உன்னதமான சமூக மாற்றங்களை முன்வைத்து, அதை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் அனைத்தும் இன்று தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் காலநீரோட்டத்தில் கரைந்து செயலற்றுப் போய்விட்டன. கட்சி அரசியலில் இன்று கைம்மாறு கருதாத, சுய இலாபம் தேடாத, தன்னலமற்ற, உயர் மதிப்பீடுகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிப்பது என்பது எளிதான செயலன்று.
ஒருபுறம்,
ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் அமரும் பேராசை கொண்டிருப்பதும், அதே நோக்கத்திலேயே கூட்டணியைக் கட்டமைப்பதும் தமிழ்நாடு அரசியலில் இன்று அன்றாடங்காட்சியாகிப் போனது. மறுபுறமோ, பதவி தரும் சுகங்களுக்கு எதையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்ட மலிவான மனிதர்களின் அதிகார வேட்டைக்களமாக மாறி நிற்கிறது இன்றைய தமிழ்நாடு அரசியல் களம். இங்கே தன்னலமற்ற தலைவர்களையும், பொதுநலம் கொண்ட தொண்டர்களையும் காண்பது அரிது. அது கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் கானல் நீராகிப்போனது.
இந்தியாவில்
வாழும் அனைத்து மக்களுக்கும் சம நீதியும் சம
உரிமையும் சம வாய்ப்பும் தொடர்ந்து
வழங்கப்படவும், எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகளால் ஒன்றிணைந்திருக்கும் இந்திய நாடு, மாநிலங்களின் தனித்துவத்தைக் காக்கவும், பேணி வளர்க்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும், அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், உருவாக்கப்படும் கொள்கைகளும், திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளும் அகற்றப்படவும் கொண்டிருந்த இலக்குகள் எல்லாம் இன்று கேள்விக்குள்ளாகிப் போயின.
‘காலமாற்றத்திற்கேற்ப கோலம் மாறும்; கோல மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை மாறும்’ என்பதுதான் இன்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாகிப் போனது! ஆகவே, ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதே ஒற்றை இலக்காகிப் போனது. அதற்காக எதையும் சமரசம் செய்யும் நிலைக்கு இன்று எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன; கூட்டணி பேரத்திற்குத் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன.
2026-ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் அதிவேகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அண்மையில் ஜூன் 9 அன்று மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, “டெல்லியைப் போலவே 2026-இல் தமிழ்நாட்டிலும் பா.ச.க.
- அ.தி.மு.க.
கூட்டணி ஆட்சி மலரும்” என்றும், “தமிழ்நாட்டில் 2026 சட்ட சபைத் தேர்தல் ஒவ்வொரு பா.ச.க.
தொண்டர்களுக்கும் முக்கியமான களம்” என்றும் கூறியதுடன், “நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என் சிந்தனை தமிழ்நாட்டில்தான் இருக்கும்”
என்றும் தெரிவித்திருக்கிறார்.
“பா.ச.க.வுடன் ஏற்பட்டிருப்பது கூட்டணி மட்டுமே தவிர, கூட்டணி ஆட்சியில்லை” எனவும்,
“இதுவே கட்சியின் நிலைப்பாடு” என்றும்
திரு. எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தினாலும், “தமிழ்நாட்டில் 2026-இல் அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணி அமையும்” என்று அமித்ஷா அறிவித்தது எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்
தொடங்கி, அ.தி.மு.க.வின் மாவட்ட
நிர்வாகிகள் வரை அக்கட்சியில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அமித்ஷாவிடம் திரு. எடப்பாடி பழனிச் சாமி உறுதி ஏதும் கொடுத்திருப்பாரோ?’ என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்
ஐயம் கொள்ளத் தொடங்கினர். பா.ச.க.வுடனான கூட்டணியைக் கூட ஓரளவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் ஒப்புக்கொண்டாலும்,
கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே மாட்டார்கள்.
இருப்பினும்,
“ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்;
பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்
என்பதற்காகப் பங்காளிச் சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படுகிறோம். அதுபோல, தி.மு.க.
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும்” என
அழைப்பு விடுத்திருக்கிறார் டி.டி.வி.
தினகரன்.
ஆயினும்,
“அமித்ஷாவின் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றும்,
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி அவர்கள் எட்டுமுறை தமிழ்நாடு வந்த போதிலும் ஒரு தொகுதியைக் கூட அக்கூட்டணி கைப்பற்றவில்லை; ஆகவே, உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது. அது எந்தவோர் அதிர்வு அலையையும் ஏற்படுத்தாது” என்றும்,
மேலும், “அ.தி.மு.க., பா.ம.க.வைக் கபளீகரம் செய்து, அந்த இடத்தில் பா.ச.க.வைக் கொண்டு வருவதுதான் அமித்ஷாவின் ஒற்றை இலக்கு” என்றும் தி.மு.க.
பொதுச்செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
திரு.
ஆர்.எஸ். பாரதியின் கருத்திற்கு எதிர்வினையாற்றிய பா.ச.க.
தேசிய மகளிர் அணித் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், “அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணி ஏற்பட்டுவிட்டது; அதில் பா.ம.க.வும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் தி.மு.க.வுக்குப் பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவுதான் ஆர்.எஸ். பாரதியின் பேச்சு” என்கிறார். மேலும், அ.தி.மு.க. - பா.ச.க.
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய
இருப்பதாகவும், அப்போது தி.மு.க.
எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
மண்ணில் குறிப்பாக, இன்றைய சூழலில் எப்படியும் உறுதியாகக் காலூன்றிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பா.ச.க.
கட்சியின் நோக்கத்தை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், “தி.மு.க.
கூட்டணி என்பது இடதுசாரிச் சிந்தனைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிற ஒரு கூட்டணி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மதச்சார்பின்மை என்கிற கருத்துகளில் உடன்பாடு உள்ளவர்களால் மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இணைய முடியும். மதச்சார்பின்மையை முன்னிறுத்துகிற ஓர் அரசியல் கூட்டணி, இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும்”
என உறுதிபடக் கூறியுள்ளார்.
இம்மண்ணினுடைய
தத்துவம், கோட்பாடு, பொதுநலம், சமூக உறவு, வழிபாடு, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என யாவற்றையும் காவி
மயமாக்கத் துடிக்கும் பா.ச.க.
