என் இனிய‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!
‘நம் வாழ்வு’ வார இதழை ஞானத் தேன்கூடு என்பேன்! இம்மானுடத்தின் சமூகம்-அரசியல்-ஆன்மிகம் மற்றும் வாழ்வியலின் பல்வேறு தளங்களில் மலர்ந்த மலர்களிலிருந்து எடுத்து வரப்பட்ட ஞானத்தேன், சமூகத்தின் நீதித்தேன், அரசியல் அவலங்களைச் சுட்டிக்காட்டும் அறத்தேன்... என அனைத்தும் ஒன்றுசேர்ந்த
ஞானத் தேன்கூட்டை உங்கள் கைகளில் நீங்கள் தாங்கியிருக்கிறீர்கள். இது இறைப்பற்றுக்கான ஞானத்தை ஊட்டுகிறது; அறவழிக்கான மானுட மதிப்பீட்டைக் கூறுகிறது; சமூக நீதிக்கான வழிகளைக் காட்டுகிறது; புதிய சமுதாயம் படைக்க புதுப்பாதை வகுக்கிறது! தொடரும் இந்த அமுதப் பரிமாறுதலில், ஆனந்த உபசரிப்பில், இது தேனாகவே தென்படுகிறது.
பல
நூல் படித்துப் பெற்றக் கல்வியை, உயிர் ஆற்றல் கொண்டதாக வைத்திடவே வாசிக்கவும் யோசிக்கவும் அதன்பின் யாசிக்கவும் நம் முன்னோர்கள் வழிகாட்டினர். இன்று அதற்கெல்லாம் நேரமில்லை! பல நூல்களை, கட்டுரைகளை,
செய்திகளை, தரவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமில்லை என்பதைவிட, நமக்கு நேரமில்லை என்பதுதான் சிலருக்கு எதார்த்தம், பலருக்குச் சாதகமான பதில்.
பல
அறநெறி நூல்கள், இலக்கியங்கள், சமயப் புனித நூல்கள், சமூக-அரசியல் கட்டுரைகள் என யாவற்றிலிருந்தும் வடித்தெடுத்து, பிழிந்து
சாறாக்கி அமுதமெனக் கொடுக்கின்றபோது அருந்த நாம் மறுப்போமோ?
‘நம் வாழ்வு’
- ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்’ என்னும்
இலட்சிய வேட்கையோடு அதன் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து, புதுப்பொலிவு பெறும் இக்காலச் சூழலில், பெரும் எண்ணிக்கையில் வாசகர்கள் கூடுவதும் ஆதரவு அளிப்பதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! உங்கள் பேராதரவிற்கு மிக்க நன்றி!
50 ஆண்டுகள்
வீறுநடைபோடும் ‘நம் வாழ்வு’ என்னும் இவ்விதழ், சமூகத்தொடர்புக் கருவிகள் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் எழுந்த சிந்தனை மறுமலர்ச்சியின் கனி என்றால் அது மிகையாகாது. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் இவ்வேளையில், திருச்சங்கத்தின் வழிகாட்டுதலில் திரு அவை நாளுக்கு நாள் புடமிடப்படுகிறது; வளர்ச்சிநிலை அடைகிறது; காலத்தின் அறிகுறிகளைத் தன்வயப்படுத்தி மாற்றம் காண்கிறது என்ற சிந்தனையின் நீட்சியாக ‘நம் வாழ்வும்’
அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
“வியப்புக்குரிய பல தொழில்நுட்பங்களை மனித ஆற்றலால்
கடவுளின் உதவியோடு நாம் கண்டுபிடித்திருக்கிறோம்; அவற்றுள், மனித உள்ளத்தோடும்
மானுட வாழ்வியலோடும் நெருங்கிய தொடர்புள்ள செய்திகளையும் கருத்துகளையும் வழிமுறைகளையும் மிக எளிதாக மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய புதிய வழிகளைத் தாய்த் திரு அவை ஏற்று தனிப்பட்ட அக்கறையோடு கூர்ந்து கவனித்து வருகிறது”
(Inter Mirifica, 1) என்கிறது
திருச்சங்க ஏடு. மேலும், “முதலில் பொறுப்புணர்வு மிக்க அச்சு வெளியீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; கிறித்தவ உணர்வில் வாசகர்களை வளரச் செய்ய உண்மையான கத்தோலிக்க அச்சுத்துறையை நிறுவி வளர்க்க வேண்டும்; இயற்கை நெறிக்கும் கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் இயைந்தவாறு பொதுமக்களின் கருத்துகளை உள்வாங்கி, உருவாக்கி, உறுதிப்படுத்தி வளர்ப்பதோடு, திரு அவைச் செய்திகளை வழங்கி அவற்றிற்கு ஏற்ற விளக்கமும் வழங்கப்பட வேண்டும்; கிறித்தவக் கண்ணோட்டத்தோடு அவையனைத்தும் கணிக்கப்பட வேண்டும்...” எனவும் வழிகாட்டுகிறது அதே திருச்சங்க ஏடு (எண். 14).
இக்கருத்துகளை
நன்கு உள்வாங்கிய ஆயர் பெருமக்கள் ‘நம் வாழ்வு’ வார இதழின் பிறப்பு நாளில் ஆசி வழங்கியபோது, ‘இது வளர்ந்து நாளடைவில் கத்தோலிக்க இறைச்சமூகத்தின் அன்றாட நாளிதழாக மலர வேண்டும்’
என்றே ஆசி வழங்கியுள்ளனர். 50 ஆண்டுகால நமது கனவு இன்று எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் ‘மின்னஞ்சல் நாளிதழாக’
நனவாகியிருக்கிறது.
இச்சூழலில்,
‘செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை
அறிந்து செயல்’
(குறள் 637)
எனும்
ஐயன் வள்ளுவரின் வாக்கே எம் நினைவுக்கு வருகிறது. அதாவது, நூலறிவு கொண்டு பல செயல்களைச் செய்ய
அறிந்த போதிலும், இயற்கையின் வழியறிந்து, உலகத்தின் நடைமுறைகளையும் கணித்து அதனோடு பொருந்திச் செயல்பட வேண்டும் என்கிறார்.
வாழ்வை
நெறிப்படுத்துவதற்கும்
முறைப்படுத்துவதற்கும்
சரிசெய்வதற்கும் தேவைப்படும் அற்புதமான இறை-மறைச் சிந்தனைகளை, சமூக-அரசியல்-வாழ்வியல் தளத்தில் உரசிப்பார்த்து நம்மை வளப்படுத்தும் ‘நம் வாழ்வு’ வார இதழ் உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, மாவட்டங்கள், மறைமாவட்டச் சூழல்கள் என அனைத்துத் தளங்களிலிருந்தும்
செய்திகளைச் சுமந்து மின்னஞ்சலாக, சமூக வலைத்தளங்களில் உங்கள் இல்லம் நோக்கி வலம் வந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து வரவிருக்கிறது!
செயல்களின்
பிறப்பிடம் நம்
‘எண்ணம்’ என்பார்கள்.
எண்ணங்களே எல்லாச் செயல்களுக்கும் மூல காரணமாக அமைகின்றன. எண்ணங்கள் உயர்ந்தும் சிறந்தும் அமைகின்றபோது சாதனைகள் பல சாத்தியமாகின்றன. இலக்கை அடைவதற்கு
நல்ல எண்ணங்களும் உறுதி கொண்ட செயல்பாடுகளும் வேண்டும் என எண்ணும்போது,
‘எண்ணிய முடிதல் வேண்டும்;
நல்லவை
எண்ணல் வேண்டும்;
திண்ணிய
நெஞ்சம் வேண்டும்;
தெளிந்த
நல்லறிவு வேண்டும்!’
