news
தலையங்கம்
மாறுமா... மாற்றாந்தாய் மனநிலை?

இன்று எவரும் விமர்சனங்களை விரும்புவதுமில்லை; வரவேற்பதுமில்லை. ஆயினும், பொதுவெளியில் சமூக, அரசியல் தளங்களில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவைகளே!

தனிமனித விமர்சனங்களைத் தவிர்த்து, கருத்துகளின் மீதும் கருத்தியலின் மீதும் செயல்முறைகளின் மீதும் விமர்சனம் எழுவது ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

அத்தகைய கருத்து வேறுபாடுதான் சனநாயகத்தின் சாராம்சம். “Dissent is the essence of democracy!” என்பார்கள். நலமான விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும்தான் சனநாயகத்தை நேரிய வழியில் பயணிக்க வைக்கும்; அங்கே உண்மை நிலைக்க வழிவகுக்கும்; சனநாயகம் தழைக்க வழி பிறக்கும்.

என் தவறுகளை விமர்சிப்பவர், நேரில் அந்த விமர்சனங்களை வைக்கட்டும்; அவருடைய வரவுக்காக நான் காத்திருக்கிறேன்என்றார் பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகன் ரூசோ. அது அவருடைய தவறுகளை விமர்சிப்பதற்கான அழைப்பு.

மற்றொருபுறம், வெற்றியாளர்களும் வெற்றியும் ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படக்கூடாது; அங்கே விமர்சனங்களும் கேள்விகளும் எழுப்பலாகாது என்பதும் பலருடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால், “எங்கும் யாவும் மதிப்பிடப்படவும் விமர்சிக்கப்படவும் கேள்விக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்; அப்போதுதான், அதில் உள்ள உண்மைத்தன்மை புடமிடப்படும்என்றார் சோவியத்தின் இரும்பு மனிதர் ஜோசப் ஸ்டாலின்.

இந்திய ஒன்றிய அரசின் 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுத்த பட்ஜெட்; இது நடுத்தர வகுப்பினரின் குரலுக்குச் செவிசாய்த்திருக்கிறதுஎன்று சுய விமர்சனம் தந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, ஒரு சாமானியனின் பார்வையில் இதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதும் இங்கே அவசியமாகிறது.

புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ் தனிநபர் வருமான வரிவிலக்கின் உச்சவரம்பு ரூ. 7 இலட்சத்திலிருந்து ரூ. 12 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து, பாராட்டப்படக் கூடியதாக அமைந்தாலும்கண் பார்வை இழந்த பின்பு சூரிய நமஸ்காரம் தேடும் செயலாகவேஇது பார்க்கப்படுகிறது.

கொரோனாபெருந்தொற்றுக்குப் பிறகு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் பெரிதும் முடக்கப்பட்ட சூழலில், அவர்களின் ஏற்றத்திற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, அப்போதும் எப்போதும் பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் தந்து, தாராளமயமாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் வழிவகுத்துவிட்டு, காலம் கடந்த இச்சூழலில், நடுத்தர வர்க்கத்தைத் தூக்கி நிமிர்த்த முன்வந்திருப்பது நகைப்புக்குரியது.

நாட்டின் பொருளாதாரத்தையும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தொழில்துறையினர் கருத்து தெரிவித்தாலும், காலம் கடந்து கடை விரிப்பதனால் பலன் ஏதும் உண்டோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போதாவது விழித்துக் கொண்டார்களே என்று சற்றே ஆறுதல் அடைந்தாலும், எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தக் கூடும்என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எப்போதும் ஒன்றிய அரசுக்குத் துதிபாடும் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “இது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எனக் கூறுவதைவிட, பீகார் மாநில வரவு-செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி அமைந்துள்ளதுஎனவும், “தமிழ் நாட்டுக்கு எந்தவிதமான சிறப்புத் திட்டங்களும் இதில் இல்லை. இது ஒரு மாயாஜால அறிக்கையாக வார்த்தை ஜாலங்கள் நிறைந்திருக்கிறதுஎன்றும் விமர்சித்திருக்கிறார்.