அரசு, எப்படியும் இத்தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்று திட்டம் கொண்டிருக்கிறது. அதற்காகக் கூட்டணி உறவுகள், சமரசப் பேச்சுகள், தொண்டர்கள் சந்திப்பு எனக் களப்பணிகளை முன்னெடுக்கும் பா.ச.க.வுடன் அவர்களின் ஊடகத் தொழில்நுட்பப் பிரிவு திறம்படப் பணியாற்ற முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த ஊடகத் தொழில்நுட்பப் பணிக்குழு, பா.ச.க.வின் சாதனைகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை, கொள்கைகளை, தலைவர்களின் பேச்சுகளை விமர்சித்துப் பதிவிடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே,
எப்படியும் அதிகாரத்தைக் கையில் பெறவேண்டும் என்னும் ஒற்றை நோக்குடன் ஓராயிரம் திட்டங்களோடு தேர்தல் பந்தயத்தில் ஓடத் தயாராகிக் கொண்டிருக்கிறது பா.ச.க.
அரசியல்
கட்சிகளின் தலைமையின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் திட்டம், வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்த முடியாத பணிகளுக்காகக் கிரிமினல் குற்றவாளிகளை அரவணைக்கின்ற திட்டம், முன்னிலையில் இருக்கும் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பல சிறு கட்சிகளை
மறைமுகமாக ஆதரிக்கும் இரகசியக் கூட்டணித் திட்டம், மற்ற கட்சித் தலைவர்கள் பகிரும் எல்லாக் கருத்துகளுக்கும் பொதுத்தளங்களிலும் ஊடகத் தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்கின்ற திட்டம்... எனப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும்,
வாக்குச்சீட்டின் வலிமை அறியாமல், தவறான மனிதர்களை ஆட்சி நாற்காலையில் அமரச் செய்து ஏழ்மையையும் வறுமையையும் பொய்மையையும் ஏமாற்றத்தையும் அரவணைத்துக் கொண்ட பாமர மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது நம் அனைவருடைய கடமை.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழர் வாழ்வும் வாழ்வியலும் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. மரபார்ந்த நம் மண்ணின் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன. காலங்காலமாக நம் மூதாதையர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கட்டிக்காக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அரசியல் அரங்கேற்றத்தால் களவாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தகுந்த தருணம் இதுவே!
பொய்மையும்
போலித்தனமும் நிறைந்த மனிதர்களே புன்னகை முகம் போர்த்தி, அதிகார ஆளுமைகளாய் நம் சமூக வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். உண்மை உறங்காதெனினும், உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்மையை உலாவ விடுகின்றனர். பொய்மையை
மீண்டும் மீண்டும் கூறும்போது, அது உண்மையாகிவிடும் என்ற தவறான எண்ணம் அவர்களின் கருத்தியலாகிப் போனது. ஆகவே, சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் சந்தர்ப்பவாதிகளின் சாகசங்களையே நம்மால் காணமுடிகிறது.
‘பண்பற்றவனாயினும் பணம் படைத்தவன் வார்த்தையே வேதமாகிப் போகிறது’ என்னும் கூற்று பல வேளைகளில் இங்கு,
இன்று உண்மையாகிப் போகிறது. அரசியல் என்னும் நாடக மேடையில் கற்றறிந்தவர்போல் சிலர் இருந்தாலும், அவர்களின் கடைச்சரக்கு மிகவும் மலிவானதாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? இவர்கள் ஆளுகின்றபோது நாம் வாழ்கின்றோம் என்று அங்கலாய்ப்பதைத் தவிர!
ஆயினும்,
உண்மையை நாம் உரக்கக் கூறவேண்டும். பொய்யாமொழி, தமிழ்மறை, உலகப் பொதுமறை எனும் சிறப்புக் கொண்ட திருக்குறள் ஒரு தொன்மையான தமிழ்மொழி அற இலக்கியம் என்பது
உலகறிந்த பேருண்மை.
அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புகளைக் கொண்ட மானுட வாழ்வியல் நூல் அது! மாந்தர்தம் அக வாழ்வில் ச(சு)மூகமாகக் கூடி
வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கும் வாழ்வியல் நூலிது.
வாய்மை,
கருணை, அன்பு, பொறுமை, சுய கட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, நலம், ஒழுக்கவியல், பரத்தமையோடு கூடாமை, கல்லாமை, மது உள்ளிட்ட போதைப்பொருள்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், நட்பு, கூடாநட்பு, கூடா ஒழுக்கங்களை விலக்குதல், தனிநபர் ஒழுக்கம், ஆட்சியர் ஒழுக்கம், அமைச்சர்களின் பண்பு, சமூகநீதி, அரண், போர், கொடியவருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற அரசியல் சமூகக் கருப்பொருளை உள்ளடக்கிய அறநெறிகளை விளக்குவதால், “அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது” என்று ‘இந்திய இலக்கியங்களின் கருத்துக் களஞ்சியம்’
என்னும் நூலில் குறிப்பிடுகிறார் மோகன்லால் எனும் இலக்கிய ஆய்வாளர்.
மதச்சார்பற்ற
தன்மையினாலும், அனைவருக்குமான பொதுஅறங்களைக் கூறுவதாலும் அனைத்து மக்களாலும் பெரிதும் போற்றப்படும் உன்னத இலக்கியமாகத் திருக்குறள் பார்க்கப்படுகிறது. எல்லா நூல்களிலும் காணப்படும் அனைத்துச் சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் பொதுப்படையாகத் திருவள்ளுவர் வழங்கி இருப்பதால் பரிமேலழகர், “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து, எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல்
இவர்க்கு இயல்பு” என்று வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்.
மேலும்,
திருக்குறளின் மேன்மையைக் குறிப்பிடுகையில் “சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து, அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைபட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது” என்கிறார்
‘உலகத் தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் பேராசிரியர் தமிழண்ணல்.
