பன்னெடுங்காலமாக இந்தியச் சமூகக் கட்டமைப்பு ஏதோ ஒருவகையில் பிளவுபட்டே கிடக்கிறது. பிளவுபடுத்தும் பல்வேறு சக்திகளால் அது இன்றும் இன்னும் கூறுபோடப்பட்டுக்கொண்டே இருப்பதுதான் மிகவும் அவலமான சூழல்!
உணவு,
உடை, கலாச்சாரப் பண்பாடு எனும் மக்கள் வேறுபாடுகளுக்கான காரணிகள் நீளும் பட்டியலில்... மதம், சாதி, மொழி, இனம் என்னும் கூறுகளும் தவிர்க்க முடியாததாகிப்போயின. எல்லாத் தளங்களிலும் சேர்ந்து செயல்படுவதும், இணைந்து வளர்நிலை காண்பதும், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதுமே ஒரு சமுதாயம் சிறப்பதற்கான உன்னதமான வழி. பிரித்துப் பார்ப்பதும் பிரிந்து கிடப்பதும் அறியாமையின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ பாராட்டும் இந்தியத் திருநாட்டில், வேதகாலம் தொட்டே மறைமுகமாகவும், இன்று வெளிப்படையாகவும் தொழிலை, சாதிப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தந்திர சூழ்ச்சியால் சிலர் பிரிவினையை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேல்தட்டு, அடித்தட்டு என்னும் வர்க்கக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அடித்தட்டில் ‘அடுத்தடுத்துத் தட்டுகள்’
இருப்பதாகச் சமூகத்தைத் தங்கள் வசதிகளுக்கேற்றவாறு இன்றும் கட்டமைத்துக்கொள்கிறார்கள்.
ஒருசாராரின்
சொர்க்கமாகவும் ஏற்றத்தாழ்வின் இருப்பிடமாகவும் இருந்த இந்து மதத்தின் சாதிக் கொடுமைகளைக் கண்ட அண்ணல் அம்பேத்கர், “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்” என்றுரைத்தார்.
கசப்பான தனது உணர்வை வெளிப்படுத்திய அவர், “இந்து மதம், உயர்சாதி மனிதனின் சொர்க்கம்; சாமானிய மனிதன் மீளமுடியாத நரகம். சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்ம குணம்; ஏற்றத்தாழ்வின் மற்றொரு பெயர்தான் இந்து மதம்” என்றார். ஒன்றிணையும்
சமூகத்தைத் தடுப்பதே சாதியின் தந்திரம் எனக் கண்ட அவர், “வர்க்க வேற்றுமையை விட சாதிய வேற்றுமையே, இங்கு மனிதச் சமூகத்தை மிகவும் பெரிதளவில் இழிவுபடுத்துகிறது” என்றும்
உரக்கக் கூறினார்.
இந்திய
மண்ணில் படிந்து கிடந்த சாதியக் கட்டமைப்பு எனும் இருளிலிருந்து, சமூகத்தின் சமத்துவப் புரட்சிக்கான விடியல் நிறைந்த சிந்தனைகளை விதைத்த ஆதவன் அவர். ஆதிக்க மனநிலையின் அடித்தளம் தகர்த்த புரட்சியாளர் அவர். தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இந்து மதத்தோடு இருக்கும் தொடர்பை முற்றாக அறுத்தெறிய முனைப்பாக நின்ற அம்பேத்கர், பின்னாளில் தன்னைப் புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.
தீண்டாமை
தொடரும் இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்குவதாக 1932, ஆகஸ்டு 17 அன்று அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர் மக்டொனால்டு.
ஆயினும், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர் மகாத்மா காந்தி. தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த இங்கிலாந்து அரசு சதிசெய்வதாகக் கூறி ‘எரவாடா’ சிறையில் உண்ணாநோன்பில் ஈடுபட்டவர் அவர்.
வாழ்க்கைப்
போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பட்டியல் இன மக்கள் இன,
மத, வர்க்கக் கட்டமைப்பில் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து இந்திய அரசியல் அமைப்புச்
சட்டம் (பிரிவு 25-28) வழங்கிய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆயினும், தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே தக்கவைத்துக்கொள்ள சிறப்புச் சலுகைகளும் தீண்டாமை ஒழிப்புச் சிந்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது,
“அரசியலில் மதத்திற்கு எந்த வேலையும் இல்லை என்பவர்கள், மதம் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள்” என்று
தனது ‘சத்திய சோதனை’யில் எழுதினார் மகாத்மா காந்தி. மத உணர்வு மிக்கவர்கள்
அற வழிப்பட்ட அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் பிறந்த அவருடைய கருத்து அது. ஆனால், அதே காந்தி பின்னாளில் “மதம் என் சொந்த விவகாரம்; அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை” என்றும் முழங்கினார்.
‘உண்மை...
தெளிந்த
நீரைப் போன்றது;
அறிவுஜீவிகள்
அந்த
நீர் இருக்கும்
குட்டையைக்
குழப்பிச்
சேறாக்கி
விடுகிறார்கள்’
என்ற
‘கவிக்கோ’ அப்துல்
ரகுமானின் வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன.
மேலும்,
“இந்தியாவில் இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்கள்; இந்தியாவைத் தங்கள் நாடாகக் கொண்டிருக்கும் இந்துகள், முஸ்லிம்கள். பார்சிகள், கிறித்தவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மக்களே. உலகின் எந்தப் பகுதியிலும் ஒரே தேசிய சமுதாயம் என்பது ஒரே மதம் என்ற நிலையில் இருந்ததில்லை, இந்தியாவிலும் அப்படி இல்லை” என்று ‘இந்திய சுயராஜ்யம்’ எனும்
தனது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டவரும் காந்திதான்!
1949, நவம்பர் 26 அன்று
ஏற்றுக்கொள்ளப்பட்டு,
1950, சனவரி 26 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்
இந்திய அரசமைப்புச் சட்டம். இந்தியாவின் ஆன்மாவாக, உயிர்நாடியாக விளங்கும் இந்த விரிவான ஆவணமானது, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, அதன் எல்லா அமைப்புகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அவர்களின் கடமைகள் என யாவற்றையும் கோடிட்டுக்
காட்டுகிறது. இந்தியாவை இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற மக்களாட்சி கொண்ட நாடாக உலகிற்கு அடையாளப்படுத்துவதும் இந்த ஆவணமே! சமூக நீதி, மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் அடிப்படைக் கூறுகளை, உரிமைகளை உறுதி செய்வதும் இந்த ஆவணமே!
