‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்திய மண்ணில் வெறும் மேடை முழக்கத்திற்கான வாசகம் அல்ல; மாறாக, அது இத்திருநாட்டின் உயிர் ஆற்றல் கொண்ட ஆன்மா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ‘இந்தியா’ என்ற ஒற்றைப் பெயரில் பிணைத்து வைத்திருப்பதுதான் அதன் பன்முகத்தன்மை. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ச.க. ஆட்சி இந்த ஆன்மாவைச் சிதைத்து, மதவெறி மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் ஓர் அபாயகரமான விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறது.
அண்மையில்
குஜராத்தில் நடைபெற்ற சோம்நாத் சுய மரியாதைத் திருவிழா, இந்தியாவின் தற்போதைய அரசியல் போக்கு எத்தகைய திசையில் பயணிக்கிறது என்பதற்கான ஒரு தெளிவான சான்று. நாட்டின் பிரதமர் என்ற முறையில், ஒரு மதச்சார்பற்ற சனநாயக நாட்டின் தலைவராகப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு முன்னெடுப்புகள், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தவேண்டிய திரு. நரேந்திர மோடி அவர்கள், தனது நேரத்தின் பெரும் பகுதியை ஆலய வழிபாடுகளிலும், குடமுழுக்கு விழாக்களிலும் செலவிடுவது கவலையளிக்கிறது.
சோம்நாத்
விழாவில் பேசிய பிரதமர், “நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் இப்போது வாள்களுக்குப் பதிலாகப் பிற தீங்கிழைக்கும் வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன; நம்மைப் பிளவுபடுத்த முயலும் சக்திகளை ஒற்றுமையால் வீழ்த்த வேண்டும்”
என்று அறைகூவல் விடுத்துள்ளார். இங்குதான் ஒரு பெரும் முரண் எழுகிறது. உண்மையில் இந்திய மக்களை மத ரீதியாகவும் சாதி
ரீதியாகவும் பிளவுபடுத்தி, அதன் மூலம் வாக்குகளைச் சேகரிக்கும் அரசியலை முன்னெடுப்பது யார்? 11 ஆண்டுகால ஆட்சியில் சமூகங்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளும், கும்பல் வன்முறைகளும் (Mob Lynching) பெருகியுள்ளதைச்
சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்களின் கேள்விகளுக்குப் பிரதமரின் உரையில் எந்தப் பதிலும் இல்லை. நாட்டின் பிரதமரே ஒரு மதத்தைச் சார்ந்த அடையாளங்களை முன்னிறுத்துவது, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு விடப்பட்ட சவாலாகும்.
அதே
மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் உரை, நேரடியாகவே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான நஞ்சைக் கக்கும் வகையில் அமைந்திருந்தது. “இஸ்லாமிய மன்னர்கள் இக்கோவிலைத் தகர்த்தார்கள்; இடித்தவர்கள் அழிந்து போனார்கள்; ஆனால், கோவில் கம்பீரமாக நிற்கிறது” என்று அவர் கர்ச்சித்தது, கடந்த கால வரலாற்றுக் காயங்களை மீண்டும் கீறி விட்டு, தற்கால அரசியல் இலாபம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
வரலாற்று
ரீதியாகச் சோம்நாத் கோவில் தாக்கப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை இன்று வாழும் ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உமிழப் பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்? அமித்ஷா தனது உரையில், ‘இந்திய மக்களின் நம்பிக்கை’
என்று குறிப்பிடுவது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் அல்ல; மாறாக, அவர் முன்வைக்கும் ‘இந்துத்துவ’ கொள்கைகளை
ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே. சனாதன தர்மமே இந்தியாவின் ஒட்டுமொத்தக் கலாச்சாரம் என உருவகப்படுத்துவதன் மூலம் புத்த,
சமண, சீக்கிய, இசுலாமிய, கிறித்தவ மற்றும் திராவிடப் பண்பாட்டுத் தனித்துவங்களை அவர் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்.
பா.ச.க.-வின்
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற ஒற்றைவாதக் கொள்கை, இந்தியாவின் அடிமட்ட அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காலங்காலமாக ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த கிராமப்புற மக்கள், இன்று மத ரீதியிலான சிறு
சிறு காரணங்களுக்காக மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘உணவுத் தேர்வு’
(Food choice)
என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், ‘லவ் ஜிகாத்’ போன்ற கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இன்று இந்தியா முழுவதும் ஒரு தொற்றுநோயாகப் பரவி வருகிறது.
மறுபுறம்,
இந்திய சனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நிறுவனங்கள் தங்களின் சுயாட்சியை இழந்து வருகின்றன. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனம் மிக முக்கியமானது: “சி.பி.ஐ.,
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தும் இன்று
ஆட்சியாளர்களின் ஏவல் படைகளாக மாறியுள்ளன” என்ற
அவரது கூற்று மிகச்சரியானதே! குறிப்பாக, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கு இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுவதும், பா.ச.க.-வின் கொள்கைகளுக்கு உடன்படாத அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதும் சனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும்.
இந்திய
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, மத உரிமை மற்றும்
ஊடகச் சுதந்திரம் ஆகியவை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ஊடகச் சுதந்திரப் பட்டியலில் இந்தியா தொடர்ச்சியாகப் பின்தங்கி வருவது இதற்குச் சான்று. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘தேசத்துரோகிகள்’ என
முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
மேலும்
இன்றைய சூழலில், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படுகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகள் மறைமுகமாகச் சிதைக்கப்படுகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதா
கிருஷ்ணன் குறிப்பிட்டது போல, “இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தவில்லை; மாறாக, அவை நமது நாகரிகத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தியுள்ளன.” ஆனால், இந்த உண்மையை மறைத்து, ‘இந்தி’ மற்றும் ‘சமஸ்கிருதத்தை’ தேசிய
அடையாளமாக முன்னிறுத்தி, பிற மாநில மொழிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் முயற்சி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கிறது.
பா.ச.க. அரசு
சனாதனத் தர்மத்தை இந்தியாவின் தேசிய அடையாளமாக மாற்றத் துடிக்கிறது. ஆனால், சனாதனம் என்பது படிநிலைச் சமூக அமைப்பை (Hierarchy) வலியுறுத்துவது
என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரானது இந்தச் சனாதனப் போக்கு. மதம் மற்றும் ஆன்மிகம் என்பது தனிமனித உரிமை; அதை அரசு நிர்வாகத்தோடும் தேசிய அடையாளத்தோடும் கலப்பது மதவாத ஆட்சிக்கே (Theocracy) வழிவகுக்கும்.
பா.ச.க. அரசின்
இந்தப் போக்கு, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், ஒரு மதவாதப் பிரச்சினையை முன்னிறுத்தி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது.
இந்தியா
என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கோ சொந்தமான சொத்தல்ல. இது பல கோடி மக்களின்
வியர்வையாலும் தியாகத்தாலும் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டுப் பரிமாற்றத்தாலும் உருவானது. சோம்நாத் போன்ற வரலாற்றுச் சின்னங்களைப் போற்றுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் பெருமையை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வன்மமாக மாற்றுவது தேசத் துரோகத்திற்கு இணையானது.
