மானுட நாகரிகத்தின் உன்னதமே எளியோரை எங்ஙனம் நடத்துகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அண்மைக் காலங்களில் உலகரங்கில் ‘உயிர் பாதுகாப்பு’ (Pro-Life) எனும் சிந்தனை நன்மக்கள் உள்ளங்களில் துளிர்விடுகின்றது. ஆயினும், பல வேளைகளில் அது வெறும் கருக்கலைப்பிற்கு எதிரான ஒரு குறுகிய அரசியல் நிலைப்பாடாக மட்டுமே சுருக்கப்பட்டு, விவாதக் களங்களில் முடங்கிக் கிடக்கிறது. ஆனால், உண்மையில் ‘உயிர் பாதுகாப்பு’ என்பது அரசியல் எல்லைகளையும், கொள்கைச் சுவர்களையும் கடந்தது. அது ‘கருவறை முதல் கல்லறை வரை’ அனைத்து மனித உயிர்களின் உன்னத மாண்பைப் பேணும் அடிப்படை உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்.
நீண்ட
காலமாகவே, உலகளவில் மனிதர்கள் இரு வேறு எல்லைகளில் நின்றுகொண்டுதான் இந்தச் சிந்தனையை அணுகுகிறார்கள். ஒன்று, கருக்கலைப்பிற்கான உரிமையைக் கோரும் ‘சுயதேர்வு ஆதரவு’
(Pro-Choice); மற்றொன்று,
அதற்கு எதிரான ‘உயிர் பாதுகாப்பு’ (Pro-Life). இந்த இரு துருவ வகைப்பாடுகளுக்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ளும்போது, மாற்றுச் சிந்தனைகளுக்கான வழிகள் அடைபட்டுப் போகின்றன.
ஒரு
தாயின் கோணத்தில் நின்று சிந்தித்தால், உயிர் பாதுகாப்பு என்பது வெறும் பிறப்புடன் முடிந்துவிடும் நிகழ்வல்ல; மாறாக, அது பிறப்பிற்குப் பின் தொடங்கும் நீண்ட நெடிய பொறுப்பு. ஒரு குழந்தையை உலகிற்குக் கொண்டு வந்தவுடன் தாயின் கடமை நிறைவடைவதில்லை; அங்கிருந்துதான் அது புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. வளர வளரக் குழந்தைகளின் தேவைகள் சிக்கலானவையாக மாறுகின்றன. இவற்றிற்குத் தீர்வு காண ஒரு கூட்டுச் சமூகத்தின், அன்பான குடும்பத்தின் மற்றும் ஆன்மிக அமைப்புகளின் அரவணைப்பு இன்றியமையாதது. எனவே, பிறப்பிற்கு முந்தைய உயிரை எப்படிக் காக்கத் துடிக்கின்றோமோ, அதே அளவு பிறப்பிற்குப் பிந்தைய உயிரின் வாழ்வாதாரத்தையும் காப்பதே உண்மையான உயிர் பாதுகாப்பாகும்.
உலகின்
ஆகப்பெரும் வல்லரசான அமெரிக்காவிலேயே, ஏறத்தாழ நான்கில் ஒரு குழந்தை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாகவும், மாற்று அளவீடுகளைப் பயன்படுத்தினால் இந்த எண்ணிக்கை பாதியாக (இரண்டில் ஒரு குழந்தை) உயர்வதாகவும் தேசியக் குழந்தைகள் வறுமை மையத் (NCCP) தரவுகள்
எச்சரிக்கின்றன. செல்வச் செழிப்புமிக்க நாடுகளிலேயே இந்நிலை என்றால், வளரும் நாடுகளின் விளிம்புநிலைச் சூழலைச் சொல்ல வேண்டியதில்லை.
வறுமை
என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமல்ல; அது தரமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், முறையான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மறுக்கப்படுவதன் குறியீடு. உண்மையான உயிர் பாதுகாப்புச் சிந்தனை கொண்ட ஒரு சமூகம், இத்தகைய வறுமைச் சூழலிலிருந்து குழந்தைகளையும் குடும்பங்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த ஆழமான உரையாடல்களைத் தொடங்கவேண்டும்.
அரசின்
நலத்திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, தாய்-சேய் நல உதவிகள், ஏழைகளுக்கான
மருத்துவக் காப்பீடு ஆகியவை ஓரளவிற்குச் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கினாலும், அவை மட்டுமே முழுமையான தீர்வாகாது. அரசு சாரா நிறுவனங்களும், ஆன்மிக அமைப்புகளும் கைகோர்த்து, ஒவ்வொரு மனிதனும் தன் அடிப்படைத் தேவைகளைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.
கிறித்தவக்
கோட்பாடுகளின்படி, பலவீனமானவர்களையும் எளியவர்களையும் காப்பது வெறும் சமூகச் சேவை அல்ல; அது இறைவனின் நேரடிக் கட்டளை. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” (யோவா
10:10) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதாகும். எனவே, மானுட உயிர்கள் யாவும் வாழ்வை நிறைவாகப் பெறவேண்டுமாயின், நாம் வெறும் பேச்சளவில் அல்லாமல், செயலில் காட்ட வேண்டும்.
ஆகவே,
உயிர் பாதுகாப்பு இயக்கத்தை (Pro-Life Movement) அடித்தட்டு
நிலைக்குக் கொண்டு செல்ல, ஆக்கப்பூர்வமான பல செயல்பாடுகளை நாம்
முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, கருவில் வளரும் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டும்; ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்தல் மற்றும் வளர்ப்புப் பெற்றோராக (Foster Care) மாறும்
முறையை ஊக்குவிக்க வேண்டும்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு அரவணைப்பு வழங்கவேண்டும்; உளவியல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், அம்மையங்களில் தன்னார்வலராகப் பணியாற்றவேண்டும்.
மேலும்,
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடங்கள், ஆபத்தான சூழலில் உள்ள குழந்தைகளுக்கான மாலை நேரக் கல்வி மையங்கள் ஆகியவற்றில் நம் நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்யவேண்டும். மேலும், ஆன்மிகக் கூடங்கள் தங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடாமல், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை நோக்கித் தங்கள் கரங்களை நீட்டும் செயல்திட்டங்களைத் திரு அவை வடிவமைக்கவேண்டும்.
இந்தியச்
சூழலில் கருக்கலைப்பு (Abortion) மற்றும்
உயிர் பாதுகாப்பு (Pro-Life) ஆகியவற்றிற்கு
இடையேயான உரையாடல், மேற்கத்திய நாடுகளைப் போல வெறும் மதக் கோட்பாடாகவோ அல்லது அரசியல் துருவமுனைப்பாகவோ மட்டும் சுருங்கிவிடாமல், மிகவும் ஆழமான சமூகப் பின்னணியைக் கொண்டுள்ளது.
இந்தியச்
சட்டம் (MTP Act) உலக
அளவில் மிகவும் முற்போக்கான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெண்ணின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. சட்டம் உரிமை வழங்கினாலும், நம் பாரம்பரியக் கலாச்சாரத்தில் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவை அழிப்பது என்பது ஒரு பாவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு சட்டம் ‘உரிமையை’ முன்னிறுத்தும்போது, சமூக மரபுகள் ‘உயிரின் புனிதத்தை’
முன்னிறுத்துகின்றன.
மேற்கத்திய
நாடுகளில் ‘Pro-Life’ என்பது பொதுவாகக்
கருக்கலைப்பை முழுமையாக எதிர்ப்பதைக் குறிக்கிறது. ஆனால், இந்தியாவில் உயிர் பாதுகாப்பு என்பது வெறும் கருத்தியல் விவாதம் அல்ல; மாறாக, அது பெண் குழந்தைகளின் உயிர் வாழும் உரிமைக்கான நேரடிப் போராட்டம். இதன் மிக முக்கிய வடிவம் பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம் (PCPNDT Act) ஆகும்.