ஆயினும்,
இந்த ஆவணம் வெளிவந்த ஏழு மாதங்களுக்குள், 1950, ஆகஸ்டு 10 அன்று இந்து மதத்திலிருந்து கிறித்தவம் அல்லது இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்குப் பட்டியல் சாதி உரிமையை மறுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் வேதனையின் உச்சம். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குத் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் பெருமளவில் வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்தச் சட்டத் திருத்தத்தால் கிறித்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு மாறுபவர்களுக்குப் பட்டியல் சாதி (SC) உரிமம்
மறுக்கப்பட்டது. இத்தகைய நீதியற்ற செயலால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கக்கூடிய இடஒதுக்கீடு கிறித்தவ, இஸ்லாமிய தலித் மக்களுக்கு முற்றிலுமாகத் தடைபடுகிறது.
தொடர்ந்துவரும்
இந்தப் பாகுபாட்டை மதச்சார்பற்றதாக மாற்றவும், இந்து தலித்துகள் பெறும் சலுகைகளும் உரிமைகளும் கிறித்தவ, இஸ்லாமிய தலித்துகளும் பெறும் வகையில் ஒன்றிய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் எமது நெடுநாள் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. பட்டியல் சாதி வரையறை மீதான மத அடிப்படையிலான கட்டுப்பாடுகளை
நீக்கவேண்டும் என நீதியரசர் இரங்கநாத்
மிஸ்ரா ஆணையம் பரிந்துரை செய்தபோதும் ஒன்றிய அரசு அதற்கான முயற்சிகளை முன்னெடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஏறக்குறைய 74 ஆண்டுகளாகத் தொடரும் இந்த முரண்பட்ட நிலைப்பாடு முடிவுக்கு வர வேண்டும் என்பதே
எமது நெடுநாள் கோரிக்கை.
இத்தகைய
சூழலில், உரிமை மீட்புக்கான செயல்பாடுகள் இயக்கங்களாகவும் போராட்டங்களாகவும் முன்னெடுக்கப்பட்டதும்தான் வரலாறு சொல்லும் பதிவுகள். குடிமை உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) என்பது
சட்டத்தின் முன் எல்லாருக்கும் சம உரிமை என
முழங்கிய உலகளாவிய அரசியல் இயக்கங்களில் ஒன்று. 1954 முதல்
1968-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இனப்பிரிவினை மற்றும் பாகுபாட்டைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்திய ஒரு சமூக அரசியல் இயக்கமாகப் பிறப்பெடுத்த ‘அமெரிக்கக் குடிமை உரிமைகள் இயக்கம்’ குறிப்பிடத்தக்க சட்ட மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய வழிவகுத்தது என்பதும் வரலாறு.
குழந்தைகளின்
வளர்ச்சி பெற்றோரின் முயற்சியில் புதைந்திருப்பதுபோல, சமூக மாற்றத்திற்கான எழுச்சி, உரிமையை மீட்பதற்கான புரட்சியில் பொதிந்திருக்கிறது. இயக்கமாக ஒன்றிணைவதும், உரிமைகள் மீட்கக் குரல் கொடுப்பதும் இன்று காலத்தின் கட்டாயமாகிறது.
ஆகஸ்டு
10-‘கறுப்பு தினம்’ அத்தகைய செயல்பாடுகளுக்கான முன்னோட்டமாக அமையட்டும்.
‘தடைகளைக் கண்டு செய்வதறியாமல்
திரும்ப
நினைக்கும் நதி எங்குமில்லை;
நமது
இலக்கை அடையும்வரை
விரைந்து
சென்றால் என்றும் தோல்வியில்லை!’
எழுந்திடுவோம்;
இணைந்திடுவோம்; விரைவில் வென்றிடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழ் மணம் கமழும் மதுரை மண்ணுக்கு, உலக வரலாற்றின் பக்கங்களில் தனிச்சிறப்பு உண்டு. தமிழினத்தின் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம் எனும் பண்பாட்டுக் கூறுகளின் வளர்ச்சியில் மதுரையின் மாண்பு மேலோங்கியிருக்கிறது. அங்குதான், ‘கீழடி நம் தாய்மடி’ எனத் தமிழ் ஆதிக்குடியின் நாகரிக வாழ்வை வைகைக் கரை வசந்தமாய் எடுத்துக்கூறுகிறது. அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலையில் பிறந்து, மதுரையில் தவழ்ந்து, வைகையில் வளர்ந்து உலகெங்கும் பெருமை கூறும் இளமைக் குன்றாக் கன்னித் தமிழாம் செம்மொழி தமிழ் - முதல், இடை, கடை என்று முச்சங்கம் கண்ட மூத்த நகரமிது; தமிழ் பண்பாட்டின் தலைநகரம் இது!
பண்டைய
தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம் பெற்ற ‘மதுரைக்காஞ்சி’ படைத்த
மாங்குடி மருதனார், மதுரையின் பேரழகை வர்ணிக்கின்றபோது...
‘மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை
அன்ன வழக்குடை வாயில்
வகைபெற
எழுந்து வானம் மூழ்கி
சில்காற்று
இசைக்கும் பல்புழை நல்இல்
ஆறு
கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
பல்வேறு
குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப
மாகால்
எடுத்த முந்நீர் போல
முழங்கிசை
நன்பணை அறைவனர் நுவல
கயம்
குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை
மகிழ்ந்தோர்
ஆடும் கலிகொள் சும்மை
ஓவுக்
கண்டன்ன இருபெரு நியமத்து!’
(அடிகள்
355-365)
என்னும்
பாடல் வரிகளில், மதுரையில் தெளிந்த நீர் உடைய அகழி, விண்ணை முட்டும் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள்,
பழமையும் வலிமையும் கலை நுணுக்கமும் தெய்வத்தன்மையும் கொண்ட அழகிய வாயில்கள், மேகங்கள் உலாவும் மாட மாளிகைகள், இடைவிடாது ஓடுகின்ற வைகை ஆறு, தென்றல் காற்று உலா வரும் அகன்ற தெருக்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள், பெருங்காற்று புகுந்த கடலொலிபோல ஒலிக்கின்ற முரசின் முழக்கம், இன்னிசை சுமந்து வரும் தென்றல், அதனால் ஆர்ப்பரிக்கும் மக்கள்கூட்டம்... எனத் தொன்றுதொட்டு வரும் மதுரை மண்ணின் மண்வாசனையையும் மக்களின் நேசத்தையும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் கண்முன்னே அழகுறப் படைக்கிறார்.
மதுரையின்
வளமையைக் கூறும் ‘அல்லி அரசாணி மாலை’ என்னும் இலக்கியப் படைப்பு...
