இந்திய மண்ணில் விடுதலைக் காற்று நம் வீதிகளில் உலா வரும் முன், பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தி மொழியின் வாடை நம் வாசல்களில் வசந்தமாகிட திட்டங்கள் தீட்டப்பட்டன.
1937-இல் ‘பிரீமியர்’ என்று
அழைக்கப்படும் மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்றபோதே, இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. காந்தியின் விருப்பப்படி தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்பவும், தன் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணிக்கவும் தீவிரமாக முற்பட்டவர் மூத்த அறிஞர் இராஜாஜி. இந்தியை இம்மண்ணில் பரவலாக்க ஆசை கொண்ட அவரே, பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, 1962, ஜூன் 16-ஆம் நாள் ‘சுயராஜ்ஜியா’ இதழில்
‘பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடிப்பது நல்லது’ என்று எழுதினார்.
அவ்வாறே,
சுதந்திரத்திற்குப் பின்பு ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் இந்தித் திணிப்பு நடந்த வேளையில், 1948-இல் பெரியார், இந்தியைத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். இந்தியை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட அவர், “எனது இந்தி எதிர்ப்பு என்பது ‘இந்தி கூடாது’ என்பதற்காகவோ, ‘தமிழ் வேண்டும்’
என்பதற்காகவோ அல்ல; மாறாக, ஆங்கிலம் பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழனின் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்காகவே. ஆகவே, வீட்டில் உங்கள் மனைவியுடன், குழந்தைகளுடன், வீட்டுப் பணியாளர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்” என்று
1969, ஜனவரி 27-ஆம் நாள் ‘விடுதலை’ இதழில் எழுதினார்.
இந்திக்கு
எதிராக மாணவர் போராட்டம் 1965-இல் பெருந்தீயாக மாநிலம் முழுவதும் பற்றி எரிந்த போது இராஜாஜி, “English ever, Hindi never” என்று முழங்கினார். “ஆங்கிலம் இந்தியருக்கு சரஸ்வதி வழங்கிய அருள் கொடை” என்று வர்ணித்தவர், “ஆங்கிலம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும்”
என்றும் முழங்கினார். மேலும், இந்த ஒன்றில்தான் தானும் பெரியாரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
கருத்து
முரண்பட்டு அரசியல் செய்த அன்றைய ஆளுமைகளே, ஆங்கிலம் பொதுமொழியாகவும் அலுவல் மொழியாகவும் நம் வீட்டு மொழியாகவும் வளர வேண்டும் என்று மனதார விரும்பினர். ஆனால், மாநிலங்களை ஒன்றிணைத்து உறவுப் பாலம் அமைக்க வேண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரிவினைவாதியாகவே செயல்படுகிறார். மதத்தையும் மொழியையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா.ச.க.,
மானுட உலகிற்கே முரண்பட்ட கருத்தியலையே முன் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்ற 343-இன் 2-வது விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போனது!
அண்மையில்,
டெல்லியில் நடைபெற்ற அசுதோஷ் அக்னிஹோத்ரி என்னும் ஐ.ஏ.எஸ்.
அதிகாரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்; அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “ஆங்கிலம் ஓர் அணை அல்ல; அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல; அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல; அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவியாகும்” என்று
எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மேலும்,
“இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதைப் பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்றும் ஏனென்றால், ஏழைக் குழந்தைகள் கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை என்றும், இன்றைய உலகில் ஆங்கிலம் நம் தாய்மொழியைப் போலவே முக்கியமானது; ஏனெனில், அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்” எனவும் தெரிவித்துள்ளார்.
“நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள்”
என்று குறிப்பிட்ட அமித்ஷா, “வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது”
என்றும், “காலனித்துவ
அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும்” என்றும்,
“அரைகுறையான
அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது”
என்றும் தெரிவித்துள்ளார்.
மொழிகள்
கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் என்று அவர் கருத்துத் தெரிவித்திருப்பது, பா.ச.க.-வின், ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலுக்கு முரண்பட்டிருப்பதை ஏனோ அவர் அறியாமலிருக்கிறார்.
ஒவ்வொரு
மொழியும் அவை பேசப்படும் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் எனப் பேசும் அவர், அந்த மாநிலத்தின் தனிச்சிறப்புக் கொண்ட மொழியை, தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அங்கீகரிப்பதில்லை. ‘மும்மொழிக் கொள்கை’ என்ற போர்வையில் அதைச் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தைக் காலனித்துவத்தின் அடையாளமாகவும், மேலைநாட்டு மொழிகள் அரைகுறையானவைகள் என்று குறிப்பிடுவதும் ஒருபுறம் அவருடைய அறியாமையையும், மறுபுறம் பதவி அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிறது.
வரம்புமீறிய
அதிகாரத்தின் ஆபத்துகள் குறித்து ஆங்கில எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லார்டு ஆக்டன் கூறிய, “அதிகாரம் தவறு செய்ய முனைகிறது; முழுமையான அதிகாரம் முற்றிலும் தவறு செய்கிறது”
என்னும் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆங்கிலம்
இன்று உலகளாவியப் பொதுமொழியாக மாறிவருகிறது; உலகில் அதிகம் கற்கப்படும் இரண்டாவது மொழியாகவும் தாய்மொழி பேசுபவர்களைவிட இரண்டாவது மொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் கொண்டிருப்பவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. 30 நாடுகளிலும், குடியுரிமைக்கான தனி இறையாண்மை கொண்ட 57 நிர்வாகப் பகுதிகளிலும் ஆங்கிலம் பரவியிருப்பதோடு அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், உலக வர்த்தகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, இணையம், கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என எல்லாத் தளங்களிலும்
இன்று ஆங்கிலம் அடிப்படை மொழியாகப் பரிணமித்திருக்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேசக் கூட்டமைப்புகளின்
அதிகாரப்பூர்வ மொழியாகவும் இருக்கின்றது.
2021- ஆம் ஆண்டு
புள்ளிவிவரப்படி உலக அளவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலம் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற மொழியை ‘அடிமைத்தனத்தின் குறியீடு’
என்றும், ‘அரைகுறையான மொழி’ என்றும் குறிப்பிடும் ஒன்றிய உள்துறை அமைச்சரை என்னவென்று கூறுவது?