இறுதியாக,
மத அடிப்படைவாதமும் வெறுப்பு அரசியலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையோ அல்லது உலகளாவிய அங்கீகாரத்தையோ ஒருபோதும் பெற்றுத்தராது. உண்மையான சுய மரியாதை என்பது பிற மதத்தவரை இழிவுபடுத்துவதில் இல்லை; மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதிலும், பசியற்ற, அச்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதிலுமே உள்ளது. ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பன்முகத்தன்மையைச் சிதைப்பதை நிறுத்தவேண்டும்.
பன்முகத்தன்மைதான்
இந்தியாவின் பலம்; அதைச் சிதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தையே சிதைப்பதாகும். இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களின் சனநாயக உரிமைகளையும் பன்முகப் பண்பாட்டையும் காக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது!
விழிப்பாய்
இருப்போம்! - என்றும்
வேற்றுமையில்
ஒற்றுமை காப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் முழக்கங்களுக்கு இடையே, ஒரு குவளை பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காகச் சாமானிய மக்கள் உயிரை விடும் அவலம் இந்திய மண்ணில் நீடிப்பது இச்சனநாயகத்தின்மீது படிந்திருக்கும் தீராக் கறையையே காட்டுகிறது!
மத்தியபிரதேச
மாநிலத்தின் இந்தூர் நகரில் பகீரத்புரா (Bhagirathpura) பகுதியில்
மாசுபட்ட குடிநீரால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமும் ஒன்றிய மற்றும் மாநில, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தையும், ஆட்சியாளர்களின் போலிப் பெருமிதங்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்தூர்
நகரம் இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’
(Cleanest City) எனத்
தொடர்ந்து பலமுறை விருதுகளைப் பெற்றுவரும் ஒரு பெருநகரம். ஆனால், ‘இந்தத் தூய்மை என்பது வெறும் மேலோட்டமான அலங்காரம்தானா?’ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஹராப்பா - மொகஞ்சதாரோ, கீழடி - வைகைக்கரை நாகரிகங்களின் பெருமை கொண்ட இந்திய மண்ணில், பகீரத்புரா பகுதியில் கழிவுநீர்க் குழாயும், குடிநீர்க் குழாயும் ஒன்றோடொன்று கலந்து, மக்கள் மலம் கலந்த நீரை அருந்த நேரிட்டது என்பது ஒரு நவீன நகர நிர்வாகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம்.
அரசு
நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏழை எளிய மக்களின் வீடுகளில் துக்கம் குடிபுகுகிறது என்பதற்கு இந்தூர் ஒரு சாட்சியாக மாறியுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பான நிலத்தடி நீர்க்குழாய்களின் பராமரிப்பில் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாதது. இக்கொடுஞ்செயல் மாநில அரசின் பொறுப்பற்றத்தன்மையையே எடுத்துக்காட்டுகிறது.
மத்தியபிரதேசத்தில்
நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பா.ச.க.
அரசு, இந்நிகழ்விற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டும். ஒரு பகுதியில் தொற்றுநோய் பரவுகிறது என்பது தெரிந்தும், ஆரம்பக்கட்டத்திலேயே அதைத் தடுக்கத் தவறியது ஏன்? மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் துடித்தபோது, சுகாதாரத்துறை எங்கே சென்றது? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அங்கே ஆட்சியாளர்கள் எவரிடமும் பதில் இல்லை.
மாநில
அரசு அங்குப் பெருநிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதிலும், அரசியல் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை, சாமானிய மக்களின் உயிர் காக்கும் சுகாதாரக் கட்டமைப்பில் காட்டவில்லை என்பது பெரும் கவலையளிக்கிறது. பகீரத்புரா போன்ற நெரிசலான பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் ஆட்சியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
ஒன்றிய
பா.ச.க. அரசு
‘ஜல் ஜீவன் மிஷன்’
(Jal Jeevan Mission) மூலம்
நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாக மார் தட்டிக்கொள்கிறது. ஆனால், குழாய்கள் வழியாக வருவது குடிநீரா? அல்லது விஷமா? என்பதை உறுதிசெய்யும் தணிக்கை முறைகள் எங்கே போயின? ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் பெரிய சாலைகளையும் மின்விளக்குகளையும் அமைப்பதில் காட்டும் வேகம், பூமிக்கடியில் இருக்கும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகச் சீரமைப்பில் காட்டப்படுவதில்லை.
ஒன்றிய
பா.ச.க. அரசின்
திட்டங்கள் பெரும்பாலும் புள்ளி விவரங்களை நோக்கி இருக்கின்றனவே தவிர, மக்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இந்தூர் போன்ற ஒரு நகரத்திலேயே இத்தகைய நிலை என்றால், இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
மாநில
அரசு, அங்கே பழைய நீர்க்குழாய்களை மாற்றாமல், புதிய இணைப்புகளை மட்டும் வழங்கிக் கொண்டே சென்றதும், குடிநீர் மாதிரிகளைத் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளதும், மக்கள் புகார் அளித்தும், அதன் தீவிரத்தை உணராமல் கோப்புகளை நகர்த்திக் கொண்டிருந்த அதிகாரத்துவமுமே இந்த உயிரிழப்புகளுக்கு நேரடிப் பொறுப்பு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மாநில அரசின் ஒட்டுமொத்த மெத்தனப்போக்கையே படம்பிடித்துக்காட்டுகிறது.
அண்மைக்காலங்களில்
ஒவ்வொரு மாநிலத்திலும் ‘ஸ்மார்ட் சிட்டி’-களுக்குப் பஞ்சமில்லை. எங்குப் பார்த்தாலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ பற்றிய அறிவிப்புகளும் விளம்பரங்களும் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் திட்டத்தின் அடிப்படை நோக்கமே குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான். ஆனால், இந்தூர் நிகழ்வு இங்கு ‘ஸ்மார்ட்’
என்பது வெறும் டிஜிட்டல் திரைகளிலும், பளபளப்பான கட்டடங்களிலும் மட்டுமே முடிகிறது என்பதையே உணர்த்துகின்றன. நிலத்தடியில் புதைந்துகிடக்கும் சிதைந்த குழாய்களும், அவற்றிலிருந்து கசியும் கழிவுநீரும் ‘ஸ்மார்ட்’
பட்டியலில் ஒருபோதும் சேர்க்கப்படப் போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்றிய
பா.ச.க. அரசு
முன்வைக்கும் வளர்ச்சி மாடல் என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி குறிப்பிடுகையில், “இந்தூரில் வீடுகளுக்கு வழங்கப்பட்டது குடிநீர் அல்ல; மாறாக, அது நஞ்சு. நிர்வாகத்தின் ஆழ்ந்த தூக்கமே இதற்குக் காரணம்; ஒவ்வொரு குடும்பமும் துக்கத்தில் வாடும் சூழலில் பா.ச.க.