‘மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது
செந்நெல் லென்று
ஆனைகட்டிப்
போரடிக்கும்
அழகான
தென்மதுரை!’
என்று
பாடுகிறது. பரந்து விரிந்த தமிழ்க்குடியின் நிலப்பரப்பை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், பாண்டிய நாட்டின் தலைநகராக அமைந்து, வணிகம் செழித்த இம்மாமதுரை ‘கிழக்கின் ஏதென்ஸ்’ என்றே வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. கடம்ப வனம், கடம்பக்காடு, கடம்ப நாடு என கம்பனின் கவி
கண்ட இந் நிலம், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவில்களையும் நினைவுச் சின்னங்களையும் ஆலயங்களையும் மசூதிகளையும் கொண்டு மதநல்லிணக்கத்தின் சிறப்பான தளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய மொழி, பண்பாடு, சமயத் தளங்களில் தனித்துவம் கண்டு உலக வரலாற்றில் சிறப்பிடம் கொண்ட இம்மாமதுரை, உலகத் திரு அவை வரலாற்றிலும் மிகச் சிறப்புக்குரிய இடம்பெற்றிருக்கிறது.
‘மதுரை மிஷன்’ என சேசு சபையார்
மறைப்பணி மேற்கொண்ட மையத் தளமிது. ‘தத்துவ போதகர்’ என்று அழைக்கப்படும் அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, ‘தேம்பாவணி’ காப்பியம்
படைத்த வீரமாமுனிவர், மறவ நாட்டின் மாணிக்கமாகச் செந்நீர் சிந்திய ‘ஓரியூரின் ஒளிவிளக்கு’ அருளானந்தர்
என நீண்டதொரு மறைப்பணியாளர்களின் பாதம் கண்ட புண்ணிய பூமி இது.
500 ஆண்டுகளுக்கும் மேலாக,
கிறித்தவத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இம்மறைத்தளம் தமிழ் வளர்த்தது; மறை வளர்த்தது; மக்களின் மாண்பினைக் காத்தது. ஏறக்குறைய 80 ஆண்டுகளாக உயர்மறைமாவட்ட நிர்வாகக் கட்டமைப்பைக் கண்டிருக்கும் மதுரை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு, பேராயர் ஜஸ்டின் திரவியம், பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம், பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி, பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, பேராயர் அந்தோனி பாப்புசாமி என ஆறு பேராளுமைகளைக்
கண்டிருக்கிறது.
அந்த
வரிசையில் ஏழைகளின் பங்காளனாய், எளியோரின் பேராதரவாய், உண்மையின் சுடரொளியாய், அன்பின் அமுதமாய், நீதியின் போராளியாய், நிர்வாகத்தில் தனித்துவமாய், திரு அவைச் சட்டத்தில் தலைசிறந்தவராய், இறைஞானத்தில் தீங்கனியாய், இறைநம்பிக்கையில் பெரும் ஆழியாய் அறியப்படும் பாளை மறைமாவட்ட ஆயரும், இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய திருத்தூது நிர்வாகியுமான மேதகு முனைவர் அந்தோனி சாமி சவரிமுத்து அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழித் தோன்றலாய், இம்மறைத்தளத்தின் தலைமகனாய், ஏழாவது
பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது திரு அவைக்குக் கிடைத்த பெரும்பேறு!
2025 ஜூலை 5, அதிகாலைப்
பொழுதில் வைகறையின் வசந்தம் வளமாக வீசியபோது எவ்விதச் சலனமும் இன்றி, அந்த நாள் தமிழ்நாடு திரு அவைக்கும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்கும் மகிழ்ச்சியான நற்செய்தியைக் கொண்டு வந்தது. வத்திக்கான், பாளையங்கோட்டை, மதுரை என முத்தலங்களில் முழங்கப்பட்ட
அந்த நற்செய்தி, இந்த எளிய பணியாளரை இறைவன் உன்னதப் பணிக்கு உயர்த்திய மாண்பினைக் கூறியது.
கல்விப்
பணி, மருத்துவப் பணி, சமூகப்பணி, தமிழ் வளர்த்த இலக்கியப் பணி, நல்மனம் கொண்டோர் ஒன்றிணையும் மத நல்லிணக்கப் பணி...
எனப் பல பணிகளில் வளர்நிலை
கண்டு வரும் இம்மறைத்தளம், இப்புதிய பேராயரின் சீரிய சிந்தனையாலும் பெரும் உழைப்பாலும் பார் போற்றிட, பணிகள் பல கண்டிட, மக்களின்
சமூக, ஆன்மிக, வாழ்வியல் தளங்களில் ஏற்றம் கொண்டு வரும் என்பதே எம் நம்பிக்கை. எல்லாரும்
மாண்புடன் வாழ, மக்கள் மையப் பணிகளை முன்னெடுக்க வரும் புதிய பேராயரை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உலக இயக்கத்தின் இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக இருப்பது நீர். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதும் அதுவே! மானுடப் பயன்பாட்டிற்குப் பயன்தரும் நீர் உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும் உணவுத் தேவைக்கும் ஆதாரமானதாக அமைகிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவினை விளைவிக்கப் பயன்படுவது மட்டுமின்றி, தானும் உணவாக மாறும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு! ஆகவே, மானுட வாழ்வியல் தேவைகளைக் குறிப்பாக, உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மூலக் காரணியாக நீர் அமைவதால், அதன் மேன்மையை அறிந்து, வள்ளுவப் பெருந்தகை நீரினை முதன்மைப் பொருளாக எண்ணி, ‘நீரின்றி அமையாது உலகு’ என்னும் குறளில், ‘நீர் மட்டும் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது; இந்த உலகமும் மனித வாழ்க்கையும் நிலைபெறாது’ என்று பதிவு செய்கிறார். வான் நீர், நில நீர் என இரு பெரும் பிரிவுகளாக நீரின் ஆதாரத்தை, அதன் தன்மையை வகுத்துக் கொடுக்கும் வள்ளுவர் அந்நீரினை ‘அமிழ்து’ எனப் பெருமைபட வர்ணித்துப் பாடுகிறார். அத்தகைய நீர் தன்னிலே தூய்மையும் புனிதமும் கொண்டதாக இருக்கிறது என்கிறார்.
மானிடருக்குப்
புறத்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மையும் தருவது இத்தண்ணீரே! தண்ணீர் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்கும் உறுப்புகளுக்கும் ஏராளமான, நலமான, வளமான நன்மைகளை வழங்குகிறது. நமது ஒட்டுமொத்த உடல்நலனில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பல வேளைகளில் நாம்
உணர்வதில்லை. தண்ணீர் இல்லை என்றால் ஒரே நாளில் வாடிவிடும் செடியைப்போல மனித உடலும் வாடிவிடுகிறது.