1959, ஆகஸ்டு 7 அன்று
இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து நிகழ்ந்த நாடாளுமன்ற விவாதத்தில், “கால வரம்பின்றி ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும்; மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஒரு மாற்று மொழியாக இருந்திட வேண்டும். இது தொடர்பாக முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிட வேண்டும்”
என்று நேரு வழங்கிய உறுதிமொழியை, இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் ஏனோ அறியாமலிருக்கிறார்?
இந்தி
மொழி அறியாமல், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கும் இந்தியாவில், இந்தியைக் கட்டாயமாக்கி ஆட்சி மொழியாக்கிடத் துடிக்கிறது பா.ச.க.
அரசு. ஆனால், பல்வேறு மொழி வழி மக்கள் தங்கள் தாய் மொழியோடு ஆங்கிலத்தை அறிந்திருக்கும் சூழலில், அதை இணைப்பு மொழியாக்குவதில் இந்த அரசு எந்த ஒரு முனைப்பும் காட்டுவதில்லை.
‘அகண்ட பாரதத்திற்கு இந்தி அவசியம்’ என்று முழங்கும் இவர், அகண்ட உலகிற்கு ஆங்கிலம் அவசியமானதாகப் பரிணமித்திருப்பதை, ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உழவுத் தொழிலில் நற்பலன் கிடைக்க நாற்று, நாற்றங்கால் இரண்டுமே சிறப்பாக இருக்கவேண்டும். இவற்றுள் ஒன்றின் தன்மை மாறினாலும் நிறைபலன் என்பது எட்டாக்கனியே!
ஒவ்வொரு
பள்ளியும் ஒரு நாற்றங்காலே! அங்கு நற்பயிர்கள் நடப்படவும் அல்லது நடப்பட்ட பயிர்கள் யாவும் நன்கு பராமரிக்கப்படவும், நற்பலன் கொடுக்கும் வகையில் அவை யாவும் பண்படுத்தப்படவும் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், எங்கும் எப்போதும் அது நம் எண்ணம்போல் சீராக, சிறப்பாக அமைவதில்லை.
பள்ளிகளில்
நிகழும் அண்மைக்கால நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து வெளிவரும் பொதுவெளி ஊடகச் செய்திகளும் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. இன்றைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
கடை
திறக்கப்பட்டக் கலாச்சாரச் சீரழிவுகளும், கட்டுப்பாடற்றச் சமூகக் கட்டமைப்புகளும் இன்றைய மாணவர் சமூகத்தைப் பெரிதும் சீரழித்துக் கொண்டிருக்கிறதே என்ற குற்றப்பழியுணர்வு நம்மை நாளும் குடைந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர்களின்
பாலியல் தொந்தரவுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மாணவர் சமுதாயமோ, தங்களுக்குள்ளே சந்திக்கும் கட்டுக்கடங்காத பாலியல் பிரச்சினைகளும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.
கடந்த
வாரம், காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் தொந்தரவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர் எனும் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வது?
உலக
அளவில், 13 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் (150 மில்லியன்) சக மாணவர்களால் பாலியல்
தொல்லைக்கு ஆளானதாகவும், இந்தியாவில் 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 28.9 விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் குறிப்பாக, தென்னிந்தியாவில் 8 முதல் 12 வயதுடைய பெண் குழந்தைகளில் 43.3 விழுக்காட்டினரும், 12 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளில் 22.6 விழுக்காட்டினரும் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாகவும், 56.6 விழுக்காடு குழந்தைகளுக்கு ‘தவறுதலான தொடுதல்’
(Bad touch)
வழியாகப் பாலியல் குற்றங்கள் பள்ளியில் நிகழ்ந்துள்ளதாகவும் ‘யுனிசெப்’
(UNICEF - United Nations International Children\'s Emergency Fund)
எனும் நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இராக்கிங்,
சாதிய உணர்வில் குழுக்களாகச் செயல்படுவது, வன்முறைகளில் ஈடுபடுவது, குடிப்பழக்கம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, மாணவர் ஆசிரியர்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஆசிரியை தன் வகுப்பு மாணவனையே அழைத்துக்கொண்டு தலைமறைவாவது, பிறகு திருமணம் செய்துகொள்வது, ஆண் ஆசிரியர்கள் மாணவியர்மீது கொண்ட பாலியல் சீண்டல்கள், அதைத் தொடரும் வழக்குகள், மாணவ-மாணவியரிடையே மலரும் பாலியக் காதல் உணர்வுகள்... என்ற வரிசையில் இன்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாணவப் பருவத்திலேயே, அதுவும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே வயது வரம்பு மிஞ்சி நிகழ்ந்திருக்கும் இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு யார் பொறுப்பாவது? எங்கே போகிறது இந்த மாணவர் சமுதாயம்?
‘இயற்கையின் படைப்பில் பாலுணர்வு மிகுந்தது மனித இனம் மட்டுமே’ என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள். அது தக்கப் பருவ நிலைகளில் வளர்நிலை காணவேண்டும். காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு எழும் பாலுணர்வுகள், அதுவும் மாணவப் பருவத்திலேயே எழுவது உடல்நலத்தின், மனவளர்ச்சியின், அவர்களுடைய உளவியலின் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
‘சீரான பாலுணர்வே மனநலத்தின் அடையாளம்’
என்கின்றது உளவியல் ஆய்வு. இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை ‘மனநோயாளிகள்’ என்று
கூறுவதைவிட வேறென்னவென்று கூறுவது?
இக்குற்றச்
செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளும், வாழ்வியல் சூழல்களும், பொழுதுபோக்குச் செயல்பாடுகளும், வளரும் உறவு முறைகளும் நுண்ணியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
மனம்
போகும் வழியில் கால் போகக்கூடாது என்பதற்காகத்தான் சமூக வாழ்வின் நாகரிகத் தளத்தில் பல கட்டுப்பாடுகளை, அறநெறி வழிமுறைகளை
நம் முன்னோர்கள் வகுத்துத் தந்தனர். அவையே உயர்ந்த ஒழுக்கநெறிகளாக நம்மைப் புடமிடுகின்றன. அன்று
முதல் இன்றுவரை மனித மனத்தில் எழும் பாலுணர்வுகளை நெறிப்படுத்தும் தளமாக அமைவது நம் குடும்பங்களும் பள்ளிக்கூடங்களுமே!