தலைவர்களோ ஆணவத்துடன் பேசுகின்றனர்” என்று
குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ஜல் ஜீவன், தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து பெருமை பேசும் பிரதமர் மோடி, இந்தூர் உயிரிழப்புகள் குறித்து அமைதி காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “மக்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீரையோ, தூய்மையான காற்றையே ஒன்றிய பா.ச.க
அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லை” என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்யத் தவறும் எந்த ஓர் அரசும் தன்னை ‘வளர்ந்த அரசு’ என்று அழைத்துக்கொள்ளத் தகுதியற்றது என்பதை குறைந்தபட்சம் தேர்தல் காலங்களிலாவது குடிமக்கள் நாம் உணர்ந்தாக வேண்டும்.
மானுட
மாண்பிற்கு எதிரான இத்தகைய கொடிய நிகழ்வுகள் அரங்கேறும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சில இலட்சங்களை நிவாரணமாக அறிவிப்பதோடு அரசு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. ஆனால், உயிரிழந்த மனித உயிர்களுக்கு ஈடு ஏது? தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிகப் பணி நீக்கம் என்பது தீர்வாகாது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்காக அவர்கள்மீது கொலைக்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இறுதியாக,
நிர்வாகம் தூங்கிக் கொண்டிருந்தால், மக்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உயிரைக் கொடுத்துதான் அந்தத் தூக்கத்தைக் கலைக்க வேண்டுமா? எனும் கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் துயரம் ஓர் எச்சரிக்கை மணி என்பதனை நாம் உணர்ந்திடவேண்டும்; ஒன்றிய மற்றும்
மாநில அரசுகள் வெற்று விளம்பரங்களைத் தள்ளி வைத்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நமது
அரசு, ஐயன் வள்ளுவர் சுட்டிக்காட்டிய ‘மக்கள் நல அரசாக’ மாறவேண்டும்; அதுவும் சாமானிய மக்களுக்கான அரசாக மலரவேண்டும். அதாவது,
குடிமக்களை அரவணைத்து, அவர்களின் நல்வாழ்விற்காகச் செயல்பட்டு, அறவழியில் செங்கோல் செலுத்தி, நாட்டை வளம்பெறச் செய்து குடிமக்களின் மகிழ்ச்சியையும், நாட்டின் செழிப்பையும் குறிக்கோளாகக் கொண்ட, அறநெறி சார்ந்த, பொறுப்புள்ள அரசாக இருக்கவேண்டும். இதனையே வள்ளுவர்,
‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ
நிற்கும் உலகு’
(குறள் 544)
என்று
குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக,
‘அனைவருக்கும் குடிநீர்’
என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், மக்களின் அடிப்படை உரிமையாக, உடைமையாக மாறவேண்டும். இல்லையெனில், நிர்வாகத்தின் இந்த ஆழ்ந்த உறக்கம், இந்திய சனநாயகத்தின் எதிர்காலத்தையே பெரும் துக்கத்திற்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியாளர்கள் தங்கள் ‘வளர்ச்சி’
முழக்கங்களை நிறுத்திவிட்டு, மக்களின் மரண ஓலங்களுக்குச் செவிசாய்க்கவேண்டிய தருணம் இது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்;
வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை
செய்வோம்!’
என்றான்
முண்டாசுக் கவிஞன் பாரதி. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிந்தனையைத் தழுவிய இப்பாடல் வரிகள், விவசாயம் மற்றும் அனைத்துத் தொழில்களையும் போற்றி வணங்குவதுடன், வீணாக இருப்பவர்களை இழிவாகக் கருதிடல் வேண்டுமென எடுத்துரைக்கின்றன.
உலகில்
உள்ள தொழில்கள் அனைத்திலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவுத் தொழிலே உலக மக்களுக்கு உணவளிக்கும் தொழில்; நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைக்கும் உழவனை நாம் மறந்துவிடக் கூடாது என்று எண்ணிய செந்தமிழ் புல(தழ்)வன், ஐயன் வள்ளுவரோ...
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும்
உழவே தலை’
(குறள் 1031)
என்றார்.
அதாவது, உலகம் பல தொழில்களைச் செய்து
சுழன்றாலும், இறுதியில் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது; எனவே, எவ்வளவு துன்பம் வந்தாலும், உழவுத் தொழிலே தலையானது, சிறந்தது என்று உழவுத்தொழிலின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கும்
மேலாக ஒருபடி சென்று,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு
பின்செல் பவர்’
(குறள் 1033)
எனப்
பாடினார். அதாவது, உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும்,
மானிடர் வாழ்க்கையில்
இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம். இவற்றுள் உணவே முதன்மையான இடம் வகிக்கிறது. உணவளிப்பதற்கு உழவுத் தொழில் சிறக்க வேண்டும்; இத்தொழிலில் ஈடுபடுவோர் உண்மையிலேயே போற்றுதற்குரியவர்கள் என்பதை உணர்ந்த தமிழ் மூதாட்டி ஒளவையும் ‘நல்வழி’ பாடலில் உழவுத் தொழிலின் உயர்வைப் போற்றி
ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு’
(பாடல் 12)
என்று
சிறப்புறப் பாடியிருக்கிறார். அதாவது, ஆற்றங்கரையில் உள்ள மரமும், அரசனே வியக்கும்படி வீற்றிருந்த வாழ்வும் ஒருநாள் வீழ்ந்துவிடும்; ஆனால், உழுதுண்டு வாழ்வதற்கு ஈடு இணை இல்லை என்று விவசாயத்தின் மேன்மையையும், உழுதுண்டு வாழ்வதன் சிறப்பையும் வலியுறுத்துகிறார். இத்தகைய சிறப்புமிக்கது வேளாண் தொழில்!
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
நம் முதுமொழி. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் உழவர்களின் வாழ்வில் அந்த ‘வழி’ இன்னும் ஒரு போராட்டக்களமாகவே நீடிக்கிறது. 2026-ஆம் ஆண்டின் விடியலில் விண்ணை முட்டும் தொழில்நுட்பப் புரட்சி ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் அதலபாதாளத்தில் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் அழுத்தங்களும்தான் முன்னெப்போதும் இல்லாத சவால்களைத் தற்போது ஏற்படுத்தி வருகின்றன.
அன்றும்
இன்றும் ஒரு விவசாயி நிலத்தில் இறங்கும்போதே கடனாளியாகத்தான் காலடி வைக்கிறான். ‘உழைப்பவன் கணக்குப் பார்த்தல் உழக்குக் கூட மிஞ்சாதாம்!’ என்ற பழமொழிக்கேற்ப, வறுமையில் பிறழும் விடியாத பொழுதே என்றும் அவனது வாழ்க்கையாகிப் போகின்றன. இத்தகைய சூழலில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல’ இன்றைய
ஒன்றிய பா.ச.க.
அரசின் நுகர்வுக்
கொள்கைகளும் வேளாண் சட்டங்களும் இன்னும் அவர்களை மேலும் மேலும் இருளில் தள்ளுவதாகவே இருக்கின்றன. தனி முதலாளிகளின் வர்த்தகம் செழிக்க ஒட்டுமொத்த வேளாண் சமூகமும் இம்மண்ணில் பலிகடா ஆக்கப்படுகின்றன.