வள்ளுவர்
வழங்கிய திருக்குறள் வாழ்வியல் அறம் பேசும் ஓர் இலக்கண நூல். அறம் அனைவருக்கும் பொதுவானது என்ற சிந்தனையில் அறத்தை மையமாக வைத்தே இந்நூல் இயற்றப்பட்டதால் திருக்குறள் ‘அறம்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள். ஆகவேதான்,
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, “அறவாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான்; வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவை” என்றும்,
“குறள் தமிழ்மொழிக்கு ஓங்கி நிற்கும் ஒரு புகழாரம்”
என்று ஆங்கிலிக்க அருள்பணியாளர் ஜான் இலாசரஸ் என்பவரும், “உலகின் அனைத்துத் தலைசிறந்த ஆராய்ச்சிச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே திருக்குறள்” என்று
அமெரிக்கக் கிறித்தவ அருள்பணியாளர் இம்மான்ஸ் இ. வைட் என்பவரும்
புகழாரம் சூட்டுகின்றனர். “தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்” என்று வர்ணிக்கிறார் பிரெஞ்சு மொழியில் இதனை மொழிபெயர்த்த இ.எஸ். ஏரியல்.
தமிழரின்
இலக்கிய அடையாளமாய், வாழ்வியல் அறம் பேசும் பண்பாட்டுக் களஞ்சியமாய், மானுடச் சமூகத்தின் பொதுமறை பேசும் இலக்கண நூலாய் சிறப்புப் பெற்றிருக்கும் திருக்குறளைச் சனாதனத் தர்மத்தின் வழியில் அடையாளப்படுத்த முயல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி. அண்மையில் சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய்ஞானம்’
என்னும் நூலைத் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின்
பேச்சை அப்படியே மேற்கோள்காட்ட விழைகிறேன்: “உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும்
இராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும் துறவிகளாலும் சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால் உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் ஒன்றுதான்; அது சனாதன தர்மம் மட்டும்தான்! பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; தர்மம் அழிந்தால் நாடு அழிந்து விடும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் எல்லார் மனத்திலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோவில்கள். அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீகத் தேசமாக ஒளிரும். திருக்குறள் ஓர் ஆன்மிகப் புத்தகம்; சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரித்துப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்” (‘தி
இந்து தமிழ் திசை’,
பக். 10) என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.
எப்போதும்
முரண்பட்ட கருத்துகளையே விதைத்துவரும் ஆளுநரின் இப்பேச்சு, இன்று முரண்பாடுகளின் உச்சநிலையை எட்டியிருக்கிறது. நாட்டின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்;
அனைத்து மதங்களின் தர்மமும் ‘சனாதன தர்மம்’ ஒன்றையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பேருண்மை இந்திய ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு அடிப்படையில் மலர்ந்ததாக அல்லாமல் கோவில்களே இத்தகைய உணர்வைத் தருவதாகப் பிதற்றியிருக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என இந்துத்துவா சிந்தனைகளைச்
செலுத்தித் திருவள்ளுவரை ஓர் இந்துத் துறவியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பொதுவெளியில்,
மேடை விழாக்களில் பேசுவதற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் அவருக்கு இத்தகைய சிந்தனை எதார்த்தமாக எழுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆயினும், இத்தகைய மேடைப்பேச்சுகள் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திரிபாகவும் திருடாகவுமே அனைவராலும் பார்க்கப்படும். ஆகவே, இத்தகைய செயல்பாடுகளையும் முரண்பாடுகள் கொண்ட பேச்சுகளையும் ஆளுநர் அவர்கள் தவிர்ப்பது நல்லது.
தமிழ்
சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆய்வாளர்கள் என யாவரும் அவ்வப்போது
ஆளுநரின் முரண்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் அது ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’
இருக்கிறது.
ஆளுநர்
மட்டுமல்ல, தமிழர் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, இலக்கிய வளமையைத் திரித்துப் பேசுவதும் மறுத்துக் கூறுவதும் அன்றாடச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் பலருக்கு இத்தகைய எச்சரிக்கையும் கண்டனமும் அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்று நாம் எண்ணினாலும், அது பல வேளைகளில் “கேட்கச் செவியுள்
ளோர் கேட்கட்டும்” என்றே
நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டியதாக அமைகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒரு சமூகத்தின் உயர் ஒழுக்கங்களின் உண்மையான நெறிகாட்டி கல்வி. அவ்வாறே ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வினை மையம் கொண்ட சிந்தனை, அறம், உண்மை, ஆளுமை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கு, வெற்றி, உயர்வு என்பதற்கான திசைகாட்டியும் கல்வியே! ஆகவேதான், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “கல்வி என்பது உண்மைகளைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; மாறாக, மனத்தைச் சிந்திக்கப் பயிற்றுவிப்பதாகும்” என்கிறார். மனிதர்களின் நற்சிந்தனையும் நற்சொல்லும் நற்செயலுமே அதற்குரிய நல்ல அடையாளங்கள்.
இக்கல்வியே
மனிதனுக்கு அறிவு, திறன்கள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒரு கருவியாக அமைகிறது. இது ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பம், சமூகம் மற்றும் தேசம் குறித்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் பார்வையை விரிவுபடுத்தி உலகைப் பரந்த, விரிந்த விசாலப் பார்வையோடு கண்ணோக்கக் கற்றுத்தருகிறது. நம்மில் படைப்பாற்றலை உருவாக்கி, புதிய உலகைப் படைக்க வழிகாட்டுகிறது.
ஒவ்வொருவருடைய
தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதும், சமூகம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதும் கல்வியே. தனிமனிதருக்கு வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுக்கொடுத்து, சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்துவதும் கல்வியே. சமூகம் வளரவும், நன்கு செழித்தோங்கவும் அடிப்படைக்கூறாக அமைவது கல்வியே! மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற சமூகம் சார்ந்த வாழ்வியல் சூழலுக்கு விடைகாண்பது கல்வியே. படைப்பாற்றலை வளர்த்தெடுத்து, பல்வேறு தொழில் முன்னெடுப்புகளை முன்வைத்து, தொழில்நுட்பங்களை
வார்த்தெடுத்துச் சமூகத்தின் ஏற்றத்திற்கு வழிவகுப்பதும் புதுமைக்கு வித்திடுவதும் கல்வியே.