உடல்
சார்ந்த பாலுணர்வைச் சமூகம் சார்ந்த பண்பாட்டுத் தளத்தில் நெறிப்படுத்தி வாழக் கற்றுக்கொள்பவரே நாகரிகம் அறிந்த, ஆளுமை நிறைந்த மனிதர். நமது குழந்தைகளும் நாகரிகம் அறிந்து, ஆளுமை நிறைந்து வளரவே, வாழவே நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், முறையாகப் பண்படுவதற்கு முன்பே, இன்றைய மாணவப் பருவம் முதிர்ச்சியுற்று, முறைதவறிப் பாலியல் சகதியில் சரிந்து விடுகின்றது. வளரிளம் பருவத்தில் பாலுணர்வு மாற்றங்கள் நிகழ்வது இயற்கை; ஆயினும், பாலுணர்வுச் சிந்தனைகளே மாணவப் பருவத்தின் வாழ்வாகிவிடக்கூடாது.
இன்றைய
தலைமுறைக் குழந்தைகளுக்கு ‘புலனடக்கம்’ என்பதன் பொருள் புரிவதில்லை. ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி வாழும் வாழ்க்கைதான் அறம் நிறைந்தது. எதிலும் வரையறை மீறாமல் வாழ்வதற்குப் பெயர்தான் அறம். மாணவப் பருவத்தில் சீரான பாலுணர்வு கொண்டு, மனநலம் பேணப்பட வேண்டும். மாணவப் பருவம் மட்டுமல்ல, வாழ்வே சிறப்பது மனநலம் பொறுத்தே!
விதை
மண்ணுக்குள் மடிவது வளர்நிலை கண்டு நற்பலன் தரவே! விதையை மூடியிருக்கும் மண், விதையை அழுத்துவதற்கன்று; அதனுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கன்று; மாறாக, விதை பக்குவப்படுவதற்கே! சமூக ஒழுங்குகளும் ஒழுக்கநெறிகளும் நம்மைப் பண்படுத்துவதற்கே அன்றி, பாலுணர்வுகளைச் சிதைப்பதற்கல்ல என்ற புரிதல் வேண்டும். ஒழுங்குமுறை என்பது தண்டவாளம் போல, வாழ்க்கைப் பயணம் இனிதாக அமைய அவை அவசியமானதன்றோ!
வணிகமயமாகிப்போன
இன்றைய வாழ்வியல் தளத்தில் யாவும் ‘நுகர்வு’ என்றே நோக்கம் கொண்டதாகிப் போனதாக மனிதன் நினைக்கின்றான். இன்றைய மாணவப் பருவமும் அதற்கு இரையாகி விட்டது. இழிந்த கலாச்சார வெளிச்சத்தை நோக்கிப் படையெடுத்துப் பாழாகும் விட்டில்பூச்சிகளாகிப் போகின்றனர்.
மாணவச்
செல்வங்களே! நம்மை நாமே முழுமையாக உணரும்போதுதான், மற்றவர்களால் சிறிதேனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவோம்! ஒழுக்கநெறி எனும் வேலிகளைத் தாண்டும்போது வெள்ளாடுகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், பின்னொரு நாளில், எங்கே வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும் என்பதை அவை அறிவதில்லை.
மாணவப்
பருவத்தின் ஆற்றலை உணருங்கள்; நாளைய உலகில் அது உங்களை வானளாவ உயர்த்திவிடும். ஆகவே, “மாணவர்களே! உங்கள் மாணவப் பருவத்தை உங்களிடமிருந்து எடுத்து விடாதீர்கள்” எனும்
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் இப்போது இங்கே நம் நினைவுக்கு வருகின்றன!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உன்னதமான சமூக மாற்றங்களை முன்வைத்து, அதை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் அனைத்தும் இன்று தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் காலநீரோட்டத்தில் கரைந்து செயலற்றுப் போய்விட்டன. கட்சி அரசியலில் இன்று கைம்மாறு கருதாத, சுய இலாபம் தேடாத, தன்னலமற்ற, உயர் மதிப்பீடுகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிப்பது என்பது எளிதான செயலன்று.
ஒருபுறம்,
ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் அமரும் பேராசை கொண்டிருப்பதும், அதே நோக்கத்திலேயே கூட்டணியைக் கட்டமைப்பதும் தமிழ்நாடு அரசியலில் இன்று அன்றாடங்காட்சியாகிப் போனது. மறுபுறமோ, பதவி தரும் சுகங்களுக்கு எதையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்ட மலிவான மனிதர்களின் அதிகார வேட்டைக்களமாக மாறி நிற்கிறது இன்றைய தமிழ்நாடு அரசியல் களம். இங்கே தன்னலமற்ற தலைவர்களையும், பொதுநலம் கொண்ட தொண்டர்களையும் காண்பது அரிது. அது கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் கானல் நீராகிப்போனது.
இந்தியாவில்
வாழும் அனைத்து மக்களுக்கும் சம நீதியும் சம
உரிமையும் சம வாய்ப்பும் தொடர்ந்து
வழங்கப்படவும், எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகளால் ஒன்றிணைந்திருக்கும் இந்திய நாடு, மாநிலங்களின் தனித்துவத்தைக் காக்கவும், பேணி வளர்க்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும், அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், உருவாக்கப்படும் கொள்கைகளும், திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளும் அகற்றப்படவும் கொண்டிருந்த இலக்குகள் எல்லாம் இன்று கேள்விக்குள்ளாகிப் போயின.
‘காலமாற்றத்திற்கேற்ப கோலம் மாறும்; கோல மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை மாறும்’ என்பதுதான் இன்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாகிப் போனது! ஆகவே, ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதே ஒற்றை இலக்காகிப் போனது. அதற்காக எதையும் சமரசம் செய்யும் நிலைக்கு இன்று எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன; கூட்டணி பேரத்திற்குத் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன.