இடுபொருள்களின்
விலை உயர்வு குறிப்பாக, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை இன்று கணிசமாக
அதிகரித்துள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, உலகளாவிய அளவில் உரங்களுக்கான செலவு உயர்ந்திருப்பது சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
வருடம்
முழுவதும் வெயிலிலும் மழையிலும் உழைத்து விளைவித்தப் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காததும் விவசாயிகளின் ஆகப்பெரிய சோகம். உழவனின் வியர்வையில் விளைந்த பல பயிர்களுக்கு அரசு
அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட (MSP), வெளிச்சந்தையில்
மிகக்குறைவான விலையே கிடைக்கிறது. இடைத் தரகர்களின் ஆதிக்கம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறை விவசாயிகளை ‘அவசர விற்பனை’
(Distress Sale) செய்யத்
தூண்டுகிறது.
ஒன்றிய
அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் 2025-இல் முன்மொழியப்பட்ட ‘விதை மசோதா’ போன்றவை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திறந்தவெளிச் சந்தைமுறை (Free Market) விவசாயிகளுக்கு
அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அது பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கிறது. சந்தை விலையைத் தீர்மானிக்கும் சக்தி விவசாயிகளிடம் இல்லை; மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கத்திலேயே அவை சுழல்கின்றன.
பாரம்பரிய
விதை சேமிப்பு முறைகளைவிட, பதிவு செய்யப்பட்ட வீரிய இரக விதைகளையே முன்னிறுத்தும் ‘விதை மசோதா 2025’, சிறு விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வைக்கும் ஒரு மறைமுகத் திட்டமாக விமர்சிக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டங்கள் ஒருபுறம் வலுத்தாலும், கொள்கை முடிவுகள் எடுக்கும் இடத்தில் அவர்களின் குரல் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைப்பு மற்றும் மின்சாரச் சீர்திருத்தங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.
‘அக்ரி-டெக்’
(Agri-Tech) மற்றும்
‘டிஜிட்டல் விவசாயம்’
பற்றி இன்று பா.ச.க.
அரசு பேசுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வழியாகச்
சந்தையை அணுகுவதும், ஆன்லைன் வர்த்தகத்தைப் புரிந்துகொள்வதும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. தொழில்நுட்பம் என்பது விவசாயிகளுக்கு உதவவேண்டுமே தவிர, அவர்களை மேலும் அந்நியப்படுத்தக்கூடாது.
உழவர்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். உலகுக்கு உணவூட்டும் உழவருக்காகக் குரல் கொடுப்பதும், அவர்கள் சார்பாகத் தேர்தல் காலங்களில் நன்கு சிந்தித்து நிலைப்பாடு எடுப்பதும் நமது கடமை.
குறிப்பாக,
உழவர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுடன் 50% இலாபம்
சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். இது வெறும் சட்டமாக மட்டும் இல்லாமல், நடைமுறையில் அனைத்துப் பயிர்களுக்கும் உறுதி செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டின் ‘உழவர் சந்தை’ போன்ற திட்டங்கள் இந்தியா முழுவதும் வலுப்படுத்தப்படவேண்டும். நேரடிச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் நுகர்வோருடன் விவசாயிகளை நேரடியாக இணைக்கும் ‘டோர் டெலிவரி’
(Door Delivery) போன்ற
நவீன முறைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
மேலும்,
2026-இல் காலநிலை மாற்றம் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பருவம் தவறிய மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க ‘பயிர் காப்பீட்டுத் திட்டங்கள்’ எளிமைப்படுத்தப்பட
வேண்டும்.
இறுதியாக,
விவசாயி என்பவன் வெறும் உணவு உற்பத்தியாளன் மட்டுமல்லன்; அவன் இந்தத் தேசத்தின் உயிர்நாடி. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.
அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதைத் தடுத்து, அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரமும், கௌரவமான வாழ்வாதாரமும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் தைப்பொங்கலின் உண்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.
மண்ணை
நேசிக்கும் மனிதர்களின் வாழ்வில்...
உண்மையான
மகிழ்ச்சி பொங்கட்டும்!
உரிமை
கொண்ட உயரிய வாழ்வு தங்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒவ்வொரு பிறப்பும் ‘புதியன’ எனும் கருத்தியலை, எதிர்நோக்கைக் கொண்டிருக்கின்றன. ‘கி.மு.-கி.பி.’ என வரலாற்றை வகுடெடுத்த வரலாற்று நாயகன் இயேசுவின் பிறப்பு ‘கடவுள் நம்மோடு’ என்பதை உணர்த்துகிறது; தொடர்ந்து வந்த புத்தாண்டுப் பிறப்பு, ‘காலமும் நம்மோடு’ என்ற எதிர்நோக்கைத் தருகிறது.
புலர்ந்துள்ள
புத்தாண்டு புதிய எண்ணங்களை, புதிய சிந்தனைகளை, புதிய ஏற்றங்களை, புதிய மாற்றங்களை, புதிய உறவுகளை நம்மிலும் நம்மைச் சுற்றிலும், நாம் வாழும் சமூகத்திலும் மலரச் செய்யவேண்டும்.
விடுதலை
இந்தியாவின் சமூக - அரசியல் - வாழ்வியல் சூழல் தனித்துவமானது. ஆட்சிமுறை குறித்து ஆயிரம் பரிசோதனை முயற்சிகள் நடந்து முடிந்த பின்பு, உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்ட ஆட்சிமுறைதான் ‘மக்களாட்சி’ (சனநாயகம்).
அதில் நிறைந்த நன்மை உண்டு என்பதற்காக அல்ல; மாறாக, குறைந்த தீமை உண்டு என்ற கருத்தியலால் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது. “உள்ள தீமைகளில் சிறிய தீமை, சனநாயகம்”என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையில் நாம் இல்லை; மாறாக, நமக்குக் கிடைத்திருப்பது எல்லாம், இரண்டு தீமைகளில் எந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்பதுதான். நாம் பெரிய தீமையைப் புறக்கணித்துவிட்டு, சிறிய தீமையைத் தேர்வு செய்ய உதவுவதே சனநாயகம்”
என்று விளக்கம் தந்தார் காந்தியவாதி கிருபளானி. இதுவே உண்மையும் கூட.
ஒவ்வொரு
நிறையிலும் நம் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு குறை மறைந்திருக்கும்; அதுபோலவே, ஒவ்வொரு குறையிலும் ஒரு நிறை மறைந்திருக்கும். முழுமை என்று இறைமையைத் தவிர எதையும் நாம் கூற இயலாது. இவ்வாட்சியமைப்பு முறையில், மக்கள் மாண்புடன் வாழ்வர் என்ற எதிர்நோக்கில்தான் மக்களாட்சி இந்திய மண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்படும் மக்களுடைய அரசு” என்று சனநாயகத்திற்கு விளக்கம் அளித்தார் ஆபிரகாம் லிங்கன். அப்பாவி மக்களை ஆட்சியாளர்கள் சுரண்டுவதற்கான வசதியான வாகனம் சனநாயகம் என்பதுதான் இன்றைய இந்திய அரசியல் களத்தின் எதார்த்தம். “பாமர மக்களின் மோசமான ஆட்சியே சனநாயகத்தில் அமையும்” என்று கடுமையாக விமர்சித்தார் அரிஸ்டாட்டில். அந்தக் கூற்று இந்திய மண்ணில் முற்றிலும் உண்மையாகிப் போனது.
