news
தலையங்கம்
வேட்டையாடும் வேலிகள்!

மலர்கள் வேறுபடலாம்; ஆனால், தேன் ஒன்றுதான்என்றார் கவிக்கோ அப்துல் இரகுமான். இங்கு மலர்கள் ஒன்றுதான்; ஆனால், அவற்றில் சில பொதித்து வைத்திருக்கும் தேனிலோ விஷம் கலந்திருப்பதே அதிர்ச்சியளிக்கிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம்என்கிறது முதுமொழி. தாயையும் தந்தையையும் கல்வி கற்றுத்தரும் ஆசானையும் தெய்வங்களாகப் போற்றி மதித்தது இச்சமூகம். அவர்கள் அறநெறியில் மேலோங்கி, வாழ்வியலில் சிறந்தோங்கியதால் அருள்பாவிக்கும் இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டனர். மனிதர்கள் தெய்வங்கள் ஆகலாம் என்பதற்கான சான்றுகள் இவர்கள்.

மனிதன் என்ற பெயர் எப்படி வந்தது? சமஸ்கிருதத்தில்மன்என்றால் மனம் என்று பொருள்; மனம் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதால் அவன்மனுஷன்மனிதனாகிறான்.

மற்ற உயிர்களுக்கு மனம் இல்லை. மனம் இருப்பதாலேயே மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டான், மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நின்றான். ஆக, மனம் மனிதனுக்கு வரமா? என்றால் ஆம், பலருக்கு வரம்; சிலருக்கு அது சாபம். மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்களுக்கு அது வரமே! அது போகின்ற போக்கிலேயே அதை அலைய விடுபவர்களுக்கு அது சாபமே!

எல்லா உணர்வுகளிலும் உச்சம் தொட்டவன் மனிதன். ஆயினும், அதை நெறிப்படுத்தும் தன்மையையும் ஆற்றலையும் அவன் கொண்டதால்தான் அவன் படைப்பின் சிகரமாக இருக்கிறான். நல்லது-தீயது என ஆய்ந்து அறிகிறான்; உண்மை-பொய்மை என வேறுபடுத்திப் பார்க்கிறான்; சரி-தவறு எனத் தெளிவுபடுத்திக் கொள்கிறான். இந்த வேற்றுமை அறியாதவர்களை, இந்த வேறுபாட்டை உணராதவர்களை எந்த வரையறையில் வைப்பது? இவர்கள் மனம் கொண்ட மனிதர்களா? சிந்தனைத் தெளிவு கொண்ட படைப்பின் சிகரங்களா? புனிதத்தின் சாயல் கொண்ட மனிதர்களா? என்னவென்று சொல்வது?

மதிப்பீடு (Values), உரிமை (Rights), ஒழுங்குமுறைகள் (Rules and Regulations), கட்டுப்பாடு (Discipline) என்பவை யாவும் மானுட சமூகத்தின், அறநெறிக் கட்டமைப்பின், அதன் நாகரிகத்தின் அளவுகோல்கள். இவற்றுள் ஒன்று பிறழ்ந்தாலும் உன்னதச் சமூகம் படைப்பது அரிது.

உடல், மனம், உணர்வு என்பவை சங்கமித்து அறநெறி வரையறைக்குள் தெளிந்த நீர்ப்பரப்பாகப் படைப்பின் மேன்மைகளைச் சுமந்து வந்த மானிடர் என்னும் நதி, கட்டவிழ்த்துவிடப்பட்ட புதிய கலாச்சாரம் கொண்டு வந்து குவித்த காமச் சேறும், பாவச் சகதியும் மனிதனின் மனநிலையை அடியோடு மாற்றிவிட்டன.

இங்கு ஆசை என்பது வரையறை கடந்து, அதை அடையும் வேட்கை என்பது வெறியாகிவிட்டது. இங்கே காந்தியடிகளின் வார்த்தைகளே நம் நினைவுக்கு வருகின்றன: “கட்டுப்பாடு என்பதே நாகரிகமற்றது என்று நினைத்தால், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதே மனிதகுலச் சட்டமாகி விடும். இயற்கையிலேயே மனிதன், மிருகத்தை விட உணர்ச்சிவயப்பட்டவன். கட்டுப்பாடு  இல்லையெனில், மனிதரின் அடங்காத காமம் முடிவில் மனித இனத்தையே அழித்துவிடும். தன்னைக் கட்டுப்படுத்துவதிலும் பிற நலனுக்காகத் தியாகம் செய்வதிலும் மிருகத்திடம் இல்லாத ஆற்றல் மனிதரிடம் இருப்பதால்தான், உயர் நிலையில் மனித இனம் இருக்கிறதுஎன்றால் கண்காணிக்க வேண்டியவர்களே கபளீகரம் செய்யும்போது... “வேலியே பயிரை மேய்கிறதுஎன்பார்கள். ஆனால், அண்மைக் காலங்களில் வேலிகளே வேட்டையாடுகின்றன. அன்பும் அறனும் கொண்ட கல்வியைக் கற்றுத் தரும் ஆசான்கள் பள்ளிகளில் குழந்தைகளைப் பாலியல்  துன்புறுத்துதலுக்கு உள்ளாக்குவதை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

அறிவுக் கண் கொண்டிருக்கும் ஆசான்கள், காமவெறி கொண்ட கயவர்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று தோன்றத் தொடங்கிவிட்டார்கள். ‘நுகர்வு வெறிகொண்டவர்க்கு நாணமுமில்லை; மானமும் இல்லைஎன்பார்கள். இவர்களும் அப்படித்தான் போல!

வாழும்போதே முழுமையாக வாழ்ந்திட வேண்டும்; எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் என்பார்கள். ஒவ்வொரு கணப்பொழுதும் நாம் சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ‘சிறப்புஎன்பது பொருள் அல்ல; பதவியல்ல; பணமும் அல்ல; மாறாக, அது ஒழுக்கநெறி பிறழாத வாழ்வியல்!