உடல்
வெப்பத்தைச் சீர்படுத்துவதும், செல்களுக்கு ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்வதும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நிகழத் துணைபுரிவதும், உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிப்பதும், உடலில் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்றுவதும் தனது அடிப்படைப் பணியாக மேற்கொள்ளும் நீர், நமது உடலில் சீரான அளவில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நமது
மூளையில் இருக்கும் நீரின் அளவு 80 விழுக்காடு எனவும், இரத்தத்தில் உள்ள நீரின் அளவு 90 விழுக்காடு எனவும், தசைகளில் உள்ள நீரின் அளவு 75 விழுக்காடு எனவும் நீரின் இன்றியமையாதத் தேவையை மருத்துவம் பட்டியலிடுகிறது. உடல்நலனைப் பேண, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோல போதிய அளவிற்குத் தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானதாகிறது.
ஆகவே,
சீரான நீர் நுகர்வுப் பழக்கங்களால் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும் என மருத்துவம் நம்பிக்கை
தெரிவிக்கும் சூழலில், 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு நாம் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும், குறிப்பாக, 60 கிலோ எடை உடையவர்கள் நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும் மருத்துவம் அறிவுறுத்துகிறது.
இத்தகைய
சூழலில், தமிழ்நாடு அரசு மாணவர் நலன் கருதி முன்னெடுத்திருக்கும் ‘வாட்டர் பெல்’
(Water bell)
திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது. உடலுக்கு நீர்ச்சத்து இன்றியமையாதது என்பதால் குறிப்பாக, படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் அது அவர்களது அறிவாற்றல், கல்விச் செயல்திறனை வெகுவாகப் பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, கேரள மாநில அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தொடரப்பட்டு, இன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த ஜூன் இறுதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளி செல்லும்போது கொடுத்து அனுப்பும் தண்ணீரை அப்படியே வீட்டுக்குக் குழந்தைகள் எடுத்து வருகிறார்கள் எனப் பெற்றோர் புலம்புவதுண்டு. ஆசிரியர்களும் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய போதும், தண்ணீர் குடிப்பதன் அவசியமும், அது பற்றிய புரிதலும் பள்ளிக் குழந்தைகளுக்கு எட்டாத சூழலில், அரசு மேற்கொண்டிருக்கும் இப்புதிய திட்டம், பெற்றோர்களிடம் மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வகுப்புகளுக்கு
மத்தியில் இடைவேளை நேரங்கள் கொடுக்கப்பட்டாலும், பல குழந்தைகள் தண்ணீர்
குடித்தும் குடிக்காமலும் வகுப்புக்கு வருவது கண்டறியப்பட்டு, இந்தத் திட்டம் அன்பான, அதேவேளையில் கண்டிப்பு நிறைந்த அறிவுறுத்தலாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, காலை 11:00 மணி, மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி என மூன்று முறை
தனியாக ஒலி எழுப்பி மாணவர்களைத் தண்ணீர் குடிக்க வைக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தகைய
ஒலி எழுப்பப்பட்டவுடன், ஒருவிதமான விளையாட்டுச் செயல்பாடுபோல
மாணவர்கள் ஆர்வமாகத் தண்ணீர் குடிப்பதைத் தற்போது காணமுடிவதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
மாணவச்
சமுதாயத்தை உடல்நலம் மிக்கதாக வளர்த்தெடுக்க அரசும் சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் வரவேற்கப்படும் சூழலில், இச்சமூகத்தில் சிலர் முரண்பட்டிருப்பது, அதன் அவல நிலையையே எடுத்துக்கூறுகிறது. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிச்செயலைக் கண்ட இச்சமூகம், இன்று அதன் உச்சமான அவலநிலையைக் கண்டிருப்பது வேதனையிலும் வேதனை!
திருவாரூர்
அடுத்த காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட செயலைச் செய்த மூடர்களை என்னவென்று கூறுவது? காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்திற்குச் சமைப்பதற்காகச் சமையல் பணியாளர்கள் பள்ளிக்குச் சென்றபோது சமையல் அறையில் இருந்த பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததும்,
உணவுப் பொருள்கள் சிதறிக்கிடந்ததும், பள்ளி வளாகத்திலிருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டிருந்ததும், தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கப்பட்டிருந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக, குடிநீர் தொட்டியின் மூடி உடைக்கப்பட்டு அந்தத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்ததும், இந்தச் சமூகம் எங்கே போகிறது? என்ற கேள்வியையே முன்வைக்கிறது.
காவல்துறை
அதிகாரிகளின் விசாரணையில் “மூவர் மதுபோதையில் இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்” என்ற
பதில் மிகுந்த வேதனை அளிப்பதோடு, தமிழ்நாட்டின் மதுபானக் கொள்கையும் சற்று மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற உண்மையையும் எடுத்துக்கூறுகிறது. ‘குடி குடியைக் கெடுக்கும்!’, ‘குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற எச்சரிக்கைகள் உண்மையாகிப் போயின என்பதற்கு, மற்றொரு நிகழ்வு இங்கு அரங்கேறியிருக்கிறது. ஒருமுனையில் ஒரு பருவத்தினருக்குக் குடிதண்ணீர் பருகுவதை உற்சாகப்படுத்தும் இந்த அரசு, மறுமுனையில் மற்றொரு பருவத்தினருக்குக் ‘குடி’யையும் உற்சாகப்படுத்தி வருவது வேதனைக்குரியது.
மதுநுகர்வின்
உச்ச நிலையில் ஒவ்வொரு மனிதனும் இம்மானுட மாண்பைச் சிதைப்பதோடு, மனித நேயமற்ற, வாழ்வியல் அறநெறி இல்லாத, கொடிய மிருகத்தனமான செயல்களை மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் மாண்பையும் சிதைப்பது அவலத்தின் உச்ச நிலையே! ஆங்காங்கே நிகழும் இத்தகைய அவல நிலைகளில் மனிதனின் அடிப்படைத் தன்மையும், இயல்பு நிலையும் பெரும் கேள்விக்குள்ளாகிறது.
சுயநலத்தில்,
ஆணவத்தில், அகங்காரத்தில் சிக்குண்ட மனித இனம், சக மனிதர்களைப் பற்றிச்
சிறிதேனும் சிந்திக்க மனமில்லாமல் போனதை என்னவென்று கூறுவது? சக மனிதனைப் பற்றிச்
சிந்திக்க மனம் இல்லாதவன் எப்படிச் சமூக மனிதனாவான்? அறநெறி சிதைந்த வாழ்க்கையால் இன்று மக்களிடையே ‘மனிதம்’ முற்றுமாக மறைந்து போனது வேதனைக்குரியது.
