நம் நாட்டின் எல்லாத் துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் பெற்று, நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளுமைகள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants). அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் உருவாக்கத்திலும் அதை அமல்படுத்துவதிலும் குடிமைப்பணி அதிகாரிகளின் பங்களிப்பு அளப்பரியது. இப்பணிக்கு, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் விருப்பமும், கல்விப் புலமையுடன் கூடிய நிறைந்த அனுபவமும் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன.
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்தும் இத்தேர்வில் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க விடாமுயற்சியும் பயிற்சியும் உயிர்நாளமாய் அமைய வேண்டும். தெளிவான இலக்கு, கூர்மைப்படுத்தப்பட்ட நோக்கம், திட்டமிட்ட
பயிற்சி, பொது அறிவு, கூடுதல் திறமைகளில் கவனம், மனவலிமை, ‘வெற்றி நிச்சயம்’
எனும் தன்னம்பிக்கை ஆகிய படிநிலைகளில் பயணிக்கின்றபோது, வெற்றி என்பது யாவருக்கும் எளிதில் கைகூடுகிறது.
அகில
இந்தியப் பணிகள், மத்திய குடிமைப் பணிகள் (குரூப் A, குரூப்
B) என
மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வுகளில், 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்ட யாவரும் பங்கெடுக்க வயதுவரம்பு இருந்தபோதிலும், சிறப்புப் பிரிவின் கீழ் தனி இடஒதுக்கீட்டின்படி 40 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வின் முதற்கட்டத் தேர்வு அறிவிப்பிலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலான முழு செயல்முறையும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நடைபெறுகிறது. தொடர் வெற்றி காணும் ஒரு பங்கேற்பாளரின் தேர்வு நேரம், ஒரு வருட கால முழுமையான செயல்முறையில் 32 மணி நேரம் தேர்வில் பங்கேற்கிறார்.
ஒன்பது
தாள்கள் கொண்ட முதன்மைத் தேர்வு முடிந்ததும் ஆளுமைத் தேர்வு எனப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இந்த நேர்காணலின் நோக்கம், ஒரு பணிக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டு அமர்வே தவிர, பங்கேற்பாளரைத் திணறடிப்பதற்கான முயற்சி அல்ல! திறமையான பாரபட்சமற்ற தேர்வுக் குழுவால் நடத்தப்படும்
இந்த ஆளுமைத் தேர்வு, பங்கேற்பாளரின் மனத்திடத்தையும் அறிவுத்திறனையும் மதிப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
பங்கேற்பாளருடைய
அறிவுசார் குணங்களை மட்டுமல்ல, சமூகப் பண்புகள், நடப்புச் செயல்பாடுகள்மீது கொண்டிருக்கும் ஆர்வம், அதை மதிப்பிடும் விதம், மனவலிமை, சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கும் திறன், விமர்சனப் பார்வை, தெளிவான தக்க ரீதியான விளக்கம், தீர்ப்பின் சமநிலை, பன்முகத்தன்மை,
கொண்டிருக்கும் ஆர்வத்தின் ஆழம், சமூக ஒற்றுமை பற்றிய புரிதல், தலைமைத்துவத்திற்கான திறன், அறிவுசார் செயல்பாடு, தார்மீக ஒருமைப்பாடு யாவும் மதிப்பிடப்பட வேண்டிய குணங்களாகக் கணிக்கப்படுகின்றன. நேர்காணல் என்பது நுட்பமான, கடுமையான குறுக்கு விசாரணை என்ற மன நிலையைத் தவிர்த்து,
இது அறிவார்ந்த ஓர் ஆளுமையைத் தேடுவதற்கான முயற்சி எனக் கொள்ள வேண்டும்.
2024-இல் நடைபெற்ற
குடிமைப் பணித் தேர்வில், இந்திய அளவில் 5.83 இலட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் 1009 பேர் (2.5%) முதன்மைத்
தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த காலங்களைவிட தற்போது இத்தேர்வில்
சிறப்பாகத் தடம் பதித்திருக்கிறார்கள்.
2023-இல் தமிழ் நாட்டிலிருந்து 45 பேர் தேர்வாகியிருந்த நிலையில், 2024-இல் 54 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாடு எதிர்பார்த்த அளவில் தேர்ச்சி காணாத நிலையில், இந்த முறை நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன. அதேவேளையில், 2023-இல் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டில் முதன்மையான மாணவராகத் தேர்வானவர் தேசிய அளவில் 107-வது இடத்தையே பெற்றார். உயர்கல்வியின் மொத்தச்சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருந்தும், குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது கவலையளிக்கும் செய்தியாகவே நீடித்தது.
இவ்வேளையில்,
குடிமைப் பணிக்குப் பயிற்சி நிறுவனங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் எனவும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ‘நான் முதல்வன்’
திட்டத்தின் வாயிலாகக் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு பத்து மாதங்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் பாராட்டத்தக்கதே! மேலும், நேர்முகத் தேர்வுவரை செல்பவர்களுக்கு, ரூபாய் 50,000/- வரை வழங்கப்படும் என இந்த ஆண்டு
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பொதுவாகக்
குடிமைப்பணித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் குடும்பப் பின்னணியோ, பொருளாதாரச் சூழலோ அமையாததால்,
இத்தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; குடிமைப் பணியின் சிறப்புகள் குறித்துப் பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டப்பட வேண்டும்; பாடக்கல்வியுடன் சிந்திக்கும் திறன், பகுப்பாய்வுத் திறன் போன்றவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அரசு முன்னெடுக்கும் பல முயற்சிகளில் கல்வி
நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும்
நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்!
‘வானம் வசப்படும்; வானவில்லும் கைப்படும்’
என்று வீண் வசனம் பேசுவதைத் தவிர்த்து, கடின உழைப்பிலும் விடாமுயற்சியிலும் தன்னம்பிக்கையிலும் இளையோர் உறுதிபட வேண்டும். வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது; நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை! ‘நாளை இருப்போம்’
என்ற நம்பிக்கையில்தான் நாம் இன்று பல வேலைகளைச் செய்து
கொண்டிருக்கிறோம். ஆகவே, ‘கைகூடும்’
என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றபோதுதான் எதுவும் இங்கே சாத்தியமாகும்!
‘என்னால் முடியும்’
என்ற நம்பிக்கையே விடியலைத் தரும். ‘எனக்குத் தேவையான அனைத்து ஆற்றலும் எனக்குள்ளேயே உண்டு’ என உணர்பவன்தான் வெற்றிப்
படியில் எட்டி நடக்கிறான். புறச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நம்மை நாமே ஆழ்மன எண்ணங்களால் ஊக்குவித்துக் கொண்டு, நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சேர்த்து உயர்த்தக்கூடிய மேலான குறிக்கோளோடு இன்றைய இளையோர் பயணிக்க
வேண்டும்.