ஒவ்வொரு மனிதருக்கும் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம்; அதையும்  கடந்த சமூகக் கட்டுப்பாடு என்பது இன்னும் மேலோங்கியிருக்க வேண்டும். “சமூகக் கட்டுப்பாடுகளில்தான் சுகமும், அமைதியும் பிறக்கின்றனஎன்கிறார் வால்டேர். இன்று காம வெறியர்களால் கட்டற்ற சமுதாயம் நம் கண்முன்னே கட்டமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள், மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம் அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் நம்மைப் பெரிதும் பதைபதைக்க வைக்கின்றன.

இத்தகைய பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில், இப்புகார்களில் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி இரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும் அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டுமெனத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதும், அதன் தொடர்ச்சியாகமருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும்எனத் தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதும் சற்றே ஆறுதல் தந்தாலும், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே இச்சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை - 121, 2012-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருப்பதும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 12 (2) கீழ் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் இருந்தபோதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கும் வகையில்போக்சோசட்டத்தில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது கவலையளிக்கிறது.

ஆயினும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவ-மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித்துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது; இவர்கள்மீது மார்ச் மாதமே நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே!

இத்தகைய சூழலில் ஒன்று, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்குப் பாலியல் கல்வி, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவு முறையாக வழங்கப்பட வேண்டும்.

இரண்டு, வீட்டிலும் பள்ளியிலும் பொதுவெளியிலும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், அரசும் சமூகமும் இன்னும் தீவிரக் கவனம் கொண்டிருக்க வேண்டும். போதிய பாதுகாப்புச் சட்டங்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளும் உறுதி செய்யப்பட்ட போதிலும், சமூகத்தில் எதிர்வரும் தலைமுறையினரிடமும் மனித மாண்பு, பாலியல் சமத்துவம், அறநெறி மதிப்பீடுகள் பற்றி  முறையாகக்  கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய மதிப்பீட்டுக் கல்வி நம் குடும்பங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறோம்!

மூன்று, தாயாக, தந்தையாக, நல்வழி காட்டும் ஆசானாகப் பயணிக்க வேண்டிய மேன்மக்கள் தங்கள் சமூகக் கடமைகளை, பொறுப்பு மிக்க செயல்பாடுகளை அறநெறி பிறழாது பின்பற்ற வேண்டும். “வேலிகள் பயிர்களைக் காப்பதற்காகவே அன்றி, அவற்றை வேட்டையாடுவதற்காக அல்லஎன்பதை உணர்ந்தாக வேண்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
அடிப்படைக் கல்வி: அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய மண்ணில் சுதந்திரம் கண்விழித்து 78 ஆண்டுகள் கடந்த பின்னும், எழுத்தறிவின்மை என்பது முற்றிலும் ஒழிக்க முடியாத பெரும் சவாலாகவே நீடிக்கிறது. அறியாமை இருள் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அவலம் இன்றும் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 86-வது திருத்தம், கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்த்திருந்தாலும், அனைவருக்கும் தரமான கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. கல்வி அமைப்பின் இரட்டைத் தன்மையே இதற்குக் காரணsம் என்கிறது ஆச்சாரியார் இராமமூர்த்தி கமிட்டியின் அறிக்கை. அதாவது, பணம் படைத்தவருக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியும், அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு அறிவும் திறனும் வளர்க்க ஆதாரமற்றக் கல்வியும் வழங்கப்படுவதுதான்சமூக நீதிஎன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும், விடுதலை அடைந்ததிலிருந்து இன்றுவரை, இந்தியாவில் கல்வி வளர்ச்சியே இல்லை என்றும் எவராலும் கூறிவிட முடியாது. கல்விநிலையங்கள் எண்ணிக்கைகளில் அதிகரித்திருப்பதும், அங்கே பாடத்திட்டங்களில் அதன் உள்பிரிவுகளில் பல்வேறு நுண்துறைகள் வளர்ச்சி கண்டிருப்பதும் வெள்ளிடைமலை. ஆயினும், கற்றறிந்த அறிவுச் சமூகத்தை முற்றிலும் நம்மால் காண இயலவில்லையே? என்பதுதான் இங்குக் கவலையளிக்கிறது.

ஆரம்பக்கல்வியில் அடியெடுத்துவைக்கும் 100 குழந்தைகளில் 10 பேர் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பதில்லை; எட்டாம் வகுப்பிற்கு மேல் 30 குழந்தைகள் நின்று விடுகின்றனர்; உயர்கல்வி நிலையங்களின் உள்ளே வெறும் 20 பேர் மட்டுமே நுழைகின்றனர்! அந்த 20 பேரிலும் பெரும்பான்மையினர், பணம் படைத்தோரின் வாரிசுகள். இத்தகைய சூழலில், ‘எல்லாருக்கும் கல்விஎன்ற யுனெஸ்கோ அமைப்பின் கனவு எப்போது இங்கு நனவாகும்? என்பதே நமது கேள்வி.

ஆரம்பக் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒன்றிய-மாநில அரசுகள் உயர்கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்து விட்டன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புது டெல்லி ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் அரசுப் பொறுப்பில் நடக்கும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள்கூட இல்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இந்தியா முழுவதும் 75 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகளே கிடையாது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