2026-ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் அதிவேகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அண்மையில் ஜூன் 9 அன்று மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, “டெல்லியைப் போலவே 2026-இல் தமிழ்நாட்டிலும் பா.ச.க.
- அ.தி.மு.க.
கூட்டணி ஆட்சி மலரும்” என்றும், “தமிழ்நாட்டில் 2026 சட்ட சபைத் தேர்தல் ஒவ்வொரு பா.ச.க.
தொண்டர்களுக்கும் முக்கியமான களம்” என்றும் கூறியதுடன், “நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என் சிந்தனை தமிழ்நாட்டில்தான் இருக்கும்”
என்றும் தெரிவித்திருக்கிறார்.
“பா.ச.க.வுடன் ஏற்பட்டிருப்பது கூட்டணி மட்டுமே தவிர, கூட்டணி ஆட்சியில்லை” எனவும்,
“இதுவே கட்சியின் நிலைப்பாடு” என்றும்
திரு. எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தினாலும், “தமிழ்நாட்டில் 2026-இல் அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணி அமையும்” என்று அமித்ஷா அறிவித்தது எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்
தொடங்கி, அ.தி.மு.க.வின் மாவட்ட
நிர்வாகிகள் வரை அக்கட்சியில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அமித்ஷாவிடம் திரு. எடப்பாடி பழனிச் சாமி உறுதி ஏதும் கொடுத்திருப்பாரோ?’ என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்
ஐயம் கொள்ளத் தொடங்கினர். பா.ச.க.வுடனான கூட்டணியைக் கூட ஓரளவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் ஒப்புக்கொண்டாலும்,
கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே மாட்டார்கள்.
இருப்பினும்,
“ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்;
பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்
என்பதற்காகப் பங்காளிச் சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படுகிறோம். அதுபோல, தி.மு.க.
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும்” என
அழைப்பு விடுத்திருக்கிறார் டி.டி.வி.
தினகரன்.
ஆயினும்,
“அமித்ஷாவின் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றும்,
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி அவர்கள் எட்டுமுறை தமிழ்நாடு வந்த போதிலும் ஒரு தொகுதியைக் கூட அக்கூட்டணி கைப்பற்றவில்லை; ஆகவே, உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது. அது எந்தவோர் அதிர்வு அலையையும் ஏற்படுத்தாது” என்றும்,
மேலும், “அ.தி.மு.க., பா.ம.க.வைக் கபளீகரம் செய்து, அந்த இடத்தில் பா.ச.க.வைக் கொண்டு வருவதுதான் அமித்ஷாவின் ஒற்றை இலக்கு” என்றும் தி.மு.க.
பொதுச்செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
திரு.
ஆர்.எஸ். பாரதியின் கருத்திற்கு எதிர்வினையாற்றிய பா.ச.க.
தேசிய மகளிர் அணித் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், “அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணி ஏற்பட்டுவிட்டது; அதில் பா.ம.க.வும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் தி.மு.க.வுக்குப் பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவுதான் ஆர்.எஸ். பாரதியின் பேச்சு” என்கிறார். மேலும், அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய
இருப்பதாகவும், அப்போது தி.மு.க.
எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
மண்ணில் குறிப்பாக, இன்றைய சூழலில் எப்படியும் உறுதியாகக் காலூன்றிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பா.ச.க.
கட்சியின் நோக்கத்தை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், “தி.மு.க.
கூட்டணி என்பது இடதுசாரிச் சிந்தனைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிற ஒரு கூட்டணி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மதச்சார்பின்மை என்கிற கருத்துகளில் உடன்பாடு உள்ளவர்களால் மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இணைய முடியும். மதச்சார்பின்மையை முன்னிறுத்துகிற ஓர் அரசியல் கூட்டணி, இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும்”
என உறுதிபடக் கூறியுள்ளார்.
இம்மண்ணினுடைய
தத்துவம், கோட்பாடு, பொதுநலம், சமூக உறவு, வழிபாடு, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என யாவற்றையும் காவி
மயமாக்கத் துடிக்கும் பா.ச.க.
அரசு, எப்படியும் இத்தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்று திட்டம் கொண்டிருக்கிறது. அதற்காகக் கூட்டணி உறவுகள், சமரசப் பேச்சுகள், தொண்டர்கள் சந்திப்பு எனக் களப்பணிகளை முன்னெடுக்கும் பா.ச.க.வுடன் அவர்களின் ஊடகத் தொழில்நுட்பப் பிரிவு திறம்படப் பணியாற்ற முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த ஊடகத் தொழில்நுட்பப் பணிக்குழு, பா.ச.க.வின் சாதனைகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை, கொள்கைகளை, தலைவர்களின் பேச்சுகளை விமர்சித்துப் பதிவிடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே,
எப்படியும் அதிகாரத்தைக் கையில் பெறவேண்டும் என்னும் ஒற்றை நோக்குடன் ஓராயிரம் திட்டங்களோடு தேர்தல் பந்தயத்தில் ஓடத் தயாராகிக் கொண்டிருக்கிறது பா.ச.க.
அரசியல்
கட்சிகளின் தலைமையின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் திட்டம், வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்த முடியாத பணிகளுக்காகக் கிரிமினல் குற்றவாளிகளை அரவணைக்கின்ற திட்டம், முன்னிலையில் இருக்கும் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பல சிறு கட்சிகளை
மறைமுகமாக ஆதரிக்கும் இரகசியக் கூட்டணித் திட்டம், மற்ற கட்சித் தலைவர்கள் பகிரும் எல்லாக் கருத்துகளுக்கும் பொதுத்தளங்களிலும் ஊடகத் தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்கின்ற திட்டம்... எனப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும்,
வாக்குச்சீட்டின் வலிமை அறியாமல், தவறான மனிதர்களை ஆட்சி நாற்காலையில் அமரச் செய்து ஏழ்மையையும் வறுமையையும் பொய்மையையும் ஏமாற்றத்தையும் அரவணைத்துக் கொண்ட பாமர மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது நம் அனைவருடைய கடமை.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழர் வாழ்வும் வாழ்வியலும் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. மரபார்ந்த நம் மண்ணின் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன. காலங்காலமாக நம் மூதாதையர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கட்டிக்காக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அரசியல் அரங்கேற்றத்தால் களவாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தகுந்த தருணம் இதுவே!