ஒளிமயமான
எதிர்காலத்தைத் திறப்பதற்கான திறவுகோல் கல்வி; ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை அடையத் தேவையான அறிவையும் திறன்களையும் வழங்குவது கல்வியே! இது சிந்தனையைத் திறக்கும் திறவுகோல்; சிக்கல்களைத் தீர்க்கும் தர்க்கங்களை முன்வைக்கும் திறவுகோல்! கூட்டுணர்வை, பணிப்பகிர்வை, முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்தும் திறவுகோல்; சிறந்த வேலைவாய்ப்புகளைத் தந்து வாழ்வின் வளமான வழியைக் காட்டும் திறவுகோல்!
கல்வியே
வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளம். வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதற்கும் நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கும் ஆற்றலை அளிப்பது கல்வியே. கற்றலால் சமூக இடைவெளி குறைந்து சமமான சமத்துவச் சகோதரத்துவ உலகைக் காண வழிவகுப்பதும் இதுவே.
எளிமையாக
வாழ்வது, நேர்மையாக நடப்பது, தூய்மையாகச் செயல்படுவது, பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பது இவைதாம் நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழ்க்கையின் இலக்கணங்கள். அவ்வாறே, கல்வி ஒருவரின் முகம், முகவரி தரும் சமூக அடையாளமாக இன்று உயர்ந்து நிற்கிறது. ‘கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது கல்வியின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. கற்பதன் மூலம் ஒருவரின் உள்ளார்ந்த திறமைகள் வளர்க்கப்படுகின்றன என்பதையும் கடந்து, அங்கே ஆளுமை புடமிடப்படுகிறது, சமூகக் கடமைகள் உணர்த்தப்படுகின்றன என்பதே கற்றலில் பொதிந்திருக்கும் பேருண்மை. இதுவே, இன்று கற்றலின் இலக்கணம்!
ஆயினும்,
அளவுகடந்த ஆசை, குறுக்குவழி, மனம்போன போக்கு, மலிவான சிந்தனை, சுயநல மனநிலை என உலகைச் சீரழிக்கும்
நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் கல்வியின் மேன்மை சிதைந்துவிட்டதோ, சீரழிந்து விட்டதோ என்றே நம்மில் கேள்வி எழுகிறது. இவ்வேளையில், கல்வி குறித்த சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை என்பதுதான் பொய்மையின் நிழல் படாத உண்மை.
‘நீ படித்து என்னவாகப்
போகிறாய்?’ என்ற கேள்விக்கு, அன்று சமூகச் சிந்தனை கொண்ட வாழ்வியல் அடையாளப்படுத்தப்பட்டது. ‘மருத்துவராக, ஆசிரியராக, காவல்பணியாளராக, இராணுவ வீரராக, அரசு ஊழியராகப் போகிறேன்…...’
என்பதில் சமூகக் கடமையும் பொறுப்புணர்வும் தொக்கி நின்றது. ஆனால், இன்று கல்வியின் நோக்கமே ‘பணம்-பொருள் ஈட்டுவது’
- அதுவும் விரைவாகவே, குறுகிய காலத்தில் அதிகமாக ஈட்டுவது என்றாகிப் போனது. இந்த மனநிலையை இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் யார் தந்தது? எது தந்தது? மற்ற உயிர்களிடமிருந்து மனிதனைப் பிரித்திருப்பது சிந்தனையும் சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் கல்வியும் என்பதைப் பல வேளைகளில் நாம்
மறந்துவிடுகிறோம்.
வாழ்க்கையின்
அடிப்படை நோக்கம் மகிழ்ந்திருப்பது. இந்த மகிழ்வுக்கான வழியை உணர்த்துவது கல்வியே! மலரைப்போல் மகிழ்ந்திருக்கவும், பழுத்த மரத்தைப்போல் பிறருக்கு மகிழ்ச்சி கொடுக்கவும் நம்மைப் பண்படுத்துவது கல்வியே! இக்கல்வி யாவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதில் அரசும் இச்சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே. கல்வி உரிமைச் சட்டம் - 2009 வாயிலாக 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக அரசு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கதே.
‘கடைக்கோடி மனிதனுக்கும் அடிப்படைக்கல்வி’ என்னும்
இலக்கு, வணிகக் கலாச்சார வாழ்வியல் சிந்தனையால் இன்று வியாபாரப் பொருளாகிவிட்டது. ‘பணம் படைத்தோர் பட்டம் பெறுகின்றனர்; பண மில்லாதோர் பரிதவிக்கின்றனர்’ என்ற
சூழல் வளமான இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உயர்கல்வி என்பது பலருக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதும் வேதனையளிக்கிறது.
2022-ஆம் ஆண்டு
இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, இந்தியாவில் 1,168 பல்கலைக்கழகங்களும், 45,473
கல்லூரிகளும் அமைந்திருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் ஏறத்தாழ 4.33 கோடி மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் ஏழை, பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, ஆதிக்குடி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
கல்வி,
கல்வியின் தரம், கற்றல் வழிமுறை, பாடத்திட்டம், மொழிக்கொள்கை, ஆசிரியர் நியமனம், துணைவேந்தர்கள் நியமனம், கல்வியில் கலக்கும் காவி, தனியார் பள்ளிகளின்மீது திணிக்கப்படும் வரைமுறையற்ற சட்டம்-ஒழுங்குகள் எனும் அன்றாடச் செய்திகள் கல்வி குறித்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சீரான எண்ண ஓட்டங்களை, சிறப்பான சிந்தனைகளை, வளமான வழிகாட்டுதலை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான கல்வியியல் திட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
உண்மையை
ஒதுக்கும்போது, நம் விடியலுக்கான கூறுகள் முடங்கிப்போகின்றன; விடுதலைப் பயணம் முடிந்துபோகிறது. இன்றைய காவிச்சிந்தனையால் கல்வியியல் முறை சிதையுறும் வேளையில் நாளைய உலகின் எதார்த்த நிலைகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற, சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மேலும்,
என் மாநிலம், என் மக்கள், என் இனம் என்னும் கூறுகளால், வட மாநிலங்களில் இன்று
நுழைவுத்தேர்வுகள் முதல் அரசுப் பணியாளர் தேர்வுகள் வரை நடைபெறுகின்ற வரைமுறையற்ற குற்றச்சூழல்கள் இந்திய நாட்டில் எல்லாருக்குமான கல்விவாய்ப்பு, எல்லாருக்குமான வேலைவாய்ப்பு, சமத்துவம், சகோதரத்துவம், எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்னும் பல்வேறு கூறுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவுப் பரிமாற்றம் மேற்கொள்ளும் கற்றல், கல்விமுறை, இன்று சுயநலம், வெறுப்பு, பகை, சாதியம், இனம், அரசியல், கட்சி எனும் பல கூறுகளால் சிதைந்து வருவதால் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொறாமையும் போட்டியும் வன்மமும் வன்முறையுமே கடத்தப்படுகின்றன. கல்வியின், கல்விக்கூடங்களின் நோக்கம் அதுவல்ல; கல்வி என்பது இருள் விலக்கும் ஒளிச்சுடர்! தீமையை, தீயவையை அகற்றும் சிற்பக்கூடம்; அல்லவை நீக்கி நல்லவைப் பயக்கும் ஆய்வுக்கூடம்.