பொத்தாம்
பொதுவாகப் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்காமல், என்னவாக வேண்டும் என்ற குறிக்கோள் நம்மில் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்; அதை அடையத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் துறையில் சாதித்தவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களைவிடச் சிறந்த சாதனை புரிய என்ன செய்ய வேண்டும் எனவும், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தையும் கவனத்தையும் செலவழிக்காமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒருநாள் நாம் நம் இலட்சியத்தை அடைய முடியும்.
இதற்குச்
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் வைர வரிகள் வளமான வாழ்வியலை நமக்கு முன்வைக்கின்றன:
‘அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர்
அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்:
உளநாள்
வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும்
தேஎத்துக்கும் உறுதுணை தேடுமின்!’
அதாவது,
சிறந்த சான்றோர்கள் ஒன்றுகூடும் அவையில் அமர்ந்து, அந்த மேன்மக்கள் வழங்கக் கூடிய மிகச்சிறந்த கருத்துகளை எல்லாம் உள்வாங்கி, அதன்படி வாழ்வைச் செம்மைப்படுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அறத்துக்குப் புறம்பான சிந்தனைகளைக் கொண்டவர்கள் கூடும் இடத்தை விட்டு அகல வேண்டும். கிடைத்தற்கரிய வாழ்நாளை வீணாக்கி விடாது, ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். கடமைகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அந்தக் கடமைகள் அனைத்திலிருந்தும் விலகிவிடாமல் பொறுப்புடன் வாழ்ந்து, அதை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு தருணத்தையும் நன்முறையில் பயன்படுத்த வேண்டும். மறுமை வாழ்வுக்குச் செல்லும்போது இம்மண்ணில் பின்பற்றிய அறம் என்பதைத் துணையாக அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆகவே,
பெற்றோரே, ஆட்சியாளர்களே! வளமான
நாட்டிற்கு நலமான கல்வியாளர்கள் வேண்டும். நம் இளையோர் உயர்ந்த கல்வியாளர்களாகவும் நேரிய ஆட்சியாளர்களாகவும் நிர்வாகத் திறன் கொண்ட தலைவர்களாகவும் சிறந்த, வளமான, வலிமையான இந்தியாவைக் கண்முன் கொண்ட சிற்பிகளாகவும் உருவாக அவர்களை ஊக்குவிப்பது நமது கடமையாகிறது!
இளையோரே! எழுந்து
வாருங்கள்...
வென்று
காட்டுங்கள்!
நாளைய இந்தியா
உங்கள்
கைகளில்!
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்
பிப்ரவரி 11, 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பணி ஓய்வு அறிவிப்பில் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான 130 கோடி கத்தோலிக்கர்களில் நானும் ஒருவன். ஆயினும், அந்த அதிர்ச்சி நெடுநாள் நீடிக்காத வகையில், மார்ச் 13, 2013 அன்று இரவு 8:12 மணிக்கு ‘திருத்தந்தை பிரான்சிஸ்’ வடிவில் எளிமையும் தாழ்ச்சியும் துணிவும் தெளிவும் பணிவும் கொண்ட ஒரு வழிகாட்டியைத் திரு அவைக்குத் தந்த இறைவனுக்கு நன்றி கூறிய குரலொலியில் சேர்ந்தது எனது குரலும்தான்.
மகிழ்ச்சியில்
திளைத்த மக்கள் மெய்சிலிர்க்க, மாடத்தில் தோன்றிய வெண்புறா ‘பிரான்சிஸ்’ என்ற
பெயர் தாங்கி, தன் சிறகுகள் விரித்ததும் என் இதழ் செபித்தது; உலகோர் உள்ளங்களும் அவ்வாறே! மக்களின் ஆசி வேண்டி அவர் சிரம் தாழ்த்தியது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. “திரு அவையின் பயணத்தில், பிறரன்புடனும் சகோதரத்துவ உணர்வுடனும் நடப்போம்; ஒருவர் மற்றொருவருக்காகச்
செபிப்போம்; உலகிற்காகச் செபிப்போம்!” என்ற அவரின் முத்தான முதல் பதம், 130 கோடி கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, உலகோர் அனைவரின் இதயத்தையும் முத்தமிட்டது போலவே இருந்தது.
தென்
அமெரிக்க நாடான அர்ஜென்டினா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கால்பந்து விளையாட்டு. அத்தகைய சிறப்புப் பெற்ற அர்ஜென்டினா நாட்டில், 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 17-ஆம் நாள் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, தனது 33 வயதில் சேசு சபை குருவாகி, 1992-இல் பியூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும், 1998-இல் அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், 2001-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டு, தனது 76 வயதில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப் பணியாளராகப் பொறுப்பேற்றார்.
சேசு
சபை உறுப்பினர் ஒருவர் திருத்தந்தையானதும், ஐரோப்பியர் அல்லாதவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் முறை. கத்தோலிக்க இறை நம்பிக்கையில் ஆழமானவர், உறுதி கொண்டவர் என்பதையெல்லாம்விட, திரு அவையின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவராகவும், மாபெரும் நம்பிக்கையாளராகவும், இரக்கம் நிறைந்த தந்தையாகவும் அவர் பயணித்தார் என்பதுதான் அவரின் தனிச்சிறப்பு. ஏழைகள்
மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர் “A passionate defender of the poor and dissenfranchised” என்று
அர்ஜென்டினா மக்களால் அழைக்கப்பட்டவர், திரு அவையின் தலைமைப் பொறுப்பிலும் அதை இறுதிவரை வாழ்ந்து காட்டியதால், உலக மக்களால் ‘ஏழைகளின் ஏந்தலாகவே’
போற்றப்படுகிறார்.
இவரது
சிந்தனை உயர்ந்தது; எண்ணம் பரந்தது; செயல்பாடுகள் சிறந்தது. 2001-இல் அனைவரும் அதிர்ச்சியடையும்படியாகக் கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, பியூனஸ் அயர்ஸில் உள்ள முனிஸ் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 12 எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி, அவர்களின் கால்களுக்கு முத்தமிட்டு, சமூகத்தில் நோயாளிகளும் ஏழைகளும் மறக்கப்படக்கூடாது என்று நினைவூட்டினார்.