“சக மனிதர்களின் நலனில்
நாட்டம் உள்ளவர்களால்தான் சமூகம் சிறப்புறும்” என்றனர்
நம் முன்னோர்கள். அவ்வாறே, கைம்மாறு கருதாத உண்மையான அன்பு, அடுத்தவர் நலன், பிறர் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருள்கருணை, பகைவரிடத்திலும் வெறுப்பின் நிழல் படியாத பாசம், தன்னுயிர்போல் எல்லா உயிர்களையும் பாவிக்கும் பண்பு நலம் ஆகியவற்றின் கூட்டுறவில் பிறப்பதுதான் மனிதநேயம் என ஞானிகளும் சிந்தனையாளர்களும்
வரையறுத்துத் தந்தவை யாவும் இன்று இச்சமூகத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
பள்ளிப்
பாலகர்களின், பச்சிளம் குழந்தைகளின் வாழ்வில் நிகழ்ந்த இந்த இழிவானச் செயலால் இக் குழந்தைகள் இச்சமூகத்தை நோக்கும் மனநிலையைச் சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும். தந்தை நிலையில், சகோதர உறவில் இக்குழந்தைகளைப் பேணவேண்டிய இச்சமூகத்தின் ஆண் ‘குடி’ மக்களின் இத்தகைய இழிவான செயலால் இன்று ஒட்டுமொத்தச் சமூகமே வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. அன்றே இத்தகைய செயல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தால், இத்தகைய செயல்கள் ஒருபோதும் தொடர்ந்திருக்காது.
ஆகவே,
இனியும் தாமதமின்றித் தமிழ்நாடு அரசு இத்தகைய செயல்களுக்கு விரைந்து தீர்வு காணவும், குற்றம் இழைத்தோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஆவன செய்யவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
எல்லை மீறும் எச்செயலும் வன்முறையே! பயங்கரவாதமே! தீவிரவாதமே! நான்கு நபர்களால் வீதிகளில் தொடரும் வன்முறைகள், இன்று கண்ணசைவில் நான்கு சுவர்களுக்குள்ளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை வன்முறையின், மனித உரிமை மீறலின் உச்சமாகப் பார்க்கப்படுகின்றன.
குடும்ப,
சமூக வாழ்க்கையில் சவால்கள் நிறைந்திருப்பது எதார்த்தம். தனியொருவராக அச்சவால்களைச் சந்திக்கின்றபோது தீர்வுகாணத் துணையிருக்க வேண்டியவர்களே இடையூறுகளுக்கு ஆதாரமாகிப் போவதும் பிரச்சினைகளுக்கு உச்சமாகிப்போவதும் வேதனையிலும் வேதனை! அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் பல துயர நிகழ்வுகளில்
‘வேலியே பயிரை மேய்ந்ததுதான்’ உச்சக்கட்டமான
துயரம்.
தமிழ்நாட்டையே
உலுக்கிய சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கொல்லப்பட்ட நிகழ்வும், வரதட்சணைக் கொடுமைகளால் நிகழ்ந்த ரிதன்யா, கவிதாவின் மரணங்களும் சமூகத்திற்கு உணர்த்தும் பாடங்கள் ஏராளம். உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமாரின் முதல்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல்துறையால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றம்; அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்கிறது” எனச்
சாடியிருக்கிறது.
அஜித்குமாரின்
மரணம், நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல காவல் மரணங்களை
(Custodial deaths)
வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினரால், பட்டியல் சாதி மக்கள் இன்னும் கூடுதலாக இலக்காக்கப்படுவதையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2016 முதல் 2022 (மார்ச்
30) வரையிலான காலத்தில், இந்தியாவில் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அத்தகைய மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும், அதாவது, மேற்கூறிய காலகட்டத்தில் இங்கு 2,630 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறே, தமிழ்நாட்டில் 490 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும்,
தென்னிந்தியாவில் காவல் மரணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் மேலும் அப்புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இந்தியா
முழுவதும், இதே காலகட்டத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களுக்கு எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும், இக்காலகட்டங்களில் காவல் நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தமிழ்நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்பட்டும் இந்த வழக்குகள் தொடர்பாக எந்தவொரு காவலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, தண்டனை விதிக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
கைதுசெய்யப்பட்ட
நபர்மீது காவல் துறையினர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மன ரீதியாகத் துன்புறுத்துதல்
போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்திய அரசமைப்புச் சட்டம் 21, ‘எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ எவரும் பறிப்பது குற்றம்’ எனச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, காவல்துறையினால் அத்துமீறி நடத்தப்படும் இதுபோன்ற காவல் மரணங்கள் சட்டப்படி குற்றச்செயலாகவே கருதப்படும்.
கைது
செய்யப்பட்ட நபருக்கு அவரது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு
56, 57-இன்படி, கைதுசெய்யப்பட்ட நபர் தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் (மாஜிஸ்ட்ரேட்) ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 22(1) இன்படி, கைதுசெய்யப்பட்ட எவரும் தங்கள் விருப்பப்படி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், மருத்துவரை அணுகவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும்,
காவல் மரணங்களை விசாரிப்பதில் நீதித்துறை மெத்தனமாகச் செயல்படுவது நீதிமன்றத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைப்பதாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவல் அதிகாரிகள் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாகியும் தீர்ப்பு நோக்கி அது நகராதது வருத்தமளிக்கிறது.
மனித
உரிமை, மனநல ஆரோக்கியம் என்பன பற்றிச் சிறிதும் கவலையின்றி, காவல்துறையில் தொடரும் இத்தகைய வன்முறைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும், வன்முறைக் கலாச்சாரத்தை விடுத்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு, புலனாய்வு நுட்பங்களைக் காவல்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்பதும், அரசியல், அதிகாரம் மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு அடிபணியாத வகையில் உண்மை, நேர்மை, நீதி வழியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.
அவ்வாறே,
திருப்பூர் அவினாசி ரிதன்யா மற்றும் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி கவிதா ஆகியோரின் வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க மனநிலை, குடும்ப வன்முறை, உடல் ரீதியான துன்புறுத்தல், வற்புறுத்துதல், மன வேதனை, உளவியல்
சார்ந்த அழுத்தம், மனித உரிமை மீறல் எனக் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆணுக்கு இணையாகப் பெண் கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்கினாலும், திருமணம் என்னும் பந்தத்தில் சிறுமைப்படுத்தப்படுவதும், வரதட்சணை என்னும் போர்வையில் கொடுமைப்படுத்தப்படுவதும் சமூகத்தின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.
‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’
என்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பல்வேறு கட்டமைப்புகளில் இருந்து விடுபட்டு, முற்போக்குச் சிந்தனைகளில் வளர்ந்து வரும் இச்சமூகம், மீண்டும் வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், பாலியல் வேறுபாடு, வர்க்கக்கட்டமைப்பு என்னும் அவலங்களில் சிக்குண்டிருப்பது இச்சமூகத்தின் பிற்போக்கு ஆதிக்கத்தையே இன்னும் படம்பிடித்துக் காட்டுகிறது.
குடும்பமும்
சமூகமும் சிறந்து விளங்க ஒவ்வொருவரும் ஒழுக்கம், தன்னடக்கம், எளிமை, அமைதி, அனைத்து உயிர்களையும் மதித்தல், பிறர் நலம் காத்தல் மற்றும் தர்மத்தைப் போற்றுதல் என்னும் ஏழு நற்பண்புகளைப் பின்பற்ற வேண்டுமென நம் மூதாதையர் வகுத்துக்கொடுத்த அறநெறி வாழ்க்கை இன்று சிதைந்து போயிருக்கிறது.
திட்டமிட்ட
இவர்களின் வாழ்க்கை திடீரென எழுந்த எதிர்பாராதச் சூறாவளிக் காற்றில் சூறையாடப்பட்டு, பொருளற்றுப் போனதால் ஒவ்வொரு குடிமகனின், குலமகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உண்மைத் தன்மையற்ற சட்டங்களாலும், போலியான குடும்பப் பாசங்களாலும் சூழப்பட்ட இச்சமூகத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘நாளை’ என்பது அச்சத்துடனே நகர்கிறது.
“மனித உறவுகள் மேம்பட மனம் வளப்பட வேண்டும்”
என்பார்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் இன்று மனம் சுருங்கிப்போனதும் இறுகிப் போனதும் பல பேராபத்துகளை ஏற்படுத்துகின்றன.
ஆகவே, அனைத்துத் துன்பங்களின் ஆதாரமாக இருக்கும் சுயநலம் விடுக்கவும், உண்மை-பொய்மையின் தன்மை உணரவும், நன்மை-தீமையின் வேறுபாடுகளை அறியவும் விரிந்த பார்வையும் தெளிந்த சிந்தனையும் துணிந்த செயல்பாடும் நாம் கொண்டிருக்க வேண்டும்.
கனவுகளும்
கற்பனைகளும் எதிர்கால நல்லெண்ணங்களும் நிறைந்ததுதான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும். அநீதியை முன்னிறுத்தி, பேராசையில் மையம்கொண்டு, பதவி, புகழில் பாதையமைக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, இளைய தலைமுறையினரின் கனவுகளைச் சிதைத்துவிட வேண்டாம்; அந்தப் பட்டாம் பூச்சிகளின் சிறகுகளை முறித்தெறிய வேண்டாம். ‘உயிர் வழிபாடுதான் உண்மையான, மேன்மையான இறைவழிபாடு’ என்பதை
நம் நெஞ்சில் நிறுத்திடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
எல்லா உயிரினங்களின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் ஆதாரமாய் என்றும் இருப்பது தண்ணீர். ஆகவேதான், ‘நீரின்றி அமையாது உலகு...’ என்று உணர்த்திய ஐயன் வள்ளுவர், ‘உலகிலுள்ள இயற்கை வளங்களுள் தலையாய இடத்தில் இருப்பது நீர்’ என்ற பேருண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
நீருக்கு
மாற்று என்பது இல்லை. நமது அன்றாட வாழ்வியல் பயன்பாடு, வேளாண் தொழில், மீன் வளர்ப்பு, தொழில் வளர்ச்சி, புனல்மின் உற்பத்தி, பொழுதுபோக்கு இடங்கள் என எங்கும் நீக்கமற
நிறைந்திருப்பது இந்த நீரே!
அதிகரித்து
வரும் தொழில்வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல காரணங்களால் நீரின்
பயன்பாட்டுத் தேவை இன்று அதிகரித்து வருகிறது; நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகவே, குறைந்து வரும் இயற்கை வளங்களில் ஒன்றான நீர் முறையாகச் சேமிக்கப்படவும், பயன்பாட்டிற்கு வழங்கப்படவும் சிறப்பான நீர் மேலாண்மை வழிமுறைகளைக் கண்டறிவது இன்று காலத்தின் கட்டாயம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.
எனவே,
நீர்வள மேலாண்மை வழிகளைக் கண்டறிவதும், குறைந்து வரும் நன்னீர் வளம் குறையாது நீர்வளத்தைப் பெருக்குவதும் பாதுகாப்பதும், அவற்றைப் பயன்படுத்தி வேளாண் தொழில் சிறக்க முனைவதும் இன்று அவசியமாகிறது. இருப்பினும், கோடை வெயிலிலும் வறட்சியிலும், இடி, மின்னல், மழையிலும், குளிர் வாடையிலும் காணியே கதி என்று காலம் தள்ளும் உழவனின் தலையில் இன்று மற்றோர் இடி விழுந்திருக்கிறது.
வேளாண்
பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் புதிய திட்டத்தை ஒன்றிய பா.ச.க.
அரசு விரைவில் செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு, வரிவிதிக்கும் முறையை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக, அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல்
தெரிவித்திருக்கிறார்.
நிலத்தடி
நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கவும் பயனுள்ள நீர் மேலாண்மைக்கான அடிப்படையான திட்டங்களை உருவாக்கவும் ஒன்றிய அரசு முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கும் நீர்வளத்துறை அமைச்சர், இந்தத் திட்டம் ஏற்கெனவே உள்ள கால்வாய்கள் மற்றும் ஏனைய நீர் ஆதாரங்களிலிருந்து பாசன நீரை வழங்குவதற்காக ‘பாசன நீர் வழங்கும் வலையமைப்பை’ ஏற்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது,
ஒரு மைய இடத்தில் போதுமான தண்ணீரைச் சேமித்து வைத்து, அங்கிருந்து விவசாயிகளின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும்,
ஏறக்குறைய ஒரு ஹெக்டேர் வரை விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு பொது நீர் தேக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் இந்த நீர் வழங்கப்பட உள்கட்டமைப்பை
ஏற்படுத்தவிருப்பதாகவும், நாடு
முழுவதும் 22 இடங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ. 1,100 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், கூடுதலாக ரூ. 500 கோடி மற்ற திட்டங்களிலிருந்து வழங்கப்படவிருப்பதாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
‘நிலத்தடி நீர் வீணாவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம்’ என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தாலும், இதன் உண்மையான நோக்கம் உழவனை விவசாய நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதற்காகவே
என்பதுபோல தோன்றுகிறது. மிகவும் கடினப்பட்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் விவசாயி, அதை வீணாக்க மாட்டார் என்பதை ஏனோ இந்த அரசு அறியாமலிருக்கிறது!