எனும்
முண்டாசுக் கவிஞனின் வரிகளே நம் கண் முன் நிழலாடுகின்றன!
இலக்கினை
அடைய முயலும்போது பாதைகள் கடினமாய் அமைவது இயல்பே! இலக்கினை அடைய வீறுகொண்டு எழும்போது எதிர்வரும் தடைகள் அனுபவங்களாகவே மாறுகின்றன. “ஒவ்வொரு முறையும் நாம் முயற்சியைத் தொடங்கும்போது, நாம் இலக்கினை எட்டுகிறோம்” என்ற
ஆபிரகாம் லிங்கனின் வரிகள்தான் வரலாற்றில் பலருக்குப் பல வேளைகளில் இலக்கை
எட்டிப் பிடிக்கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அத்தகைய எண்ணத்தில் ‘எண்ணித் துணிக கருமம்...’ எனப் பயணிக்கின்றபோது, “நீர் நினைப்பது கைகூடும்; உன் வழிகள் ஒளிமயமாகும்\\\" (யோபு 22:28) என்னும் இறைவாக்கே எம்மை நாளும் தேற்றி வலுவூட்டின.
இத்தகைய
வரலாறு படைக்கும் சூழல் ஒருநாள் நிகழ்ச்சி அல்ல; மாறாக, பலநாள் முயற்சி. இத்தகைய எண்ணங்கள் கால ஓட்டத்தில் அசை போடப்பட்டு எம் முன்னவர்களால் பல முயற்சிகளில் வடிவமைக்கப்பட்டு,
திட்டங்கள் தீட்டப்பட்டு, சாத்தியக்கூறுகள் அலசி ஆராயப்பட்டு, இன்று பொன்விழா ஆண்டில் அது முடியும் என்று விடியல் கண்டிருக்கிறது.
காலத்தின்
அறிகுறிகளை நுட்பமாகக் கணித்து, இந்த மின்னஞ்சல் நாளிதழ் வெளிவர கருத்துப் பரிமாற்றமும் கள ஆய்வும் பல
தளங்களில் பல்வேறு சூழல்களில் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், பலருடைய எண்ண ஓட்டங்களிலும் ‘இது தேவை’
(லூக் 19:31) என்பதாக அறியப்பட்டு, இம்முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
இம்முயற்சியில்
அடிப்படைச் சாத்தியக்கூறுகளைக் கணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் உடன்
பயணித்த சென்னை-இலயோலா கல்லூரியின் ஊடகத்துறைப் பேராசிரியர் திரு. பெர்னாட் டி சுவாமி அவர்களுக்கும்,
அவருடைய எண்ணிமத் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்நாள்
ஆயர் பேரவையின் கனவு நனவாக, இந்நாள் ஆயர் பேரவை நல்கிய பெரும் ஒத்துழைப்பை எண்ணிப்பார்க்கிறேன். ஆயர் பேரவையின் தலைவரும், எம் அச்சு ஊடகப் பணியகத்தின் மேனாள் தலைவருமான மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், இம்முயற்சியில் தோள்கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் தந்து உடன் பயணிக்கும் ‘நம் வாழ்வு’ வார இதழின் மேனாள் முதன்மை ஆசிரியரும், இந்நாள் வெளியீட்டுச் சங்கத் தலைவரும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயர்
பேரவையின் தனியொரு நிறுவனமாக இம் முயற்சியை ‘நம் வாழ்வு’ முன்னெடுத்தாலும், எல்லாருடைய ஒத்துழைப்புமே இதன் முழு வெற்றிக்கான படியாக அமைய முடியும். அவ்வகையில், தமிழ்நாடு ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர், தமிழ்நாடு துறவியர் பேரவையின் ஊடகத் தொடர்பாளர், மறைமாவட்ட இதழ்களின் ஆசிரியர்கள்-எழுத்தாளர்கள், மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர்கள், மறைமாவட்ட மக்கள் தொடர்பாளர்கள் (PRO), பங்குத்தந்தையர்கள்,
திருத்தல இதழ்களின் ஆசிரியர்கள்-எழுத்தாளர்கள், துறவற சபைகளின் தலைமைச் செயலர்கள், இவர்களுடன் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பணியாற்றும் எம் ‘நம் வாழ்வு’ பொறுப்பாளர்கள், தன்னார்வப் பணியாளர்கள், ‘நம் வாழ்வு’ எழுத்தாளர் பயிற்சிப் பாசறையில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள், நல்லுள்ளங்கள் யாவரும் தங்களைச் சார்ந்த பணியிலும் தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணிப்பொறுப்பு சார்ந்தும் செய்திகளை உடனுக்குடன் எமக்கு அனுப்பிவைத்து, எம்முடன் தொடர்ந்து பயணிக்கின்றபோது வளமான செய்திகளை நலமான தமிழ்ச் சமூகத்திற்குத் தடையின்றி வழங்க முடியும் என்றே நம்புகிறேன்.
இறுதியாக,
நிறை
காண்பின் மனம்திறந்து வாழ்த்திடுவீர்!
குறை
இருப்பின் மன்னித்துப் பொறுத்தருள்வீர்!
வளம்
சேர்க்க சீர்கருத்துகளை வழங்கிடுவீர்!
வானளாவ
உயர்ந்திட வாஞ்சையோடு பகிர்ந்திடுவீர்!
பாரெங்கும்
பரவிடவே பேராதரவு நல்கிடுவீர்!
பாரச்சுமையைத்
தாங்கிடவே பொருளுதவி தந்திடுவீர்!
நாளைய
சமூகம் நலம் காண, இன்றைய சமூகத்தில் ‘நம் வாழ்வு’-
ஓர் இறைவாக்கினன்! ‘நம் வாழ்வு’-
இது நமது இதழ்; நமது குரல்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்தியா ஒரு மக்களாட்சிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தங்களை ஆள்வதற்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமையைக் கொண்ட’ இந்த அரசியல் அமைப்பு, இன்று பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்றும், இங்கு நடைபெறுவது உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் தேர்தல் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டு, ‘மக்களாட்சியின் தாய் - இந்தியா’ என மார்தட்டிக்கொண்ட காலம் இன்று மலையேறிப் போய்விட்டது.
“மக்களாட்சித் தத்துவம் என்பது, எங்கோ கடன் வாங்கப்பட்ட சிந்தனை அல்ல; இது இந்தியாவில் உள்நாட்டில் வளர்ந்த, பல காலமாகக் கொண்டிருக்கும் நடத்தை முறையால் ஆழமாக நிறுவப்பட்டது” என்றும், “அது நீதிநெறிக்கு உட்பட்டது” என்றும் வரையறை தருகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.
தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொதுக் கொள்கைகள் குறித்து முடிவெடுக்கும் நடைமுறையில் பங்குகொள்கிறது இந்த மக்களாட்சித் தத்துவம். இது நீதிநெறி, அறவாழ்வு, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டிருக்கிறது. ஆனால், இந்த நங்கூரம் இன்று பெரிதும் அசைவு கண்டிருக்கிறது; பேராபத்து நெருங்கியிருக்கிறது.
நம்மை அடிமைப்படுத்திய அரசுக்கு மாற்றாக, நம்மில் விடுதலை அரசு மலர்ந்த பின்பும் அது எல்லாவிதமான சுரண்டல் போக்குகளையும் அப்படியே பாதுகாத்தால் விடுதலைக் காற்று விழலுக்கிறைத்த நீர்போல் ஆகிவிடும். அங்கே விடுதலையின் உண்மையான உட்கூறுகளைக் காணமுடியாது; அடிமையின் தளை உடைத்த ஆனந்தம் தென்படாது.