சமூக
நீதிக்கொள்கைகளில் உறுதியாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ், அகதிகளுக்கும் புலம்பெயர்வுக்கும் எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தார். ட்ரம்பின் முந்தைய ஆட்சியின்போது மெக்சிகோ மக்களின் புலப்பெயர்வுக்கு எதிராக அவர் சுவர் எழுப்பியபோது, உலகத் தலைவர்கள் மௌனித்தார்கள்; ஆனால், திருத்தந்தை பிரான்சிஸோ ஏதிலியரின் கூக்குரலாக வெளிப்பட்டார். ‘கட்டப்பட வேண்டியது சுவர்கள் அல்ல, பாலங்களே’
என இடித்துரைத்தார். போர் இல்லாத அமைதியான உலகுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திருத்தந்தை, போரினால் துன்புறும் மக்களைத் தனது வேண்டுதல்களில் எப்போதும் நினைவுகூர்ந்தார். உலகில் அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இயேசுவின்
சீடனாக, இறைவாக்குரைக்கும் ஓர் இறைவாக்கினனாக, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதிலும், தவறுகளை எடுத்துரைப்பதிலும், உண்மையை முழக்கமிட்டு அறிவிப்பதிலும் அவர் ஒருபோதும் தளர்ந்ததில்லை.
மனிதநேயப்
பண்பாளராக, ஏழைகளின் பங்காளனாக, இளையோரின் எழுச்சி நாயகனாக, ஏதிலியரின் உரிமைக் குரலாக, இயற்கையின் இனிய நேசனாக, இரக்கத்தின் தூதுவனாக, பெண்ணிய மாண்பு கண்ட பேராளுமையாக, திரு அவை வழிபாட்டு முறையில் சீர்திருத்தம் கண்ட சிற்பியாக, பல்லுயிர் நேயம்
கொண்டு உலகைக் காத்திட உலகோர் அனைவருக்கும் அழைப்பு
விடுத்த பொதுவுடைமைவாதியாக அறியப்பட்ட 21-ஆம் நூற்றாண்டின் மாபெரும் பேராளுமையாக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று கணியன் பூங்குன்றனார் முழங்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டின் வழியில் ‘யாவரும் உடன்பிறந்தோர்’ என்று
முழங்கி உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பேராவல் கொண்ட பொதுநலவாதி இவர்.
திரு
அவையின் நம்பிக்கை கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரமும், ஏழை எளிய மக்களை, ஒடுக்கப்பட்டோரை அரவணைப்பதில் இளகிய உள்ளமும் கொண்ட எளிமையும் தாழ்ச்சியும் நிறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ற நம்பிக்கையூட்டும் தலைவர் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
மேய்ப்புப்
பணி பற்றிய சிந்தனைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் எளிமையையும் கற்றுக்கொள்ள இறைவன் தந்த மாபெரும் கொடையே இப்பேராளுமை! இவரின் சிந்தனையில் தெளிவு; செயல்களில் பணிவு; போதனையில் துணிவு இவை யாவரையும் பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல!
காலத்தின்
குறிப்பறிந்து அவர் திருவாய் மலரும் அமுத மொழிகள் தனிமனிதனை, சமூகத்தை, ஏன் இந்த உலகத்தையே தன்பால் திருப்பிப் பார்க்க வைத்தன. இவர் வழங்கிய மறையுரைகள், மூவேளைச் செய்திகள்,
பொதுச்சந்திப்புகள், சொற்பொழிவுகள், கடிதங்கள், செய்திகள், திருத் தூது மடல்கள், சுற்றறிக்கைகள், மேற்கொண்ட பயணங்கள், உலகோருக்கு வழங்கிய ‘Urbit et orbi’
எனப்படும் சிறப்பு ஆசிரும் செய்தியும் உலகோரின் கவனத்தை ஈர்த்தன. சாதாரண அடிப்படை உறவு நிலைகளை, கருத்தியலை எளிய நடையில் எடுத்துரைப்பதே இவரது தனிச்சிறப்பு. அது ஒவ்வொரு மனிதரையும் தங்கள் வாழ்வைப் புடமிட்டுப் பார்க்க வைத்தன.
“நற்செய்தியை நவிலவும், அமைதியை அறிவிக்கவும், நலந்தரும் செய்தியை உரைக்கவும்... வருவோரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன!” என்று உரைத்த எசாயாவின் கூற்று (52:7) இவரின் சொல்லிலும் செயலிலும் இறைவாக்குப் பணியிலும் முற்றிலும் ஒன்றித்திருக்கிறது.
இத்தகைய பொற்பாதங்கள் படைத்தோரை விண்ணகத்தில் இறைக்கூட்டம் வரவேற்பதைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,
‘மின்னேர் அனைய பூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னேர்
அனைய மலர் கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்’ (50:1)
என்று
குறிப்பிடுகிறார். அதாவது, மின்னலையொத்த இறைவனின் அழகிய திருவடிகளை அடைந்தவர்கள் உலகச் செயல்பாடுகளைக் கடந்தார்கள். இறைவனின் திருப்பாதம் சென்றிருக்கும் அத்தகைய
விண்ணகவாசிகள் பொன்னொத்த மலர்கள் தூவி அவரை வழிபடுகின்றனர். அத்தகைய அருளைத் தனக்கு வழங்க வேண்டும் என வேண்டுகிறார். மேலும்,
‘வேண்டும் வேண்டும் மெய்யடியார்
உள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய்
அடியேன் இடர்களைந்த
அமுதே அருமாமணி முத்தே
தூண்டா
விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும்
உண்டாங்கொல்
வேண்டா
தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே’
(38:4)
என்று
வேண்டுகிறார். அதாவது, உன் அருளை நாடிய அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். எண்ணில் பேரொளி தந்தாய்; சுடரொளி வீசும் உம்மைக் காணச் செய்தாய். இந்த விளக்கின் சுடரொளி என்றும் எரிய உமது அன்பைத் தவிர வேறொன்றும் எனக்கு வேண்டாம் என்று பாடுவது போல, நாமும் நம் திருத்தந்தைக்காக ‘இறைவா! உம் அடியார் இவர் உமது பேரின்ப வீட்டில் அணையா விளக்காக எந்நாளும் ஒளி வீச அன்பினால் முழுமையாய் ஆட்கொள்வீராக!’ என்று மன்றாடுவோம்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒருவருடைய சிந்தனையும் சொல்லும் செயலுமே அவரின் தரத்தை வரையறுக்கின்றன. எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம் ‘அவர்கள் தெய்வப் பிறவிகள்’ என்றே அழைக்கிறது!
ஆகவே,
உயர்ந்த வாழ்க்கை வாழும் மனிதர்கள் தெய்வமாக அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். ஆயினும், உயர்ந்த சிந்தனைகள் ஏதுமின்றி, தரமற்றச் சொற்களையும் தவறான செயல்களையும் கொண்ட மனிதர்கள் ‘விலங்கு’ வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது கம்பராமாயணம். ‘இது சரி, இது தவறு’ என்று சிந்திக்காமல், மனத்திற்குத் தோன்றியபடி வாழ்கின்ற மக்கள் விலங்குகள் ஆகிவிடுகிறார்கள் என்றும், மறுபுறம் நெறிபிறழாமல் வாழ்வது, ஒரு விலங்காக இருந்தாலும் அது தெய்வ நிலையை அடைகிறது என்றும் விளக்கம் அளிக்கிறது கம்பனின் கவிதை.