மக்கள்
மத்தியில் நிலவும் அறியாமையும், அதனால் வளரும் கருத்தியல் அடிமைத்தனமும், பொருளியல் வறுமை நிலையும் அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மூலதனம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
தங்களுக்கான அரசை உருவாக்குபவர்கள் மக்கள்தாம். ஆனால், அவர்களை அறியாமை இருளிலும் குறிப்பாக, அரசியல் அறியாமையிலும் வைத்து நடத்தும் ஓர் அரசியலில் தரமான அரசியல் அமைப்பு முறை உருவாக வாய்ப்பில்லை. அத்தகைய சூழல் தொடரும் வேளையில், அங்கு அரங்கேறும் அரசியல், அநாகரிகம் கொண்டு தரமற்றதாகத்தான் இருக்கும். அங்கு எப்படித் தரமான அரசை உருவாக்க முடியும்? எதிர்பார்க்க முடியும்? இங்கு இருமுனை ஆய்வுகள் அவசியம். ஒருபுறம், மக்கள் அரசியல் அறிவு பெறவேண்டும்; மக்கள் மத்தியில் அரசியல் அறியாமை அகற்றப்படவேண்டும்; மறுபுறம், அரசியல் தலைவர்களின் ஆட்சியாளர்களின் தலைமைத்துவம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சனநாயகத்தின்
ஆணிவேராக இருக்க வேண்டிய அரசியல் கட்சிகள் இன்று மலினமான மனிதர்களின் கூடாரமாகி விட்டது. தகுதியற்றவர்களிடம் தலைமைப் பொறுப்பும் ஆட்சி அதிகாரமும் வந்து சேர, இன்றைய கட்சிமுறை வழிவகுக்கிறது. சமுதாயத்தில் மக்களிடையே மோதலும் முரணும் கட்சிகளால்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன. சாதி சச்சரவுகளும் மத வேற்றுமைகளும் கட்சிகளால்
தூண்டப்படுகின்றன. அரசியல் களத்தையும் சமூகத் தளத்தையும் சீர்செய்ய யாவரும் கண்விழிக்க வேண்டுமென காலம் எச்சரிக்கிறது.
‘நல்ல காலம் பிறந்து இருக்கிறது’ என்ற
நப்பாசை கொள்வதல்ல ஆண்டுப் பிறப்பு. பிறந்த ஆண்டை நல்ல காலமாகக் கட்டமைப்பதே அதில் பொதிந்திருக்கும் அழைப்பு. மாண்புறு மக்களாட்சி மலர்வதற்கான சிந்தனைகள் நம்மில் வளர வேண்டும், நல்லெண்ணங்கள் எங்கும் மலரவேண்டும்.
குடிமக்கள்
தரமான வாழ்க்கை வாழ வேண்டும்; அந்தத் தரமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை மதிப்பீடு செய்யவேண்டும். ஆண்டுதோறும் இப்பணியை மேற்கொள்வது ஆட்சியாளர்களின் கடமை; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவற்றை அலசி ஆராய்வது வாக்குரிமை பெற்ற மக்களின் கடமை.
முகம்
மட்டும் கொண்ட தலைமையும் முரண்பட்ட கொள்கையும் மக்களாட்சிக் கருத்தியலில் நெடுநாள் காலுன்றாது. அது நேற்றைய மழையில் முளைத்த இன்றைய காளான். காலத்தின் சூழல் கட்சிகளின் கருத்தியலும், கவர்ந்திழுக்கும் கொள்கைகளும் சற்று ஆழமாகக் கூர்ந்து கவனிக்கப்படவேண்டும். ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் என்னும் கூறுகளை உள்ளடக்கிய தலைமைத்துவம் கூர்ந்து கணிக்கப்படவேண்டும். தலைமையின் தன்மையும் தனித்துவமான கொள்கையும் அரசியல் தளத்தில் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும்.
மக்களாட்சி
மாண்புற மக்கள் பிரதிநிதிகள், ‘மாண்புமிகு’ என
அடைமொழி கொண்டோர் மாண்புடனே என்றும் திகழவேண்டும். எளிமையான, ஊழலற்ற, மக்களுக்காக அரசியல் தளத்தில் தன்னலமற்றுப் பணியாற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட அரசியல் தலைவர்களைக் காண்பது இன்று அரிதாகிப் போனது. “மக்களுடைய நலன்களுக்காகப் பாடுபடுவதை விட அழகு மிக்கதும் அற்புதமானதும் எதுவும் அகிலத்தில் இல்லை” என்று அறிவித்து, வியட்நாம் மக்களுக்காகவே தன் வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் ஹோசிமின். இந்திய மண்ணின் விடுதலை கால வரலாற்றில் முன்னின்ற மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், அண்ணல் அம்பேத்கர் போன்றோரையும், தமிழ்நாட்டு மண்ணில் பெரியார், காமராசர், ஜீவானந்தம், அண்ணா போன்றோரையும் இனி காண்பது அரிது.
மக்களாட்சி
அமைப்பு முறையில் கட்சி அரசியலில் தலைமை குறித்த தெளிவுகள் நாம் கொண்டிருக்கவேண்டும். தலைமை - ஆளுமை கொண்டதாக இருக்கிறதா? ஆளுமைக்கான தலைமைத்துவப் பண்பின் வரையறை என்ன? தன்னலம் துறப்பது, பொதுநலம் பேணுவது, தொலைநோக்குப் பார்வை கொள்வது, தெளிந்த சிந்தனை கொள்வது, உறுதியான நிலைப்பாடு கொள்வது, வளமான திட்டங்கள் மேற்கொள்வது... என்பதெல்லாம் தலைமைத்துவ ஆளுமையின் வரையறைகளாகக் கணிக்கப்பட வேண்டும்.
இன்று
மக்களாட்சி அமைப்பு முறையில் நாம் காணும் தலைமை யாருக்கான தலைமையாக இருக்கிறது? என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களாட்சி அரசியல் முறை என்றாலும், இன்றைய காலச்சூழலில் தலைமை யாருக்கானதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது?