பெண் குழந்தை என்பதற்காகக் கருவை அழிப்பது கொடும் குற்றம். ஆனால், அதேவேளையில் ஒரு பெண்ணின் உடல் நலம் மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்கச் செய்யப்படும் மருத்துவக் கருக்கலைப்பு அவசியமானது. இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் நம் சமூகத்திற்குத் தேவைப்படுகிறது.
அமெரிக்க
வரலாற்றில் 1973-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘ரோ வி. வேட்’ (Roe v. Wade) தீர்ப்பு, கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கிய ஒரு துயரமான நிகழ்வாக உயிர் பாதுகாப்பு ஆதரவாளர்களால் பார்க்கப்பட்டது. ஆயினும், அண்மையில் ‘டாப்ஸ்’
(Dobbs) தீர்ப்பின்
மூலம் அது இரத்து செய்யப்பட்டது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லாரன் போபர்ட் போன்ற தலைவர்கள், ‘பிறந்த குழந்தை பாதுகாப்புச் சட்டம்’
(Born-Alive Abortion Survivors Protection Act) போன்ற சட்டங்களை ஆதரித்து, கருக்கலைப்பு முயற்சியிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளுக்குக் கூட முழுமையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனர்.
அமெரிக்க
மக்களில் 77 விழுக்காட்டினர் இத்தகைய உயிர்காப்புச் சட்டங்களை ஆதரிப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறினாலும், அரசியல் தளத்தில் இன்னும் தீவிரமான கருத்தியல் போர்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
இவ்வுலகில்
அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாழும் உரிமை உண்டு. எனவே, தோலின் நிறம், மொழி, சமூக நிலை, கருவறையில் இருக்கும் நிலை என எவ்விதப் பாகுபாடுமின்றி
அனைத்து உயிர்களையும் நேசிப்பது நம் கடமை.
உயிர்
பாதுகாப்பு என்பது வெறும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்குரிய சித்தாந்தமோ அல்ல; அது மனிதகுலத்தின் ஆன்ம சாட்சி. கருவிலிருக்கும் குழந்தையின் உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், தெருவோரங்களில் பசியால் வாடும் முதியவர்கள், புலம்பெயர்ந்த அகதிகள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரின் வாழ்வுரிமையையும்
உள்ளடக்கியதே முழுமையான ‘உயிர் நேய’ இயக்கம். இயற்கை நமக்குக் கொடுத்த உன்னதக் கொடை மனித உயிர். அதைத் தன்னிச்சையாக முடித்துக் கொள்ளவோ, சிதைக்கவோ எவருக்கும் உரிமையில்லை.
மனிதநேயச்
சிந்தனைகள் மலரட்டும்;
மகத்தான
மானுடம் வளரட்டும்;
உயிர்
பாதுகாப்பு உன்னதமடையட்டும்;
கருவறைத்
தொட்டில் முதல்
கல்லறைத்
துயில் வரை
மனித
மாண்பு எந்நாளும்
போற்றிப்
பாதுகாக்கப்படட்டும்!
வாருங்கள்...
மனிதம் புனிதமானது;
மானுடம்
மகத்தானது என்பதனை
உலகறிய
உரக்கச் சொல்லுவோம்!
வாருங்கள்...
ஆகஸ்டு 9-ஆம் நாள் ஒன்றிணைவோம்! உயிர்காப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“ஒரு தலைமுறையின் வகுப்பறையில் நிலவும் கல்விக் கொள்கையே அடுத்த தலைமுறையின் அரசின் இயக்கக் கொள்கையாக மாறும்” என்கிறார் ஆபிரகாம் லிங்கன். அவ்வாறே, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்து-இசுலாமியர் ஒற்றுமையை வலியுறுத்திய வருமான மௌலானா அபுல்கலாம் ஆசாத், “ஒரு தேசத்தின் சுதந்திரம் என்பது, கற்கும் சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது” என்கிறார். இக்கூற்று முற்றிலும் உண்மையே!
ஒரு
நாட்டின் ஆன்மாவும், அதன் எதிர்காலப் பாதையும் அந்த நாடு தன் குடிமக்களுக்கு வழங்கும் கல்வியில்தான் வடிவமைக்கப்படுகின்றன. கல்வி என்பது வெறும் எழுத்தறிவோ, வேலைவாய்ப்பிற்கான தகுதியோ மட்டுமல்ல; மாறாக, அது அச்சமூகத்தின் விடுதலைக்கான ஆயுதம், பகுத்தறிவின் ஊற்றுக்கண். எனவேதான், “உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வியே” என்றார் நெல்சன் மண்டேலா.
இந்தியத்
திருநாடு பன்முகத்தன்மையையும், பல்வேறு மொழி-கலாச்சாரக் கூறுகளையும் கொண்ட ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பு. இத்தகைய சூழலில் கல்வி என்பது அனைவருக்குமான பொதுநலப் பொருளாக, சமூகநீதியின் சாரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதைகளின் தொலைநோக்குப் பார்வை. ஆனால், தற்போதைய இந்திய உயர்கல்வித்துறை, வரலாறு காணாத ஒரு பேராபத்தின் விளிம்பில் வந்து நிற்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்விக் கட்டமைப்பையும் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றை அதிகாரத்துவக் குடையின்கீழ் கொண்டுவரும் நோக்குடன், நாடாளுமன்றத்தின் இந்த 2026 மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருக்கிறது,
‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
(VBSA - Viksit Bharat Shiksha Adhisthan Bill, 2025) எனும் சட்ட முன்வரைவு.
ஏற்கெனவே
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட இந்தச் சட்ட முன்வரைவு, எதிர்வரும் கூட்டத்தொடரில்
சட்டமாக்கப்பட்டால், அது இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தேசியக்
கல்விக் கொள்கையின் (NEP 2020) சட்டப்பூர்வ
வடிவமாகத் திகழும் இந்தச் சட்ட முன்வரைவு, இந்திய உயர்கல்வியின் பன்முகத்தன்மையை முற்றிலும் ஒழித்து, ஒற்றைப் புள்ளியில் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்க முயல்கிறது. இது சட்டமாக நடைமுறைக்கு வந்தால், பல ஆண்டுகளாக இந்தியக்
கல்வியின் தூண்களாக விளங்கிய பல்கலைக்கழக மானியக் குழு (UGC - University Grants Commission), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE - All India Council for Technical Education), தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE - National Council for Teacher Education) போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றின் சட்டங்கள் நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
என்ற ஒற்றை உச்ச ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்படும்.
சட்டம்
மற்றும் மருத்துவக் கல்விக்கு மட்டும் தற்காலிகமாக இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றிக்கும் இதேபோன்ற தனித்தனி மையப்படுத்தப்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், இந்த ஆணையத்தின் கீழ், பொதுவான நிர்வாகக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் ஒழுங்குமுறை மன்றம் (Regulatory Council), கல்வி
நிறுவனங்களின் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைக் கண்காணிக்கும் அங்கீகார மன்றம் (Accreditation Council)), கல்வித்
தரங்களைத் தீர்மானிக்கும் தர நிலைகள் மன்றம்
(Standards Council) என
மூன்று முக்கிய மன்றங்கள் செயல்படும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதுவரை
இருந்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கல்வி
நிறுவனங்களைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றிக்கான நிதி மற்றும் மானியங்களை வழங்கும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெற்றிருந்தது. கல்வி நிறுவனங்களின் நிதித் தேவைகளை அறிந்து, அரசியல் சார்பின்றித் தன்னாட்சியுடன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அதற்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புதிய சட்ட முன்வரைவின்படி, அமையவிருக்கும் புதிய ஆணையத்திற்கோ அல்லது அதன்கீழ் இயங்கும் மன்றங்களுக்கோ எவ்வித நிதி அதிகாரமும் கிடையாது. கல்வி நிறுவனங்களுக்கான மானியங்களை வழங்கும் முழுப் பொறுப்பும் நேரடியாக ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆகவே,
கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது இனி தகுதிகளின் அடிப்படையில் நடக்காது; மாறாக, அது அதிகாரத்துவத்தின் தன்னிச்சையான முடிவாகவும், ஆளும் கட்சியின் அரசியல் கணக்கீடுகளுக்கு உட்பட்டதாகவும் மாறும்.