காளான் குடைகள் போல் அங்குமிங்கும் பெருகிக் கிடக்கும் மழலையர் பள்ளிகளும், ஆங்கில வழிப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளும் நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத் தொகை சாமானியரை விழிபிதுங்க வைக்கிறது. ‘இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் படிப்பதைவிட, தொடக்கப் பள்ளிகளில் படிப்பதற்கு அதிகம் செலவாகிறதுஎன்கிறது புள்ளிவிவரம். சற்றே விழித்துக் கொண்ட மாநில அரசுகள் சிறிது உறக்கம் கலைந்து, பள்ளிக் கட்டணத்துக்கு உச்சவரம்பு விதித்திருப்பது பாராட்டத்தக்கது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உயர்ந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆயினும், அண்மையில் வெளிவந்திருக்கும் கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை - 2024 (ASER - Annual Status of Education Report - 2024) பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 65 மாவட்டங்களில், 17,997 கிராமங்களில், 15,728 பள்ளிகளில், 3,52,028 குடும்பங்களில், 6,49,491 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வருடாந்திரக் கல்விநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இது குழந்தைகளின் பள்ளிப் படிப்பு மற்றும் கற்றல் நிலை குறித்த நாடு தழுவிய தரவுகளாகும். நாட்டின் கிட்டத்தட்ட அனைத்துக் கிராமப்புற மாவட்டங்களுக்கும் சென்று குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிலை, அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகள் குறித்த அறிக்கையை இது வெளிப்படுத்துகிறதுஇவ்வறிக்கையில், 3 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 5 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எளிய உரையைப் படிக்கும் திறனும் அடிப்படை எண்கணிதத்தைச் செய்யும் திறனும் சோதிக்கப்பட்டிருக்கிறது. 14 முதல் 16 வயதுடைய மூத்த குழந்தைகளின் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) அணுகல் மற்றும் தனித் திறன்களின் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

இதில், மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் 76 விழுக்காடு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் 55 விழுக்காடு மாணவர்களால் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் தங்கள் தாய்மொழியில் இருந்தபோதும், அதைப் படிக்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வகுப்புகளில் உள்ள 66 விழுக்காடு மாணவர்களால் சாதாரண இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்குகளைப் புரிந்துகொள்ளவும் விடை காணவும் முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு அறிக்கை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலுமே வாசிப்பதில் உள்ள பெரிய கற்றல் இழப்புகளைச் சுட்டிக்காட்டியது. ஆயினும், 2024-ஆம் ஆண்டு அறிக்கை மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே காணப்படும் கற்றல் இழப்பு கல்வியின் தரத்தைப் பெரிய அளவில் பின்னடையச் செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. எண்கணிதத்தைப் பொறுத்த வரையில் அகில இந்திய அளவில் இழப்பு இருந்தபோதிலும், வாசிப்பில் ஏற்பட்ட இழப்புடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

உலகையே உலுக்கியகொரோனாபெருந்தொற்றுக் காலகட்டத்திற்கு முன்பிருந்த நிலையை விட, மாணவர்களின் கல்வித்தரம் தற்போது சற்றே உயர்ந்திருந்தாலும், அது சொற்ப அளவிலேயே உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தமட்டில் 30 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே எளிமையான கணிதங்களுக்கு விடை காண முடிகிறது; மீதம், 70 விழுக்காடு மாணவர்கள் கணித விடைகளைக் கண்டறிய திணறுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இத்தரவுகளில் வட மாநிலங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

குழந்தைகளிடம் குறைந்து வரும் எண்கணித அறிவுத்திறனும் கற்றல் இழப்பும் வாசிப்புக் குறைவும் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நிலையை விட மிக அதிகமாகத் தற்போது இருக்கிறது. மேலும், வாசிப்புப் பின்னடைவு எல்லாப் பள்ளிகளிலும் பின்தங்கி இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும், எண்கணிதத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் அதிக முன்னேற்றம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட் டில் தொடக்கக் கல்வி முதலே குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அடிப்படைக் கல்வியின் தரம் நாடு முழுவதும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை மீண்டும் விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. நாட்டின் இதர மாநிலங்களின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பைக் கடந்து உயர்நிலைக் கல்விக்குச் செல்லும் மாணவர்களைச் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பும் ஆசிரியர்களும் நம் கண்முன் வருகின்றனர்.

1990-களில் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 62 விழுக்காடு; இன்றைக்கு அது, 80 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. அதேநேரம் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் சரிந்துகொண்டே வருவதைத் தேசிய அளவிலான ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கவே திணறுகிறார்கள். மேலும், பள்ளிக் குழந்தைகள் புத்தகத்தைக் கையில் எடுத்து சுயமாக வாசிக்க உருவானதுதான்வாசிப்பு இயக்கம்.’ அத்தகைய செயல்பாடுகள் இன்று ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தன்னை அறியவும் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் ஒழுக்கம் செறிந்த நெறிகளைப் பேணிப் பராமரிக்கவும் உதவுவதற்குப் பெயர்தான்கல்வி.’ கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன்பண்பாடுஎன்ற புரிதல் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் வர வேண்டும். கல்வியின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அன்று; மாறாக, நாம் வாழும் வாழ்க்கையைப் பலப்படுத்துவது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வளமான கல்வியாக மாற்ற முயலுவோம்.

நாளையத் தலைவர்கள் தோன்றும் நாற்றங்கால் தொடக்கக்கல்விக் கூடங்கள். நாட்டின் எதிர்காலச் சிற்பிகளுக்குச் சிறப்பான கல்வி தருவோம்! நானிலம் போற்றிடும் நன்மக்களாய் வளர்த்தெடுப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
மாறுமா... மாற்றாந்தாய் மனநிலை?

இன்று எவரும் விமர்சனங்களை விரும்புவதுமில்லை; வரவேற்பதுமில்லை. ஆயினும், பொதுவெளியில் சமூக, அரசியல் தளங்களில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவைகளே!

தனிமனித விமர்சனங்களைத் தவிர்த்து, கருத்துகளின் மீதும் கருத்தியலின் மீதும் செயல்முறைகளின் மீதும் விமர்சனம் எழுவது ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

அத்தகைய கருத்து வேறுபாடுதான் சனநாயகத்தின் சாராம்சம். “Dissent is the essence of democracy!” என்பார்கள். நலமான விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும்தான் சனநாயகத்தை நேரிய வழியில் பயணிக்க வைக்கும்; அங்கே உண்மை நிலைக்க வழிவகுக்கும்; சனநாயகம் தழைக்க வழி பிறக்கும்.