இன்றைய
சூழலில், இந்தியாவில் விவசாயத் தொழில் மிகவும் நலிவடைந்ததொரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வேளாண் திட்டங்கள், பயிர் பாதுகாப்புத் திட்டங்கள் என்னும் போர்வையில் மோசடிகள், நதிநீர் ஒப்பந்தம் என்னும் தொடரும் ஏமாற்று வேலைகள், பற்றாக்குறையாக வழங்கப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்படாமை
எனப் பல வகைகளிலும் உழவர்கள்
இன்று உறிஞ்சி நசுக்கப்படுகிறார்கள்; வஞ்சிக்கப்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இத்தகைய
சூழலில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு அவர்களின் வயிற்றில் அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குடிநீர்,
வேளாண் பாசன நீர் என்று அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களின்மீது
பா.ச.க. ஆட்சியின்
வரிவிதிப்பு என்பது விவசாயியின் வாழ்க்கையில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல்
இருக்கிறது.
ஏற்கெனவே
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் ‘தண்ணீர் கொள்கை’ என்ற பெயரில் விவசாயிகளின் பயன்பாட்டிலிருக்கும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தபோது,
அதற்கு நாடெங்கும் விவசாயிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும் அதனால் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனதையும் ஏனோ இந்த ஒன்றிய பா.ச.க.
அரசு அறியாமலிருக்கிறது.
முதல்
கட்டமாக இந்தத் திட்டமானது நிலத்தடி நீரை மையப்படுத்தி ஓர் இடத்தில் சேமித்துவைத்து, அங்கிருந்து விவசாயிகளுக்குத் தேவையான நீரை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அப்படிப் பெறக்கூடிய விவசாய நீருக்கு அளவு அடிப்படையிலே வரிவிதிக்கப்படும் என்றும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், காலப்போக்கில் தனிநபர் ஒவ்வொருவரும் தங்களுடைய விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் நீருக்கான அளவிடும் இயந்திரம் பொருத்தப்பட்டுக் கணக்கிடப்படும் என்பதும் இத்திட்டத்தில் மறைந்திருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகிறது. ஆகவே, உழவனை வஞ்சிக்கும் இந்தத் திட்டத்தை ஒன்றிய பா.ச.க.
அரசு உடனே கைவிடவேண்டும்.
இன்றைய
சூழலில், உழவர்கள் தங்கள் வாழ்வியல் சூழலில் சந்திக்கும் எதிர்வினைகள் ஏராளம். வேளாண் பொருள்களுக்குரிய விலை இல்லை; உரங்கள் கிடைப்பதில்லை; கிடைக்கும் உரங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் விலைகள்; விவசாயத் தொழிலுக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படாமை; தரமற்ற விதைகளை வழங்குவது... என அவர்கள் சந்திக்கும்
பிரச்சினைகள் ஏராளம்.
அதிக
மழை பொழிந்தால் வெள்ளத்தில் விவசாயம் அழிந்துபோவதும், மழையே பெய்யவில்லை என்றால் வறட்சியில் ஏமாந்து போவதும் உழவர்களின் அன்றாடக் காட்சியாகிப் போனது.
உழவர்களின்
நெருக்கடியையும் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும் புரிந்துகொள்ளாத இந்த அரசை என்னவென்று சொல்வது? எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டும் என நிர்ணயித்துவிட்டு, உழவனின் வேளாண்
பொருளுக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியாத இந்த அரசு, உழவனை உயிரோடு மண்ணில் புதைப்பதாகவே இருக்கிறது.
விளைபொருள்களுக்குச்
சரியான விலை கிடைப்பதில்லை, வேலையாள்கள் கிடைப்பதில்லை, போதிய கடனுதவி கிடைப்பதில்லை எனப் புலம்பலுடன் விவசாயத்தைவிட்டு உழவர்கள்
வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. மேலும், கிணற்றுப் பாசனத்தை முழுமையாக நம்பியிருக்கும் தென் மாநிலங்களில் இத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவது, இங்கு வேளாண் தொழிலைத் திட்டமிட்டே நசுக்குவதாகக் கணிக்கப்படுகிறது.
நதிகளை
இணைக்கவும், மழைநீரை முறையாகச் சேமிக்கவும் முனைப்புக் காட்டாத இந்த அரசின் இத்திட்டம், பசுத்தோல் போத்திய புலியாகவே தோன்றுகிறது.
ஒரு
சிறந்த நாட்டிற்கான வரையறையை முன்வைக்கும் வள்ளுவர்,
‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு’
(குறள் - 731)
என்று
குறிப்பிடுகிறார். அதாவது, குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடி பொருந்தியுள்ள நாடே நாடாகும் என்று கூறும் வள்ளுவர், குறையில்லாத விளைபொருளையே நாட்டின் வளர்ச்சிக்கான முதல் குறியீடாக முன்வைக்கிறார். எனவே, குறையில்லாத விளைச்சலே ஒரு நாட்டின் வளர்ச்சியின் மூல வேராக அமைகிறது.
ஆகவே,
‘ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது; வேளாண்தொழில் தடைபட்டால் நாடு செழிக்காது’ என்னும்
பேருண்மையை இனியாவது ஒன்றிய அரசு உணர்ந்திடட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்திய மண்ணில் விடுதலைக் காற்று நம் வீதிகளில் உலா வரும் முன், பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தி மொழியின் வாடை நம் வாசல்களில் வசந்தமாகிட திட்டங்கள் தீட்டப்பட்டன.
1937-இல் ‘பிரீமியர்’ என்று
அழைக்கப்படும் மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்றபோதே, இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. காந்தியின் விருப்பப்படி தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்பவும், தன் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணிக்கவும் தீவிரமாக முற்பட்டவர் மூத்த அறிஞர் இராஜாஜி. இந்தியை இம்மண்ணில் பரவலாக்க ஆசை கொண்ட அவரே, பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, 1962, ஜூன் 16-ஆம் நாள் ‘சுயராஜ்ஜியா’ இதழில்
‘பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடிப்பது நல்லது’ என்று எழுதினார்.