ஏற்கெனவே
தேசியக் கல்விக் கொள்கையையும், இந்திப் பயிற்றுமொழியையும் முழுமையாக ஏற்காத மாநிலங்களுக்குப் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பா.ச.க.
அரசு வழங்க மறுக்கிறது. இனிவரும் காலங்களில், உயர்கல்வியிலும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்குப் பணிந்து போனால் மட்டுமே நிதி கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இது மறைமுகமாக இந்தித் திணிப்பிற்கும், ஒன்றிய அரசின் கொள்கைத் திணிப்பிற்கும் வழிவகுக்கும்.
இந்திய
அரசமைப்புச் சட்டத்தின்படி, கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பான ‘ஒத்திசைவுப் பட்டியலில்’ (Concurrent List) உள்ளது. ஆனால், இந்தச் சட்ட முன்வரைவு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இவ்வாணையத்தின் அமைப்பு முறையைக் கண்டாலே இதன் பின்னணியில் உள்ள அதிகாரக் குவியல் நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த ஆணையம் ஒரு தலைவரையும், 12 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், நாட்டின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் இந்த அமைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் இரண்டே இரண்டு ஆசிரியப் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெறுவர். அவர்களும்கூட மாநில உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கப்படுபவர்களாகவே இருப்பர்.
ஒன்றிய
அரசின் உயர்கல்விச் செயலாளர் மற்றும் ஐந்து ‘நிபுணர்கள்’ என
12-இல் 10 உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். மூன்று மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். மாநில அரசுகளின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் ஓராண்டு காலத்திற்கு, அதுவும் சுழற்சி முறையில் மட்டுமே வழங்கப்படும். இது மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறித்து, அவற்றைப் பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் சதியாகும்.
இந்தியாவின்
உயர்கல்வி என்பது பல நூற்றாண்டு காலக்
கல்வி மறுப்புக்கு எதிராக, சமூகநீதிப் போராட்டங்களின் வாயிலாகப் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்
மூலம் அடித்தட்டு மக்களுக்குக் கிட்டிய உன்னதக் கொடையாகும். ஆனால், இந்த உச்ச ஆணையத்தின் கட்டமைப்பில் சமூக நீதிக்கான எந்தவோர் உத்தரவாதமும் இல்லை.
ஆணையத்தின்
நியமனங்களில் பட்டியல் சாதிகள் (SC), பட்டியல்
பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட
வகுப்புகள் (OBC), பெண்கள்,
சிறுபான்மையினர், மாற்றுப்பாலினத்தவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்தவொரு சட்டப்பூர்வப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.
பன்முகத்தன்மை
கொண்ட ஒரு தேசத்தின் கல்வி அமைப்பில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் ஒலிக்காவிடில், அது மீண்டும் கல்வியை ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கானதாக மாற்றிவிடும். ‘ஒரே அளவு அனைவருக்கும்’ என்ற
இவர்களின் அணுகுமுறை, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை முற்றிலுமாக முடக்கிவிடும்.
இன்று
இந்திய உயர்கல்வித்துறை சந்தித்து வரும் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள், தேர்வு குளறுபடிகள் அனைத்தும் நோயின் வெளிப்புற அறிகுறிகள் மட்டுமே. ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ என்பதே அந்த நோய். ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சி.யு.இ.டி. (CUET) எனப்படும்
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முறையால் சீரழிந்துள்ளதுடன், தாமதமான சேர்க்கைகள், காலியாகக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான இடங்கள், மதிப்பில்லாத நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்புகள், தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனங்கள் என உயர்கல்வித்துறை திணறி வருகிறது.
இத்தகைய சூழலில், கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி மறுவார்ப்பு செய்வதற்கும், கார்ப்பரேட் மயமாக்குவதற்கும் ஏதுவாகவே திருமதி. நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்பட்டுள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் கல்வியின் ஆற்றலைக் கொண்டுள்ளது; அந்த ஆற்றலைக் கொண்டுதான் நாம் நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்”
என்கிறார் மலாலா யூசுப்சாய். ஆகவே, கல்வி என்பது ஒரு சந்தைப் பண்டமல்ல; மாறாக, அது பொதுச்சமூகத்திற்கான ஆற்றல். ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
(VBSA) மசோதா
என்பது இந்திய உயர்கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கல் மற்றும் காவிமயமாக்கலை நோக்கிய பேராபத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாகும்.
தற்போது
இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குறிப்பாக, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிடவேண்டும். கல்வியின் தன்னாட்சியைக் காக்கவும், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல், இந்தியாவின் உயர்கல்வி எதிர்காலச் சந்ததியினரின் சிந்தனைத் திறனை முடக்கும் பேராபத்தாக அமையும் என்பது திண்ணம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மொழி என்பது மனிதர்களுக்கிடையேயான வெறும் தொடர்புக் கருவி மட்டுமல்ல; அஃது ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி! வாழும் பாரம்பரியத்தையும், வரலாற்றுத் தொன்மையையும் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கும் கலாச்சாரச் சங்கிலி. இந்தியத் துணைக்கண்டத்தின் பேரழகே அதன் பன்மொழியிலும், பலதரப்பட்ட கலாச்சாரங்களிலுமே அடங்கியுள்ளது.
இந்தியாவில்
பன்மொழித்தன்மையையும்,
தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில், கோத்தாரி ஆணையத்தின் (1964-1966) பரிந்துரைகளின் அடிப்படையில் ‘மும்மொழிக்கொள்கை’ என்ற
கல்விசார் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் என்றும், அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் இக்கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால், இக்கோட்பாடு அதன் நோக்கங்களிலிருந்து விலகி, இன்று மாநிலங்களின் தன்னாட்சியையும், மாணவர்களின் கற்றல் சுதந்திரத்தையும் சிதைக்கும் ஒரு கருவியாக உருவெடுத்திருக்கிறது. அண்மையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஜூன்
2026-இல் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களும், அதன் விளைவாக எழுந்துள்ள குழப்பங்களும் இக்கொள்கையின் திசை மாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஒன்றிய
அரசு, ‘தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP) மூலம்
மும்மொழிக்கொள்கையை எவர் மீதும் திணிக்க மாட்டோம்’
என்று வாக்குறுதி அளித்தாலும், நடைமுறையில் அது முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தையே காட்டுகிறது. 2026 மே மாதத்தில், ஒன்பதாம்
வகுப்பு மாணவர்களுக்கும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக்கப்படும் என்றும், அவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் இரண்டு கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் CBSE அறிவித்தது.
இதனால் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளை விருப்பப்பாடமாகப் படித்து வந்த ஆயிரக்கணக்கான மாணவரும், அவர்களது பெற்றோரும் திகைத்து நின்று போராடத் தொடங்கினர்.