என் தவறுகளை விமர்சிப்பவர், நேரில் அந்த விமர்சனங்களை வைக்கட்டும்; அவருடைய வரவுக்காக நான் காத்திருக்கிறேன்என்றார் பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகன் ரூசோ. அது அவருடைய தவறுகளை விமர்சிப்பதற்கான அழைப்பு.

மற்றொருபுறம், வெற்றியாளர்களும் வெற்றியும் ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படக்கூடாது; அங்கே விமர்சனங்களும் கேள்விகளும் எழுப்பலாகாது என்பதும் பலருடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால், “எங்கும் யாவும் மதிப்பிடப்படவும் விமர்சிக்கப்படவும் கேள்விக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்; அப்போதுதான், அதில் உள்ள உண்மைத்தன்மை புடமிடப்படும்என்றார் சோவியத்தின் இரும்பு மனிதர் ஜோசப் ஸ்டாலின்.

இந்திய ஒன்றிய அரசின் 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுத்த பட்ஜெட்; இது நடுத்தர வகுப்பினரின் குரலுக்குச் செவிசாய்த்திருக்கிறதுஎன்று சுய விமர்சனம் தந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, ஒரு சாமானியனின் பார்வையில் இதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதும் இங்கே அவசியமாகிறது.

புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ் தனிநபர் வருமான வரிவிலக்கின் உச்சவரம்பு ரூ. 7 இலட்சத்திலிருந்து ரூ. 12 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து, பாராட்டப்படக் கூடியதாக அமைந்தாலும்கண் பார்வை இழந்த பின்பு சூரிய நமஸ்காரம் தேடும் செயலாகவேஇது பார்க்கப்படுகிறது.

கொரோனாபெருந்தொற்றுக்குப் பிறகு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் பெரிதும் முடக்கப்பட்ட சூழலில், அவர்களின் ஏற்றத்திற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, அப்போதும் எப்போதும் பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் தந்து, தாராளமயமாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் வழிவகுத்துவிட்டு, காலம் கடந்த இச்சூழலில், நடுத்தர வர்க்கத்தைத் தூக்கி நிமிர்த்த முன்வந்திருப்பது நகைப்புக்குரியது.

நாட்டின் பொருளாதாரத்தையும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தொழில்துறையினர் கருத்து தெரிவித்தாலும், காலம் கடந்து கடை விரிப்பதனால் பலன் ஏதும் உண்டோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போதாவது விழித்துக் கொண்டார்களே என்று சற்றே ஆறுதல் அடைந்தாலும், எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தக் கூடும்என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எப்போதும் ஒன்றிய அரசுக்குத் துதிபாடும் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “இது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எனக் கூறுவதைவிட, பீகார் மாநில வரவு-செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி அமைந்துள்ளதுஎனவும், “தமிழ் நாட்டுக்கு எந்தவிதமான சிறப்புத் திட்டங்களும் இதில் இல்லை. இது ஒரு மாயாஜால அறிக்கையாக வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்கிறதுஎன்றும் விமர்சித்திருக்கிறார்.

வளர்ச்சி நோக்கிய திட்டங்களும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற இலக்கும் இதில் ஒன்றும் தெளிவுபடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகவேதான், திரு. வைகோ அவர்கள், “புற்றுநோய் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு, கிராமங்களில் 1.5 இலட்சம் தபால் நிலையங்கள், சாலை வியாபாரிகளுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்குதல் போன்ற வரவேற்கத்தக்கக் கூறுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தருகிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வருமான வரி படிநிலைகள் மற்றும் விகித மாற்றங்களால் சாமானியர்களின், குறிப்பாக, நடுத்தர வகுப்பினரின் வரிகள் குறையும்; இது அவர்களின் கையில் கூடுதல் பண இருப்புக்கு வழிவகுக்கும்; குடும்பங்களின் நுகர்வு, சேமிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கும்; மேலும், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதை எல்லாம் சற்று காலதாமதமாகவே இந்த அரசு உணர்ந்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பெரும் முதலாளிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையுமே சார்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் இந்திய ஒன்றிய பா... அரசு, இந்த முறை நடுத்தர வர்க்கம் என்பதைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஊதிய உயர்வு இல்லாமல், வேலை வாய்ப்புகளும் அமையாமல், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை அரசு உணரத் தொடங்கி இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் தனிக் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது; சுங்கவரியில் அவர்களுக்கு அதிக சலுகைகள்  அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக ஒன்றிய பா... அரசால் இந்த நிதிநிலை அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்புஎன்று கூறப்படும் பழமொழி போல ஓரவஞ்சனையாகப் பீகார் மாநிலத்திற்குப் பல நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஓர் அறிவிப்புகூட இடம்பெறாமல் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே! “இது மாநிலங்களுக்கு இடையே பாகுபாடுகளை உருவாக்கும்; பிரிவினைவாத போக்கை ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்என்று திருமாவளவன் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதே.

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் ஒன்றிய பா... அரசு காட்டும் ஆர்வத்தில் சிறு துளியாவது இந்த நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?” என்று தமிழ்நாட்டின் முதல்வர் வெளிப்படுத்தும் ஆதங்கம், நம் எண்ண அலைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், ஒன்றிய அரசின் பா... ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான தந்திர அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் குறிப்பிடுவது போல, “வெற்றுச் சொல் அலங்காரங்களும் வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பா...வின் நாடகம் தொடர்வதாகவே அமைந்திருக்கிறது!” இத்தகைய மாற்றாந்தாய் எண்ணங்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஓரவஞ்சகத்திலே உண்டு கொழிக்கும் ஆட்சியாளர்களைக் காணும்போது...

கணக்கு மீறித் தின்றதாலே

 கனத்த ஆடு சாயுது - அதைக்

கண்ட பின்னும் மந்தையெல்லாம்

அதுக்கு மேலே மேயுது!”