‘உனது சுதந்திரத்தால் உனக்கு
ஒரு பயனும் இல்லை என்கிறார்கள்...
எனக்கும் தெரியவில்லை,
எனது சுதந்திரத்தை வைத்துக்கொண்டு
என்ன செய்வதென்று? அது இருக்கிறதென்ற
ஒரு நிம்மதியைத் தவிர!’
என்னும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன!
“நாட்டில் நிலவிய சுரண்டலும் ஊழலும் ஒழிந்தபோதுதான் விடுதலைக் காற்று வீதிகளில் உலா வரக்கூடும். அதுவே விடுதலையின் அடையாளம்” என்றுரைத்தார் நேரு. அரசியல் அமைப்பின் மூலம், பல்வேறு துறைகள் மற்றும் ஆணையங்களைக் கொண்டு எவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென நேரு ஆசை கொண்டாரோ, அந்த அரசியல் அமைப்புகளை எல்லாம் இன்று அவற்றைப் பாதுகாக்கும் வலிமையான இரும்புக்கவசங்களாக ஒன்றிய அரசு மாற்றிவிட்டது.
மக்களாட்சித் தத்துவம் கொண்ட இந்தியாவில் சமத்துவமும் சகோதரத்துவமும் செழிக்க வேண்டுமென்றால், இங்கு மக்களால் சுதந்திரக் காற்று சுவாசிக்கப்பட வேண்டும். சுதந்திரக் காற்று வீசுவதற்கு மக்களாட்சிக் கோட்டையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும்; கதவுகளைத் தாங்கியிருக்கும் நிலைகள் என்றென்றும் உறுதி கொண்டிருக்க வேண்டும். கதவுகள் மூடப்படுவதும் நிலைகள் இற்றுப் போவதும் பேராபத்தின் அவலமான அடையாளங்களே!
அத்தகைய பேராபத்துகள் நிகழா வண்ணம் மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகள்தான், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தேர்தல் நடைமுறைகள். மராமத்துப் பணிகளில் ஊழல் நடந்தால் மாளிகை பாழாகும், கோட்டையும் குடிசையாகிப் போகும்!
அரசியல் அமைப்புச் சட்டம் தந்த பிறப்புரிமையில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘வாக்குரிமை.’ இன்று ஒன்றிய பா.ச.க. அரசின் ஆட்சிக்காலத்தில் பிறப்புரிமையும் பறிக்கப்படுகிறது; வாக்குரிமையும் திருடப்படுகிறது. சுயநலத்தில், பதவி மோகத்தில் ஊறித்திளைக்கும் தலைவர்களின் திருவிளையாடல்கள் இவை. இன்னும் எத்தனை காலங்கள் நாம் இக்கொடுமைகளைக் காணவிருக்கிறோம் எனத் தெரியவில்லை!
உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையின் காப்பாளராக உள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், இப்போது தவறுகளுக்கு மேல் தவறுகள் எனப் பட்டியல் நீள, அவமானத்தின் உச்சியில் அலங்கோலமாய் அமர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரிசாவிலும் இந்த அநீதி நிகழ்த்தப்பட்டிருக்கிறது என அங்கே ஆட்சியைப் பறிகொடுத்த பிஜூ ஜனதாதளமும் களத்தில் இறங்கியிருக்கிறது. செத்துப் போனதாகக் கூறி நீக்கப்பட்ட பல்லாயிரம் வாக்காளர்களில் இருவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தி தேர்தல் ஆணையத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ். தனித்து
அறநெறி வழிநின்று, உண்மையின் பக்கம் நிலைப்பாடு கொண்டு, நீதி வழியில் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசுடன் கூட்டுச் சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது நாட்டிற்குப் பெரும் அவமானம்.
‘SIR’
(Special Intensive Revision of Electoral Rolls) எனப்படும் வாக்காளர் பட்டியல்களின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ என்ற பெயரில் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அங்குத் தேர்தல் ஆணையம் திடீரென மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது; அது இன்று சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கைத்தன்மை குறைந்த சூழலில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசு மௌனம் சாதிக்கிறது.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு பொய்யையும் புரட்டையும் பரப்பிக்கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பா.ச.க. அரசு கடந்த தேர்தல்களில் நாடெங்கும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக இராகுல் காந்தி குற்றம் சாற்றியிருப்பது, இன்று நாடெங்கும் பேசு பொருளாகியிருக்கிறது. ஒரு நபர் பல இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், ஒரே ஒரு படுக்கையறையைக் கொண்ட வீட்டில், 80 வாக்காளர்கள் வாழ்வதாக வாக்காளர் பட்டியல் இருப்பதாகவும் குறிப்பிடும் இராகுல் காந்தி, மூன்று வகையான ‘முகவரி மோசடிகள்’ நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று, இல்லாத முகவரியில் இருப்போர் என்றும்; அதாவது, அப்படிப்பட்ட முகவரியே இருக்காது என்றும்; இரண்டாவதாக, வீட்டு எண் 0, தெரு எண் 0 எனக் குறிப்பு ஏதுமற்ற முகவரிகளும், மூன்றாவதாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகளும் கொண்ட வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டுமே 40 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடும் என்கிறார். மேலும், எண்ம வாக்காளர் பட்டியலை வெளியிடத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியைத் தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? பா.ச.க.-வின் கட்சிப் பிரதிநிதிபோல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளைத் தேர்தல் ஆணையம் மிரட்டுவது ஏன்? என அவர் எழுப்பும் பல கேள்விகள் நமது குரலாகவும் ஒலிக்கின்றன.
இது இந்திய மக்களாட்சித் தத்துவத்திற்கு எழும்பி இருக்கும் மிகவும் அவலமான நேரடி அச்சுறுத்தலாகும். ஆகவேதான், கடுமையான எதிர்வினைகள் தற்போது ஆங்காங்கே எழும்புகின்றன. “ஒன்றிய பா.ச.க. அரசு, இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் கொள்ளையடிக்கிறது; இனியும் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்ட போர்; இதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை” என்று அழைப்பு விடுக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
ஆயினும், “பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 இலட்சம் நபர்களின் பெயர்களைத் தனியாக வெளியிட அவசியமில்லை; இதை வலியுறுத்தும் வகையில் எந்தச் சட்ட விதியும் கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இக்குளறுபடிகளுக்குத் தெளிவான பதில் தரும் வகையில், தகுந்த ஆவணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, தனது ஆணவத்தைக் காட்டுகிறது தேர்தல் ஆணையம்.
ஆகவே, “வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை என்ற பெயரில் 5 கோடி வாக்காளர்களை நீக்கினால், நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இத்தகைய சூழலில், ‘அச்சமின்மை’ என்பது இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் காரணம்” என்னும் விவேகானந்தரின் கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது. ஆகவே, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது அவசியமாகிறது. தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து, விமர்சனங்களைத் துறந்து, நாட்டு நலனுக்கான முன்னெடுப்புகளில் துணிவுடன் ஒன்றிணைய வேண்டும்.
பார்வையில் தெளிவு வேண்டும்; அரசியலில் தூய்மை வேண்டும். வாருங்கள்; துணிவோடு கரம் கோர்ப்போம்; ஒன்றாக அணிதிரள்வோம்!