தனிநபரின்
நலமான வாழ்வையும், சமூகத்தின் வளமான வாழ்வையும் தந்திடும் கல்வி என்னும் சமூகத் திறவுகோல் எல்லாருடைய கரங்களிலும் கிடைக்கவும், அது அடிப்படை உரிமை என்பதை உணர்த்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
கல்வி
என்னும் திறவுகோல் யாவர் கையிலும் கிடைக்கட்டும்; சமூகம் மாண்புடன் மலரட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
பகல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும்... என்ற பதங்கள் கடந்த இரு வாரங்களாக உலகளவில் ஊடகத் தலைப்புச் செய்திகளாயின.
தெற்கு
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பகல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் நாள், 26 பேரை உயிர்ப்பலி கொண்ட பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு, அண்மைக்காலங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மிகவும் கொடூரமானது என்றே கணிக்கப்படுகிறது. இதுவரை நடந்திராத வகையில் பெண்கள், குழந்தைகளின் முன்னிலையில் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதும், கண்முன்னே தம் கணவரை இழந்த மனைவியரின் கண்ணீர் கதறலும் நாட்டையே உலுக்கியிருந்தன.
இக்கொடுஞ்செயலின்
வேதனையின் வெளிப்பாடாகத்தான் “பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது; கோழைத்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவர்; பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும்வரை இந்த அரசு ஓயாது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்தார்.
இப்பயங்கரவாதத்
தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்கும் இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உலக நாடுகள் பேராதரவு அளித்ததும், தேசியப் புலனாய்வு முகமையின் (national Investigation
Agency - NIA) பல்வேறு
குழுக்கள் களமிறக்கப்பட்டு ஆதாரங்களைத் திரட்டிய விதமும் பாராட்டத்தக்கவை. இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பு, எதிரிகளின் சுவடுகளைத் துடைத்தெறியும் வீரச்செயலாக எழுந்ததுதான் ‘ஆப்ரேஷன் சிந்தூர்.’
வரலாறு
இங்கு மீள்பார்வை செய்து பார்க்கப்பட வேண்டும்! இந்தியா-பாகிஸ்தான் உறவு தொப்புள்கொடி உறவாக இருந்தாலும், பாகிஸ்தானில் வேரூன்றி வரும் பயங்கரவாதம், எல்லை தாண்டி வளரும் நச்சுக்கொடியாகவே படர்கின்றது; அது இன்றும் தொடர்கின்றது. பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பதற்குப் பல சாட்சியங்கள் இருந்தாலும்,
அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப்பும், பிலாவல் புட்டோவும் வெளிப்படையாகவே “எங்களது அரசு பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது” என்று
தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவேதான், “பாகிஸ்தான் மூர்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டது” என்கிறார்
நம் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்.
காஷ்மீரில்
அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பள்ளிகள், கல்லூரிகள் துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில், உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சனநாயகம் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நேரத்தில், மக்களின் வருவாய் பெருகிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி உறுதிசெய்யப்படும்; தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் சதிகாரர்களுக்கும் மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்” எனச்
சூளுரைத்த நாட்டின் பிரதமர் மோடி, ‘ஒற்றுமையும் 140 கோடி மக்களின் ஒருமைப்பாடுமே மிகப்பெரிய பலம்’ எனத் தெரிவித்திருந்தார்.
நாட்டையே
பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
பயங்கரவாதத்திற்கு
எதிராக இந்தியா மேற்கொண்ட இந்த எதிர்வினையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாததும், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தாததும், இராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பயங்கரவாதிகளின் தளங்களை மட்டுமே தகர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரோஷி ஆகிய இரு பெண் அதிகாரிகள் இத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியிருப்பது நாம் இன்னும் பெருமைப்படக்கூடியதே!
‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கையில்
இந்திய விமானப்படையின் பங்களிப்பு திறன்மிக்கதாகக் கணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையைக் கடக்காமலேயே அந்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் வல்லமையுடன் இந்தியப் போர் விமானங்கள் செயல்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டையும், நாம் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பதையும் உலகிற்கு நாம் உணர்த்தியிருக்கிறோம்.
மே
7-ஆம் தேதி தொடங்கிய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’
பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்படி கடந்த 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஆனால், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இப்போரைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது மற்றொரு பேசுபொருளாகியிருக்கிறது.
“தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது; அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்தது. அதன் பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலனை செய்தது. ஆயினும், இந்தச் சண்டை நிறுத்தம் தற்காலிகமானது. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கும்”
என்கிறார் நம் பிரதமர்.
அவ்வாறே,
‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதுவரை இந்தியா-அமெரிக்கா இடையிலான எந்த ஒரு விவாதத்திலும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என ஒன்றிய அரசு
தெரிவிக்கிறது. மேலும் “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவிற்கோ, அந்நாட்டு அதிபருக்கோ எந்தப் பங்குமில்லை” என்கிறார்
நம் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.
இவ்வாறாக,
உலக நாடுகளின் பார்வை நம்மீது இருக்கும் இச்சூழலில், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக மீண்டும் நம் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க 1994-இல் நாடாளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை அரசு மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.