தலைமையைத்
தேர்ந்தெடுக்கும் காரணங்கள் என்ன? காரணிகள் என்ன? என்ற தெளிவை நாம் பெற வேண்டும். அப்போதுதான், தலைமையைத் தேர்ந்தெடுப்பதன் சூட்சுமத்தை உணரமுடியும். முகத்திரை கொண்ட தலைமையின் ‘மறை-முகம்’ அறியமுடியும். 140 கோடி மக்களின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் நாடாளுமன்றமும் சட்டப் பேரவைகளும் இன்று எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, குடிமக்களுக்கான உரிமைகளுக்காக, உடைமைகளுக்கான, வாழ்வு நிலைக்கான கொள்கைகளைத் திரட்டுவதும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், வளங்களை மேன்மைப்படுத்துவதும் நலமான விவாதமாக அமைய வேண்டிய தளம் கூச்சலும் குழப்பமும் புகழ்ச்சியும் துதியும் கொண்ட அநாகரிகத்தின் சரணாலயம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
வாழ்வதாக நாம் மார்தட்டிக் கொண்டாலும், அந்த மக்களாட்சி முடக்கப்பட்டு வருகிறது என்பதை அறியாமலே வாழ்ந்து வருகிறோம். மக்களுக்கான அரசியலாக இது அமையாமல், மக்களைப் பிரித்தாளும் மதவாத அரசியல் கொள்கைகளாலும், பிரிவினை எண்ணங்களாலும், சமயச்சார்பற்றத்தன்மை களையப்பட்டு, ‘ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே தேர்தல்...’ என ஒற்றைப் புள்ளியை
நோக்கிப் பயணிப்பது பேராபத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதை அறியாமலே இருக்கிறோம். நாம் விழிப்பதற்குள் நம்மை விழுங்குவதற்குப் புறக்காரணிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
மக்களாட்சி
என்பது எல்லாரும் இன்புற்றிருக்கும் சமூக அமைப்பை, வாழ்வியலை வழங்கக்கூடியது. குடிமக்கள் பொறுப்புடனும், அறிவார்ந்த அரசியல் தெளிவுடன் பங்கேற்கும்போதுதான் அது நமக்கு நன்மை பயக்கக்கூடியதாகத் தொடரச் செய்ய முடியும். ஆனால், மக்களாட்சி அரசியல் அமைப்பின் மாண்பு உணராமலும், மதிப்பீடு அறியாமலும் வாழ்ந்து வருகிறோம். 78 ஆண்டுகால விடுதலை இந்தியாவில், மக்கள் மத்தியில் விடுதலைக்கான அறிவும் உணர்வும், மக்களாட்சிக்கான சிந்தனைகளும் செயல்பாடுகளும் போதிய அளவு புகட்டப்படவில்லை என்பதே கவலையளிக்கும் எதார்த்தம்.
மக்களாட்சியை
நாம் முறைப்படுத்துவோம்; அரசியல் அறிவு பெறுவோம்; ஆளுமைத் தெளிவு பெறுவோம்; மக்கள்மையச் சிந்தனைகளில் சீர்திருத்தம் கொள்வோம்; மாண்புறு மக்களாட்சியை மலரச் செய்வோம்!
அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘தந்தை அன்பின் வார்த்தையோ - புவி
நிந்தை
களைய வந்ததே!
மனிதம்
புனிதம் காணவே - அன்னை
மடியில் உறவைத் தேடுதே!
கடைநிலையோர்
உயர்வடைய வளமையாகுமே - இனி
தடை
உடைய திரை விலக பொதுவிலாகுமே!
சமபந்தி
விருந்தொன்று உதயமாகுமே - எங்கும்
சமத்துவத்தில் இறைச் சமூகம் சங்கமமாகுமே!
இறைச்சித்தம்
நனவாக வரமாகுமே - திரு
மறை
இரத்தம் அன்பாலே விதையாகுமே!
இருளில்லாப்
புதுநாளும் விடியலாகுமே - இறை
அருளெல்லாம்
புவியெங்கும் நிறைவாகுமே!’
நம்
வாழ்வின் என் இனிய வாசகப் பெருமக்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் இனிய நல்வாழ்த்துகள்!
இயேசு
பாலன் கொண்டு வந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைவாய்த் தங்கிட வாழ்த்துகிறேன்.
இன்று
“விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”
(லூக் 1:79). ஒவ்வொரு பிறப்பும் ஓர் உறவின் தேடல். கிறிஸ்துவின் பிறப்பு உறவின் உன்னதமான தேடல். இது புது உறவை, புது உலகை நோக்கியத் தேடல். இயேசுவின் பிறப்பு ஒரு செய்தி (Message); “இது
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”
(லூக் 2:10). கிறிஸ்துவின் பிறப்பு ஒரு வெளிப்பாடு (Revelation); காலம்
கனிந்தபோது தந்தையாம் கடவுள் மனுக்குலத்திற்குக் கிறிஸ்துவின் உருவில் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். “ஒப்புயர்வற்ற கடவுளின் முழு வெளிப்பாடும் கிறிஸ்து ஆண்டவரில் நிறைவு பெறுகின்றது” (இறை
வெளிப்பாடு-7) என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு.
கிறிஸ்துவின்
பிறப்பு ஓர் உடனிருப்பு (Presence); “முற்காலத்தில்
பலமுறை, பல வகைகளில் இறைவாக்கினர்
வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்”(எபி
1:1-2).
ஒவ்வொரு
குழந்தையும் மண்ணில் பிறக்கையில் ‘நான் இந்த உலகை அன்பு செய்கிறேன்’ என்னும்
கடவுளின் செய்தியைக் கொண்டு வருகிறது. ஆனால், இந்தத் தெய்வக் குழந்தையின் பிறப்பில் கடவுளே மனுவுருவாகிறார்; கடவுளே அன்பின் வடிவமாகிறார்; அவரே அன்பின் செய்தியாகிறார். இயேசுவின் பிறப்பு உறவின் தேடலாகிறது; உற்சாகத்தின் உடனிருப்பாகிறது; மாற்றத்தை முன்வைக்கும் அன்பின் வெளிப்பாடாகிறது. ஆகவேதான், கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மாபெரும் கொண்டாட்டமாகிறது. இந்தக் குழந்தையின் பிறப்பில் வரலாறு கி.மு. - கி.பி. என இரண்டாக வகுடெடுக்கப்படுகிறது.
இக்குழந்தை
அன்பினால் உலகை ஒப்புரவாக்கி அமைதியின் வழியில் மீட்பினைத் தர வந்திருக்கிறது. அவரது பிறப்பின்
பயணம் அன்பு (Love), ஒப்புரவு
(Reconciliation), அமைதி
(Peace), மீட்பு
(Salvation) என்னும்
ஆழமான நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. இறைவன் மனிதனோடு அன்பைப் பகிரவும், மண்ணுலகிற்கு அமைதியைக் கொணரவும், இறை-மனித உறவில் நம்பிக்கை தளிர்க்கவும், நிலை வாழ்வின் உண்மைகள் மனிதனில் ஒளிரவும் மனுவுரு எடுத்திருக்கிறார். இது உலகை ஒளிர்விக்க, உய்விக்க, வாழ்விக்க வந்த ஒளி!
உலகை
ஒளிர்விக்கும் ‘உலகின் ஒளியாக’
(Light of the World), உலகை
உய்விக்க ‘வாழ்வளிக்கும் உணவாக’
(Bread of Life), உலகை
வாழ்விக்க ‘வழியாக, உண்மையாக, வாழ்வாக’ (The Way, the Truth, The Life) வந்த
ஒளி இவரே! எனவேதான் தூய அம்புரோசியார், “Open your heart and run to meet the Sun of the eternal light that
illuminates all men”
என்கிறார். ஆகவே, எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் என்றென்றும் நிலையான ஒளி வீசும் இயேசு என்னும் இந்த ஆதவனைச் சந்திக்கத் திறந்த இதயத்துடன் விரைந்து செல்வோம். இது விண்ணிலிருந்து நம்மைத் தேடி வந்திருக்கும் விடியல்.