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்
மானுட வாழ்வு முரண்களின் முற்றம். இன்பம்-துன்பம், வளமை-வறுமை, உயர்வு-தாழ்வு, வெற்றி-தோல்வி, ஆனந்தம்-அழுகை, உண்மை-பொய்மை, நீதி-அநீதி... என எண்ணற்ற எதிர்நிலைப் படிகளைக் கொண்டது. அவ்வரிசையில் ‘பெருமையும்-சிறுமையும்’ இன்று இணைந்து பயணிக்கிறது. ‘இன்று நீ; நாளை நான்!’ என எல்லாருமே இந்தப் படிநிலைகளை அன்றாடம் கடந்து வருகிறோம்.
‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!’ என்கிறது கல்யாணி கவரிங். கவரிங் என்பது உண்மையானதா? போலியானதா? போலிக்கு நாம் தரும் வரையறைதான் என்ன? உண்மையும் போலியும் கலந்த கூட்டுக் கலவையில்தான் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. பொய்மையே அதிக அளவு புழக்கத்தில் வருகிறது; உண்மை எங்கோ ஓரம் கட்டப்பட்டு விட்டது. “உண்மையான உலகுடன் மனிதன் கொண்ட உறவு, அழகியல் நிலைப்பட்ட சமூக உறவு” என்கிறார் ஏங்கெல்ஸ். சமூகத்தில் உண்மையும்-பொய்மையும் கலந்திருப்பது போல, ‘மனிதன் பாதி - மிருகம் பாதி’ என மனித குணத்திற்கு
வரையறை தந்திருப்பதுபோல, சமூகம், நாடு என்ற கட்டமைப்பிலும் ‘பெருமையும் சிறுமையும்’ இணைந்தே
பயணிக்கிறது.
ஒன்றிய
பாசிச பா.ச.க.
அரசின் அரசியல்-கொள்கை நிலைப்பாடுகளில், செயல்பாடுகளில் ஆயிரம் எதிர்க்கணைகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தொடுக்கப்பட்டாலும், நாம் மார்தட்டிக்கொண்டு பெருமை பேசக்கூடிய செய்திகளும் உலக அரங்கில் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.
உலகப்
பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதும், அத்தகைய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைத் திறம்பட மேற்கொண்டதில் இந்திய நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், தொடர்ந்து பல வெற்றிகளை நிலைநாட்டிவரும்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இஸ்ரோ மற்றும் நாசா நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோளை ‘ஜி.எஸ்.எல்.வி - எஃப் 16’ இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதும் பெருமைக்குரியவையே!
உலக
அளவில் கல்வியின் தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயர்கல்வி அமைப்பின் தரவரிசை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அடையாளப்படுத்துகிறது.
2019-இல் 49 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம்பெற்றிருந்த சூழலில், இன்று 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மும்மடங்கு அதிகரித்து, 128 பல்கலைக்கழகங்களாக உயர்ந்திருப்பது பெருமைக்குரியதே!
உயர்தரமான
கட்டமைப்புகள் மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, நிலையான வளர்ச்சி, இலக்குகளில் கூர்மை, கற்பித்தலில் தெளிவு, ஆராய்ச்சி மற்றும் சமுதாயத் திட்டங்களில் முன்னெடுப்பு, வளங்களின் மேலாண்மை என ஐ.நா.
சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரம் உயர்ந்திருக்கின்றன என்னும் செய்தி பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.
அவ்வாறே,
முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024-இல் மட்டும் இந்தியாவில் 18,900-ற்கும் மேலாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதும்.
ஓராண்டில் நாட்டில் இவ்வளவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறை என்பதும், உலக அரங்கில் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது என்பதும் சிறப்புக்குரியதே!
அதேபோல,
குருதிக்கொடை, உறுப்புதானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்னும் தளங்களில் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பதிலும் இத்துறைகளில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதிலும் தமிழ்நாடு, இந்தியாவில்
முதன்மையான மாநிலமாக ஒளிர்வது பெருமையளிக்கிறது. “இது தமிழ்நாட்டின் மகுடத்தில் மற்றுமொரு வைரக் கல்லாக அமைந்திருக்கிறது” என
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்குத் தமிழ்நாட்டில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனக் கடந்த 2023, செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் அறிவித்தது கொடையாளர்களை மிகவும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.
உயர்கல்வி,
பல்கலைக்கழகக் கட்டமைப்பு, விண்வெளி ஆய்வு, உறுப்புக்கொடை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என முக்கியத் துறைகளில்
இந்தியா பெரும் உச்சம் தொட்டிருப்பது பெருமைக் குரியதாகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாகவும் அமையும் சூழலில் இந்திய, தமிழ்நாட்டு சமூக-அரசியல் சூழலில் அன்றாடம் நிகழும் காட்சிகள் இந்நாட்டின் அவலங்களை எடுத்துச்சொல்லும் சிறுமைகளாகிப் போயின.
நாடெங்கும்
ஆங்காங்கே நிகழும் வன்முறை நிகழ்வுகள், பிரிவினைவாதச் செயல்பாடுகள், உண்மையை மறைக்கும் ஊடகங்கள், பாலியல் வன்கொடுமைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், போலியான குற்றப்பதிவுகள், நீக்கப்படும் வாக்காளர் உரிமம், நீதித்துறையில் ஊழல், கண்மூடி இருக்கும் நீதிமன்றங்கள், காவல்
நிலைய மரணங்கள், ஆணவக் கொலைகள், பொருளாதார வீழ்ச்சி, கோவில், திருவிழாக்கள், கிணறு, மயானச் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சமூக நீதியற்ற தன்மை... என நாடெங்கும் நிகழும்
குற்றங்களால் இன்று சமூகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? என்ற கேள்வி ஐயத்தோடே எழுகிறது.
தேசியக்
குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2021-இல் ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை 33-ஆக இருந்த நிலையில்,
அது 2025-இல் 2051-ஆக அதிகரித்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
மனித வளத்துக்கு அடிப்படையாக இருக்கும் இளைஞர்கள் ஒருபக்கம் சாதிவெறியால் கொல்லப்படுவதும், மறுபக்கம் அத்தகைய குற்றத்திற்காகச் சிறையில் காலம் கழிப்பதும் வருந்தத்தக்கதே!
அண்மையில்
வெளிவந்திருக்கும்
147 நாடுகள் அடங்கிய உலகின் பாதுகாப்பான நாடுகள் பற்றிய தரவரிசையில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, அந்நாட்டில் நிலவும் சுமூகமான சமூகச் சூழல், அரசியல் நிலைப்பாடு, வளம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாமல் அண்டை நாடுகளுடன் சுமூக உறவு... எனப் பல்வேறு அடிப்படை வரையறையை உள்ளடக்கியது. இந்தியா இத்தகைய தளங்களில் பலவீனம் கண்டு, பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அது பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது பெரிதும் கவலையளிக்கிறது. குறிப்பாக, பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-இல் 52.3 விழுக்காடு பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
‘காகிதப் பூக்களுக்குக் கற்பழிப்பு பயமில்லை;
பிளாஸ்டிக்
மலர்களுக்குப் பிரசவ வலியில்லை;
அசல்களுக்கு
மட்டுமே ஆபத்து அதிகம்!’
எனும்
பேராசிரியர் அப்துல் காதரின் கவிதை வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன. பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டாலும், பாலியல் குற்றம் புரிவோருக்கு அறநெறி சார்ந்த வாழ்க்கை முறையை இன்று நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
குஜராத்தில்
கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த 6,500 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளால் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5 வன்கொடுமை நிகழ்வுகள் என அறியப்படுகிறது. இத்தகைய சூழலில்
அங்கு “பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்”
என குஜராத்தில் போக்குவரத்துப்
போலீசார் ஒட்டிய சுவரொட்டிகளில் இடம்பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது?