இதனைத்
தொடர்ந்து, ஜூன் 30, 2026 அன்று மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் CBSE ஒரு
திடீர் முடிவெடுத்து, புதிய விலக்குகளை அறிவித்துள்ளது. அதாவது, தற்போதைய 7, 8, மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே இரு வெளிநாட்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் அதனையே தொடரலாம் என்றும், கூடுதலாக ஒரேயோர் இந்திய மொழியை மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குறிப்பிட்ட பிரிவினருக்குப் பத்தாம் வகுப்பில் இம்முன்றாம் மொழிக்கு வாரியத் தேர்வு (Board Exam) இருக்காது;
மாறாக, பள்ளி அளவிலான உள்மதிப்பீடு (Internal Assessment) மட்டுமே
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்
திடீர் மாற்றங்களும், தற்காலிகத் தளர்வுகளும் மும்மொழிக்கொள்கையின் அடித்தளத்தில் உள்ள தொலைநோக்குப் பார்வையின்மையையும், திட்டமிடல் குறைபாட்டையும் உணர்த்துகின்றன. கல்வி என்பது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்துவக் கட்டாயங்களால் அவர்களின் சுமையைக் கூட்டுவதாக ஒருபோதும் அமையக்கூடாது.
தேசியக்
கல்விக் கொள்கை 2020-இன்படி, மாணவர்கள் எந்தவோர் இந்திய மொழியையும் தங்களின் மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டாலும், இந்த விதியின் உள்ளே மறைந்திருக்கும் நடைமுறைச் சவால்களை ஆராய்ந்தால் அவை பெரிதும் அதிர்ச்சியளிக்கின்றன.
உதாரணமாக,
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் அல்லது அரசுப் பள்ளியில் 50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறை இருப்பதாகக் கொள்வோம். மும்மொழிக்கொள்கையின்படி, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிற இந்திய மொழிகளைத் தேர்வு செய்யும்போது, இம்மொழிகளைக் கற்பிக்கத் தனித்தனி ஆசிரியர்களைப் பெரும் ஊதியம் கொடுத்து பள்ளி நிர்வாகத்தால் நியமிக்க முடியுமா? இதனால்தான் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்புகள் இக்கொள்கைக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
இத்தகைய
சூழலில், ஒன்றிய அரசின் ‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’ போன்ற அமைப்புகள் மூலம் ஏற்கெனவே உலாவரும் ‘இந்தி மொழி’ ஆசிரியர்களையே நியமிக்கப் பள்ளிகள் முன்வரும். ஒன்றிய அரசும் இந்தி ஆசிரியர்களை நியமிக்கவே மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதன் விளைவு, மாணவர்களுக்குத் தங்களின் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் தவிர்த்து, ‘இந்தி’ மொழியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மறைமுகமாக உருவாக்கப்படும். இது பன்முகத்தன்மையின் பெயரால் நடத்தப்படும் ஒரு நுட்பமான ஏமாற்று வேலை; இந்தி பேசாத மாநிலங்கள்மீது தொடுக்கப்படும் கலாச்சார ஆக்கிரமிப்பு!
கல்வி
என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ‘பொதுப் பட்டியலில்’ உள்ளது.
இதில் மாநிலங்களின் தேவைகளுக்கும், கொள்கை உருவாக்கத்திற்கும் முழு தன்னாட்சி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள் பல ஆண்டுகளாக ‘இருமொழிக்
கொள்கையை’ (வட்டார
மொழி மற்றும் ஆங்கிலம்) பின்பற்றி வருகின்றன. கல்வி, சுகாதாரம், மனிதவள மேம்பாடு என அனைத்துச் சமூக-பொருளாதாரக் குறியீடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களை விடத் தென் மாநிலங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதற்கு இந்தத் தெளிவான இருமொழிக் கொள்கையே காரணம்.
இந்தி
பேசும் வட இந்திய மாநிலங்களில்
உள்ள மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தங்களின் அன்றாடக் கல்வியில் கற்கப் போகிறார்கள். ஆனால், இந்தி பேசாத தென் மாநில மாணவர்கள் மட்டும் ஏன் மூன்று மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்? என்பதே இங்கே எழும் அடிப்படைக் கேள்வி.
மொழி
என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், கலை மற்றும் தொன்மங்களின் கருவூலம். மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மாணவர்களின் கற்றல் திறனையும் நேரத்தையும் பிரிக்கும்போது, அவர்கள் தங்களின் சொந்தத் தாய்மொழியின் மீதான ஆழமான பிணைப்பை இழக்க நேரிடும்.
மகாராஷ்டிராவைச்
சேர்ந்த ஒரு சராசரி மாணவன், மூன்றாவது மொழியின் சுமையால் மராத்தி மொழிக்கான நேரத்தைக் குறைக்கும்போது, தொன்மை வாய்ந்த மராத்திய இலக்கிய வரலாறும், வாரகாரி இயக்கத்தின் ஆன்மிகப் பாரம்பரியமும், ஜோதிபா புலே மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளும் அந்த இளந்தலைமுறையினரிடமிருந்து மெல்ல மறைந்து போகும். அதேபோல், செம்மொழி வரலாற்றைக் கொண்ட தமிழ்மொழியின் செழுமையை, வடநாட்டுச் சித்தாந்தங்களின் திணிப்பால் சிதைக்க முற்படுவது ஒருபோதும் முறையாகாது.
இன்று
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது; வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தைத் தொட்டுள்ளது, உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், நமது கல்வித்துறை கவனம் செலுத்தவேண்டியது எதன்மீது? மொழிக் கணிப்பொறிகளுக்குள் மாணவர்களை அடைப்பதிலா? அல்லது உலகளாவிய அறிவியல் அரங்கில் சீனா போன்ற நாடுகளுக்குச் சவால் விடுப்பதிலா?
இன்று
சீனா உலக அளவில் 64 முக்கியமான அதிநவீன தொழில்நுட்பங்களில் 57 தொழில்நுட்பங்களில் அமெரிக்காவையே முந்தி முதலிடத்தில் உள்ளது.
நமக்கு
இப்போது தேவைப்படுவது மாணவர்களின் பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனையையும் தூண்டும் ஒரு வலுவான ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கொள்கையே’
(Science Education Policy) தவிர,
மொழிச் சண்டைகளும் திணிப்புகளும் அல்ல.
இந்தியாவின்
பலமே அதன் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் ஒற்றைமொழிக் கொள்கையை நோக்கித் தேசத்தை நகர்த்த முயல்வது பேரழிவிற்கே வழிவகுக்கும். ஆகவே, தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வரும் இருமொழிக் கொள்கையே மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், உலகளாவிய வேலைவாய்ப்பிற்கும், உள்ளூர் கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் உகந்தது என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக்கூடாது.
மாணவர்கள்
தங்களின் எதிர்காலத் தேவைக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும்; அதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது. ஆனால், கல்விசார் கட்டமைப்புகளின் வழியே மறைமுகமாக மொழியைத் திணிப்பதை சனநாயக ஆதரவாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒன்றிய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, மாநிலங்களின் கல்வித் தன்னாற்றலை மதித்து, இந்தியாவின் உண்மையான பன்முகத் தன்மையைப் போற்றவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்திய அரசியலில், தமிழ்நாட்டு அரசியல் களம் மட்டும் எப்போதுமே தனித்துவம் கொண்டது. தொடக்கம் முதலே குறிப்பாக, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு சமூக அரசியலாக்கத்தை (Social Politicization) இம்மண் முன்னெடுத்து வருகிறது.