என்னும் பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

 

news
தலையங்கம்
வான்புகழ் தமிழின் வளம் கொண்ட இலக்கியங்கள்! (பிப்ரவரி - இலக்கியத் திங்கள்)

ஒரு சமூகத்தின் மாண்பு அச்சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்வியலோடு இணைந்திருக்கிறது என்பதே பேருண்மை. இத்தகைய கூறுகளே அச்சமூகத்தின் முகவரியாய், அதன் வளமான அடையாளங்களாய் அமைகின்றன. அவ்வாறே, “உலகில் ஒரு நாட்டினுடைய மனித இனத்தின் சிறப்பையும் செம்மையையும் உயர்வையும் மேன்மையையும் உணர்த்தநாகரிகம்மற்றும்பண்பாடுஎன்னும் இரண்டு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றனஎன்கிறார் தமிழறிஞர் இரா. நெடுஞ்செழியன்.

இக்கூற்று முற்றிலும் உண்மையே! இவ்விரு தன்மைகள்தான் மனித இனத்தைப் பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவ்விதத்தில், மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு, உடை, உறைவிடம், ஊர்தி, நிலம், புலம், தோட்டம், துரவு, கழனி, காடு, அணி, மணி, மாடமாளிகை, எழிலுடல், ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவதே நாகரிகம் (Civilization) என்பார்கள். அதுபோலவே, மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், இயல்பு, உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஈவு, இரக்கம், அமைதி, அடக்கம், ஒப்புரவு, ஒழுக்கம், உண்மை, ஊக்கம், சினம், சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவதே பண்பாடு (Culture).

இவ்விரு படிநிலைகளிலும் தமிழரின் வாழ்வியல் பெருமைகள் வானளாவ உயர்ந்தவை. தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது; என்றும் மகிழ்ந்து போற்றுகிறது.

பண்டைய தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்வியலில் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டு மேன்மையும் சிறப்புற்றிருந்தது என்பதைப் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களும், புராதன காலப் பயன்பாட்டுப் பொருள்களும், சங்ககாலப் பைந்தமிழ் இலக்கியங்களும் சான்று பகர்கின்றன. அவ்வாறே, வைகைக் கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின்கீழடிஆய்வுகள் இன்னுமாய்த் தமிழின் தொன்மையை உணரச் செய்து, ‘கீழடி நம் தாய்மடிஎன்றே பறைசாற்றுகின்றன.

மேலும், தமிழுக்கும் தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும் சீர்மிகு இலக்கியப் படைப்புகளாலும் உலக அரங்கில் இன்றும் என்றும் மாபெரும் அங்கீகாரமும் சிறப்பும் உண்டு என்றால் அது மிகையல்ல. மேலைநாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைப்பதும், தமிழ் மொழியின் தொன்மையினை அறிய கல்வியாளர்களும் மொழி ஆர்வலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழின் வளமையை, தமிழரின் பெருமையை உலகறியச் செய்கின்றன.

இலக்கணம் பேசும்

                தொல் காப்பியமும்

வாழ்வியல் அறம்தரும்

                வள்ளுவன் கூற்றும்

வளமாய் வாய்த்த வான்புகழ்

                தமிழே - உந்தன்

இலக்கியச் செழுமை

                எங்கேனும் உண்டோ!

அறநெறி வாழ்வியல்

                செவ்வழி காட்டிடும்

வான்முகில் தொட்ட

                செம்மொழி தமிழே

வளமை கொண்டவுன்

                வாசம் எங்கும்

பரவிட உயர்ந்திட

                வாழ்க நீ வாழ்கவே!’

என்றே பெருமை கொள்ளும் வகையில் சிறப்பு கொண்டது நம் மொழியும் அதன் இலக்கிய வளமையும்.

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

                                 உயிருக்கு நேர்!’

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளைக் கொண்ட அமுதமொழி நம் தாய்மொழி; அஃது இன்பத் தேன்மொழி; இலக்கியச் செம்மொழி. இது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புகின்ற உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று. வரையறை கொண்டு எல்லைக்கு உட்பட்ட மனித வாழ்வின் எதார்த்த அனுபவங்களை, பரந்த மனதுடனும், விரிந்த கற்பனை வளத்துடனும், சீர்தூக்கிப் பார்த்து, மொழிவழியாகச் சுவைபடத் தருவதே இலக்கியங்களின் தனிச்சிறப்பு.

சுருங்கக்கூறின், பல்லாயிரம் நபர்களின் வாழ்வியல் அனுபவங்களை ஓரிடத்தில் குவியலாக்கி அள்ளிக் கொடுப்பதே அழகுத் தமிழ் இலக்கியங்கள்.

இந்தப் பிப்ரவரி மாதத்தில் நம் இலக்கியத்தின் பெருமை அறிவோம்! கடந்துபோன வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவும், நாளைய வாழ்க்கை நிகழ்வுகளை அறத்தின் வழிநின்று சீர்தூக்கிச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுவதே நம் இலக்கியங்கள். நேற்றைய அறநெறி வழியில் நின்று, இன்றைய சமூகத்தைச் செம்மைப்படுத்தி, நாளைய உலகைப் புதிதாய்ப் படைக்க வழிகாட்டும் ஒளிவிளக்கே நம் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் இலக்கிய உலகம் ஆழிப்பெருங்கடல் போன்றதுகுறிப்பாக, தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 சிற்றிலக்கிய நூல் வகைகள் இருப்பினும், இன்று பல புதிய இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியங்கள் விரிந்து செல்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம் எனப் பழங்காலத்தில் வகைப்படுத்தப்பட்டவை, இடைக்காலத்தில் பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், உரை நூல்கள், புராண இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இவை கிறித்தவ தமிழ் இலக்கியம் மற்றும் புதினம் எனவும், இருபதாம் நூற்றாண்டில் கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை எனவும் இக்காலத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.  

மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதே அம்மொழியின் வளமையான இலக்கியப் படைப்பே! பண்டையகாலத் தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களைப் படைத்து, அதில் நல்ல பல கருத்துகளை இழையோட விட்டிருக்கின்றனர். அத்தகைய தமிழ் மொழியின் இலக்கியங்கள் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பிரித்தறியப்பட்டு காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய தமிழர் இலக்கியங்கள், வாழ்வியல் அறநெறிப் பெட்டகங்கள். எல்லாச் சூழல்களிலும் மனிதன் அறம் சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை, வாழ்வியல் நெறிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழர் இலக்கியங்கள் மெய்யியல் நூலகங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் அடைந்த வாழ்வியல் மெய்மைகள் அனைத்தும் ஒருசேரக் கோர்க்கப்பட்ட அழகுப் பாமாலையே தமிழர் இலக்கியங்கள்.

நம் தாய்மொழி இமயம் தொடும் இலக்கியச் செழுமை கொண்டது! தமிழ்மொழியின் இனிமையையும் அழகையும் அளந்துகாட்ட முடியாது. தமிழ் மொழிக்கென்று தனியழகு இருப்பது உலகம் அறிந்த பேருண்மை!

நம் தாய்மொழி தமிழ், இலக்கியச் செழுமை கொண்ட செம்மொழி. இம்மொழியில் இலக்கியங்களுக்குப் பஞ்சமில்லை; அதன் இனிமைக்கும் எல்லை இல்லை. தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும்தான் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

இலக்கியம் தாய் என்றால் இலக்கணம் சேய்இலக்கியம் தேமாங்கனி என்றால், இலக்கணம் தீஞ்சுவைச்சாறு; இலக்கியம் பெருவிளக்கு என்றால், இலக்கணம் அதன் ஒளி; இலக்கியம் எள் என்றால், இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை அறிந்த நம் முன்னோர்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்

எனக் கூறி வியந்தனர். இத்தகைய வளம் செறிந்த இலக்கியக் கருவூலத்தை நமது இளையத் தலைமுறையினரே நாளைய உலகிற்குச் சுமந்து செல்ல வேண்டியவர்கள். ஆகவே, நாம் மொழியை இறுகப் பற்றிக்கொள்வோம்! அதன் சிறப்பை உலகறியச் செய்வோம்! தமிழினத்தின் வளமை அறிவோம்! தமிழர் எனப் பெருமை கொள்வோம்!

வாழ்க தமிழ்! வளர்க அதன் இலக்கியப் பண்பாட்டுப் பெருமை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வரலாறு படைத்திருக்கும் ‘நம் வாழ்வே’நீ வாழ்க! வளர்க!

உலகை மாற்றவல்ல உன்னத ஆயுதம்  எழுத்துஎன்றார் இங்கிலாந்து நாடக எழுத்தாளர் டாம் ஸ்டபோர்டு. ஒலி, உடல் மொழிக் கூறு, எழுத்து, ஓவியம், காட்சி என ஊடகம் பரிணாமப்பட்டாலும்எழுத்துஎன்பது எல்லாத் தளங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று; அது தனிப்பெரும் ஆற்றல் கொண்டது.

ஊடகம் - சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; கலாச்சாரப் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் கருவி; ஒரு சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றும் புரட்சிமிகு ஆயுதம். ஊடகத்தின் இந்த முக்கூறுகளும் சமூகத்தையே மையம் கொண்டவை; சமூக மாற்றத்தையே இலக்காகக் கொண்டவை. இங்கு வரலாறு வாசிக்கப்படுகிறது; வாசிப்பு வாழ்வாக்கப்படுகிறது! ஆகவேதான், “இதழியல் துறை, வாசகர்களைத் தங்கள் வரலாற்றைச் சுவாசிக்கச் செய்கிறதுஎன்கிறார் அமெரிக்க இதழியலாளர் ஜான் ரிச்சர்ட் ஹர்சி.

அவ்வாறே, நேற்றைய நிகழ்வு இன்றைய செய்தியாகி, நாளைய தலைமுறைக்கு ஆவணமாகிறதுவரலாறாகப் பதிவாகிறது! அவ்வகையில், தனது 50 ஆண்டுகாலப் பதிவுகளைச் செய்தியாக்கி, எதிர்வரும் தலைமுறைக்கு ஆவணமாக்கும் வகையில், தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழும் இன்று வரலாறு படைத்திருக்கிறது.

அகவை 50 என்பது ஓர் இதழுக்கு நீண்ட நெடிய பயணம்; அது ஒரு வரலாற்றுச் சாதனை. அதுவும் சமூக மதிப்பீடுகளை, கிறிஸ்துவின் இறையரசு விழுமியங்களைத் தழுவிக்கொண்டுஉண்மையை உரக்கச் சொல்லிசமரசமின்றிப் பயணிப்பது என்பது ஒரு சவால்; அதில்நம் வாழ்வுவெற்றி கண்டிருக்கிறது. ‘நம் வாழ்வுவார இதழ் இந்த அளவுகோலில் 50 ஆண்டுகாலம் பயணித்திருப்பதே மிகப்பெரிய சாதனை!

ஊடக உலகம் அனுப்புநர் - பெறுநர் என்ற தளத்தில் பயணித்தாலும், ஒரு செய்தி எங்கிருந்து வருகிறது அல்லது யாரிடமிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதனுடைய முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது; கவனிக்கப்படுகிறது.

சமநீதிச் சமத்துவம் கொண்ட சமூகச் சிந்தனைகளை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிந்தனையில் தளம் கண்ட அரசியல் சாசன வழி நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டும் அரசியல் கட்டுரைகளை, அறநெறிச் சமூகம் பேணும் வாழ்வியல் நெறிமுறைகளைத் திருவிவிலிய, ஆன்மிக, உளவியல் தளங்களில் உரசிப் பார்த்து, கருத்துகளைச் சுமந்து வரும்நம் வாழ்வுபலராலும் இன்று வரவேற்கப்படுகிறது; பாராட்டப்படுகிறது. காரணம், இது பொதுச் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கிறது; ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகள் கொண்ட செயல்பாடுகளை முன்வைக்கிறது; ‘நம்எனும் அடைமொழியே அதற்குச் சான்று. மானுட இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் அடி நாதம்வாழ்வு.’ இந்த வாழ்வு ஒரு மாபெரும் கொடை! அதைப் பொருளுள்ள வகையில் தனதாக்கிக்கொள்ள இச்சமூக உறுப்பினர்களுக்கு வழிகாட்டும் ஒரு புரட்சிக் குறியீடே (Revolutionary Icon) ‘நம் வாழ்வு!’