‘தக்க இன்ன, தகாதன இன்ன என்று
ஒக்க
உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும்
விலங்கே, மனுவின் நெறி
புக்க
வேல், அவ்விலங்கும் புத்தேளிரே’
ஒருவர்
பேசும் சொற்கள்... நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் வரமாகவும் அறமாகவும் தரமாகவும் நாணயமாகவும் நாணமாகவும் கற்பாகவும் கலையாகவும் காமக்கூறுகளைக் களைந்ததாகவும் இருக்க வேண்டும் என்கிறது செம்மொழிச் சிறப்புக் கண்ட தமிழ் இலக்கியம். அதுதான் எவர் மனத்தையும் புண்படுத்தாத உறவை, சமூகத்தை, உலகைக் கட்டமைக்கும்.
பிறர்
மனத்தைப் புரிந்துகொண்டு, மதிப்பளித்து, அதற்கேற்ப தாம் பேசுவது, செயல்படுவது என வரையறை கொண்டு
வாழ்கின்ற சக மனிதர்களை ‘மேன்மக்கள்’ என்றே
இச்சமூகம் அடையாளப்படுத்துகிறது. இலக்கியத்திலும் சங்க காலத்திலும் வாழ்ந்த இப்பேராளுமைகளும் மேன்மக்களும், நாம் வாழும் இச்சமூகத்திலும் உலா வருவது இச்சமூகம் கண்ட, கொண்ட பெரும் வரமே!
ஒரு
குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மானுடச் சமூகத்தின் மேன்மைக்கும் உரமாகவும் வரமாகவும் அமைவது - மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம். இவை மூன்றுமே ஊடகமாக வெவ்வேறு தளங்களில் தனித்தும் இணைந்தும் பயணித்தாலும் முன்னிருக்கும் மூத்த ஊடகம் ‘மொழியே!’
மொழியும்,
மொழிக்கு வளம் சேர்க்கும் சொற்களும், சொற்களுக்கு வலிமை சேர்க்கும் உடல்மொழிக் கூறுகளும் ஒரு சமூகத்தின், பண்பாட்டின் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று தளர்ந்தாலும், பண்பாட்டின் மேன்மையும் மாண்பும் சிறுமைப்படுத்தப்படும்; நாகரிகமும் பண்பாடும் அற்ற அநாகரிகச் செயலாகவே அது அடையாளப்படுத்தப்படும். எனவே, தகுந்த இடத்தில், தகுந்த வார்த்தைகளை, தகுந்த உடல்மொழிக் கூறுகளோடு வெளிப்படுத்துவதே கற்றறிந்தோரின் அறமாகும். இங்கு உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அறம் தவறாது இணைந்து பயணிக்க வேண்டும்.
உடல்மொழி
என்பது முகபாவனைகள், சைகைகள் மற்றும் தோரணைகள் போன்ற உடல் நடத்தைகளைப் பயன்படுத்தி வாய்மொழியாகத் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது. இது உணர்ச்சிகள், மனப்பான்மைகள் மற்றும் நோக்கங்களைப் பெரும்பாலும் அறியாமலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தகவல்தொடர்பு வடிவமாகும்.
உடல்மொழி,
வார்த்தைகளை விட உணர்ச்சிகள், நோக்கங்கள் மற்றும் மனப்பான்மைகளை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்துவதால், பயனுள்ள தகவல் தொடர்புக்கு மிகவும் முக்கியமானதாகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் ஒருவர் மற்றவர் மேல் கொண்ட நல்லுறவை மேம்படுத்துகிறது; நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் தொடர்புகளில் தெளிவை மேம்படுத்துகிறது. இது கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுகிறது.
நேர்மறையான
உடல்மொழி, மற்றவர்களுடன் நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும். மேலும், உடல்மொழி என்பது தகவல் தொடர்புகளின் ஒருங்கிணைந்த ஒன்றாகும்; இது வாய்மொழிச் செய்திகளுக்கு ஆழத்தையும் அர்த்தத்தையும் சேர்க்கிறது. அவ்வாறே, வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் வெளிப்படுத்த இது உதவுகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும், திறம்படப் பயன்படுத்துவதும் மேம்பட்ட தகவல்தொடர்பாகும். இத்தகைய வலுவான உறவுகள் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்.
அண்மைக்
காலங்களில் சட்டமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் பொதுவெளிகளிலும் அரசியல் தலைவர்களின் உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அருவருக்கத்தக்கவையாக அமைகின்றன. தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்ற அமர்விலே வெளிநடப்புச் செய்தபோது அமைச்சர்களின் உடல்மொழிக் கூறுகளும், அண்மையில் மூத்த அரசியல் தலைவர்களின் சர்ச்சைக்குரிய அநாகரிக மேடைப் பேச்சுகளும், சமநீதி, சமூக நீதி எங்கும் முழக்கம் பெறும் இச்சூழலில், சமத்துவம் மற்றும் பெண்ணிய மாண்பு முன்வைக்கப்படும் அரசியல் தளங்களில் ஆணாதிக்க மனநிலையோடு ஒருவர் கருத்துகளைப் பகிர்வதும் இரு பொருள் கொண்ட அநாகரிகச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
மாற்றுத்திறனாளிகள்,
கைம்பெண், திருநங்கை, திருநம்பி, மூன்றாம் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்கள்... எனப் புதிய சொல்லாடல்கள் மதிப்புமிக்க வார்த்தைகளாகச் சமூகத்தில் உலா வரும் இச்சூழலில், சில அருவருக்கத்தக்க வார்த்தைகள் அரசியல் தளங்களில் எதிரொலிப்பது, இன்னும் சமூகம் விழிப்படையவில்லையோ? அது தன்னை இன்னும் இச்சமூகம் புடமிட்டுக்கொள்ளவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
“கழக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் பிறரைச் சிறுமைப்படுத்துவது போல ஆகிவிடக் கூடாது; பொது இடங்களில் சிலர் நடந்துகொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகி விடுகிறது. ஆகவே, அனைவரிடத்திலும் ‘நாவடக்கம்’
என்பது பேணப்பட வேண்டும்”
என அவ்வப்போது தமிழ்நாடு முதல்வர் தன் கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கதே.