பொய்மையும்
போலித்தனமும் நிறைந்த மனிதர்களே புன்னகை முகம் போர்த்தி, அதிகார ஆளுமைகளாய் நம் சமூக வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். உண்மை உறங்காதெனினும், உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்மையை உலாவ விடுகின்றனர். பொய்மையை
மீண்டும் மீண்டும் கூறும்போது, அது உண்மையாகிவிடும் என்ற தவறான எண்ணம் அவர்களின் கருத்தியலாகிப் போனது. ஆகவே, சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் சந்தர்ப்பவாதிகளின் சாகசங்களையே நம்மால் காணமுடிகிறது.
‘பண்பற்றவனாயினும் பணம் படைத்தவன் வார்த்தையே வேதமாகிப் போகிறது’ என்னும் கூற்று பல வேளைகளில் இங்கு,
இன்று உண்மையாகிப் போகிறது. அரசியல் என்னும் நாடக மேடையில் கற்றறிந்தவர்போல் சிலர் இருந்தாலும், அவர்களின் கடைச்சரக்கு மிகவும் மலிவானதாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? இவர்கள் ஆளுகின்றபோது நாம் வாழ்கின்றோம் என்று அங்கலாய்ப்பதைத் தவிர!
ஆயினும்,
உண்மையை நாம் உரக்கக் கூறவேண்டும். பொய்யாமொழி, தமிழ்மறை, உலகப் பொதுமறை எனும் சிறப்புக் கொண்ட திருக்குறள் ஒரு தொன்மையான தமிழ்மொழி அற இலக்கியம் என்பது
உலகறிந்த பேருண்மை.
அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புகளைக் கொண்ட மானுட வாழ்வியல் நூல் அது! மாந்தர்தம் அக வாழ்வில் ச(சு)மூகமாகக் கூடி
வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கும் வாழ்வியல் நூலிது.
வாய்மை,
கருணை, அன்பு, பொறுமை, சுய கட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, நலம், ஒழுக்கவியல், பரத்தமையோடு கூடாமை, கல்லாமை, மது உள்ளிட்ட போதைப்பொருள்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், நட்பு, கூடாநட்பு, கூடா ஒழுக்கங்களை விலக்குதல், தனிநபர் ஒழுக்கம், ஆட்சியர் ஒழுக்கம், அமைச்சர்களின் பண்பு, சமூகநீதி, அரண், போர், கொடியவருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற அரசியல் சமூகக் கருப்பொருளை உள்ளடக்கிய அறநெறிகளை விளக்குவதால், “அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது” என்று ‘இந்திய இலக்கியங்களின் கருத்துக் களஞ்சியம்’
என்னும் நூலில் குறிப்பிடுகிறார் மோகன்லால் எனும் இலக்கிய ஆய்வாளர்.
மதச்சார்பற்ற
தன்மையினாலும், அனைவருக்குமான பொதுஅறங்களைக் கூறுவதாலும் அனைத்து மக்களாலும் பெரிதும் போற்றப்படும் உன்னத இலக்கியமாகத் திருக்குறள் பார்க்கப்படுகிறது. எல்லா நூல்களிலும் காணப்படும் அனைத்துச் சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் பொதுப்படையாகத் திருவள்ளுவர் வழங்கி இருப்பதால் பரிமேலழகர், “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து, எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல்
இவர்க்கு இயல்பு” என்று வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்.
மேலும்,
திருக்குறளின் மேன்மையைக் குறிப்பிடுகையில் “சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து, அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைபட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது” என்கிறார்
‘உலகத் தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் பேராசிரியர் தமிழண்ணல்.
வள்ளுவர்
வழங்கிய திருக்குறள் வாழ்வியல் அறம் பேசும் ஓர் இலக்கண நூல். அறம் அனைவருக்கும் பொதுவானது என்ற சிந்தனையில் அறத்தை மையமாக வைத்தே இந்நூல் இயற்றப்பட்டதால் திருக்குறள் ‘அறம்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள். ஆகவேதான்,
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, “அறவாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான்; வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவை” என்றும்,
“குறள் தமிழ்மொழிக்கு ஓங்கி நிற்கும் ஒரு புகழாரம்”
என்று ஆங்கிலிக்க அருள்பணியாளர் ஜான் இலாசரஸ் என்பவரும், “உலகின் அனைத்துத் தலைசிறந்த ஆராய்ச்சிச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே திருக்குறள்” என்று
அமெரிக்கக் கிறித்தவ அருள்பணியாளர் இம்மான்ஸ் இ. வைட் என்பவரும்
புகழாரம் சூட்டுகின்றனர். “தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்” என்று வர்ணிக்கிறார் பிரெஞ்சு மொழியில் இதனை மொழிபெயர்த்த இ.எஸ். ஏரியல்.
தமிழரின்
இலக்கிய அடையாளமாய், வாழ்வியல் அறம் பேசும் பண்பாட்டுக் களஞ்சியமாய், மானுடச் சமூகத்தின் பொதுமறை பேசும் இலக்கண நூலாய் சிறப்புப் பெற்றிருக்கும் திருக்குறளைச் சனாதனத் தர்மத்தின் வழியில் அடையாளப்படுத்த முயல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி. அண்மையில் சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய்ஞானம்’
என்னும் நூலைத் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின்
பேச்சை அப்படியே மேற்கோள்காட்ட விழைகிறேன்: “உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும்
இராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும் துறவிகளாலும் சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால் உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் ஒன்றுதான்; அது சனாதன தர்மம் மட்டும்தான்! பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; தர்மம் அழிந்தால் நாடு அழிந்து விடும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் எல்லார் மனத்திலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோவில்கள். அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீகத் தேசமாக ஒளிரும். திருக்குறள் ஓர் ஆன்மிகப் புத்தகம்; சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரித்துப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்” (‘தி
இந்து தமிழ் திசை’,
பக். 10) என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.