சமூக
அரசியலாக்கம் என்பது வெறும் அதிகாரக் கைமாற்றமோ அல்லது தேர்தல் காலக் கூட்டணிக் கணக்குகளோ அல்ல; மாறாக, அது மக்கள் தங்கள் தன்னுணர்வு மூலம், உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்து, புதிய சாத்தியங்களைக் கண்டுணர்ந்து, அதைச் செயல்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு தொடர் செயல்பாடாகும். இதனால் தனிநபர்களும் குழுக்களும் அமைப்புகளும் தங்களைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்சினைகளை ஆய்ந்துணர்ந்து, அவற்றின் அரசியல் காரணங்களைப் புரிந்துகொண்டு, தீர்வுகாணும் நோக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விழிப்புணர்வு பெற்று வருவது அண்மைக்காலங்களில் கண்கூடாகிறது.
விழிப்புணர்வு,
அதிகாரப் பகிர்வு, பொது ஈடுபாடு எனும் முக்கூறுகளின்மீது கட்டமைக்கப்படும் இவ்வாழ்வியல் நெறி சாதி, மதம், பொருளாதாரம், பாலினம் இவை சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் வெறும் எதார்த்தங்களாகப் பார்க்காமல், அவை கட்டமைக்கப்பட்ட அதிகார அரசியலின் விளைவு என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. மேலும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றிற்கு அரசியல் ரீதியான தீர்வு காணவும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியலைப் பிரதிபலிக்கவும், சனநாயக வழிமுறைகளில் பங்கு பெறவும் கற்றுத்தருகிறது.
ஆகவே,
சமூக அரசியலாக்கம் என்பது சமூக மாற்றத்தை உருவாக்குவது; சமூகத்தைச் சீர்திருத்துவது; அரசமைப்பை உன்னத நிலைக்குக் கொண்டுசெல்வது; வன்முறையும் நெருக்கடியும் மிகுந்த மானுட வாழ்வைச் சீரமைத்து, அமைதியும் செழுமையும் கொண்ட சகவாழ்வை உருவாக்குவது. இத்தகைய சீர்திருத்தப் பயணத்தில் குறைகளைக் களைந்து சமூகத்தை மேன்மைப்படுத்துவதையே நாம் ‘முற்போக்குக் கருத்தியல்’ என்கிறோம்.
முற்போக்குக்
கருத்தியலில் வேரூன்றிய மானுடத்தின் நிகழ்கால வாழ்வியல், கடந்தகால வரலாற்றையும் எதிர்காலச் சமூக மாற்றத்தையும் சேர்த்தே தழுவிக்கொள்கிறது. இவை பிரிக்கமுடியாதவாறு ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டவை என்பதை மார்க்சியக் கோட்பாடுகள் தெளிவாக விளக்குகின்றன. அதாவது, “மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியபடியெல்லாம் அதனை உருவாக்குவதில்லை. கடந்தகாலத் தலைமுறைகள்
உருவாக்கிய மரபுகள், தீய கனவுகள்போல இன்றைய தலைமுறையினரின் மனங்களில் ஆறாத வடுக்களாகவும் தீராத
பிரச்சினையாகவும் அமைகின்றன”
எனக் குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ்.
மார்க்சின்
இவ்வரிகள் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் தற்போது நிகழும் அரசியல்
சூழலைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன. பார்ப்பனியம், வருணாசிரமம், சனாதனம், ஆணாதிக்கம், சாதியம் போன்ற தீமைகள் இன்றும் மக்கள் மனங்களைப் பீடித்துள்ளன. இத்தகைய வரலாற்றுச் சுமைகளை எதிர்கொண்டுதான் சமூக நீதியும் சமத்துவமும் நிலவும் புதிய மக்களாட்சிச் சமூகத்தை நாம் கட்டமைக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின்
நலன் கருதி, நீண்ட நெடிய வரலாறு கொண்ட இக்கருத்தியல் தொடர வழிவகை செய்ய வேண்டியது, ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வோர் அரசின் தலையாய கடமை. இம்மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவர்கள் எச்சூழலிலும் இக்கருத்தியலில் சமரசமின்றிப் பயணித்தனர் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் பேருண்மை.
அவ்வகையில்,
மக்களாட்சி அமைப்பில் சட்டமன்றம் என்பது வெறும் சட்டங்களை இயற்றும் அரங்கம் மட்டுமல்ல; அது மக்களின் இறையாண்மையின் சின்னம். அங்கே மக்களின் பிரதிநிதிகள் எழுப்பும் வினாக்களுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பது அரசின் முதன்மையான கடமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி, முதலமைச்சர் என்பவர் மாநில அரசின் ‘முதன்மைச் செய்தித் தொடர்பாளர்’ (Chief Spokesman) மற்றும் ‘அமைச்சரவையின் தலைவர்.’ சட்டமன்றத்தில் எழுப்பப்படும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த கேள்விகளுக்குத் தானே முன்வந்து பதிலளிப்பதே ஒரு தேர்ந்த ஆளுமையின் அடையாளமாக இருக்க முடியும்.
அரசின்
கொள்கைகளை அவையில் அறிவிப்பதும், நெருக்கடிக் காலங்களில் துணிச்சலுடன் முன்னின்று வழிநடத்துவதும் முதலமைச்சரின் முக்கியப் பொறுப்பாகும். எதிர்க்கட்சிகளின் வினாக்களுக்குப் பதிலளிப்பது என்பது தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துவதல்ல; மாறாக, அது மக்களின் உரிமைகளுக்குத் தரும் அங்கீகாரமாகவும், வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்திற்குச் சான்றாகவும் அமைகிறது.
தமிழ்நாடு
அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பெரும் பேசுபொருளாகி இருக்கின்றன. குறிப்பாக, முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் உள்துறை சார்ந்த சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்குத் தானே நேரடியாகப் பதிலளிக்காமல், பிற அமைச்சர்களைப் பதிலளிக்க வைப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
உறுப்பினர்களின்
கேள்விகளுக்குப் பதிலளிப்பது தனது தகுதிக்குக் குறைவு என்று அவர் கருதுகிறாரா? அல்லது கோர்வையாகக் கருத்துகளை முன்வைப்பதில் அவருக்குத் தயக்கம் உள்ளதா? என்ற ஐயம் எழுகிறது. இரண்டுமே ஓர் ஆரோக்கியமான மக்களாட்சிக்கு உகந்த பண்புகள் அல்ல; சட்டமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது வெறும் சொற்களை உதிர்ப்பதல்ல; மாறாக, அது ஒட்டுமொத்த அரசின் சார்பில் கூட்டுப் பொறுப்பை ஏற்பதாகும்.
நிலைமையை
மேம்படுத்தக் கால அவகாசம் கேட்பதோ, உயர்நிலைக் குழு அமைத்துப் பரிசீலிப்பதாகக் கூறுவதோதான் ஒரு தலைவனின் நல்ல பண்பு. அதைவிடுத்து, அமைதி காப்பது சட்டம்-ஒழுங்குச் சீர்கேட்டிற்குப் பொறுப்பேற்கத் தவறுவதையே, தயங்குவதையே காட்டுகிறது.
குறிப்பாக,
பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்கும் முதல்வர் விஜய், தலித் இளைஞர்கவின் போன்றோரின் ஆணவப் படுகொலைகளின் போது மௌனம் காத்தது ஏற்புடையதல்ல. குழந்தைகளை, இளையோரைத் தன்பக்கம் கொண்டிருக்கும் ஒரு தலைவர், பார்ப்பனியம்,
வருணாசிரமம், சனாதனம், ஆணாதிக்கம், சாதியம் போன்ற தீமைகளை அடையாளப்படுத்தி சமூகநீதி, சமத்துவம், எல்லாருக்கும் எல்லாம் என நிலைப்பாடு எடுக்கும்
போது இவர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வார்களே! புதிய சிந்தனைகளுடன் புதிய தலைமுறை தளிர்க்க பெரும் வாய்ப்பு உள்ளதல்லவா!