ஒவ்வொரு
குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய நாடும் அரசும் சமூகமும் தனது அடிப்படைக் கடமைகளிலிருந்து விலகாமல் இருக்கவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
சமத்துவக்
குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மையையும் சகோதரத்துவத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மக்களாட்சி மற்றும் குடியரசு நாடு எனும் சிறப்பு கொண்ட இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பா.ச.க.
மேற்கொள்ளும் சூழ்ச்சி ஒருபுறமும்; மறுபுறம், பா.ச.க.-வின் தேர்தல் பிரிவுபோல தேர்தல் ஆணையமும் மற்ற அரசு இயந்திரங்களும் செயல்படுவதும் இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பெரும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்தியாவின்
பெருமை பேச ஆயிரம் சாதனைகள் நிகழ்ந்தாலும், அன்றாடம் நிகழும் அவல நிலைகளால் இந்தியா இன்றைய ஆட்சியாளர்களால் சிறுமையடைந்தே நிற்கிறது! புதிய இந்தியாவைக் காண வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. மதவாதக் கட்சிகளும் சாதியச் சங்கங்களும் வேரறுக்கப்பட்டு சமத்துவ, சகோதரத்துவ, சமநீதி கொண்ட புதிய இந்தியா உருவாக ஒன்றிணைவோம், வென்றிடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
பன்னெடுங்காலமாக இந்தியச் சமூகக் கட்டமைப்பு ஏதோ ஒருவகையில் பிளவுபட்டே கிடக்கிறது. பிளவுபடுத்தும் பல்வேறு சக்திகளால் அது இன்றும் இன்னும் கூறுபோடப்பட்டுக்கொண்டே இருப்பதுதான் மிகவும் அவலமான சூழல்!
உணவு,
உடை, கலாச்சாரப் பண்பாடு எனும் மக்கள் வேறுபாடுகளுக்கான காரணிகள் நீளும் பட்டியலில்... மதம், சாதி, மொழி, இனம் என்னும் கூறுகளும் தவிர்க்க முடியாததாகிப்போயின. எல்லாத் தளங்களிலும் சேர்ந்து செயல்படுவதும், இணைந்து வளர்நிலை காண்பதும், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதுமே ஒரு சமுதாயம் சிறப்பதற்கான உன்னதமான வழி. பிரித்துப் பார்ப்பதும் பிரிந்து கிடப்பதும் அறியாமையின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ பாராட்டும் இந்தியத் திருநாட்டில், வேதகாலம் தொட்டே மறைமுகமாகவும், இன்று வெளிப்படையாகவும் தொழிலை, சாதிப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தந்திர சூழ்ச்சியால் சிலர் பிரிவினையை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேல்தட்டு, அடித்தட்டு என்னும் வர்க்கக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அடித்தட்டில் ‘அடுத்தடுத்துத் தட்டுகள்’
இருப்பதாகச் சமூகத்தைத் தங்கள் வசதிகளுக்கேற்றவாறு இன்றும் கட்டமைத்துக்கொள்கிறார்கள்.
ஒருசாராரின்
சொர்க்கமாகவும் ஏற்றத்தாழ்வின் இருப்பிடமாகவும் இருந்த இந்து மதத்தின் சாதிக் கொடுமைகளைக் கண்ட அண்ணல் அம்பேத்கர், “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்” என்றுரைத்தார்.
கசப்பான தனது உணர்வை வெளிப்படுத்திய அவர், “இந்து மதம், உயர்சாதி மனிதனின் சொர்க்கம்; சாமானிய மனிதன் மீளமுடியாத நரகம். சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்ம குணம்; ஏற்றத்தாழ்வின் மற்றொரு பெயர்தான் இந்து மதம்” என்றார். ஒன்றிணையும்
சமூகத்தைத் தடுப்பதே சாதியின் தந்திரம் எனக் கண்ட அவர், “வர்க்க வேற்றுமையை விட சாதிய வேற்றுமையே, இங்கு மனிதச் சமூகத்தை மிகவும் பெரிதளவில் இழிவுபடுத்துகிறது” என்றும்
உரக்கக் கூறினார்.
இந்திய
மண்ணில் படிந்து கிடந்த சாதியக் கட்டமைப்பு எனும் இருளிலிருந்து, சமூகத்தின் சமத்துவப் புரட்சிக்கான விடியல் நிறைந்த சிந்தனைகளை விதைத்த ஆதவன் அவர். ஆதிக்க மனநிலையின் அடித்தளம் தகர்த்த புரட்சியாளர் அவர். தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இந்து மதத்தோடு இருக்கும் தொடர்பை முற்றாக அறுத்தெறிய முனைப்பாக நின்ற அம்பேத்கர், பின்னாளில் தன்னைப் புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.
தீண்டாமை
தொடரும் இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்குவதாக 1932, ஆகஸ்டு 17 அன்று அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர் மக்டொனால்டு.
ஆயினும், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர் மகாத்மா காந்தி. தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த இங்கிலாந்து அரசு சதிசெய்வதாகக் கூறி ‘எரவாடா’ சிறையில் உண்ணாநோன்பில் ஈடுபட்டவர் அவர்.
வாழ்க்கைப்
போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பட்டியல் இன மக்கள் இன,
மத, வர்க்கக் கட்டமைப்பில் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து இந்திய அரசியல் அமைப்புச்
சட்டம் (பிரிவு 25-28) வழங்கிய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆயினும், தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே தக்கவைத்துக்கொள்ள சிறப்புச் சலுகைகளும் தீண்டாமை ஒழிப்புச் சிந்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது,
“அரசியலில் மதத்திற்கு எந்த வேலையும் இல்லை என்பவர்கள், மதம் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள்” என்று
தனது ‘சத்திய சோதனை’யில் எழுதினார் மகாத்மா காந்தி. மத உணர்வு மிக்கவர்கள்
அற வழிப்பட்ட அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் பிறந்த அவருடைய கருத்து அது. ஆனால், அதே காந்தி பின்னாளில் “மதம் என் சொந்த விவகாரம்; அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை” என்றும் முழங்கினார்.
‘உண்மை...
தெளிந்த
நீரைப் போன்றது;
அறிவுஜீவிகள்
அந்த
நீர் இருக்கும்
குட்டையைக்
குழப்பிச்
சேறாக்கி
விடுகிறார்கள்’
என்ற
‘கவிக்கோ’ அப்துல்
ரகுமானின் வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன.
மேலும்,
“இந்தியாவில் இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்கள்; இந்தியாவைத் தங்கள் நாடாகக் கொண்டிருக்கும் இந்துகள், முஸ்லிம்கள். பார்சிகள், கிறித்தவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மக்களே. உலகின் எந்தப் பகுதியிலும் ஒரே தேசிய சமுதாயம் என்பது ஒரே மதம் என்ற நிலையில் இருந்ததில்லை, இந்தியாவிலும் அப்படி இல்லை” என்று ‘இந்திய சுயராஜ்யம்’ எனும்
தனது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டவரும் காந்திதான்!
