுராஜ், பேராலயப் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட அதிபர் பேரருள்திரு K.M.C. அருண் மற்றும் தியான மைய இயக்குநர் அருள்பணி அலெக்ஸ் அந்தோணிசாமி ஆகிய மூவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


news
தமிழக செய்திகள்
வித்தியாசமான திருப்பயணம்

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் சார்பாக ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் சமூக நீதிக்கான யூபிலி திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மறைமாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புப் போராட்டம் வெற்றிபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் மத ஒற்றுமையைப் பாதிக்க முயன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தனர். கொடைக்கானலில் நற்கருணை ஆராதனையில் பங்கெடுத்து, இயேசுவின் பாடுகளையும், சமூக நீதிப் போராளிகள் ஸ்டேன் சுவாமி, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரின் வாழ்க்கையையும் தியானித்தனர். இந்நிகழ்வைத் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் அருள்பணி. எடிசன் ஒருங்கிணைத்தார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள்!

கிறித்தவர்களின் சமய விழாக்களில் நம்பிக்கையை ஆழமாகப் புடமிடும் நாள்புனித வெள்ளி.’ இறைமகன் இயேசு இம்மனுக்குல மீட்புக்காக, மானிடரின் பாவங்களை மன்னிப்பதற்காகச் சிலுவை சுமந்து, கல்வாரி மலை நோக்கிச் சென்று, கரம் விரித்து சிலுவையில் மரித்து, உயிர் துறந்ததை ஆழமான நம்பிக்கையோடும் பக்தி நிறைந்த செப உணர்வோடும் கொண்டாடும் நாள் புனித வெள்ளி. புனித வாரச் சிறப்பு நாள்களில் குறிப்பிடத்தக்க நாள் இப்புனித வெள்ளி. இந்நாளில் தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடிட தமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக, முதலமைச்சருக்குக் கிறித்தவர்கள் அன்போடு வேண்டும் கோரிக்கை இது.

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் முக்கியச் சிறப்பு நாள்களில் மதுபானக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கப்படுவதுபோல, கிறித்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி அன்றும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பது கிறித்தவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு-புதுவை கத்தோலிக்கப் பொதுநிலையினர் பேரவையின் தற்போதைய தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயருமான முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்குச் சபைகளின் இயக்குநர் அருள்பணி. ஜெயந்தன் அவர்களும் பிற கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட பரிந்துரைக்குமாறு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் வழிகாட்டுதலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மின் அஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இயேசு இறந்த தியாக நாளாம் புனித வெள்ளி நாளில் கேரளா மற்றும் டெல்லி மாநிலங்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுபோல, தமிழ்நாடு அரசும் கிறித்தவ மக்களின் உணர்வினை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில அனைத்துக் கிறித்தவப் பெருமக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைக்குச் செவிமடுப்பார் என்றே நம்புகிறோம்!

news
தமிழக செய்திகள்
ஐக்கிய ஆலயத்தில் பொன்விழா கொண்டாட்டம்

உரையாடலின் மூலம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி மனிதத்தைக் காத்து வரும் மையம் ஒற்றுமையின் ஆலயம்என்று பொருள்படுவது ஐக்கிய ஆலயம். 1974-ஆம் ஆண்டு அருள்பணி. இக்னேசியஸ் இருதயம் சே.. அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் பொன்விழா, சென்னை, அருள் கடலில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாள்களில்உரையாடலை மீட்டெடுப்பது-ஒற்றுமையை அரவணைப்பதுஎன்ற தலைப்பில் பல்சமய தேசியக் கருத்தரங்கம்  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தென்னிந்தியத் திரு அவையின் மேனாள் பேராயர் தேவசகாயம், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் டி. ஹரி பரந்தாமன், ஆற்காடு அறக்கட்டளையின் நிறுவுநர் மற்றும் அறங்காவலர் மாண்புமிகு. இளவரசர் நவாப் சாதா முகமது ஆசிப் அலி, சென்னை மறை மாநிலத் தலைவர் அருள்பணி. செபமாலை ராசா சே.., முனைவர் புஷ்பராஜன், முனைவர் ஜேம்ஸ் பொன்னையா எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

வத்திக்கானில் உள்ள பல்சமய உரையாடல் துறையின் இயக்குநர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் உரையாடலின் முக்கியத்துவத்தைக் குறித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்தக் கருத்தமர்வில் முனைவர் ராஜ் இருதயா எழுதியுள்ள ‘The Fiery Word: A Perspectival Approach’, அருள்கடலார் எழுதியுள்ளமக்கள் அனுபவத்தில் மலர்ந்திடும் இறையியலாக்கம், முனைவர் ராபின் சகாயசீலன் எழுதியுள்ளDiving Deep: Engaging Religious Symbols in Interfaith Dialogueஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்தப் பொன்விழா பல்சமய தேசியக் கருத்தமர்வை ஐக்கிய ஆலய இயக்குநர் முனைவர் ராஜ் இருதயா, சே.. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.             

news
தமிழக செய்திகள்
மதுரையில் நிகழ்ந்த மத நல்லிணக்க மாநாடு

முச்சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்திருப்பது திருப்பரங்குன்றம் மலை. இம்மலையில் இந்துகள், முஸ்லிம்கள், சைனர்கள் ஆகியோர் நீண்ட காலமாக அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இம்மக்களின் அமைதியைச் சீர்குலைக்கச் சில மதவாத அமைப்புகள் அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டன.

இந்த மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டித்து மார்ச் 9-அன்று மதுரை கே.கே. நகரிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில்மத நல்லிணக்க மாநாடுநடைபெற்றது. இம்மாநாட்டுக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “என் இறைவனுக்கும் என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லைஎனக் கூறினார்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் மத நல்லிணக்க மலையாகத் திருப்பரங்குன்றம் மலையைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் கோவிலில் புகுந்து வன்முறையைத் தூண்டிய கட்சிகள், அமைப்புகள்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் மத நல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் போன்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் மேதகு இலாரன்ஸ் பயஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், நெல்லையப்பர் ஆதினம் பதினெண்சித்தர் பீடம் சித்தர் மூங்கிலடியார், அருள் பணி. பெனடிக்ட் பர்னபாஸ், ஹென்றி டிபேன், மீ.. பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.