“நாவடக்கமின்றிப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வார்த்தைகளை உதிர்ப்பது, ஒரு மனிதனின் மனத்தில் இருக்கும் குரூர வக்கிரத்தின் உச்சக்கட்டம்; இத்தகைய பேச்சுகள் அநாகரிகமானவை; இவை பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன” என்னும்
எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றும் இங்கே சிந்திக்கத்தக்கதே!
ஆகவேதான்,
ஐயன் வள்ளுவரும்...
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு’
(குறள் 127)
என்னும்
குறளில், ‘ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்; இல்லையேல், அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகிவிடும்’ என்று
எச்சரிக்கிறார்.
தமிழ்மொழி
என்பது வெறும் அடையாளம் அல்ல; தமிழ்நாடு என்பது வெறும் மாநிலம் அல்ல; மாறாக, இது இந்தியத் திருநாட்டின் பெருமிதம்; உலக நாடுகளின் உன்னதம்!
ஒரு
மனிதன் எப்படி வாழ வேண்டும்? அவனது சமூக வாழ்வு எப்படி அமைய வேண்டும்? எதற்காகப் பொதுநலம் பேண வேண்டும்? எப்படிச் சுயநலம் தவிர்க்க வேண்டும்? பொதுநலத்தை முன்னிறுத்தி எப்படித் தன்னடக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்? என உலகோருக்கு வழிகாட்டியது
இந்த ‘மூத்தகுடி.’ ஆகவே, அறவழி நின்று, மெய்மொழிப் பேசி, நல்வழி வாழ்வதே உன்னத வாழ்வு.
மேலும்,
உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் நமது அன்றாட வாழ்வின் தகவல் தொடர்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு உடல்மொழிக் கூறுகள் மொழியைப் புரிந்துகொள்வதற்கும் கருத்துகளைத் தெளிவுற விளக்குவதற்கும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.
ஆகவே,
சரியான உடல்மொழிக் கூறுகளாலும் வாய்மொழிச் சொற்களாலும் வலுவான உறவுகளை உருவாக்குவோம். நம்மில் தவறான புரிதல்களைத் தவிர்த்திடுவோம்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இசுலாமியர்களின் சமூகப் பணிகளுக்குக் கொடையாக வழங்கப்படும் ‘வக்பு’ சொத்துகளை நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ள ‘வக்பு வாரியங்கள்’ நிர்வகிக்கின்றன. இந்த ‘வக்பு’ சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் ‘வக்பு’ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு மசோதா-2025’ என மறுபெயரிடப்பட்டு ஒன்றிய பா.ச.க. அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய,
மாநில ‘வக்பு’ வாரியங்களில் இசுலாமியர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்; குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இசுலாத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே சொத்துகளை ‘வக்பு’ வாரியத்திற்குக் கொடையாக வழங்க முடியும்; ‘வக்பு’ நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரர்களுக்குச்
சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்; ரூபாய் ஓர் இலட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டும் ‘வக்பு’ அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய
ஆய்வறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு சமர்ப்பித்திருந்தது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்றிய அரசு ‘வக்பு’ சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 2-ஆம் நாள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, ஏறக்குறைய 12 மணி நேர விவாதங்களுக்குப் பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறே, ஏப்ரல் 4-ஆம் நாள் அதிகாலை அந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இம்மசோதாவை இசுலாமிய அமைப்புகள் மட்டுமின்றி காங்கிரஸ், தி.மு.க.
உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து
வருகின்றன. இம்மசோதா இசுலாமியர்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்றும், இது இசுலாமியர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; வரும் காலங்களில் மற்றச் சமூகத்தினர் மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க இந்த மசோதா முன்னுதாரணமாக அமையும் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கவனம் கிறித்தவர்களின் பக்கம் திரும்ப நீண்டகாலம் ஆகாது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. இராகுல் காந்தி, “இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் ஒரே கவசம் அரசமைப்புச் சட்டம் மட்டும் தான்; அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த கடமை” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
“வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கறுப்புத் தினமாகும்; ‘பெரும்பான்மை’, ‘சனநாயகம்’ என்ற
பெயரால் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக இச்சட்டத்தைப் பா.ச.க.
கொண்டு வந்துள்ளது” என்று
எதிர் வினையாற்றியுள்ளார் தொல். திருமாவளவன்.
இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் 14, 25, 26, 300
(ஏ) ஆகிய பிரிவுகளை மட்டுமல்லாமல், நாட்டின் சனநாயகம், மதச்சார்பற்றக் கட்டமைப்பின் அடித்தளமாக விளங்கும் முகப்புரை மாண்புகளையும் வெளிப்படையாகவே இம்மசோதா மீறுவதாகப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மாநிலங்களவையில்
128 உறுப்பினர்கள் ஆதரவும், 95 நபர்கள் எதிராகவும், அவ்வாறே மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 நபர்கள்
எதிராகவும் வாக்களித்துள்ள இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
கிறித்தவ-இசுலாமிய சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்படும் ஒரு திரைமறைச் செயலாகவே இச்சட்டம் பார்க்கப்படுகிறது. “இச்சட்டத் திருத்தத்தின் மூலம் ‘வக்பு’ சொத்துகளையும், சிறுபான்மையினரின் உடைமைகளையும் அபகரித்துப் பெரு நிறுவனங்களுக்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது” என்று
வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
இந்த
வெறுப்பு அரசியலையும் அடக்குமுறைச் சட்டத்தையும் நீதி தேடும் அனைத்துச் சக்திகளுடன் இணைந்து அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புக்குள் வலுவான போராட்டத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இச்சூழலில்
‘வக்பு’ திருத்தச்
சட்டத்தை முழுமையாகத் திரும்பப்பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்றும், இச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும் வரை போராட் டம் தொடரும் என்றும் அகில இந்திய இசுலாமியர் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
ஆயினும்,
‘இம்மசோதா, சிறுபான்மைச் சமூகத்திற்குப் பயனளிக்கும் வரலாற்றுச் சீர்திருத்தம்’ என்றும்,
‘வக்பு சொத்துகள் ஒருசில தனிநபர்களுக்காக அல்லாமல், அனைத்துத் தரப்பு இசுலாமியர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கம்’ எனவும் பா.ச.க. தெரிவிக்கிறது.
‘வக்பு வாரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; அவை சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம்’ என்றும், ‘வக்பு சொத்துகளும் நிதியும், இசுலாமியர்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்; இதற்காகத்தான் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; அதன்படி வக்பு வாரியம் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது’ என்கிறார்
பா.ச.க. தேசியத்
தலைவர் ஜே.பி. நட்டா.