1949, நவம்பர் 26 அன்று
ஏற்றுக்கொள்ளப்பட்டு,
1950, சனவரி 26 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்
இந்திய அரசமைப்புச் சட்டம். இந்தியாவின் ஆன்மாவாக, உயிர்நாடியாக விளங்கும் இந்த விரிவான ஆவணமானது, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, அதன் எல்லா அமைப்புகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அவர்களின் கடமைகள் என யாவற்றையும் கோடிட்டுக்
காட்டுகிறது. இந்தியாவை இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற மக்களாட்சி கொண்ட நாடாக உலகிற்கு அடையாளப்படுத்துவதும் இந்த ஆவணமே! சமூக நீதி, மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் அடிப்படைக் கூறுகளை, உரிமைகளை உறுதி செய்வதும் இந்த ஆவணமே!
ஆயினும்,
இந்த ஆவணம் வெளிவந்த ஏழு மாதங்களுக்குள், 1950, ஆகஸ்டு 10 அன்று இந்து மதத்திலிருந்து கிறித்தவம் அல்லது இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்குப் பட்டியல் சாதி உரிமையை மறுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் வேதனையின் உச்சம். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குத் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் பெருமளவில் வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்தச் சட்டத் திருத்தத்தால் கிறித்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு மாறுபவர்களுக்குப் பட்டியல் சாதி (SC) உரிமம்
மறுக்கப்பட்டது. இத்தகைய நீதியற்ற செயலால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கக்கூடிய இடஒதுக்கீடு கிறித்தவ, இஸ்லாமிய தலித் மக்களுக்கு முற்றிலுமாகத் தடைபடுகிறது.
தொடர்ந்துவரும்
இந்தப் பாகுபாட்டை மதச்சார்பற்றதாக மாற்றவும், இந்து தலித்துகள் பெறும் சலுகைகளும் உரிமைகளும் கிறித்தவ, இஸ்லாமிய தலித்துகளும் பெறும் வகையில் ஒன்றிய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் எமது நெடுநாள் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. பட்டியல் சாதி வரையறை மீதான மத அடிப்படையிலான கட்டுப்பாடுகளை
நீக்கவேண்டும் என நீதியரசர் இரங்கநாத்
மிஸ்ரா ஆணையம் பரிந்துரை செய்தபோதும் ஒன்றிய அரசு அதற்கான முயற்சிகளை முன்னெடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஏறக்குறைய 74 ஆண்டுகளாகத் தொடரும் இந்த முரண்பட்ட நிலைப்பாடு முடிவுக்கு வர வேண்டும் என்பதே
எமது நெடுநாள் கோரிக்கை.
இத்தகைய
சூழலில், உரிமை மீட்புக்கான செயல்பாடுகள் இயக்கங்களாகவும் போராட்டங்களாகவும் முன்னெடுக்கப்பட்டதும்தான் வரலாறு சொல்லும் பதிவுகள். குடிமை உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) என்பது
சட்டத்தின் முன் எல்லாருக்கும் சம உரிமை என
முழங்கிய உலகளாவிய அரசியல் இயக்கங்களில் ஒன்று. 1954 முதல்
1968-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இனப்பிரிவினை மற்றும் பாகுபாட்டைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்திய ஒரு சமூக அரசியல் இயக்கமாகப் பிறப்பெடுத்த ‘அமெரிக்கக் குடிமை உரிமைகள் இயக்கம்’ குறிப்பிடத்தக்க சட்ட மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய வழிவகுத்தது என்பதும் வரலாறு.
குழந்தைகளின்
வளர்ச்சி பெற்றோரின் முயற்சியில் புதைந்திருப்பதுபோல, சமூக மாற்றத்திற்கான எழுச்சி, உரிமையை மீட்பதற்கான புரட்சியில் பொதிந்திருக்கிறது. இயக்கமாக ஒன்றிணைவதும், உரிமைகள் மீட்கக் குரல் கொடுப்பதும் இன்று காலத்தின் கட்டாயமாகிறது.
ஆகஸ்டு
10-‘கறுப்பு தினம்’ அத்தகைய செயல்பாடுகளுக்கான முன்னோட்டமாக அமையட்டும்.
‘தடைகளைக் கண்டு செய்வதறியாமல்
திரும்ப
நினைக்கும் நதி எங்குமில்லை;
நமது
இலக்கை அடையும்வரை
விரைந்து
சென்றால் என்றும் தோல்வியில்லை!’
எழுந்திடுவோம்;
இணைந்திடுவோம்; விரைவில் வென்றிடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழ் மணம் கமழும் மதுரை மண்ணுக்கு, உலக வரலாற்றின் பக்கங்களில் தனிச்சிறப்பு உண்டு. தமிழினத்தின் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம் எனும் பண்பாட்டுக் கூறுகளின் வளர்ச்சியில் மதுரையின் மாண்பு மேலோங்கியிருக்கிறது. அங்குதான், ‘கீழடி நம் தாய்மடி’ எனத் தமிழ் ஆதிக்குடியின் நாகரிக வாழ்வை வைகைக் கரை வசந்தமாய் எடுத்துக்கூறுகிறது. அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலையில் பிறந்து, மதுரையில் தவழ்ந்து, வைகையில் வளர்ந்து உலகெங்கும் பெருமை கூறும் இளமைக் குன்றாக் கன்னித் தமிழாம் செம்மொழி தமிழ் - முதல், இடை, கடை என்று முச்சங்கம் கண்ட மூத்த நகரமிது; தமிழ் பண்பாட்டின் தலைநகரம் இது!
பண்டைய
தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம் பெற்ற ‘மதுரைக்காஞ்சி’ படைத்த
மாங்குடி மருதனார், மதுரையின் பேரழகை வர்ணிக்கின்றபோது...
‘மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை
அன்ன வழக்குடை வாயில்
வகைபெற
எழுந்து வானம் மூழ்கி
சில்காற்று
இசைக்கும் பல்புழை நல்இல்
ஆறு
கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
பல்வேறு
குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப
மாகால்
எடுத்த முந்நீர் போல
முழங்கிசை
நன்பணை அறைவனர் நுவல
கயம்
குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை
மகிழ்ந்தோர்
ஆடும் கலிகொள் சும்மை
ஓவுக்
கண்டன்ன இருபெரு நியமத்து!’
(அடிகள்
355-365)
என்னும்
பாடல் வரிகளில், மதுரையில் தெளிந்த நீர் உடைய அகழி, விண்ணை முட்டும் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள்,
பழமையும் வலிமையும் கலை நுணுக்கமும் தெய்வத்தன்மையும் கொண்ட அழகிய வாயில்கள், மேகங்கள் உலாவும் மாட மாளிகைகள், இடைவிடாது ஓடுகின்ற வைகை ஆறு, தென்றல் காற்று உலா வரும் அகன்ற தெருக்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள், பெருங்காற்று புகுந்த கடலொலிபோல ஒலிக்கின்ற முரசின் முழக்கம், இன்னிசை சுமந்து வரும் தென்றல், அதனால் ஆர்ப்பரிக்கும் மக்கள்கூட்டம்... எனத் தொன்றுதொட்டு வரும் மதுரை மண்ணின் மண்வாசனையையும் மக்களின் நேசத்தையும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் கண்முன்னே அழகுறப் படைக்கிறார்.
மதுரையின்
வளமையைக் கூறும் ‘அல்லி அரசாணி மாலை’ என்னும் இலக்கியப் படைப்பு...
‘மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது
செந்நெல் லென்று
ஆனைகட்டிப்
போரடிக்கும்
அழகான
தென்மதுரை!’