மேலும்,
இந்தியாவின்மீது பாகிஸ்தான் கொண்டிருக்கும் தொடர் வன்மத்தை அது மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் ஆக்கிரமிப்புகளிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும். காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதையும் எல்லைகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும் இனி பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறே,
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் அடியோடு விட்டுவிட வேண்டும் என்று உலக நாடுகள் விரும்பும் வேளையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’
நடவடிக்கையின்
மூலம் இலஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத
அமைப்புகளின் முகாம்கள் தகர்க்கப்பட்ட சூழலில், மீண்டும் அவற்றைக் கட்டமைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
“இந்தப் பயங்கரவாதத் தாக்குதலானது தேசப் பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளின் விளைவாக இருக்கலாம்” என்று
காங்கிரஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் சந்தேகிக்கும் வேளையில், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவுமே பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், “இந்தியாவின் பாதுகாப்புக் குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணம்” என்னும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் தவிர்க்க இயலாது!
இந்நிலையில்,
பயங்கரவாதச் செயல்பாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பிற நாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும், தீவிரவாதிகளுக்குத் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவி செய்வது... எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே
தீவிரவாதத்திற்கு
ஆதரவாகப் பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்கவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இருப்பினும்,
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் தலையீட்டை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? பாகிஸ்தானுடன் நடு நிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காகச் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா அடிபணிந்திருக்கிறதா? போன்ற கேள்விகள் மக்கள் மனத்தில் எழுகின்றன.
ஆகவே,
இந்தியா-பாகிஸ்தான் மோதலால் உலக அரங்கில் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ விவாதப்
பொருளான சூழலில், தாக்குதல் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவது கருத்துப் பேதமாகவே பார்க்கப்படுகிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
2025, ஏப்ரல் 30-ஆம் நாள் இந்திய அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு நாள். ‘நடைபெறவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்’ என்ற முக்கிய அறிவிப்பை ஒன்றிய பா.ச.க. அரசு வெளியிட்டிருக்கிறது.
காங்கிரஸ்,
தி.மு.க. உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வேளையில், இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றமும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்து
ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த இந்திய மரபு,
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் நின்றுபோனது. 2021-ஆம் ஆண்டுக்கான இப்பணிகள், 2020 ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இந்தப் பணி தள்ளி வைக்கப்பட்டு, இன்றுவரை அது தொடங்கப்படாமலே கடந்து வருகிறது.
இந்திய
நாட்டின் சாபக்கேடு சாதிய அமைப்பு. ஒரே இயல்புள்ள தனித்த ஒரு கூட்டத்தின் உருவாக்கமே இந்தச் சாதி என்னும் ‘சதி.’ சமூகத்தைச்
சீரழிக்க வந்த இந்தச் சாதிய அழுக்கு, சனாதனத் தர்மத்தின் சாதுரியமான நகர்வுகளால் சாபமாகவே இந்திய மண்ணில் தொடர்கிறது.
இங்கு
‘சாதிக்குச் சாவில்லையோ?’ என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் எண்ணத்திலும் தொக்கி நிற்கிறது; இங்கே வர்க்க வேற்றுமையில் சாதிச் சாக்கடை சமூகமெங்கும் நாற்றமடிக்கிறது. சாதிய ஒழிப்பு முன்னெடுப்புகள் நிகழ்ந்தாலும், முற்றிலும் அதை ஒழிப்பது இங்குச் சாத்தியமானதாகத் தென்படவில்லை!
சாதிய
வேற்றுமையால் மனித மாண்பு அடியோடு சூறையாடப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனையளிக்கிறது. துடைத்து எறியப்பட வேண்டிய இந்த வர்க்கக் கட்டமைப்பு, தூக்கி நிறுத்தப்படுவதை என்னவென்று சொல்வது?
ஆயினும்,
இந்த மண்ணில் தந்திரக் கூட்டத்தின் சந்ததியினர் ஒருபுறம் எல்லாம் பெற்று இன்புற்று இருப்பதையும், மறுபுறம் ஏதுமின்றி ஒரு கூட்டம் ஏமாந்து நிற்பதையும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வது?
அடிமை
இந்தியாவில் விடியல் விரவி வரும் வேளையில், சாமானிய மக்கள் கண் விழிக்கும் கணப்பொழுதில், ஒரு சாரார் மட்டும் விழிகளை விசாலமாக்கிக் கொண்டார்கள். பதவிகளை அவர்கள் பறித்துக் கொண்டதால், ஒடுக்கப்பட்டவரில் ஒருவர் கூட அரியணையை அலங்கரிக்க இயலவில்லை. அத்தகைய சூழலில் எழுந்ததுதான் சாதிய அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்த சிந்தனைகள்.
எந்த
நாட்டிலும் கல்வித் துறையிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஆனால், இங்கு மட்டும் அது நிகழ்கிறது; காரணம், இங்குதானே வர்ணாசிரமம் வடிவெடுத்து நிற்கிறது; சனாதனம் சந்தி
வரை வீறு கொண்டு விளைகிறது! மதம், அமைப்பு, தத்துவம், சட்டம், சமூகம் எனப் பல நிலைகளில் இங்குதானே
சமூகம் ‘மாற்றம்’ காண முடியாத வகையில் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது!
இந்திய
அரசியல், சமூகச் சூழலில் ஒன்றை மட்டும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்னும் இலக்கை அடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இங்கு இருந்ததில்லை. பலர் எளிதாக உரிமைகளைப் பெற்று மகிழும்போது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய குழுவாக ஒருசாரார் வஞ்சிக்கப்பட்டிருப்பது காலத்தின் கோலம்!
இந்தத்
தடைகள் நீக்க முடியாதவை அல்ல; ஆனால், இவை நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதையும், அவற்றை நியாயப்படுத்தப் பெரும்பான்மை கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன
என்பதையும் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த
முரண்களைத் தகர்க்க, அரசியல் தளங்களில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு சமூகக் குரல்களின் ஒட்டுமொத்த எதிரொலிப்பால் இன்று சாத்தியமானதுதான் இந்தச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு.
“இன்றைய சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கான, சமூக நீதிக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வர்க்க முரண்பாட்டின் அடித்தட்டில் இருக்கும் ஒரு சமூகம் மேன்மை அடைவதற்கும், சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அச்சமூகம் தன்னிறைவு அடைவதற்கும் இது காலத்தின் கட்டாயமாகிறது. காலத்திற்கேற்ற சமூக நீதிக்கான வரையறை இன்று மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டும். இது எப்போது நிகழும்? அது சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையுமா?” என்று (அக்டோபர் 20, 2024) ஆசிரியர் பக்கத்தில் யாம் முன்பு கேள்வி எழுப்பியிருந்ததை இங்கு நினைவுகூர்கின்றோம்.