மத்தியில்
பா.ச.க. அரசு
பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீரின் சிறப்புச் சலுகையைப் பறித்தது, பொது சிவில் சட்டம் எனும் வரிசையில் தற்போது ‘வக்பு’ சட்டத் திருத்தமும் சேர்ந்துள்ளது. இதுபோன்ற அநீதி இசுலாமியர்களுக்கு மட்டும்தான் என்று எண்ணக்கூடாது. இன்று அவர்களுக்கு; நாளை
மற்றச் சிறுபான்மையினருக்கும் என்பதே இதில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி!
நாளை
கிறித்தவ, சீக்கிய, புத்த, சைன மதத்தினருக்கும் இந்த அநீதி இழைக்கப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ‘வக்பு’ வாரிய நிர்வாகத்தில் இசுலாமியர் அல்லாதவரை நியமிக்கலாம் என்ற இச்சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரும் பா.ச.க.
அரசு, இந்து கோவில்களில் அறங்காவலர்களாக ஓர் இசுலாமியரை நியமிக்க முன்வருமா? அப்படி நியமித்தாலும் இந்துகள் ஏற்பார்களா? என்பதை இவர்கள் அறியாமலா இருப்பார்கள்!
‘வக்பு’ சட்டத் திருத்த மசோதா, சட்டம் ஆகியுள்ள இச்சூழலில், இச்சட்டம்தான் இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனக் கருதப்படும் இவ்வேளையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழவிருக்கும் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குசராத் மற்றும் இமாச்சல் ஆகிய ஏழு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்குமா? என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. ஓரிரு
மாநிலங்களில் பா.ச.க.வுக்கு ஆதரவாக இச்சட்டம் அமைந்தாலும், பெருமளவில் பா.ச.க.விற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். இக்கணிப்பு மெய்ப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். ஆயினும், வரும் அக்டோபரில் பீகாரில் நடைபெற உள்ள தேர்தலில் அது வெளிப்படும் என்றே எதிர்பார்த்திருக்கிறார்கள்.
“ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் அறவழியிலிருந்து மாறிவிடாமல் இருக்க வேண்டும்; தெளிந்த அறம், செம்மையான மனம், எல்லா உயிர்களுக்கும் அருளும் தன்மை ஆகியவற்றிலிருந்து பிறழ்ந்து நடந்தால் அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை; ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூது போன்ற எந்தத் தீய பழக்கமும் இருக்கக்கூடாது; எவர்மீதும் வன்மம் இல்லாத மனம் வேண்டும்; வன்மமே பிறர்மீது பகை கொள்வதற்குக் காரணமாக அமைகிறது; யாரிடமும் பகை உணர்ச்சி இல்லாமல் இருப்பவருக்கே புகழ் வளரும். அறிவார்ந்த அமைச்சர்களை அருகில் வைத்திருக்க வேண்டும்; அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும்; அதிகாரம் குவிந்திருக்கும் நிலையில் எல்லாரிடமும் சமமான அன்பு கொள்ள வேண்டும்; ஆட்சியில் இருக்கும் மன்னன் உடல் போன்றவன்தான், நாட்டு மக்களே உயிர் போன்றவர்கள்; ஆகவே, அனைவரிடமும் அருள் நிறைந்த மனத்துடன் அறத்திலிருந்து பிறழாமல் செயல்களை அவன் செய்தாக வேண்டும்”
எனும் கம்பனின் அறிவுரை இராமாயணம் கற்ற இவர்களுக்கு ஏனோ மறந்து போய்விட்டது!
இவர்களின்
செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “நேர்மையும் நீதியும் இருக்க வேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது” என்று
சுட்டுரைக்கும் சபை உரையாளரின் (3:16) வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளப்பரிய ஆற்றல் அன்று முதல் இன்றுவரை அரசியலுக்கே உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை நம் இருத்தலையும் இயக்கத்தையும் வரையறுப்பவை அரசியல். இதை ஆழமாக உணர்ந்ததால்தான் அன்றே கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையை ‘தலைமை அறிவியல்’ (Master Science) என்று வர்ணித்தார். ஆனால், அதன் பொருள் ஏனோ இன்று மாறிப்போனது; எல்லாம் தலைகீழாகிப் போனது.
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது முதுமொழி! ‘அரசியலின்றி எதுவும் அசையாது’ என்பது புதுமொழி. அரசியலே அனைத்தையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஆழ்ந்த பொருள் பொதிந்து கிடப்பது இன்று புரிகிறது.
மக்கள்
மையம் கொண்ட ஒரு சமூகம், மக்களை மையம் கொண்ட ஓர் அரசியல் இவை இரண்டும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தவை. பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லை; இவற்றைப் பிரித்துப் பார்க்கவும் இன்று வழியில்லை. ஆகவே, சாமானியனின் வாழ்வியலுக்குச் சதி கொண்டு, விதி எழுதுவது இந்த அரசியலே!
இன்று
அரசியலில் ‘மக்கள் பணி’ என்பது கடந்து, அதிகாரம் என்பதும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதும் முதன்மை பெறுகிறது. அதை அடைவது ஒன்றே அரசியல்வாதிகளின், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் குறிக்கோளானது. இதற்காக யாவும் சமரசம் செய்யப்படும் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் எதார்த்தம்.
தத்துவங்கள்,
கொள்கைகள், கோட்பாடுகள், முன்னிறுத்தும் செயல்பாடுகள், மதிப்பீடுகள், அதற்கான நிலைப்பாடுகள்... எனக் கட்சிக்குக் கட்சி வேறுபட்டு வெவ்வேறு துருவங்களில் பயணிப்பவர்கள் கூட ‘அதிகாரம்’,
‘ஆட்சி’, ‘பதவி’ என்பதற்காகக்
கைகுலுக்கிக்கொள்ளும்
நகை முரண் கொண்ட செயல்பாடுகளும் இங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் ஒன்றிய, மாநிலத் தேர்தல் சூழலில் அவ்வப்போது ஏற்படும் இத்தகைய ‘கூட்டணிகளை’ நாம்
வரம் என்பதா? இல்லை சாபம் என்பதா?