அவ்வாறே,
சுதந்திரத்திற்குப் பின்பு ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் இந்தித் திணிப்பு நடந்த வேளையில், 1948-இல் பெரியார், இந்தியைத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். இந்தியை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட அவர், “எனது இந்தி எதிர்ப்பு என்பது ‘இந்தி கூடாது’ என்பதற்காகவோ, ‘தமிழ் வேண்டும்’
என்பதற்காகவோ அல்ல; மாறாக, ஆங்கிலம் பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழனின் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்காகவே. ஆகவே, வீட்டில் உங்கள் மனைவியுடன், குழந்தைகளுடன், வீட்டுப் பணியாளர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்” என்று
1969, ஜனவரி 27-ஆம் நாள் ‘விடுதலை’ இதழில் எழுதினார்.
இந்திக்கு
எதிராக மாணவர் போராட்டம் 1965-இல் பெருந்தீயாக மாநிலம் முழுவதும் பற்றி எரிந்த போது இராஜாஜி, “English ever, Hindi never” என்று முழங்கினார். “ஆங்கிலம் இந்தியருக்கு சரஸ்வதி வழங்கிய அருள் கொடை” என்று வர்ணித்தவர், “ஆங்கிலம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும்”
என்றும் முழங்கினார். மேலும், இந்த ஒன்றில்தான் தானும் பெரியாரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
கருத்து
முரண்பட்டு அரசியல் செய்த அன்றைய ஆளுமைகளே, ஆங்கிலம் பொதுமொழியாகவும் அலுவல் மொழியாகவும் நம் வீட்டு மொழியாகவும் வளர வேண்டும் என்று மனதார விரும்பினர். ஆனால், மாநிலங்களை ஒன்றிணைத்து உறவுப் பாலம் அமைக்க வேண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரிவினைவாதியாகவே செயல்படுகிறார். மதத்தையும் மொழியையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா.ச.க.,
மானுட உலகிற்கே முரண்பட்ட கருத்தியலையே முன் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்ற 343-இன் 2-வது விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போனது!
அண்மையில்,
டெல்லியில் நடைபெற்ற அசுதோஷ் அக்னிஹோத்ரி என்னும் ஐ.ஏ.எஸ்.
அதிகாரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்; அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “ஆங்கிலம் ஓர் அணை அல்ல; அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல; அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல; அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவியாகும்” என்று
எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மேலும்,
“இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதைப் பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்றும் ஏனென்றால், ஏழைக் குழந்தைகள் கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை என்றும், இன்றைய உலகில் ஆங்கிலம் நம் தாய்மொழியைப் போலவே முக்கியமானது; ஏனெனில், அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்” எனவும் தெரிவித்துள்ளார்.
“நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள்”
என்று குறிப்பிட்ட அமித்ஷா, “வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது”
என்றும், “காலனித்துவ
அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும்” என்றும்,
“அரைகுறையான
அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது”
என்றும் தெரிவித்துள்ளார்.
மொழிகள்
கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் என்று அவர் கருத்துத் தெரிவித்திருப்பது, பா.ச.க.-வின், ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலுக்கு முரண்பட்டிருப்பதை ஏனோ அவர் அறியாமலிருக்கிறார்.
ஒவ்வொரு
மொழியும் அவை பேசப்படும் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் எனப் பேசும் அவர், அந்த மாநிலத்தின் தனிச்சிறப்புக் கொண்ட மொழியை, தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அங்கீகரிப்பதில்லை. ‘மும்மொழிக் கொள்கை’ என்ற போர்வையில் அதைச் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தைக் காலனித்துவத்தின் அடையாளமாகவும், மேலைநாட்டு மொழிகள் அரைகுறையானவைகள் என்று குறிப்பிடுவதும் ஒருபுறம் அவருடைய அறியாமையையும், மறுபுறம் பதவி அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிறது.
வரம்புமீறிய
அதிகாரத்தின் ஆபத்துகள் குறித்து ஆங்கில எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லார்டு ஆக்டன் கூறிய, “அதிகாரம் தவறு செய்ய முனைகிறது; முழுமையான அதிகாரம் முற்றிலும் தவறு செய்கிறது”
என்னும் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆங்கிலம்
இன்று உலகளாவியப் பொதுமொழியாக மாறிவருகிறது; உலகில் அதிகம் கற்கப்படும் இரண்டாவது மொழியாகவும் தாய்மொழி பேசுபவர்களைவிட இரண்டாவது மொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் கொண்டிருப்பவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. 30 நாடுகளிலும், குடியுரிமைக்கான தனி இறையாண்மை கொண்ட 57 நிர்வாகப் பகுதிகளிலும் ஆங்கிலம் பரவியிருப்பதோடு அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், உலக வர்த்தகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, இணையம், கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என எல்லாத் தளங்களிலும்
இன்று ஆங்கிலம் அடிப்படை மொழியாகப் பரிணமித்திருக்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேசக் கூட்டமைப்புகளின்
அதிகாரப்பூர்வ மொழியாகவும் இருக்கின்றது.
2021- ஆம் ஆண்டு
புள்ளிவிவரப்படி உலக அளவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலம் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற மொழியை ‘அடிமைத்தனத்தின் குறியீடு’
என்றும், ‘அரைகுறையான மொழி’ என்றும் குறிப்பிடும் ஒன்றிய உள்துறை அமைச்சரை என்னவென்று கூறுவது?
1959, ஆகஸ்டு 7 அன்று
இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து நிகழ்ந்த நாடாளுமன்ற விவாதத்தில், “கால வரம்பின்றி ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும்; மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஒரு மாற்று மொழியாக இருந்திட வேண்டும். இது தொடர்பாக முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிட வேண்டும்”
என்று நேரு வழங்கிய உறுதிமொழியை, இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் ஏனோ அறியாமலிருக்கிறார்?
இந்தி
மொழி அறியாமல், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கும் இந்தியாவில், இந்தியைக் கட்டாயமாக்கி ஆட்சி மொழியாக்கிடத் துடிக்கிறது பா.ச.க.
அரசு. ஆனால், பல்வேறு மொழி வழி மக்கள் தங்கள் தாய் மொழியோடு ஆங்கிலத்தை அறிந்திருக்கும் சூழலில், அதை இணைப்பு மொழியாக்குவதில் இந்த அரசு எந்த ஒரு முனைப்பும் காட்டுவதில்லை.
‘அகண்ட பாரதத்திற்கு இந்தி அவசியம்’ என்று முழங்கும் இவர், அகண்ட உலகிற்கு ஆங்கிலம் அவசியமானதாகப் பரிணமித்திருப்பதை, ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்