என்று
பாடுகிறது. பரந்து விரிந்த தமிழ்க்குடியின் நிலப்பரப்பை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், பாண்டிய நாட்டின் தலைநகராக அமைந்து, வணிகம் செழித்த இம்மாமதுரை ‘கிழக்கின் ஏதென்ஸ்’ என்றே வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. கடம்ப வனம், கடம்பக்காடு, கடம்ப நாடு என கம்பனின் கவி
கண்ட இந் நிலம், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவில்களையும் நினைவுச் சின்னங்களையும் ஆலயங்களையும் மசூதிகளையும் கொண்டு மதநல்லிணக்கத்தின் சிறப்பான தளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய மொழி, பண்பாடு, சமயத் தளங்களில் தனித்துவம் கண்டு உலக வரலாற்றில் சிறப்பிடம் கொண்ட இம்மாமதுரை, உலகத் திரு அவை வரலாற்றிலும் மிகச் சிறப்புக்குரிய இடம்பெற்றிருக்கிறது.
‘மதுரை மிஷன்’ என சேசு சபையார்
மறைப்பணி மேற்கொண்ட மையத் தளமிது. ‘தத்துவ போதகர்’ என்று அழைக்கப்படும் அருள்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, ‘தேம்பாவணி’ காப்பியம்
படைத்த வீரமாமுனிவர், மறவ நாட்டின் மாணிக்கமாகச் செந்நீர் சிந்திய ‘ஓரியூரின் ஒளிவிளக்கு’ அருளானந்தர்
என நீண்டதொரு மறைப்பணியாளர்களின் பாதம் கண்ட புண்ணிய பூமி இது.
500 ஆண்டுகளுக்கும் மேலாக,
கிறித்தவத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இம்மறைத்தளம் தமிழ் வளர்த்தது; மறை வளர்த்தது; மக்களின் மாண்பினைக் காத்தது. ஏறக்குறைய 80 ஆண்டுகளாக உயர்மறைமாவட்ட நிர்வாகக் கட்டமைப்பைக் கண்டிருக்கும் மதுரை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜான்பீட்டர் லியோனார்டு, பேராயர் ஜஸ்டின் திரவியம், பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம், பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி, பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, பேராயர் அந்தோனி பாப்புசாமி என ஆறு பேராளுமைகளைக்
கண்டிருக்கிறது.
அந்த
வரிசையில் ஏழைகளின் பங்காளனாய், எளியோரின் பேராதரவாய், உண்மையின் சுடரொளியாய், அன்பின் அமுதமாய், நீதியின் போராளியாய், நிர்வாகத்தில் தனித்துவமாய், திரு அவைச் சட்டத்தில் தலைசிறந்தவராய், இறைஞானத்தில் தீங்கனியாய், இறைநம்பிக்கையில் பெரும் ஆழியாய் அறியப்படும் பாளை மறைமாவட்ட ஆயரும், இம்மதுரை உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய திருத்தூது நிர்வாகியுமான மேதகு முனைவர் அந்தோனி சாமி சவரிமுத்து அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழித் தோன்றலாய், இம்மறைத்தளத்தின் தலைமகனாய், ஏழாவது
பேராயராகப் பணிப்பொறுப்பேற்பது திரு அவைக்குக் கிடைத்த பெரும்பேறு!
2025 ஜூலை 5, அதிகாலைப்
பொழுதில் வைகறையின் வசந்தம் வளமாக வீசியபோது எவ்விதச் சலனமும் இன்றி, அந்த நாள் தமிழ்நாடு திரு அவைக்கும் மதுரை உயர்மறைமாவட்டத்திற்கும் மகிழ்ச்சியான நற்செய்தியைக் கொண்டு வந்தது. வத்திக்கான், பாளையங்கோட்டை, மதுரை என முத்தலங்களில் முழங்கப்பட்ட
அந்த நற்செய்தி, இந்த எளிய பணியாளரை இறைவன் உன்னதப் பணிக்கு உயர்த்திய மாண்பினைக் கூறியது.
கல்விப்
பணி, மருத்துவப் பணி, சமூகப்பணி, தமிழ் வளர்த்த இலக்கியப் பணி, நல்மனம் கொண்டோர் ஒன்றிணையும் மத நல்லிணக்கப் பணி...
எனப் பல பணிகளில் வளர்நிலை
கண்டு வரும் இம்மறைத்தளம், இப்புதிய பேராயரின் சீரிய சிந்தனையாலும் பெரும் உழைப்பாலும் பார் போற்றிட, பணிகள் பல கண்டிட, மக்களின்
சமூக, ஆன்மிக, வாழ்வியல் தளங்களில் ஏற்றம் கொண்டு வரும் என்பதே எம் நம்பிக்கை. எல்லாரும்
மாண்புடன் வாழ, மக்கள் மையப் பணிகளை முன்னெடுக்க வரும் புதிய பேராயரை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உலக இயக்கத்தின் இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக இருப்பது நீர். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதும் அதுவே! மானுடப் பயன்பாட்டிற்குப் பயன்தரும் நீர் உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும் உணவுத் தேவைக்கும் ஆதாரமானதாக அமைகிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவினை விளைவிக்கப் பயன்படுவது மட்டுமின்றி, தானும் உணவாக மாறும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு! ஆகவே, மானுட வாழ்வியல் தேவைகளைக் குறிப்பாக, உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மூலக் காரணியாக நீர் அமைவதால், அதன் மேன்மையை அறிந்து, வள்ளுவப் பெருந்தகை நீரினை முதன்மைப் பொருளாக எண்ணி, ‘நீரின்றி அமையாது உலகு’ என்னும் குறளில், ‘நீர் மட்டும் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது; இந்த உலகமும் மனித வாழ்க்கையும் நிலைபெறாது’ என்று பதிவு செய்கிறார். வான் நீர், நில நீர் என இரு பெரும் பிரிவுகளாக நீரின் ஆதாரத்தை, அதன் தன்மையை வகுத்துக் கொடுக்கும் வள்ளுவர் அந்நீரினை ‘அமிழ்து’ எனப் பெருமைபட வர்ணித்துப் பாடுகிறார். அத்தகைய நீர் தன்னிலே தூய்மையும் புனிதமும் கொண்டதாக இருக்கிறது என்கிறார்.
மானிடருக்குப்
புறத்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மையும் தருவது இத்தண்ணீரே! தண்ணீர் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலுக்கும் உறுப்புகளுக்கும் ஏராளமான, நலமான, வளமான நன்மைகளை வழங்குகிறது. நமது ஒட்டுமொத்த உடல்நலனில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பல வேளைகளில் நாம்
உணர்வதில்லை. தண்ணீர் இல்லை என்றால் ஒரே நாளில் வாடிவிடும் செடியைப்போல மனித உடலும் வாடிவிடுகிறது.
உடல்
வெப்பத்தைச் சீர்படுத்துவதும், செல்களுக்கு ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்வதும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நிகழத் துணைபுரிவதும், உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிப்பதும், உடலில் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்றுவதும் தனது அடிப்படைப் பணியாக மேற்கொள்ளும் நீர், நமது உடலில் சீரான அளவில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நமது
மூளையில் இருக்கும் நீரின் அளவு 80 விழுக்காடு எனவும், இரத்தத்தில் உள்ள நீரின் அளவு 90 விழுக்காடு எனவும், தசைகளில் உள்ள நீரின் அளவு 75 விழுக்காடு எனவும் நீரின் இன்றியமையாதத் தேவையை மருத்துவம் பட்டியலிடுகிறது. உடல்நலனைப் பேண, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோல போதிய அளவிற்குத் தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானதாகிறது.