சாதிவாரி
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் முன்வைத்தபோது “மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்” என்று
குற்றம் சாட்டிய ஒன்றிய முதன்மை அமைச்சர், இப்போது அதே கோரிக்கைக்குப் பணிந்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ “மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவு நலிவடைந்த அனைத்துப் பிரிவு மக்களின் நிலையை மேம்படுத்த உதவும்” என்ற பேருண்மையை இன்றுதான் கண்டுணர்ந்திருப்பார்போல!
“தரமான அறிவிப்பாக இது இருந்தபோதும் இதனை வரவேற்பதுடன், இதைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்த வேண்டும்”
என எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.
வழக்கம்போல
எதிர்க்கட்சிகளை வாயடைக்க இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கும் ஒன்றிய அரசு, இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? என்பதற்கான விளக்கம் எதையும் குறிப்பிடவில்லை. ஆயினும், இதன் பின்புலத்தை உணர்ந்த தமிழ்நாடு முதல்வர் “இது தற்செயலான அறிவிப்பு அல்ல; மாறாக, பீகார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகத் தற்போது இதை அறிவித்திருக்கிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட ஒன்றிய அரசு, அனைத்திலும் தோல்வி கண்ட பிறகு இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது” என்று
குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுவரை
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளின்
அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது.
மிகவும்
நலிவுற்றவரைத் தூக்கிவிடும்
வகையில் இன்று சில மாற்றங்களை மேற்கொண்டு, சாதிய அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் மலர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு, முறையான திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூக நீதியை அடைவதற்கும் இன்றியமையாததாக அமைகிறது. இத்தகைய புள்ளி விவரங்களால் மட்டுமே சரியான நீதியை நிலைநாட்ட முடியும். அநீதிக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டுமல்லவா! இப்பேருண்மையை உணர்ந்த ஐயன் வள்ளுவர்,
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்’
(குறள் 948)
என்கிறார்.
அதாவது, நோயைக் குறிகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிந்து, நோயைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
சமூகக்
கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியிருக்கும் சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 246-இன் கீழ் ஒன்றிய அரசே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரம் கொண்டிருப்பதால், ஒன்றிய அரசு இதனை ‘விரைவில்’
முன்னெடுக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்” என்கிறார் நம் கடவுள் (எரே 3:15).
புதிய
திருத்தந்தை 14-ஆம் லியோ (LEO XIV, 14-ஆம்
சிங்கராயர்) இறைவன் தந்த உன்னதக் கொடை! மக்களின் மனங்களை உள்ளார்ந்து அறிகின்ற இறைவன், காலத்தின் அறிகுறிகளைக் கணித்துத் தந்திருக்கும் ஒப்பற்ற கொடை இவர்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு, புதிய திருத்தந்தையை இறைவன் நமக்கு வழங்கிட வேண்டுமெனத் திரு அவை இறைவேண்டலில் ஒன்றித்திருந்தது. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்களின் கூடுகைத் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் வெண்புகைக்காக ஆவலோடு காத்திருந்தார்கள்.
இரண்டு
நாள்கள், ஏறக்குறைய 48 மணி நேரம் கடந்த வேளையில், மே மாதம் 8-ஆம்
நாள் உரோமை நேரப்படி மாலை 6:08 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9:38) ‘புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார்’ என்னும்
அறிவிப்பைத் தெரியப்படுத்தும் விதமாக, சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெண் புகை வெளிவந்தது. பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலிக்க, மணியோசை வானவர் வாழ்த்தை இசைத்தன. பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஒன்றுகூடி, புதிய திருத்தந்தையின் திருமுகத் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.
வத்திக்கான்
மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பார்தி அவர்கள் “Annuntio vobis gudium: Habemus Papam!” - அதாவது “நான் உங்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை அறிவிக்கிறேன்; நாம் ஒரு புதிய திருத்தந்தையைப் பெற்றிருக்கிறோம்” என்று
கூறியதுடன், “கர்தினால் இராபர்ட் பிரான்சிஸ் பிரவோஸ்ட் 267-வது திருத்தந்தையாகக் கிடைத்திருக்கிறார்; அவர் 14-ஆம் லியோ என்ற பெயரிலே அழைக்கப்படுவார்” என்றும்
அறிவிக்கிறார். திருச்சிலுவை முன்வர, திருத்தந்தை அம்மாடத்திற்கு அழைத்து வரப்படுகிறார். மக்களின் கரவொலியும் ஆரவாரமும் விண்ணை முட்டுவதும், அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி பொங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாகிறது!
இருகரம்
உயர்த்தி மக்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை ‘Urbi et Orbi’ (ஊர்பி
எத் ஓர்பி) எனும் ஊருக்கும் உலகிற்குமான ஆசிரை வழங்குகிறார். “உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்!” என்ற ஆசிரோடு தன் உரையைத் தொடங்கிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ, “கடவுளின் மந்தையாம் மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்லாயனாம் உயிர்த்த இயேசு கிறிஸ்து கூறிய முதல் வார்த்தைகள் இவை. இந்த அமைதியின் வாழ்த்து, உங்கள் இதயங்களில் நுழைந்து உங்கள் குடும்பங்களுக்கும் உலகின் எல்லாத் திசைகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
“இது உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவின் அமைதி; ஆயுதங்களைக் களையும் அமைதி; தாழ்ச்சி மற்றும் விடாமுயற்சி உள்ள அமைதி; நம் அனைவரையும் அளவின்றி அன்பு செய்யும் கடவுளிடமிருந்து வரும் அமைதி” என்று உயிர்ப்பு நாளில் அமைதியின் பரிணாமங்களை எடுத்துக் கூறிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நினைவுகூர்ந்து, “அவருடைய குரல் இன்று நமது காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது; அதே ஆசிரை நானும் இன்று உங்களுக்கு வழங்குகிறேன்” என்றும்
மக்களைத் திடப்படுத்தினார்.