ஒவ்வொரு
கட்சியும் தனிச் சிந்தனையும், தனிக் கொள்கையும், தனிக்கொடியும் உடைய தனித்த கட்சிகள்தாம்; ஆனால், ஏனோ அனைத்தையும் சுயநலத்திற்காக அடகு வைத்துவிடுகின்றன. அது ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பது பலருக்கும் தெரியும். மக்களுக்கு மட்டுமல்ல, தனிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். ஆயினும், அவர்களின் சுயநலம் மேலோங்கி இருப்பதால் பொதுநலம் மறைந்து போக, பூபாளம் பாடுகிறார்கள். கொள்கை உடைய கட்சிகள் தங்கள் கொள்கைகளை இழந்தபோது என்னவென்று சொல்வது? ஆட்சி அதிகாரத்துக்காகக் கூட்டணி சேரும் கட்சிகள் சுயகொள்கை இன்றிச் செயல்படுவதைப் பார்க்கும்போது மக்களை ‘முட்டாள்கள்’ என்றே
இவர்கள் நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம்
பல வேளைகளில் சூழ்நிலைக் கைதிகளாகிறோம்; எதையும் முறையாகப் பகுப்பாய்வு செய்து பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் இல்லை. எளிதில் எதையும் மறந்து விடுகிறோம். கூட்டணிகளின் சூட்சுமத்தை நுண்ணறிவு கொண்டு கணிக்க வேண்டிய காலம் இது.
“அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இன்று தனித்த கொள்கை, கோட்பாடுகள் என்று எதுவும் கிடையாது. வாக்கு வங்கி, ஆட்சி அதிகாரம், கட்சி மூலம் ஊழல் பணம் சேர்த்தல், சேர்த்த கறுப்புப் பணத்தை வாக்களிக்க மக்களுக்குக் கையூட்டாகக் கொடுத்தல்... போன்ற செயல்களைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்கின்றன” என்ற
பொது விமர்சனமும் தவிர்க்க இயலாதவை. இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.
“பெரும் கட்சிகளோடு ஒட்டிவரும் சிறு கட்சிகள் அதிகாரத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, இறுதியில் அவர்களின் தொங்கு சதையாகிவிடுகின்றன” என்ற
திரு.பழ.கருப்பையாவின் கூற்றும்
இங்கே நினைவுகூரத்தக்கதே. அநீதிகள் நிகழும் போது உண்மையை உரக்கச் சொல்வதற்குப் பதிலாக, கூட்டணி தர்மம் கண்டு அவர்களுக்குச் சாமரம் வீசும் நிலையே இன்றும் தொடர்கதையாகிறது. இதில் பாரபட்சம் இல்லை; ஒன்றியமோ, மாநிலமோ இதே நிலைதான் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும்.
ஆட்சியைப்
பிடிக்க ‘கூட்டணி’ என்ற மந்திரத்தை வகுத்துத் தந்தவர் மூதறிஞர் இராஜாஜி. ஆட்சி நல்லாட்சியாக அமையாதபோது
அவரே அதை எதிர்க்கவும் துணிந்தார் என்பதே வரலாறு. தேர்தலுக்கான கூட்டணி என்பதை ஆட்சிக்கான, அநீதிக்கான கூட்டணியாக இன்று மாற்றி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டின்
2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி, தேர்தல் கூட்டணி ‘சடுகுடு ஆட்டம்’ ஆடத் தொடங்கிவிட்டது. 2023-இல் பா.ச.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. இன்று சமரசக்
கூட்டணி மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் திடீர் சந்திப்புக்கு ஆயிரம் உள்ளர்த்தங்கள் கணிக்கப்பட்டாலும், இச்சந்திப்பிற்குப் பிறகு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, “2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று
கூறிய கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை எவருக்கும் புரியாதது அல்ல!
இச்சந்திப்பின்
எதிரொலி கூட்டணிதான் என உணர்ந்த அ.தி.மு.க.வினர், “சிறுபான்மையினரும் பா.ச.க.
எதிர்ப்பாளர்களும் கடந்த தேர்தலில் நம்மைப் புறக்கணித்தார்கள்; இந்த முறையும் புறக்கணிக்கப் போகிறார்கள்...” எனப் புலம்பி வருவதும் நம் காதுகளில்
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
எது
எப்படியோ, வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் பெங்களூருவில் தொடங்கவிருக்கின்ற பா.ச.க.வின் தேசியச் செயற்குழுக் கூட்டம் ‘மிஷன் சவுத்’ என்ற ஒற்றைக் கருத்தை மையம் கொண்டதாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே உறுதியான ஒரு கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடந்த தீவிரமான ஆலோசனைதான் இச்சந்திப்பு என்றும், இத்துடன் இன்னும் சில தனிக்கட்சிகள் ஒன்றிணையும் என்பதும் அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. பா.ச.க.
- அ.தி.மு.க.
கூட்டணி கனிந்திருக்கும் இவ்வேளையில், வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கவிருக்கும் சீட்டுகளைப் பற்றியும், இந்தக் கூட்டணியைச் சிறப்பாக முன்னெடுத்தால் யாருக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்பதையும் இவர்கள் கணிக்கத் தவறவில்லை.
இரு
பெரும் திராவிடக் கட்சிகள், திராவிடக் கொள்கை கொண்ட கிளைக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் தனித்த கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சிகள், நெடும்பயணம் கண்ட சாதியக் கட்சிகள், நேற்று கண் விழித்த புதிய கட்சிகள்... எனப் பலவும் மதச்சார்பற்ற அரசியல் தளத்தில், பந்தயத்தில் முன்னிருக்கும் சூழலில், பா.ச.க.வின் கணக்கு தனிக் கணக்காகவே அமைகிறது.
மத
அரசியலும், சிறுபான்மையினர் அச்சுறுத்த லும், விவாதத்திற்கு உள்ளாகி வரும் இஸ்லாமியருக்கு எதிரான வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும், குடியுரிமைச் சட்ட மசோதாவும்... உயிர் நாளமாகக் கொண்ட பாசிச பா.ச.க.
அரசின் கொள்கை கோட்பாடுகளில் மாறுபட்ட கட்சிகளும் மனம் திறந்து தழுவிக்கொள்வது தமிழ்நாட்டின், இந்தியாவின் ஒளிமயமான, சமத்துவச் சகோதரத்துவ, சனநாயக உரிமை கொண்ட எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மக்களின் மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் மதச்சார்பின்மைக்கும்
சனநாயகத்திற்கும் நிகழவிருக்கும் பேரழிவு கண் முன்னே தோன்றி பெரும் கவலையளிக்கிறது.
அன்று
ஆதரிப்பார் எவருமின்றி, தனித்து நின்ற அரசியல் கட்சிகளோடு, இன்று ஆதாய அரசியல் அகலப் பாய்ந்து, சூழ்ச்சி கொண்ட ஆழியில் கலந்திடும் சூட்சுமத்தைத் தெளிவுற நாம் உணர்ந்தாக வேண்டும்.
உண்மையும்
பொய்மையும் ஒன்றெனக் கலந்து வரும் இச்சூழலில், நல்லவை - அல்லவை வேறுபாட்டை நாம் அறிந்தாக வேண்டும்.