இந்த
விடியலின் பிறப்பில் இன்றைய நமது சமூக-அரசியல்-வாழ்வியல் தளத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிவெறி, சமயவெறி, சுயநலமும் அரசியல் ஆதாயமும் கொண்ட சூழ்ச்சிகள், நயவஞ்சகப் பேச்சுகள், மனிதநேயம் மறந்த செயல்பாடுகள், மானுட மாண்பினைச் சிதைக்கும் ஒடுக்குமுறைகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் அடக்குமுறைகள், மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் வன்முறைக்கான சூழ்ச்சிகள், சமத்துவ-சகோதரத்துவ-சமயச் சார்பற்ற அரசியல் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகள்... என அண்மைக் காலங்களில்
நாம் சந்திக்கும் அவலங்களின் இருள் அனைத்தும் களையப்பட வேண்டும் என முயல்வோம்.
கிறிஸ்துவின்
பிறப்பு நம்பிக்கையின் வெளிப்பாடு. ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ எனத்
தெளிவுபடுத்தினார் வானவர் கபிரியேல்; ‘ஆகட்டும்’
என்றார் அன்னை; ‘மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்’ என்பதை
ஏற்றுக்கொண்டார் யோசேப்பு. இந்த மீட்பின் திட்டம் முழுவதும் நம்பிக்கையில் புடமிடப்படுகிறது. கிறிஸ்து என்னும் ஒளி கொண்டு வரும் விடியல் அடிமையெனும் இருளை, ஆதிக்கமெனும் இருளை, அதிகார, ஆணவமெனும் இருளை, பொய்மையின் சூழ்ச்சியெனும் இருளை முற்றிலும் அகற்றும் என நம்பிக்கை கொள்வோம்.
திருத்தந்தை
புனித முதலாம் லியோ குறிப்பிடுவதுபோல, “இன்று உலகின் மீட்பர் பிறந்திருக்கிறார்; அவருடைய பிறப்பில் துயரத்திற்கு இனி இடமில்லை. அவருடைய பிறப்பு நிறை மகிழ்வின் வாக்குறுதியைக் கொண்ட பேரின்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது அனைவருக்குமானது; வாருங்கள் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்!”
இயற்கை
நிறைந்தால் எழில்; பானை நிறைந்தால் வளமை; மண்ணில் நிலம் நிறைந்தால் பசுமை; விண்ணில் நிலவு நிறைந்தால் குளுமை; அன்பு நிறைந்தால் ஆண்டவன். இயேசு பாலனின் பிறப்பில் கிடைக்கும் நிறைந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பேரின்பமும் நம் அகமும் - புறமும் நிறையட்டும்; உலகும் - உறவும் தழைக்கட்டும்; நாடும் - வீடும் செழிக்கட்டும்; நானிலமெங்கும் ஒளிரட்டும்!
அனைவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘விடுதலை இந்தியா’- இது பெருமைக்குரிய சொல்லாடல்; உரிமைக்குரிய அடையாளம்! 1947- ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயர்களின் காலனித்துவத்திலிருந்து ‘விடுதலை பெற்றதாக’ அறிவிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் நாட்டின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலை இந்தியாவின் புதிய வரலாறு படைக்கப்பட்டது. மேலைக்காற்று சுமந்து வந்த அடிமைத்தனமும், அதன் கொடிய அரசியல் கட்டமைப்பும் தகர்க்கப்பட்டு, கடந்த 78 ஆண்டுகளாக விடுதலைத் தென்றல் இம்மண்ணில் எங்கும் உலா வரும் சூழலில், “அடிமை உணர்விலிருந்து இந்தியா மீள வேண்டும்” எனும் நம் பிரதமரின் அண்மைக்காலச் செய்தி நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
‘விடுதலை’ என்பது அதிகார அடக்குமுறையிலிருந்து விடுபட்டு, தனிநபர் அல்லது சமூகத்தின் வாழ்க்கை முறையைத் தன்னாட்சி கொண்டதாக உருவாக்கும் வாழ்வியல். நமது அரசமைப்பு முறையில், அது முறையான சட்ட உரிமைகளை நமக்குத் தந்துள்ளபோதும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’ என்பது அரசியல் தளத்தில் ஆயிரம் விமர்சனங்களைக் கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. சுதந்திரம், விடுதலை என்னும் சொல்லாடல்கள் அடிமைத்தனம், அதிகார அடக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து மலர்ந்த புது வாழ்வு என்னும் சமூக-அரசியல்-வாழ்வியல் பார்வையைத் தந்தாலும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’, விள(ல)க்கப்பட வேண்டிய
கருத்தியலாகவே இருக்கிறது.
உத்தரப்பிரதேச
மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பின் அடிப்படையில், இராமர் கோவில் கட்ட ‘இராம ஜென்மபூமியாக’ வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், 191 அடி உயர கோபுரத்தில் 10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட காவிக்கொடியைப் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இணைந்து அண்மையில் ஏற்றி வைத்துள்ளனர். அப்போது, “அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் உச்ச நிலையைக் கண்டு வருகிறது; நூற்றாண்டுகளாக இருந்து வந்த காயம் ஆற்றப்பட்டு வலி முடிவுக்கு வந்திருக்கிறது; இது வெறும் கொடி அல்ல; தருமத்தின் அடையாளம்; இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் அடையாளம். இந்தக் கொடி உறுதிப்பாடு, வெற்றி, போராட்டம், கனவுகளின் அடையாளம்! இராமரின் கொள்கைகளான உண்மை எனும் தர்மம், பாகுபாடுகள், துன்பம் இல்லாத சமூகம், வறுமை இல்லாத உலகம் ஆகியவற்றை இது பறைசாற்றுகிறது. இந்தக் கோவில் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல; நட்பு, கடமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது” என்று
மோடி உரையாற்றியிருக்கிறார்.
மதச்சார்பற்ற
விடுதலை இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை பாராட்ட வேண்டியவர், காவி கொடியை ஏற்றி வேற்றுமை பாராட்டியிருக்கிறார். ஆகவேதான் இந்தியாவின் மேனாள் நிதி அமைச்சர்
ப.
சிதம்பரம், “மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அயோத்தி கோவிலின் அர்ச்சகரா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
தனது
உரையைத் தொடர்ந்த இந்தியப் பிரதமர், “விடுதலையின்
100 ஆண்டுகளை 2047-இல் இந்தியா நிறைவு செய்யும் போது, வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு நமக்குள் இருக்கும் ஸ்ரீராமரை நாம் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும். ஸ்ரீராமர் பாகுபாடு பார்த்ததில்லை; அதே உணர்வுடன் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் குடிமக்கள் அனைவரும் தழுவிக் கொள்ளவேண்டும். இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவேண்டும்; காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபடவேண்டும்” எனக்
குறிப்பிட்டிருக்கிறார்.
‘அடிமை உணர்வு’,
‘இராமரைத் தட்டியெழுப்பவேண்டும்’, ‘அனைவரையும்
உள்ளடக்கிய தன்மை...’ என்னும் சொற்பதங்கள் இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. இத்தகைய சூழலில், வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கும் இராமருக்கும் என்ன தொடர்பு? இத்தனை காலமாக இராமரை எழுப்பாததால்தான் இந்தியா வளர்ச்சி அடையவில்லையா? என்ற சாமானியனின் கேள்விக்குப் பிரதமர்தான் பதில்கூறவேண்டும்.