திரைப்பிம்ப
அரசியலைத் தாண்டி, உண்மை அரசியலை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச்செல்லவும், அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும், மொழியறிவும் ஆளுமைத் திறனும், எதையும் தெளிவாக விளக்கும் ஆற்றலும் ஒரு தலைவனுக்கு இன்றியமையாதவை அல்லவா!
மேலும்,
முதல்வரின் நீண்ட நாள் அமைதியும், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுப்பதும் அவர் பிற சக்திகளால் இயக்கப்படுகிறாரோ என்ற சந்தேகத்தை விதைக்கிறது. அதிகாரக் கயிறுகளால் ஆட்டப்படும் பொம்மையாக அவர் சித்தரிக்கப்படுவதைத் தடுக்கவேண்டியது அவரின் கடமையாகும். அவர் தீர்க்கமாகச் சிந்திக்கிறார், அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் விவாதிக்கிறார் என்பது உண்மை எனினும், அது பொதுக்களத்திலும் வெளிப்படவேண்டும்.
இறுதியாக,
முதலமைச்சர் இருக்கை என்பது வெறும் அதிகாரத்தை அனுபவிக்கும் ‘பதவி’ அல்ல; அது எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் மேன்மையான ‘பொறுப்பு.’ அது அதிகார மிரட்டலுக்கான களம் அல்ல; மாறாக, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கருவி.
ஒரு
மக்கள் அரசின் தலைவராக இருப்பவர் தார்மீகப் பொறுப்புடனும் துணிவுடனும் நேர்மறைச்
சிந்தனையுடனும் அரசை வழிநடத்திச் செல்ல வேண்டும். அத்தகைய செயல்பாடுகள்தான் அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே தமிழ்நாட்டு மக்களாட்சித் தத்துவத்திற்குப் பெருமை சேர்க்கும்.
இதையே
ஐயன் வள்ளுவரும்,
‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா
ராட்டும் உலகு’
(குறள் 994)
என்கிறார்.
அதாவது, நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயனுடையவராய் வாழ்பவரின் பண்பினையே, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள். நாற்பது நாள்களைக் கடந்து சட்டசபையில் மௌனம் கலைத்த முதல்வர் விஜய்யின் ஆட்சிக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாய் போற்றத்தக்கதாய் அமையும் - அமையவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“சுடும்வரை நெருப்பு
சுற்றும்வரை
பூமி
போராடும்வரை
மனிதன்
நீ
மனிதன்... இறுதிவரை போராடு”
என்றார்
கவிப்பேரரசு வைரமுத்து. இளையோரின்
போராட்ட எழுச்சி அண்மையில் இந்திய மண்ணில், டெல்லி - ஜந்தர் மந்தர் முற்றத்தில் போர்க்குணம்
கொண்டு போர்க்களம் கண்டிருக்கிறது.
தொழில்நுட்ப
ஊடகத் தளத்தில் மலர்ந்து, சிந்தனையில் வளர்ந்து, உறவுகளில் இணைந்து, உலகின் கவனத்தை ஈர்த்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(CJP) என்பது
என்ன? யார் இவர்கள்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதன் மறைமுக நோக்கம் என்ன? இவர்களின் அடுத்தகட்ட நகர்வு எத்தகையது? என அரசியல் தளத்தில்
நாம் அறிய வேண்டிய அரிய நுட்பங்கள் பல உள்ளன.
இந்த
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(சி.ஜே.பி.) குறித்து
நாடு தழுவிய அளவில் எழும் பெரும்பாலான எதிர்வினைகளும் விவாதங்களும் ஒரு மிக எளிய எதார்த்தத்தைக் காணத் தவறி விடுகின்றன. சி.ஜே.பி.
என்பது சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்ல; அது வெறும் பொதுமக்களின் திரளும் அல்ல; ஆனால், பொதுமக்களைக் காட்டிலும் அது எவ்வகையிலும் தாழ்ந்ததும் அல்ல; அது ஒரு குறிப்பிட்ட சமூகமோ, தற்காலிகமாகத் திரண்ட ஒரு கூட்டமோ அல்ல; அது உண்மையில், காலங்காலமாகத் தேங்கிக் கிடக்கும் ஏமாற்றங்கள் மற்றும் ஆவேசங்களின் உறைவிடமாகத் திகழும் ‘உணர்வுகளின் ஒரு பெருங்குவியல்.’
ஓர்
அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கான நீண்ட தூரத்திற்கு அப்பால் அது நின்றுகொண்டிருக்கிறது. துல்லியமாகக் கூறின், அது ஒரு ‘தருணம்’ மட்டுமே! அந்தத் தனித்துவத்தால்தான் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இது ஒரு தற்காலிகத் தருணமாக இருக்கலாம்; ஆனால், அது இந்தியக் குடியரசின் எதிர்காலம் குறித்த ஒரு பேருண்மையின் தரிசனத்தை நமக்கு வழங்குகிறது.
எல்லையற்ற
அதிகாரவாதத் தாக்குதல்களிலிருந்தும், ஒற்றைத்தன்மை வாய்ந்த ஆதிக்கத்திலிருந்தும் இந்தியக் குடியரசை மீட்டெடுக்கக்கூடிய மாற்று ஆற்றலின் அரசியலின் தரிசனம் அது. இதனை ஒரு தற்காலிகத் தேர்தல் அலையாகப் பார்க்காமல், அடித்தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ‘நீரோட்டம்’
என்று உணர்ந்தால் மட்டுமே நம்மால் இதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தத்
திடீர் எழுச்சியானது மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்யும் அரசுகளின் மத்தியில் உருவாகும் ஒரு பரவலான சமூக நெருக்கடியின் கூறாகவே தோன்றுகிறது. அதிகாரத்தின் பலவீனமான உட்பகுதியை வெளிக்கொணரும் பொருட்டு எங்கிருந்தோ திடீரெனத் தோன்றும் போராட்ட இயக்கங்களின் வரலாற்று வரிசையில் இதையும் நாம் சேர்த்தே பார்க்கவேண்டும்.
வரலாற்றின்
பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், 1973-74-ஆம் ஆண்டுகளின் குஜராத் மற்றும் பீகார் நவநிர்மாண் இயக்கங்கள், 1983-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கம், 2012 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளின் அன்னா ஹசாரே இயக்கம், அண்மையில் நடந்த விவசாயிகளின் தொடர் போராட்டம்... இவை அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் வீழ்த்தவே முடியாத கோட்டைகளாகத் தோன்றிய வலிமைமிக்க அரசுகளுக்கு எதிராக மிக வெற்றிகரமாகச் சவால் விடுத்தவை ஆகும். நாடாளுமன்றத்தில் பலவீனமாகக் காணப்பட்ட எதிர்க்கட்சிகளின் எல்லைகளையும் தாண்டி, மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பெருமை இந்த இயக்கங்களுக்கு உண்டு.
மே
16, 2026 அன்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புக் கல்வி பயிலும் அபிஜீத் திப்கே என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’
எனப் பொருள்படும் வகையில் ஒப்பிட்டுக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றி, இளையோர் இந்த இயக்கத்தைத் தொடங்கினர்.