இத்தகையச் சிறப்புமிக்க கத்தோலிக்க வார இதழானநம் வாழ்வுஇன்று பொன்விழாக் கண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. ‘சேர்ந்தே இருப்பது மதுரை மண்ணும் தமிழ் மனமும்எனப் பெருமை கொள்ளும் வகையில், முச்சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் வார இதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழா மதுரையில் நிகழ்ந்தது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியது. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த நல் உள்ளங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு எண்ணிப் பார்க்கிறேன். சிறப்பாக இவ்விழாவின் நன்றித் திருப்பலிக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், பாராட்டு விழாவிற்குத் தலைமை வகித்த மதுரை மேனாள் பேராயர் மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்களுக்கும், விழாவிற்கு முன்னிலை வகித்த பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழ்நாடு கிறித்தவர்களின் முகமாய், முகவரியாய், இளையோரின் எழுச்சி நாயகனாய், கிறித்தவ நல்லிணக்கத்தின் அடையாளமாய் விளங்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ் அவர்களுக்குச் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொன்விழா ஆண்டில் முதன்மை ஆசிரியராக இவ்விழாவை முன்னெடுத்துச் செல்ல என்னே யான் பெற்ற பெரும் பேறு! இவ்விதழோடு கொண்ட பற்றாலும், என்னோடு கொண்ட நட்பாலும் இவ்விழாவில் கலந்து கொண்ட நம் வாழ்வின் மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்கத் தலைவர்கள், மேனாள் முதன்மை ஆசிரியர்கள், மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவற சகோதரர்கள், இவ்விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், வர்த்தக நிறுவனத்தார், பெருந்திரளாகக் கூடியிருந்த இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சம்நிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க விழா, சீரும் சிறப்புமாக நடைபெற ஆசியும் ஆலோசனையும் வழங்கிய மதுரை உயர் மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகி மேதகு ஆயர் அந்தோணிசாமி (பாளை மறைமாவட்ட ஆயர்) அவர்களுக்கும், பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் நல்கிய மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. பால் பிரிட்டோ அவர்களுக்கும், தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருள்பணி. லூயிஸ் அவர்களுக்கும், ஞானஒளிவுபுரம் பங்கு-தூய வளனார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. A. ஜோசப் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவின் பல்வேறு ஏற்பாடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாராளமான பொருள் உதவி நல்கிய நன்கொடையாளர்கள், வர்த்தக நிறுவனத்தார் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, இவ்விழாவிற்குத் திட்டமிட்ட முதல் நாளிலிருந்து இந்நாள் வரையிலும் எமக்கு வழிகாட்டுதலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து, இவ்விழாவின் வெற்றிக்குப் பெரிதும் துணையிருந்தநம் வாழ்வுவெளியீட்டு சங்கத்தின் தலைவரும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணைந்து இறைவனுக்கு நன்றிகூறும் இப்பொன்விழா தருணத்தில், வாருங்கள்... இணைந்து பயணிப்போம்! கூர்முனை புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வாசிப்பை நேசிப்போம்

அறிவு கண் விழிக்க, ஆதி ஆசானாய் இருப்பது மொழி. அந்த மொழியில் தவழும் ஒவ்வோர் எழுத்தும் வார்த்தைகளும் முக்கியமானவை. அவை சிந்தனைகளைச் செதுக்கிச் செப்பனிடுபவை. நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துகளும் சொற்களும் அமையும்போது அவை மொழிக்கு வலிமை சேர்க்கின்றன. எனவே, ஓர் அறிவுநிறைச் சமூகத்தை உருவாக்க புத்தகமும் அதில் மலரும் வாசிப்பும் மிக மிக அவசியமே!

ஆகவேதான், தமிழுக்குப் புதிய உயிரும் உருவமும் உள்ளடக்கமும் தந்து நவீனப்படுத்திய பாரதி, “பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதால் தமிழ் வளர்ந்துவிடாது: மாறாக, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்; இறவாப் புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் படைக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில்எழுத்துஉயிர் கொண்டு, ‘வாக்குவளமாகி, ‘வாழ்வுவரமாக உருவாகும் அறிவுப் புதையலே புத்தகம். ஒவ்வொரு புத்தகத்திலும் இடம்பெறும் சொற்களில் எழுத்துகள் மட்டுமே கோர்க்கப்படுவதில்லை; மாறாக, எழுத்துகளுக்கு இடையே கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆழமான பொருளுடன், உணர்வுகளும் சிந்தனைகளும் களத்தரவுகளும் பொதிந்து வைக்கப்படுகின்றன. ஆகவேதான், புத்தகம் என்பது ஒரு தனி மனிதனின், சமூகத்தின், தேசத்தின் ஆவணம் எனப்படுகின்றது.

புத்தகத்தின் தாக்கம் அளப்பரியது; புத்தக வாசிப்பு உன்னதமானது. இந்தப் புத்தக வாசிப்பால் உறவுகள் மேம்படும்; நட்புகள் ஆழப்படும்; சிந்தனைகள் கூர்மைப்படுத்தப்படும்; புரட்சிகள் முன்னெடுக்கப்படும்; செயல்பாடுகள் வீரியப்படும்; தன்னிலும் சமூகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரும். ஒரு புத்தகத்தில் பதிந்திருக்கும் கருத்துகளில் உண்மை இருந்தால், இத்தகைய அதிர்வுகளை அது ஏற்படுத்தும்.