சமயச்சார்பற்ற
இந்திய நாட்டில், எல்லாருக்கும் பொதுவான நபராக உயர் பதவி வகிக்கும் பிரதமர், தனிப்பட்ட மத நம்பிக்கையை, கொள்கையை
நாட்டுப்பற்றுக்கும்,
நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படைக்கூறாக இணைத்துப் பேசுவது நாட் டின் சமயச்சார்பற்ற பன்முகத்தன்மையைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது.
அடுத்த
இரு தினங்களில் கோவாவில் 77 அடி உயர இராமரின் சிலையைத் திறந்துவைத்தபோது, “மக்களின் ஒற்றுமையே வளர்ந்த இந்தியாவை அடைவதற்கு வழியாகும்; சமூகம் ஒன்றுபட்டால் தேசம் மாபெரும் முன்னேற்றத்தை முன்னெடுக்கும்” என்று
ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கிறார். பெரிதும் வரவேற்கத்தக்கதே!
உண்மை
பேசுவது வரவேற்கத்தக்கதாயினும், உண்மையாக வாழ்வதே போற்றத்தக்கது. இந்தியப் பிரதமர் அவ்வப்போது உண்மை பேசுகிறார்; பாராட்டத்தக்கதே! ஆனால், அந்த உண்மை ஆட்சித் தளத்தில் - அரசமைப்பின் பார்வையில் வாழ்வாக்கப்படுகிறதா? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
இங்கே,
வரலாறு சற்றே பின்னோக்கிப் பார்க்கப்படவேண்டும். அரசியல் அடிமைத்தனத்தில் இந்தியா இருந்தது நேற்றைய வரலாறு; கருத்தியல் அடிமைத்தனத்தில் அது சிக்குண்டு இருப்பது இன்றைய வரலாறு. பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் சமயச்சார்பற்ற தன்மையும் சிதைக்கப்பட்டு, சிறுபான்மையினரின் ‘இருத்தலே’
கேள்விக்குள்ளாகும்
வாழ்வியல் அடிமைத்தனம், தொக்கி நிற்பது நாளைய வரலாறு.
மதச்சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம், சமூகச் சுதந்திரம், வாக்குரிமைச் சுதந்திரம், தன்னிறைவுப் பொருளாதாரச் சுதந்திரம்... என
யாவும் பறிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் ஆழ்மனத்திலும் குடியிருக்கும் அச்சமும் பயமும்தான் பிரதமர் வெளிப்படையாகக் கூற முடியாத அடிமை உணர்வின் வெளிப்பாடு!
காலனித்துவச்
சிந்தனை இன்னும் நிர்வாகம், கல்வி, மொழி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் நினைவூட்டி இருந்தாலும், காவி அரசியல், ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொள்கையில் நிர்வாகம், கல்வியில் காவி, மும்மொழிக்கொள்கையில் மறைந்திருக்கும் மதவாத அரசியல் என யாவற்றையும் கட்டமைப்பதும்
அவர்களே! தன்னம்பிக்கை, மண்ணின் அடையாளம், மாண்புமிக்க பாரம்பரியம் யாவும் வலுப்படுத்தப்படவேண்டும் என ஒரு பக்கம்
கூறினாலும், மறுபக்கம் ‘ஒரே இந்தியா’ என்னும் போர்வையில் ‘ஒரே மொழி - ஒரே
மதம் - ஒரே இனம்’ என்னும் கட்டமைப்பு நீட்சி அடைவதும் அவர்களாலேயே!
விடுதலை
இந்தியா கல்வி, மருத்துவம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி எனப் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டிருந்தாலும், இவை அனைத்தும் இன்று மதக்கொள்கைகளுக்குள் சுருக்கப்படுவதும் மதச்சாயம் பூசப்படுவதும் ‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற கேள்வியையே எழுப்புகிறது.
எப்போதும்
ஒன்றிய அரசிற்கு இசைந்தே துதிபாடும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, “சனாதன தர்மத்தை எடுத்துவிட்டாலோ, பிரித்தாலோ பாரதம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். எனவே, சனாதன தர்மம் அனைவருக்கும் பகிரப்படவேண்டும். இந்த உலகின் நிலைத்தன்மைக்குச் சனாதன தர்மம் தேவைப்படுகிறது; மனிதனின் வாழ்வு தொடங்கிய நாள் முதலே, சனாதன தர்மம் மனிதனின் முன்னேற்றத்திற்கு உதவியது” என்று கூறியிருக்கிறார். சமூகக் கட்டமைப்பைத் தகர்க்க ஆயிரம் கருத்தியல்கள் முன் நின்றாலும், ஆளுநர் ஆர்.என். ரவிபோல சனாதனக்
கட்டமைப்பைக் காக்க முற்படும் இவர்களால்தான் இச்சமூகம் முன்னோக்கியல்ல, பின்னோக்கி இழுக்கப்படுகிறது.
எந்தவொரு
நாட்டிலும் மக்கள் விரும்பி அடிமைத்தனத்திற்குள் சிக்குண்டிருப்பதில்லை. அங்குள்ள அரசியலும், கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும்தான் மக்களை இன்னும் அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, மனிதத்தை, மனிதநேயத்தை ஒவ்வோர் இந்தியனின் உள்ளத்திலும் தட்டியெழுப்ப வேண்டுமென முழங்குவதற்குப் பதிலாக இராமரைத் தட்டியெழுப்பக் கூறுகிறார் பிரதமர்.
நேற்று-இன்று எனத் தொடரும் இந்த அடிமைத்தனம், நாளையும் தொடராதிருக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. குடிமக்கள் நினைத்தால் நாட்டின் வரலாற்றை மாற்ற முடியும். அதற்கு இந்திய மண்ணில் வாக்குச்சீட்டே வன்மையான ஆயுதம்; அதுவும் இன்று ஆபத்தான சூழலில் ஊசலாடுகிறது. மக்கள் நினைத்தால் எந்த ஆட்சியையும் மாற்ற முடியும். அதற்குத் தேவை தெளிந்த சிந்தனையும் தீர்க்கமான விழிப்புணர்வும். “சமுதாயம் என்பது நமது தேவைகளால் உருவாகிறது; ஆனால், அரசு என்பது நமது கயமையால் உருவாகிறது” என்றார்
வில்லியம் கோட்வின்.
விழிப்படைந்தால்
விண்ணையும் தொட முடியும்; விவேகம் கொண்டால் வேரடி மண்ணோடு நம் அடிமைத்தனம் விரைந்தோடிவிடும். எனவே, இந்தியாவில் சமூக-அரசியல் மாற்றம் விரைவில் நிகழ்ந்தாகவேண்டும்; இத்தகைய சூழலில், அமெரிக்கக் கவிஞன் ஜேம்ஸ் இரஸ்ஸல் லொவலின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...
‘வல்லமையற்றவர்களுக்காகவும்
வாயில்லாதவர்களுக்காகவும்
பரிந்து
பேச அஞ்சுவோர் அடிமைகளே!
உண்மையைக்
கண்டு
உள்ளுக்குள்
ஒடுங்கிவிடாமல்
சீறியெழாதவர்கள் அடிமைகளே!’
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்