எப்போதும்
முரண்பட்ட கருத்துகளையே விதைத்துவரும் ஆளுநரின் இப்பேச்சு, இன்று முரண்பாடுகளின் உச்சநிலையை எட்டியிருக்கிறது. நாட்டின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்;
அனைத்து மதங்களின் தர்மமும் ‘சனாதன தர்மம்’ ஒன்றையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பேருண்மை இந்திய ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு அடிப்படையில் மலர்ந்ததாக அல்லாமல் கோவில்களே இத்தகைய உணர்வைத் தருவதாகப் பிதற்றியிருக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என இந்துத்துவா சிந்தனைகளைச்
செலுத்தித் திருவள்ளுவரை ஓர் இந்துத் துறவியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பொதுவெளியில்,
மேடை விழாக்களில் பேசுவதற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் அவருக்கு இத்தகைய சிந்தனை எதார்த்தமாக எழுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆயினும், இத்தகைய மேடைப்பேச்சுகள் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திரிபாகவும் திருடாகவுமே அனைவராலும் பார்க்கப்படும். ஆகவே, இத்தகைய செயல்பாடுகளையும் முரண்பாடுகள் கொண்ட பேச்சுகளையும் ஆளுநர் அவர்கள் தவிர்ப்பது நல்லது.
தமிழ்
சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆய்வாளர்கள் என யாவரும் அவ்வப்போது
ஆளுநரின் முரண்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் அது ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’
இருக்கிறது.
ஆளுநர்
மட்டுமல்ல, தமிழர் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, இலக்கிய வளமையைத் திரித்துப் பேசுவதும் மறுத்துக் கூறுவதும் அன்றாடச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் பலருக்கு இத்தகைய எச்சரிக்கையும் கண்டனமும் அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்று நாம் எண்ணினாலும், அது பல வேளைகளில் “கேட்கச் செவியுள்
ளோர் கேட்கட்டும்” என்றே
நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டியதாக அமைகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒரு சமூகத்தின் உயர் ஒழுக்கங்களின் உண்மையான நெறிகாட்டி கல்வி. அவ்வாறே ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வினை மையம் கொண்ட சிந்தனை, அறம், உண்மை, ஆளுமை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கு, வெற்றி, உயர்வு என்பதற்கான திசைகாட்டியும் கல்வியே! ஆகவேதான், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “கல்வி என்பது உண்மைகளைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; மாறாக, மனத்தைச் சிந்திக்கப் பயிற்றுவிப்பதாகும்” என்கிறார். மனிதர்களின் நற்சிந்தனையும் நற்சொல்லும் நற்செயலுமே அதற்குரிய நல்ல அடையாளங்கள்.
இக்கல்வியே
மனிதனுக்கு அறிவு, திறன்கள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒரு கருவியாக அமைகிறது. இது ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பம், சமூகம் மற்றும் தேசம் குறித்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் பார்வையை விரிவுபடுத்தி உலகைப் பரந்த, விரிந்த விசாலப் பார்வையோடு கண்ணோக்கக் கற்றுத்தருகிறது. நம்மில் படைப்பாற்றலை உருவாக்கி, புதிய உலகைப் படைக்க வழிகாட்டுகிறது.
ஒவ்வொருவருடைய
தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதும், சமூகம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதும் கல்வியே. தனிமனிதருக்கு வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுக்கொடுத்து, சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்துவதும் கல்வியே. சமூகம் வளரவும், நன்கு செழித்தோங்கவும் அடிப்படைக்கூறாக அமைவது கல்வியே! மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற சமூகம் சார்ந்த வாழ்வியல் சூழலுக்கு விடைகாண்பது கல்வியே. படைப்பாற்றலை வளர்த்தெடுத்து, பல்வேறு தொழில் முன்னெடுப்புகளை முன்வைத்து, தொழில்நுட்பங்களை
வார்த்தெடுத்துச் சமூகத்தின் ஏற்றத்திற்கு வழிவகுப்பதும் புதுமைக்கு வித்திடுவதும் கல்வியே.
ஒளிமயமான
எதிர்காலத்தைத் திறப்பதற்கான திறவுகோல் கல்வி; ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை அடையத் தேவையான அறிவையும் திறன்களையும் வழங்குவது கல்வியே! இது சிந்தனையைத் திறக்கும் திறவுகோல்; சிக்கல்களைத் தீர்க்கும் தர்க்கங்களை முன்வைக்கும் திறவுகோல்! கூட்டுணர்வை, பணிப்பகிர்வை, முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்தும் திறவுகோல்; சிறந்த வேலைவாய்ப்புகளைத் தந்து வாழ்வின் வளமான வழியைக் காட்டும் திறவுகோல்!
கல்வியே
வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளம். வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதற்கும் நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கும் ஆற்றலை அளிப்பது கல்வியே. கற்றலால் சமூக இடைவெளி குறைந்து சமமான சமத்துவச் சகோதரத்துவ உலகைக் காண வழிவகுப்பதும் இதுவே.
எளிமையாக
வாழ்வது, நேர்மையாக நடப்பது, தூய்மையாகச் செயல்படுவது, பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பது இவைதாம் நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழ்க்கையின் இலக்கணங்கள். அவ்வாறே, கல்வி ஒருவரின் முகம், முகவரி தரும் சமூக அடையாளமாக இன்று உயர்ந்து நிற்கிறது. ‘கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது கல்வியின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. கற்பதன் மூலம் ஒருவரின் உள்ளார்ந்த திறமைகள் வளர்க்கப்படுகின்றன என்பதையும் கடந்து, அங்கே ஆளுமை புடமிடப்படுகிறது, சமூகக் கடமைகள் உணர்த்தப்படுகின்றன என்பதே கற்றலில் பொதிந்திருக்கும் பேருண்மை. இதுவே, இன்று கற்றலின் இலக்கணம்!