எழுத்துத்துறை இன்று முற்றிலும் தளர்ந்து வருகிறது. வாசிப்பு என்பது இச்சமூகத்திலிருந்து முற்றிலும் அப்புறப்படும் வண்ணம் நகர்ந்து செல்கிறது. இச்சூழலில், இளையத் தலைமுறையினர் எழுத்தையும் வாசிப்பையும் இரு கண்ணெனக் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது எந்நாளும் நேசிக்கப்பட வேண்டும்! அறிஞர் பெர்னாட்ஷா தனது நண்பருக்குப் பரிசளித்த புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் கண்டதும், அதை மீண்டும் அந்த நண்பருக்கே அனுப்பிவைத்து, புத்தகத்தின் பெருமை பற்றிக் கடிதம் எழுதினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

அண்மையில் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்தது. கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 17 நாள்கள் சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானம் விழாக்கோலம் கொண்டிருந்தது. புகழ்பெற்ற பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றன; சுமார் 900 அரங்குகளில் அவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். சிறுவர் முதல் பெரியவர் வரை யாவருக்குமான சிறப்பான படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், அறிவியல், உலக அறிவு, ஆன்மிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் கதை, கட்டுரை, நாவல், புதினம், சிறுவர்களுக்கான ஓவிய நூல்கள், மொழி ஆய்வு அடிப்படையிலான நூல்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களின் தமிழ்மொழி மற்றும் அகழாய்வு சார்ந்த நூல்கள் எனப் பல நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ்மொழி சார்ந்த படைப்புகள் அதிகம் விற்பனையானது என்னும் தரவு, தமிழ் மரபியல் சார்ந்த படைப்புகள் வாசகர்களின் வாசிப்பு இரசனையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இலக்கணம், இலக்கியம் சார்ந்த நூல்களுக்கு அவர்கள் தரும் மதிப்பையும் வரவேற்பையும் அது சுட்டிக்காட்டுகிறது.

புத்தக வாசிப்பு மட்டுமே என்றும் அழியாத சொத்து. நூல்களை நேசிக்கும் மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவ நிலையிலேயே இருக்கிறார்கள்என்கிறார் சொற்பொழிவாளர் சு. அன்பரசன். புத்தக வாசிப்பு என்பது நம்மை எந்தச் சூழலிலும் கலங்காமல் இருக்கும் மனத்திடத்தைக் கொடுப்பவை. அவை தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும் திகழ்கின்றன. நமது நம்பிக்கைக்கும் நற்சிந்தனைகளுக்கும் புத்தகங்களே வழிகாட்டுகின்றன. ஒருவரது சிறந்த சிந்தனைகளை மற்றவர்களுக்குக் கடத்தக்கூடியதாகப் புத்தகங்கள் உள்ளன.

ஆகவேதான், “மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டு வரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகும். வாழ்க்கையின் தத்துவத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளனஎன்கிறார் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார். புத்தகங்களும் அதில் இழையோடும் கருத்துகளும் மனித வாழ்வையும் சமூகத்தையும் மாற்றி அமைக்கத் தேவைப்படும் தத்துவங்களை எடுத்துரைப்பவை. அவை நமக்குக் கற்கவும் கற்றுத்தரவும் காலத்தால் அழியாத பெட்டகங்களாக இருப்பவை. ஆகவேதான், படைப்பாளிகளும் படைப்புகளும் அமரத்துவம் பெற்றவை என்கின்றனர்.

புத்தகங்களை ஒவ்வொரு முறையும் படிக்கும் போது அவை ஒவ்வொரு விதமான கருத்துகளால் நம்மை ஆட்கொள்கின்றன. கல்வெட்டுகள் போல கடந்த கால வரலாற்றையும், பனித்துளி போல நிகழ்காலச் சம்பவங்களையும் அவை நமக்குக் காட்டுகின்றன. ஆகவே, ஆழ்ந்து வாசிக்கும்போது, உண்மையைக் கண்டுகொள்வோம்; உண்மை வழி நிற்கப் பாதையைக் கண்டுகொள்வோம்; உண்மையின் பாதையில் பயணிக்க உறவுகளைக் கண்டுகொள்வோம்; உறவுகள் ஒன்றிணைந்து புரட்சியைக் கண்டுகொள்வோம்; புரட்சியின் விலை மதிப்பில்லாப் பரிசாக மாற்றங்களைக் கண்டுகொள்வோம்.

தன்னிலும் சமூகத்திலும்  மாற்றத்திற்கான விடியலைத் தருபவை புத்தகங்கள். அதன் அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் நெஞ்சங்களில் சமூக, ஆன்மிக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும்நம் வாழ்வும்அதன் பதிப்பகமும் வெளிக்கொணரும் புத்தகங்களும் அவை முன்வைக்கும் கருத்துகளும் காலத்தால் அழியாதவை.

தரமான புத்தகங்களை இச்சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்து வரும்நம் வாழ்வுபதிப்பகம் இப்பொன்விழா ஆண்டில் - ‘கூர்முனைக் குரல்கள், ‘உண்மையை உரக்கச் சொல்வேன், ‘வாழ்வு வளம் பெற, ‘ஒரு திருக்குடும்பத்தின் பயணம்தெய்வீகத் தடங்கள்எனும் ஐந்து புதிய நூல்களைப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் வெளியிட இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்வீட்டுக்கு ஒரு விவிலியம்என்னும் நமது அறைகூவல், இன்று வீட்டிற்குப் பல திருவிவிலியங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவ்வாறேநம் வாழ்வுஇதழின் இப்பொன்விழா ஆண்டில்வீட்டுக்கு ஒரு நூலகம்என்னும் அறைகூவலை முன்வைக்கிறோம். கருத்து வளமிக்கத் தரமான புத்தகங்களைப் பெற்று, இன்றே நம் வீடுகளில் நூலகம் அமைப்போம்; நாளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர்களை ஏற்றுவோம்!

வாசிப்பை நேசிப்போம்; மாற்றத்தைச் சுவாசிப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்