“கடவுள் நம்மை அன்பு செய்கிறார்; நம் அனைவரையும் அன்பு செய்கிறார்; தீமை வெற்றி பெறாது; நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்; எனவே, பயமின்றிக் கடவுளுடன் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவோம்; நாம் கிறிஸ்துவின் சீடர்கள். கிறிஸ்து நம்முன் செல்கிறார்; உலகத்திற்கு அவருடைய ஒளி தேவை; கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக மனிதகுலத்திற்கு அவருடைய ஒளி தேவை. உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டவும், ஒரே மக்களாக அனைவரும் ஒன்றிணைந்திருக்கவும் ஒருவருக்கொருவர் உதவுவோம்”
என்னும் அவருடைய செய்தி மறைந்த திருத்தந்தையின் எண்ண ஓட்டங்களையும் அவருடைய உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தன.
“உங்களுடன் நான் ஒரு கிறித்தவன்; உங்களுக்காக ஓர் ஆயர்” என்று கூறும் அகுஸ்தினாரின் சபையைச் சார்ந்த அவரது மகன் என்று தன்னைச் சிறப்பான வகையில் அடையாளப்படுத்திக் கொண்ட புதிய திருத்தந்தையின் பிறப்பும் வாழ்வும் பணியும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பெயரும் உலகிற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கின்றன.
அமெரிக்க
ஐக்கிய நாட்டிலே, இலினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ பட்டணத்தில் பிறந்த இவர், புனித அகுஸ்தினார் துறவற சபையில் தன்னை இணைத்துக்கொண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, இறையழைத்தல் ஊக்குநராக, பேராசிரிய ராகப் பயணித்து, வழிகாட்டியாகப் பரிணமித்து, அச்சபையின் தலைவராக வழிநடத்தி, பின் பெரு நாட்டில் சிக்லாயோ மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர்.
அமெரிக்க
நாட்டில் வளமையான பிறப்பும், தூய அகுஸ்தினார் சபையில் பெற்ற ஆழமான ஆன்மிகமும், பெரு நாட்டில் மக்களின் வறுமை வாழ்வில் கண்ட அனுபவங்களும் இவரைப் பெரிதும் புடமிட்டிருக்கின்றன என்பது இவருடைய முதல் உரையில் எதிரொலிக்கிறது.
தன்னுடைய
இயற்பெயரிலேயே தன் முன்னவர் பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தாங்கி வரும் இவர், அவரோடு பயணித்துப் பெற்ற பணி அனுபவங்கள், சமூகச் சிந்தனைகள், திரு அவைக்கான முன்னெடுப்புகள் யாவும் குன்றாமல் குறையாமல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றாக இணைந்து பயணிப்பது, உடனிருப்பது, உரையாடல் மேற்கொள்வது, அனைவருக்கும் அன்பைக் கொடுப்பது, உலகிற்கு அமைதியை வழங்குவது என்னும் சிந்தனை ஓட்டங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே நினைவுபடுத்துகின்றன.
கத்தோலிக்கத்
திரு அவையின் இறையியல், தத்துவவியல், சமூகவியல், அரசியல் தளங்களுக்குத் தூய அகுஸ்தினார், தூய தாமஸ் அக்குவினாஸ் ஆகியோரின் இறையியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கட்டமைத்த மாபெரும் மனிதர் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ. தனது 93 ஆண்டுகால மண்ணக வாழ்வில், 25 ஆண்டுகள் திருத்தந்தையாக நீண்ட காலம் பணிசெய்து, மறுமலர்ச்சி கண்டவர் அவர். தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களுக்கான நியாயமான ஊதியம், பணித்தளப் பாதுகாப்பு என்பது பற்றி தன்னுடைய ‘Rerum Novarum’ (1891) என்னும் திருத்தூது மடல் வழியாகக் குரல் எழுப்பி பணியாளர்களின் உரிமைக்காக நிலைப்பாடு எடுத்தவர். ஆகவே, அவர் ‘பணியாளர்களின் திருத்தந்தை’ (Pope of the workers) என்றே அழைக்கப்பட்டார். மேலும், ‘திருச்செபமாலையின் திருத்தந்தை’ (Rosary pope), ‘சமூகத்
திருத்தந்தை’ (social
pope) என்று பெயர் பெற்ற திருத்தந்தையின் வரிசையில் தன்னுடைய திருத்தந்தைக்கான நாமத்தைப் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.
திருத்தந்தை
14-ஆம் லியோவின் பணிக்காலம் நம்பிக்கையாளர்களின் ஆன்மிகத்தை ஆழப்படுத்தும், திரு அவையின் செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும் என்றே நம்புகிறோம். இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல நமது இறைவேண்டல் அவருக்கு அன்றாடம் அவசியமாகிறது. நோபல் பரிசு பெற்ற தாகூர், கீதாஞ்சலியில் குறிப்பிடுவதுபோல...
‘இறைவா....
வலுவற்ற
இந்தப் பாத்திரத்தைத்
துடைத்துத்
துடைத்து
உன்
புதிய உயிர்க்காற்றை
அதனுள்
நிரப்புவதில் நீ இன்புறுகிறாய்!
இந்தச்
சின்னஞ்சிறு மூங்கில் குழலுடன்
காடு
மலைகளெல்லாம் சுற்றித் திரிந்து
என்றென்றைக்கும்
புதுமையான இசை வெள்ளத்தை அதனுள் பரவவிடுகிறாய்!
எல்லையற்ற,
அளவற்ற உன் பரிசுகள்
என்
சிறு கைகளை நிறைக்கின்றன!
காலங்காலமாய்
உன் பரிசுகள்
பொழியப்பட்டே
வந்தாலும்,
இன்னும்
சிறிது இடம்
இந்தக்
கைகளில் மீதமாகவே இருக்கிறது!’
என்ற
இறைவேண்டலைப்போல திருத்தந்தையின் கரங்களை இறைவன் வலுப்படுத்தவும், இறை ஆசி நிறைவாக வழங்கிடவும், உடல் உள்ள நலன் தந்திடவும் இக்காலச்சூழலில் துணிவுடன் தெளிவுடன் திரு அவையை முன்னெடுத்துச் செல்லவும் அவருக்காக நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்திடுவோம்!
நீடூழி வாழ்க
திருத்தந்தையே!
Viva papa!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்