ஆயினும்,
அளவுகடந்த ஆசை, குறுக்குவழி, மனம்போன போக்கு, மலிவான சிந்தனை, சுயநல மனநிலை என உலகைச் சீரழிக்கும்
நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் கல்வியின் மேன்மை சிதைந்துவிட்டதோ, சீரழிந்து விட்டதோ என்றே நம்மில் கேள்வி எழுகிறது. இவ்வேளையில், கல்வி குறித்த சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை என்பதுதான் பொய்மையின் நிழல் படாத உண்மை.
‘நீ படித்து என்னவாகப்
போகிறாய்?’ என்ற கேள்விக்கு, அன்று சமூகச் சிந்தனை கொண்ட வாழ்வியல் அடையாளப்படுத்தப்பட்டது. ‘மருத்துவராக, ஆசிரியராக, காவல்பணியாளராக, இராணுவ வீரராக, அரசு ஊழியராகப் போகிறேன்…...’
என்பதில் சமூகக் கடமையும் பொறுப்புணர்வும் தொக்கி நின்றது. ஆனால், இன்று கல்வியின் நோக்கமே ‘பணம்-பொருள் ஈட்டுவது’
- அதுவும் விரைவாகவே, குறுகிய காலத்தில் அதிகமாக ஈட்டுவது என்றாகிப் போனது. இந்த மனநிலையை இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் யார் தந்தது? எது தந்தது? மற்ற உயிர்களிடமிருந்து மனிதனைப் பிரித்திருப்பது சிந்தனையும் சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் கல்வியும் என்பதைப் பல வேளைகளில் நாம்
மறந்துவிடுகிறோம்.
வாழ்க்கையின்
அடிப்படை நோக்கம் மகிழ்ந்திருப்பது. இந்த மகிழ்வுக்கான வழியை உணர்த்துவது கல்வியே! மலரைப்போல் மகிழ்ந்திருக்கவும், பழுத்த மரத்தைப்போல் பிறருக்கு மகிழ்ச்சி கொடுக்கவும் நம்மைப் பண்படுத்துவது கல்வியே! இக்கல்வி யாவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதில் அரசும் இச்சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே. கல்வி உரிமைச் சட்டம் - 2009 வாயிலாக 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக அரசு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கதே.
‘கடைக்கோடி மனிதனுக்கும் அடிப்படைக்கல்வி’ என்னும்
இலக்கு, வணிகக் கலாச்சார வாழ்வியல் சிந்தனையால் இன்று வியாபாரப் பொருளாகிவிட்டது. ‘பணம் படைத்தோர் பட்டம் பெறுகின்றனர்; பண மில்லாதோர் பரிதவிக்கின்றனர்’ என்ற
சூழல் வளமான இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உயர்கல்வி என்பது பலருக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதும் வேதனையளிக்கிறது.
2022-ஆம் ஆண்டு
இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, இந்தியாவில் 1,168 பல்கலைக்கழகங்களும், 45,473
கல்லூரிகளும் அமைந்திருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் ஏறத்தாழ 4.33 கோடி மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் ஏழை, பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, ஆதிக்குடி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
கல்வி,
கல்வியின் தரம், கற்றல் வழிமுறை, பாடத்திட்டம், மொழிக்கொள்கை, ஆசிரியர் நியமனம், துணைவேந்தர்கள் நியமனம், கல்வியில் கலக்கும் காவி, தனியார் பள்ளிகளின்மீது திணிக்கப்படும் வரைமுறையற்ற சட்டம்-ஒழுங்குகள் எனும் அன்றாடச் செய்திகள் கல்வி குறித்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சீரான எண்ண ஓட்டங்களை, சிறப்பான சிந்தனைகளை, வளமான வழிகாட்டுதலை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான கல்வியியல் திட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
உண்மையை
ஒதுக்கும்போது, நம் விடியலுக்கான கூறுகள் முடங்கிப்போகின்றன; விடுதலைப் பயணம் முடிந்துபோகிறது. இன்றைய காவிச்சிந்தனையால் கல்வியியல் முறை சிதையுறும் வேளையில் நாளைய உலகின் எதார்த்த நிலைகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற, சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மேலும்,
என் மாநிலம், என் மக்கள், என் இனம் என்னும் கூறுகளால், வட மாநிலங்களில் இன்று
நுழைவுத்தேர்வுகள் முதல் அரசுப் பணியாளர் தேர்வுகள் வரை நடைபெறுகின்ற வரைமுறையற்ற குற்றச்சூழல்கள் இந்திய நாட்டில் எல்லாருக்குமான கல்விவாய்ப்பு, எல்லாருக்குமான வேலைவாய்ப்பு, சமத்துவம், சகோதரத்துவம், எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்னும் பல்வேறு கூறுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவுப் பரிமாற்றம் மேற்கொள்ளும் கற்றல், கல்விமுறை, இன்று சுயநலம், வெறுப்பு, பகை, சாதியம், இனம், அரசியல், கட்சி எனும் பல கூறுகளால் சிதைந்து வருவதால் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொறாமையும் போட்டியும் வன்மமும் வன்முறையுமே கடத்தப்படுகின்றன. கல்வியின், கல்விக்கூடங்களின் நோக்கம் அதுவல்ல; கல்வி என்பது இருள் விலக்கும் ஒளிச்சுடர்! தீமையை, தீயவையை அகற்றும் சிற்பக்கூடம்; அல்லவை நீக்கி நல்லவைப் பயக்கும் ஆய்வுக்கூடம்.
தனிநபரின்
நலமான வாழ்வையும், சமூகத்தின் வளமான வாழ்வையும் தந்திடும் கல்வி என்னும் சமூகத் திறவுகோல் எல்லாருடைய கரங்களிலும் கிடைக்கவும், அது அடிப்படை உரிமை என்பதை உணர்த்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
கல்வி
என்னும் திறவுகோல் யாவர் கையிலும் கிடைக்கட்டும்; சமூகம் மாண்புடன் மலரட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
பகல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும்... என்ற பதங்கள் கடந்த இரு வாரங்களாக உலகளவில் ஊடகத் தலைப்புச் செய்திகளாயின.