ஆகவே,
சீரான நீர் நுகர்வுப் பழக்கங்களால் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும் என மருத்துவம் நம்பிக்கை
தெரிவிக்கும் சூழலில், 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு நாம் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும், குறிப்பாக, 60 கிலோ எடை உடையவர்கள் நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் எனவும் மருத்துவம் அறிவுறுத்துகிறது.
இத்தகைய
சூழலில், தமிழ்நாடு அரசு மாணவர் நலன் கருதி முன்னெடுத்திருக்கும் ‘வாட்டர் பெல்’
(Water bell)
திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது. உடலுக்கு நீர்ச்சத்து இன்றியமையாதது என்பதால் குறிப்பாக, படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் அது அவர்களது அறிவாற்றல், கல்விச் செயல்திறனை வெகுவாகப் பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, கேரள மாநில அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தொடரப்பட்டு, இன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த ஜூன் இறுதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளி செல்லும்போது கொடுத்து அனுப்பும் தண்ணீரை அப்படியே வீட்டுக்குக் குழந்தைகள் எடுத்து வருகிறார்கள் எனப் பெற்றோர் புலம்புவதுண்டு. ஆசிரியர்களும் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய போதும், தண்ணீர் குடிப்பதன் அவசியமும், அது பற்றிய புரிதலும் பள்ளிக் குழந்தைகளுக்கு எட்டாத சூழலில், அரசு மேற்கொண்டிருக்கும் இப்புதிய திட்டம், பெற்றோர்களிடம் மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வகுப்புகளுக்கு
மத்தியில் இடைவேளை நேரங்கள் கொடுக்கப்பட்டாலும், பல குழந்தைகள் தண்ணீர்
குடித்தும் குடிக்காமலும் வகுப்புக்கு வருவது கண்டறியப்பட்டு, இந்தத் திட்டம் அன்பான, அதேவேளையில் கண்டிப்பு நிறைந்த அறிவுறுத்தலாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, காலை 11:00 மணி, மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி என மூன்று முறை
தனியாக ஒலி எழுப்பி மாணவர்களைத் தண்ணீர் குடிக்க வைக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தகைய
ஒலி எழுப்பப்பட்டவுடன், ஒருவிதமான விளையாட்டுச் செயல்பாடுபோல
மாணவர்கள் ஆர்வமாகத் தண்ணீர் குடிப்பதைத் தற்போது காணமுடிவதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
மாணவச்
சமுதாயத்தை உடல்நலம் மிக்கதாக வளர்த்தெடுக்க அரசும் சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் வரவேற்கப்படும் சூழலில், இச்சமூகத்தில் சிலர் முரண்பட்டிருப்பது, அதன் அவல நிலையையே எடுத்துக்கூறுகிறது. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிச்செயலைக் கண்ட இச்சமூகம், இன்று அதன் உச்சமான அவலநிலையைக் கண்டிருப்பது வேதனையிலும் வேதனை!
திருவாரூர்
அடுத்த காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட செயலைச் செய்த மூடர்களை என்னவென்று கூறுவது? காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்திற்குச் சமைப்பதற்காகச் சமையல் பணியாளர்கள் பள்ளிக்குச் சென்றபோது சமையல் அறையில் இருந்த பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததும்,
உணவுப் பொருள்கள் சிதறிக்கிடந்ததும், பள்ளி வளாகத்திலிருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டிருந்ததும், தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கப்பட்டிருந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக, குடிநீர் தொட்டியின் மூடி உடைக்கப்பட்டு அந்தத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்ததும், இந்தச் சமூகம் எங்கே போகிறது? என்ற கேள்வியையே முன்வைக்கிறது.
காவல்துறை
அதிகாரிகளின் விசாரணையில் “மூவர் மதுபோதையில் இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்” என்ற
பதில் மிகுந்த வேதனை அளிப்பதோடு, தமிழ்நாட்டின் மதுபானக் கொள்கையும் சற்று மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற உண்மையையும் எடுத்துக்கூறுகிறது. ‘குடி குடியைக் கெடுக்கும்!’, ‘குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற எச்சரிக்கைகள் உண்மையாகிப் போயின என்பதற்கு, மற்றொரு நிகழ்வு இங்கு அரங்கேறியிருக்கிறது. ஒருமுனையில் ஒரு பருவத்தினருக்குக் குடிதண்ணீர் பருகுவதை உற்சாகப்படுத்தும் இந்த அரசு, மறுமுனையில் மற்றொரு பருவத்தினருக்குக் ‘குடி’யையும் உற்சாகப்படுத்தி வருவது வேதனைக்குரியது.
மதுநுகர்வின்
உச்ச நிலையில் ஒவ்வொரு மனிதனும் இம்மானுட மாண்பைச் சிதைப்பதோடு, மனித நேயமற்ற, வாழ்வியல் அறநெறி இல்லாத, கொடிய மிருகத்தனமான செயல்களை மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் மாண்பையும் சிதைப்பது அவலத்தின் உச்ச நிலையே! ஆங்காங்கே நிகழும் இத்தகைய அவல நிலைகளில் மனிதனின் அடிப்படைத் தன்மையும், இயல்பு நிலையும் பெரும் கேள்விக்குள்ளாகிறது.
சுயநலத்தில்,
ஆணவத்தில், அகங்காரத்தில் சிக்குண்ட மனித இனம், சக மனிதர்களைப் பற்றிச்
சிறிதேனும் சிந்திக்க மனமில்லாமல் போனதை என்னவென்று கூறுவது? சக மனிதனைப் பற்றிச்
சிந்திக்க மனம் இல்லாதவன் எப்படிச் சமூக மனிதனாவான்? அறநெறி சிதைந்த வாழ்க்கையால் இன்று மக்களிடையே ‘மனிதம்’ முற்றுமாக மறைந்து போனது வேதனைக்குரியது.
“சக மனிதர்களின் நலனில்
நாட்டம் உள்ளவர்களால்தான் சமூகம் சிறப்புறும்” என்றனர்
நம் முன்னோர்கள். அவ்வாறே, கைம்மாறு கருதாத உண்மையான அன்பு, அடுத்தவர் நலன், பிறர் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருள்கருணை, பகைவரிடத்திலும் வெறுப்பின் நிழல் படியாத பாசம், தன்னுயிர்போல் எல்லா உயிர்களையும் பாவிக்கும் பண்பு நலம் ஆகியவற்றின் கூட்டுறவில் பிறப்பதுதான் மனிதநேயம் என ஞானிகளும் சிந்தனையாளர்களும்
வரையறுத்துத் தந்தவை யாவும் இன்று இச்சமூகத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
பள்ளிப்
பாலகர்களின், பச்சிளம் குழந்தைகளின் வாழ்வில் நிகழ்ந்த இந்த இழிவானச் செயலால் இக் குழந்தைகள் இச்சமூகத்தை நோக்கும் மனநிலையைச் சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும். தந்தை நிலையில், சகோதர உறவில் இக்குழந்தைகளைப் பேணவேண்டிய இச்சமூகத்தின் ஆண் ‘குடி’ மக்களின் இத்தகைய இழிவான செயலால் இன்று ஒட்டுமொத்தச் சமூகமே வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. அன்றே இத்தகைய செயல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தால், இத்தகைய செயல்கள் ஒருபோதும் தொடர்ந்திருக்காது.
ஆகவே,
இனியும் தாமதமின்றித் தமிழ்நாடு அரசு இத்தகைய செயல்களுக்கு விரைந்து தீர்வு காணவும், குற்றம் இழைத்தோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஆவன செய்யவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்