வளர்ச்சி நோக்கிய திட்டங்களும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற இலக்கும் இதில் ஒன்றும் தெளிவுபடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகவேதான், திரு. வைகோ அவர்கள், “புற்றுநோய் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு, கிராமங்களில் 1.5 இலட்சம் தபால் நிலையங்கள், சாலை வியாபாரிகளுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்குதல் போன்ற வரவேற்கத்தக்கக் கூறுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தருகிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வருமான வரி படிநிலைகள் மற்றும் விகித மாற்றங்களால் சாமானியர்களின், குறிப்பாக, நடுத்தர வகுப்பினரின் வரிகள் குறையும்; இது அவர்களின் கையில் கூடுதல் பண இருப்புக்கு வழிவகுக்கும்; குடும்பங்களின் நுகர்வு, சேமிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கும்; மேலும், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதை எல்லாம் சற்று காலதாமதமாகவே இந்த அரசு உணர்ந்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பெரும் முதலாளிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையுமே சார்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் இந்திய ஒன்றிய பா... அரசு, இந்த முறை நடுத்தர வர்க்கம் என்பதைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஊதிய உயர்வு இல்லாமல், வேலை வாய்ப்புகளும் அமையாமல், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை அரசு உணரத் தொடங்கி இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் தனிக் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது; சுங்கவரியில் அவர்களுக்கு அதிக சலுகைகள்  அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக ஒன்றிய பா... அரசால் இந்த நிதிநிலை அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்புஎன்று கூறப்படும் பழமொழி போல ஓரவஞ்சனையாகப் பீகார் மாநிலத்திற்குப் பல நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஓர் அறிவிப்புகூட இடம்பெறாமல் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே! “இது மாநிலங்களுக்கு இடையே பாகுபாடுகளை உருவாக்கும்; பிரிவினைவாத போக்கை ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்என்று திருமாவளவன் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதே.

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் ஒன்றிய பா... அரசு காட்டும் ஆர்வத்தில் சிறு துளியாவது இந்த நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?” என்று தமிழ்நாட்டின் முதல்வர் வெளிப்படுத்தும் ஆதங்கம், நம் எண்ண அலைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், ஒன்றிய அரசின் பா... ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான தந்திர அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் குறிப்பிடுவது போல, “வெற்றுச் சொல் அலங்காரங்களும் வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பா...வின் நாடகம் தொடர்வதாகவே அமைந்திருக்கிறது!” இத்தகைய மாற்றாந்தாய் எண்ணங்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஓரவஞ்சகத்திலே உண்டு கொழிக்கும் ஆட்சியாளர்களைக் காணும்போது...

கணக்கு மீறித் தின்றதாலே

 கனத்த ஆடு சாயுது - அதைக்

கண்ட பின்னும் மந்தையெல்லாம்

அதுக்கு மேலே மேயுது!”

என்னும் பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

 

news
தலையங்கம்
வான்புகழ் தமிழின் வளம் கொண்ட இலக்கியங்கள்! (பிப்ரவரி - இலக்கியத் திங்கள்)

ஒரு சமூகத்தின் மாண்பு அச்சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்வியலோடு இணைந்திருக்கிறது என்பதே பேருண்மை. இத்தகைய கூறுகளே அச்சமூகத்தின் முகவரியாய், அதன் வளமான அடையாளங்களாய் அமைகின்றன. அவ்வாறே, “உலகில் ஒரு நாட்டினுடைய மனித இனத்தின் சிறப்பையும் செம்மையையும் உயர்வையும் மேன்மையையும் உணர்த்தநாகரிகம்மற்றும்பண்பாடுஎன்னும் இரண்டு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றனஎன்கிறார் தமிழறிஞர் இரா. நெடுஞ்செழியன்.

இக்கூற்று முற்றிலும் உண்மையே! இவ்விரு தன்மைகள்தான் மனித இனத்தைப் பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவ்விதத்தில், மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு, உடை, உறைவிடம், ஊர்தி, நிலம், புலம், தோட்டம், துரவு, கழனி, காடு, அணி, மணி, மாடமாளிகை, எழிலுடல், ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவதே நாகரிகம் (Civilization) என்பார்கள். அதுபோலவே, மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், இயல்பு, உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஈவு, இரக்கம், அமைதி, அடக்கம், ஒப்புரவு, ஒழுக்கம், உண்மை, ஊக்கம், சினம், சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவதே பண்பாடு (Culture).

இவ்விரு படிநிலைகளிலும் தமிழரின் வாழ்வியல் பெருமைகள் வானளாவ உயர்ந்தவை. தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது; என்றும் மகிழ்ந்து போற்றுகிறது.