தெற்கு
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பகல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் நாள், 26 பேரை உயிர்ப்பலி கொண்ட பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு, அண்மைக்காலங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மிகவும் கொடூரமானது என்றே கணிக்கப்படுகிறது. இதுவரை நடந்திராத வகையில் பெண்கள், குழந்தைகளின் முன்னிலையில் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதும், கண்முன்னே தம் கணவரை இழந்த மனைவியரின் கண்ணீர் கதறலும் நாட்டையே உலுக்கியிருந்தன.
இக்கொடுஞ்செயலின்
வேதனையின் வெளிப்பாடாகத்தான் “பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது; கோழைத்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவர்; பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும்வரை இந்த அரசு ஓயாது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்தார்.
இப்பயங்கரவாதத்
தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்கும் இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உலக நாடுகள் பேராதரவு அளித்ததும், தேசியப் புலனாய்வு முகமையின் (national Investigation
Agency - NIA) பல்வேறு
குழுக்கள் களமிறக்கப்பட்டு ஆதாரங்களைத் திரட்டிய விதமும் பாராட்டத்தக்கவை. இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பு, எதிரிகளின் சுவடுகளைத் துடைத்தெறியும் வீரச்செயலாக எழுந்ததுதான் ‘ஆப்ரேஷன் சிந்தூர்.’
வரலாறு
இங்கு மீள்பார்வை செய்து பார்க்கப்பட வேண்டும்! இந்தியா-பாகிஸ்தான் உறவு தொப்புள்கொடி உறவாக இருந்தாலும், பாகிஸ்தானில் வேரூன்றி வரும் பயங்கரவாதம், எல்லை தாண்டி வளரும் நச்சுக்கொடியாகவே படர்கின்றது; அது இன்றும் தொடர்கின்றது. பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பதற்குப் பல சாட்சியங்கள் இருந்தாலும்,
அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப்பும், பிலாவல் புட்டோவும் வெளிப்படையாகவே “எங்களது அரசு பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது” என்று
தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவேதான், “பாகிஸ்தான் மூர்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டது” என்கிறார்
நம் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்.
காஷ்மீரில்
அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பள்ளிகள், கல்லூரிகள் துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில், உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சனநாயகம் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நேரத்தில், மக்களின் வருவாய் பெருகிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி உறுதிசெய்யப்படும்; தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் சதிகாரர்களுக்கும் மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்” எனச்
சூளுரைத்த நாட்டின் பிரதமர் மோடி, ‘ஒற்றுமையும் 140 கோடி மக்களின் ஒருமைப்பாடுமே மிகப்பெரிய பலம்’ எனத் தெரிவித்திருந்தார்.
நாட்டையே
பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
பயங்கரவாதத்திற்கு
எதிராக இந்தியா மேற்கொண்ட இந்த எதிர்வினையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாததும், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தாததும், இராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பயங்கரவாதிகளின் தளங்களை மட்டுமே தகர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரோஷி ஆகிய இரு பெண் அதிகாரிகள் இத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியிருப்பது நாம் இன்னும் பெருமைப்படக்கூடியதே!
‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கையில்
இந்திய விமானப்படையின் பங்களிப்பு திறன்மிக்கதாகக் கணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையைக் கடக்காமலேயே அந்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் வல்லமையுடன் இந்தியப் போர் விமானங்கள் செயல்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டையும், நாம் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பதையும் உலகிற்கு நாம் உணர்த்தியிருக்கிறோம்.
மே
7-ஆம் தேதி தொடங்கிய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’
பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்படி கடந்த 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஆனால், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இப்போரைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது மற்றொரு பேசுபொருளாகியிருக்கிறது.
“தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது; அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்தது. அதன் பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலனை செய்தது. ஆயினும், இந்தச் சண்டை நிறுத்தம் தற்காலிகமானது. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கும்”
என்கிறார் நம் பிரதமர்.
அவ்வாறே,
‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதுவரை இந்தியா-அமெரிக்கா இடையிலான எந்த ஒரு விவாதத்திலும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என ஒன்றிய அரசு
தெரிவிக்கிறது. மேலும் “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவிற்கோ, அந்நாட்டு அதிபருக்கோ எந்தப் பங்குமில்லை” என்கிறார்
நம் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.
இவ்வாறாக,
உலக நாடுகளின் பார்வை நம்மீது இருக்கும் இச்சூழலில், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக மீண்டும் நம் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க 1994-இல் நாடாளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை அரசு மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.
மேலும்,
இந்தியாவின்மீது பாகிஸ்தான் கொண்டிருக்கும் தொடர் வன்மத்தை அது மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் ஆக்கிரமிப்புகளிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும். காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதையும் எல்லைகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும் இனி பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறே,
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் அடியோடு விட்டுவிட வேண்டும் என்று உலக நாடுகள் விரும்பும் வேளையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கையின்
மூலம் இலஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத
அமைப்புகளின் முகாம்கள் தகர்க்கப்பட்ட சூழலில், மீண்டும் அவற்றைக் கட்டமைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
“இந்தப் பயங்கரவாதத் தாக்குதலானது தேசப் பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளின் விளைவாக இருக்கலாம்” என்று
காங்கிரஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் சந்தேகிக்கும் வேளையில், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவுமே பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், “இந்தியாவின் பாதுகாப்புக் குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணம்” என்னும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் தவிர்க்க இயலாது!
இந்நிலையில்,
பயங்கரவாதச் செயல்பாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பிற நாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும், தீவிரவாதிகளுக்குத் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவி செய்வது... எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே
தீவிரவாதத்திற்கு
ஆதரவாகப் பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்கவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இருப்பினும்,
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் தலையீட்டை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? பாகிஸ்தானுடன் நடு நிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காகச் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா அடிபணிந்திருக்கிறதா? போன்ற கேள்விகள் மக்கள் மனத்தில் எழுகின்றன.
ஆகவே,
இந்தியா-பாகிஸ்தான் மோதலால் உலக அரங்கில் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ விவாதப்
பொருளான சூழலில், தாக்குதல் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவது கருத்துப் பேதமாகவே பார்க்கப்படுகிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்