இதற்கு
ஒரு நிறுவுநர் இருக்கிறார்; ஆனால், கட்டளையிடும் ‘ஒற்றைத் தலைவர்’ என்று எவரும் இல்லை. இதன் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் வெறும் சமூக ஊடகப் பார்வையாளர்களே. நடைமுறை அரசியல் செயல்பாடுகளில் குறைவான ஆர்வமுடையவர்களே. அவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட ஒரு பொது எதிரியை நோக்கியவர்களே. அரசியல் அறிஞர் எர்னெஸ்டோ லக்லாவின் கோட்பாட்டின்படி, இத்தகைய பிரபலமான மக்கள் எதிர்ப்பியக்கங்களின் முதன்மை அடையாளமே ‘பொது எதிரி’ என்பதுதான். வரலாற்றின் மாபெரும் சக்தி வாய்ந்த இயக்கங்கள் அனைத்தும் இத்தகைய மூல ஆற்றலைக் கொண்டே
தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
அதிகார
வர்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் சி.ஜே.பி.
‘கரப்பான் பூச்சியையே’ தன்னுடைய
அடையாளச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இதன் அரசியல் உத்தியைச் சிறப்பானதாக்குகிறது. செர்பிய நாட்டின் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஸ்ர்தா போபோவிச் வலியுறுத்தியதன்படி, நிலவும் அரசியல் அமைப்பைக் கைப்பற்றுவதற்காக அல்லாமல், அந்த அமைப்பின் குறைகளைக் கிண்டலடிப்பதற்காக ‘கரப்பான் பூச்சியை’
ஒரு சின்னமாக எடுத்துக்கொள்வது நகைச்சுவையும் எள்ளிநகையாடுவதும் வன்முறையற்ற எதிர்ப்பின் மிக முக்கியக் கருவிகள் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.
வரலாற்றில்
இத்தகைய ‘கிண்டல் அரசியல்’ மரபார்ந்த எதிர்க்கட்சிகள் வெற்றியடையாத இடங்களில்கூட மிக எளிதாக வெற்றி பெற்றிருக்கின்றது. இத்தகைய போராட்ட வடிவங்கள் அதிகாரவாத ஆட்சியாளர்களை ஒரு பெரும் குழப்பத்தில் தள்ளுகின்றன. அந்தத் தீவிரக் கிண்டல் அரசியலை அப்படியே சகித்துக்கொண்டு அனுமதித்தால், ஆட்சியாளர்கள் மக்களின் முன்னிலையில் பலவீனமானவர்களாகத் தோன்றுவார்கள்; மாறாக, அதனை அதிகாரம் கொண்டு ஒடுக்க முற்பட்டால் அவர்கள் கொடூரமானவர்களாகவும், உலக அரங்கில் அபத்தமானவர்களாகவும் காட்சியளிப்பார்கள்.
மிக
முக்கியமாக, இந்தப் போராட்ட முறை இன்றைய இந்தியாவின் உண்மையான அரசியல் எதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைச் சுற்றி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களோ அல்லது தற்காலிக நம்பிக்கைகளோ, நாட்டின் இளைஞரிடையே பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை குறித்த அதிருப்தியை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
மேலும்,
ஒரு சக்திவாய்ந்த பேரரசு சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வெறும் ஒரு கேலிச் சித்திரத்தைத் தடை செய்வதற்காக ‘தேசியப் பாதுகாப்பு’ என்னும்
காரணத்தை முன்வைக்குமேயானால் அல்லது தனது இணையவழித் தாக்குதல் படையை ஏவி அந்த ‘ட்ரெண்டை’
அவதூறு செய்ய முற்படுமேயானால், அந்த அரசு உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். மக்களின் இந்த அடிமட்டக் கோபத்திற்கு இணையான அளவில் இன்னும் தீவிரமாகச் செயல்படவில்லை. இன்ஸ்டாகிராமில் 2.2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள சி.ஜே.பி.யின் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சி, அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தவும், மக்கள் போராட்டங்களை அரசியல்மயமாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வெறுப்பும்
கோபமும் மட்டுமே நிலையானதோர் அரசியல் கோட்பாடாக ஒருபோதும் மாறிவிட முடியாது. ஆளும் பா.ச.க.
போன்ற பலமான கட்டமைப்பைக் கொண்ட கட்சிகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டுமாயின், வெறும் சமூக ஊடகக் கேலிகளைத் தாண்டி, அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேசும் ஒரு நிலையான கொள்கைத்திட்டத்தை வகுக்கவேண்டும்.
எனவே,
வினோத் குமார் சுக்லாவின் புகழ்பெற்ற கவிதை வரிகளான,
‘அவர் என்னை அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
நான் நீட்டிய கரத்தை அவர்
அறிந்திருந்தார்...
நாங்கள் ஒருவரையொருவர்
தனிப்பட்ட
முறையில் அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
இருண்ட பாதையில்
ஒன்றாகச்
சேர்ந்து நடப்பதை அறிந்திருந்தோம்’
என்பவை
பரவலாக நிலவும் விரக்தியை எதிர்கொள்வதற்கு, ஒரு புதிய அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கணத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.
ஆகவே,
நாம் ஒருவரையொருவர் இன்னும் முழுமையாக அறியாமல் இருக்கலாம்; ஆனால், நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழலில், நாம் அனைவரும் இணைந்து நேர்மையான பாதையில் நடக்கக் கற்றுக்கொள்வதே இத்தருணம் நமக்குத் தரும் உண்மையான தரிசனமாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண்
என்றுரைக்கும் நூல்’
(குறள் 743)
என்றார்
ஐயன் திருவள்ளுவர். அதாவது, உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்கமுடியாத அருமை ஆகிய நான்கும் கொண்டிருப்பதே ’அரண்’ என்று நூலோர் வகுத்திருப்பதாக அரணுக்கு வரையறை தருகிறார்.
ஒரு
நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவுகளின் தொகுப்போ, ஆவணக் காப்பகங்களில் அழகு சேர்க்கும் பெரும் ஏடோ அன்று; அது அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு மனச்சான்றின் பிரகடனம்; அது சனநாயகத்தின் ஆன்மா!
‘இந்திய மக்களாகிய நாம்...’ என்று கம்பீரமாகத் தொடங்கும் நமது இந்திய அரசமைப்புச் சட்டம், உலக அளவில் மிக நீண்ட, ஆழமான, உன்னதமான விழுமியங்களைக் கொண்ட ஒரு வாழ்வியல் வழிகாட்டி நெறி. தனிமனித மாண்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய மேன்மைமிகு கோபுரங்களின்மீது எழுப்பப்பட்ட இந்தச் சட்டம், அடித்தட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ‘அரணாக’ உருவாக்கப்பட்டது. ஆயினும், காலத்தின் சுழற்சியில், மாறிவரும் அரசியல் சூழல்களில் இந்த அரணோ ஆளும் வர்க்கத்தின் கைகளில் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் ‘ஆயுதமாக’ உருமாறி வருகிறதோ? என்றதோர் எண்ணம் இன்று உலகளவில் எல்லாரிடத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
அண்மையில்,
இந்தியாவின் முதன்மைச் சட்ட வல்லுநரும், நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணுமான மூத்த வழக்கறிஞர் திருமிகு. இந்திரா ஜெய்சிங் அவர்களின் நேர்காணலும், அவரது ‘The Constitution is my Home’ (‘அரசமைப்புச் சட்டமே எனது இல்லம்’)
என்ற சுயசரிதை நூலும் நம் கேள்விக்குப் புதியதொரு பரிமாணத்தையும் அறிவுசார் செறிவையும் வழங்கியுள்ளன.