“நன்மை செய்யக் கற்றுக்கொள்பவர்களும்... நீதியை நாடித் தேடுபவர்களும்... ஒடுக்கப்பட்டுள்ளோருக்கு உதவி செய்பவர்களும்... திக்கற்றோருக்கு நீதி வழங்குபவர்களும்... கைம்பெண்ணுக்காக வழக்காடுபவர்களும்... (எசா 1:17) ஆளப்பிறந்தால் வாழத் தகுதியானது நம் நாடு!
ஆயினும்,
‘எங்கள் மக்களுக்குக் கச்சேரிதான் முக்கியம்
கஞ்சிக்
கலயமல்ல. அதனால்தான் நாங்கள்
வார்த்தை
இலைகளில் வாக்குறுதிச் சோற்றை
வாரி
வழங்கும் வள்ளல்களுக்கே வாக்களிக்கிறோம்...
அவர்கள்
வெற்றி பெறுகிறார்கள்;
நாங்கள்
தோற்றுப் போகிறோம்!
தோற்பதற்கான
காரணம்...
பொய்யான
கவர்ச்சிக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்...
போலிகளின்
பேச்சுக்குப் புகழாரம் சூட்டுகிறோம்...
கடமைக்கும்
சேவைக்கும் கல்லறையைக் கட்டுகிறோம்...
ஊழலுக்கு
விழா நடத்தி ஊர்வலத்தைக் கூட்டுகிறோம்...’
என்று எங்கோ படித்தது நம் நினைவுக்கு வருகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“மானுடச் சமுத்திரம் நான் என்று கூவு” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தானாகப் பாவிக்கிறவனின் பாசக்குரல் இது. ‘நீ என்பது நீயல்ல; குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்தப் பூகோளத்திற்கே அந்த ‘நீ’ தான் பொறுப்பு’ என ஒவ்வொருவரையும் பொறுப்பாளர்களாக மாற்றும் வரிகள் இவை. ஆகவேதான் ஐயன் வள்ளுவரும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்...’ என்று பல்லுயிர் நேயம் கொண்டிட வழிகாட்டினார்.
இன்று
அறிஞர்கள், உலகத் தலைவர்கள் கூடும் உலகளாவிய கருத்தரங்குகளின் கருப்பொருளாக இருப்பது இயற்கை நேயம் என்பதே. இன்றைய சுற்றுச்சூழலை எண்ணிப் பார்க்கும்போது, உலக அளவில் யாவரும் கவலை கொள்கிறோம். காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் இன்றைய சூழலுக்கு முக்கியக் காரணம், இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் தவறியதே!
இயற்கை
நமது இருத்தலுக்கான அடித்தளம். அது நமக்குச் சுத்தமான காற்று, நன்னீர், வளமான மண் என எல்லா வளங்களையும்
தருகிறது. ஆயினும், நாம் பொறுப்பற்ற முறையில் அதைச் சுரண்டி வருகிறோம்; இல்லை... சுரண்டி வாழ்கிறோம். “பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானதை வழங்குகிறது; ஆனால், ஒவ்வொரு மனிதனின் பேராசையும் அளவு கடந்திருக்கிறது; அது அழிவைத் தருகிறது”
என்னும் மகாத்மா காந்தியின் வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.
ஆசை
அளவோடு இருப்பது நல்லது. அழகாக ஓடினால் ஆறு; அளவற்றுப் போனால் வெள்ளம். மிதமாக வீசினால் சுகம் தரும் தென்றல்; அதுவே ஓங்கி அடித்தால் சோகம் வளர்க்கும் சூறாவளி. சிறு நெருப்பு அடுப்பெரிக்கும்; அடங்காப் பெருநெருப்போ ஊரையே அழிக்கும். எல்லைக்குள் இருந்தால் எல்லாம் இன்பம்; எல்லை மீறினால் எதுவும் துன்பம்.
ஆசை
பேராசையாகப் பெருகும் போது ஒருவன் இருப்பதையும் இழந்து நிற்பான். மனிதன் இயற்கையோடு கொண்ட உறவின் இன்றைய சோக நிலை அதுவே. பேராசை கொண்ட போக்கில் அனைத்தையும் அபகரித்ததால் அழிவின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கிறான்.
மனிதன்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரை இன்பமாக இருந்தான். என்றைக்கு அவன் இயற்கையைத் தீண்டத் தொடங்கினானோ அன்றிலிருந்தே அவனுக்கு இடையூறுகள் உண்டாகத் தொடங்கிவிட்டன. இயற்கையின் உறவு உண்மையானது; உன்னதமானது; ஆழமானது; சுயநலமற்றது.
“நீங்கள் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்”
என்று கூறுகிறார் இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜேன் குட்டால். ஆகவே, இயற்கையைப் பாதுகாக்க விரும்புகிறோமா அல்லது அழிக்க விரும்புகிறோமா என்பதை இன்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
உலகையே
அச்சுறுத்தும் இந்தக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பல முன்னெடுப்புகள் பல வகைகளில்
மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றில் ஒன்று மரம் நடுதல். எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடத்தையும்
உணவையும் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் இன்று வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிகள் வழிகாட்ட வேண்டும். ஆனால், 2022-இல் ஐக்கிய நாடுகள் அவை நடத்திய ஆய்வில், 70 விழுக்காடு மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளியின் மூலம் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல, நூறு நாடுகளின் கல்விக் கொள்கைகளை ஆராய்ந்ததில், 47 விழுக்காடு கல்விக் கொள்கைகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
ஆகவே,
அங்கன்வாடி குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை, இயற்கை சூழல் பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது இன்று அவசியமாகிறது. செடிகள் நடுவது, மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குவது, சூழலியல், நீதி, நிலையான வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு கொடுப்பது, அதற்கு ஏற்ற செயல் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது போன்றவற்றைச் செய்திடல் வேண்டும்.
இத்திட்டங்கள்
பள்ளிகளில் தொடங்கி, நாளடைவில் அது வீடுகளில் மலர்ந்து சமூகத்தில் பரந்து விரிய வேண்டும். காய்கறித் தோட்டம், நீர் மேலாண்மை, நெகிழிக் குறைப்பு போன்றவற்றைக் கற்றுத்தரும் தமிழ்நாட்டின் பசுமை பள்ளித் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆகவேதான், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மரம் நடும் இயக்கங்களைத் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
நாளைய
உலகின் சிற்பிகள் மாணவர்களே! ஆகவே, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் மாணாக்கர்களும் இன்று முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்களில் பங்கெடுத்தல், தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்தல், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு கொடுத்தல், அதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்தல் என மாணவர்கள் இந்தக்
கோடை விடுமுறையைப்
பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். இப்பூமிப்பந்தில் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இயற்கை
நேயம் கொள்வோம்!
இனிய
உலகம் காண்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்