அரசமைப்புச்
சட்டம் ஓர் ஆயுதமாக ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் தற்காலச் சூழல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆம், அரசமைப்புச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதனால்தான் நான் அரசமைப்புச் சட்டத்தை என் வீடாகக் கருதத் தொடங்கியிருக்கிறேன். அரசமைப்புச் சட்டம் என்பது அரசுகளுக்காகவோ, ஆளும் கட்சிகளுக்காகவோ எழுதப்பட்டது அல்ல; அது மக்களுக்காக எழுதப்பட்டது. இப்போது அரசமைப்புச்சட்டத்தை ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து மீட்டெடுத்து, அதற்குக் கட்டுப்பட்டு, அதனுள் நாம் குடிபுகும் நேரம் வந்துவிட்டது” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக்
கருத்து, சட்டம் என்பது ஆட்சியாளர்களின் அதிகார மிரட்டல்களுக்கான கருவி அல்ல; மாறாக, அது சாமானிய மக்களின் உரிமைக் கோட்டை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அரசமைப்புச்
சட்டத்தின் பகுதி III-இல்
(பிரிவுகள் 12 முதல் 35 வரை) பொதிந்துள்ள ‘அடிப்படை உரிமைகள்’
இந்தியக் குடிமக்கள் அனைவரும் அமைதியுடனும் இணக்கத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான குடிமைச் சமூக உரிமைகளை முழுமையாக உறுதி செய்கின்றன. தனிமனிதனின் பொருள்சார், அறிவுசார், நன்னெறி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை என்பதால், இவை நாட்டின் ‘அடிப்படைச் சட்டம்’ எனப் போற்றப்படுகின்றன.
இங்கிலாந்தின்
உரிமைகள் மசோதா, அமெரிக்காவின் உரிமைகள் மசோதா மற்றும் பிரான்சின் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றின் சாரமாகத் திகழும் இந்த அடிப்படை உரிமைகள், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சமூகத்தில் நிலவிய தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள் மற்றும் சுரண்டல்களை ஒழித்திடும் பெரும் சமூகப் புரட்சிக்கான காரணிகளாக விளங்கின.
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சாதி, மத, பாலின, பிறப்பிடப் பாகுபாடுகளுக்கு இதில் இடமில்லை’
எனும் சமத்துவ உரிமை (பிரிவுகள் 14-18); பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் கூடுதல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் சுதந்திர உரிமை (பிரிவுகள் 19-22); மனிதக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, அடிமை முறைகளைத் தடுக்கும் சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவுகள் 23-24); எம்மதத்தையும் வழிபடவும் பரப்பவும் உள்ள சமயச் சுதந்திர உரிமை (பிரிவுகள் 25-28); சிறுபான்மையினரின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு கொண்ட கலாச்சார மற்றும் கல்வி உரிமை (பிரிவுகள் 29-30); அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தை நாட வழிவகை தந்த அரசமைப்புக்குட்பட்டுத் தீர்வு காணும் உரிமை (பிரிவு 32) எனும் ஆறு தூண்கள்மீது ‘மக்களுக்கான’ இவ்வரண்
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ‘அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா’ என வர்ணிக்கப்பட்ட பிரிவு
32 மற்றும் உயர் நீதிமன்றங்களின் பிரிவு 226 ஆகியவற்றின் கீழ் நீதிமன்றங்கள் பேராணைகளைப் பிறப்பித்து, அரசு இயந்திரத்தின் அத்து மீறல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் பேரரணாக விளங்குகின்றன. இவற்றுடன், 2009-இல் சேர்க்கப்பட்ட ‘கல்வி உரிமைச் சட்டம்’
(RTE) சமுதாயத்தின்
விளிம்புநிலைச் சிறுவர்களுக்கான கல்விப்புரட்சியை அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துள்ளது.
ஆயினும்,
அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்கினாலும், மறுபக்கம், ஆட்சியாளர்களின் கைகளில் ஒடுக்குமுறை ஆயுதமாகவே இருக்கின்றது.
குறிப்பாக,
பிரிவு 19 வழங்கும் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை முழுமையானவை அல்ல; நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, ஒழுக்கம் ஆகியவற்றின் பெயரால் அரசு ‘நியாயமான கட்டுப்பாடுகளை’ விதிக்கலாம்
என அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த ‘நியாயமான’
என்ற சொல் மிகப்பரந்த, தெளிவற்ற அர்த்தங்களைக் கொண்டிருப்பதால், ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான நியாயமான விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துகளையும் ‘தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’ என
முத்திரைக் குத்தி ஒடுக்குவதற்கு இப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்கிறது.
மேலும்,
விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி ஒருவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து சிறையில் அடைக்க பிரிவு 22, அரசை அனுமதிக்கிறது. உலகளாவிய தாராளமயச் சனநாயக நாடுகளில் இல்லாத இந்தக் கொடூரமான அம்சம், இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ளது குடிமைச் சமூக ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி இயற்றப்படும் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’
(UAPA - Unlawful Activities Prevention Act) போன்ற
கொடூரமான சட்டங்கள், அண்மைக்காலமாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஏவப்படுகின்றன. நீதிமன்றப் பிணை பெறுவதைக் கடினமாக்கும் இத்தகைய சட்டங்கள், தகுந்த நீதித்துறை மேற்பார்வையின்றி, குடிமக்களை நீண்ட காலம் சிறையில் அடைக்கும் ‘அரசியல் ஆயுதமாகவே’
மாறியுள்ளன.
நீதிமன்றங்களின்
நீண்டகாலத் தாமதங்கள், எளிய மக்களுக்குச் சட்ட உதவி கிடைப்பதில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை சட்டம் வழங்கும் பாதுகாப்பைச் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக்குகின்றன.
காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை ‘யாவரும் இந்நாட்டு மக்களே!’ எனும் ஒருமைப்பாட்டுக் கருத்தியலில் காலூன்றிய முண்டாசுக் கவிஞன்,
‘சாதி மதங்களைப் பாரோம் - உயர்
சன்மம்இத்
தேசத்தில் எய்தின ராயினும்
வேதிய
ராயினும் ஒன்றே - அன்றி
வேறு
குலத்தின ராயினும் ஒன்றே!’
என
வேறுபாடுகள் இல்லை, யாவரும் ஒன்றே என்று முழங்கினான்.
நீதியரசர்கள்
ஜான் மைக்கேல் டி’குன்ஹா, சந்துரு போன்றோர் ஒருபுறம், அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு தொடங்கி அனைத்து வழக்கிலும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தீர்ப்பு வழக்கும் நீதியரசர் ஜி.ஆர். சுவாமி
நாதன் போன்றோர் மறுபுறம் எனப் பார்க்கும்போது சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்கிறதா? என்ற கேள்விதான் எழுகின்றது.
இந்திய
அரசமைப்புச் சட்டம் என்பது தேங்கி நிற்கும் நீரல்ல; அது ஓடும் நதி. அது மக்களுக்கு அரணா? அல்லது ஆட்சியாளர்களுக்கு ஆயுதமா? என்ற கேள்விக்கான விடை, சட்டம் என்ன கூறுகிறது என்பதில் இல்லை; மாறாக, அச்சட்டம் யாருடைய கைகளில் இருக்கிறது மற்றும் நீதித்துறை எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்பதில்தான் இன்று அடங்கியிருக்கிறது.
இறுதியாக,
திருமிகு இந்திரா ஜெய்சிங் அவர்களின் கூற்றுப்படி, அரசமைப்புச் சட்டம் ஆளும் வர்க்கத்தின் அரசியல் சதுரங்கக் களம் அல்ல; அது 140 கோடி மக்களின் வாழ்வுக்கான உன்னத இல்லம். அந்த இல்லத்தின் தூண்களை, அதன் சனநாயகப் பண்புகளை, ஆட்சியாளர்களின் அதிகார ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதுவே தேசத்தின் இறையாண்மைக்கும் மாண்பிற்கும் நாம் செய்யும் உண்மையான தொண்டாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்