பண்டைய தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்வியலில் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டு மேன்மையும் சிறப்புற்றிருந்தது என்பதைப் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களும், புராதன காலப் பயன்பாட்டுப் பொருள்களும், சங்ககாலப் பைந்தமிழ் இலக்கியங்களும் சான்று பகர்கின்றன. அவ்வாறே, வைகைக் கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின்கீழடிஆய்வுகள் இன்னுமாய்த் தமிழின் தொன்மையை உணரச் செய்து, ‘கீழடி நம் தாய்மடிஎன்றே பறைசாற்றுகின்றன.

மேலும், தமிழுக்கும் தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும் சீர்மிகு இலக்கியப் படைப்புகளாலும் உலக அரங்கில் இன்றும் என்றும் மாபெரும் அங்கீகாரமும் சிறப்பும் உண்டு என்றால் அது மிகையல்ல. மேலைநாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைப்பதும், தமிழ் மொழியின் தொன்மையினை அறிய கல்வியாளர்களும் மொழி ஆர்வலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழின் வளமையை, தமிழரின் பெருமையை உலகறியச் செய்கின்றன.

இலக்கணம் பேசும்

                தொல் காப்பியமும்

வாழ்வியல் அறம்தரும்

                வள்ளுவன் கூற்றும்

வளமாய் வாய்த்த வான்புகழ்

                தமிழே - உந்தன்

இலக்கியச் செழுமை

                எங்கேனும் உண்டோ!

அறநெறி வாழ்வியல்

                செவ்வழி காட்டிடும்

வான்முகில் தொட்ட

                செம்மொழி தமிழே

வளமை கொண்டவுன்

                வாசம் எங்கும்

பரவிட உயர்ந்திட

                வாழ்க நீ வாழ்கவே!’

என்றே பெருமை கொள்ளும் வகையில் சிறப்பு கொண்டது நம் மொழியும் அதன் இலக்கிய வளமையும்.

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

                                 உயிருக்கு நேர்!’

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளைக் கொண்ட அமுதமொழி நம் தாய்மொழி; அஃது இன்பத் தேன்மொழி; இலக்கியச் செம்மொழி. இது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புகின்ற உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று. வரையறை கொண்டு எல்லைக்கு உட்பட்ட மனித வாழ்வின் எதார்த்த அனுபவங்களை, பரந்த மனதுடனும், விரிந்த கற்பனை வளத்துடனும், சீர்தூக்கிப் பார்த்து, மொழிவழியாகச் சுவைபடத் தருவதே இலக்கியங்களின் தனிச்சிறப்பு.

சுருங்கக்கூறின், பல்லாயிரம் நபர்களின் வாழ்வியல் அனுபவங்களை ஓரிடத்தில் குவியலாக்கி அள்ளிக் கொடுப்பதே அழகுத் தமிழ் இலக்கியங்கள்.

இந்தப் பிப்ரவரி மாதத்தில் நம் இலக்கியத்தின் பெருமை அறிவோம்! கடந்துபோன வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவும், நாளைய வாழ்க்கை நிகழ்வுகளை அறத்தின் வழிநின்று சீர்தூக்கிச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுவதே நம் இலக்கியங்கள். நேற்றைய அறநெறி வழியில் நின்று, இன்றைய சமூகத்தைச் செம்மைப்படுத்தி, நாளைய உலகைப் புதிதாய்ப் படைக்க வழிகாட்டும் ஒளிவிளக்கே நம் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் இலக்கிய உலகம் ஆழிப்பெருங்கடல் போன்றதுகுறிப்பாக, தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 சிற்றிலக்கிய நூல் வகைகள் இருப்பினும், இன்று பல புதிய இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியங்கள் விரிந்து செல்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம் எனப் பழங்காலத்தில் வகைப்படுத்தப்பட்டவை, இடைக்காலத்தில் பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், உரை நூல்கள், புராண இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என அடையாளப்படுத்தப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இவை கிறித்தவ தமிழ் இலக்கியம் மற்றும் புதினம் எனவும், இருபதாம் நூற்றாண்டில் கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை எனவும் இக்காலத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.  

மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதே அம்மொழியின் வளமையான இலக்கியப் படைப்பே! பண்டையகாலத் தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களைப் படைத்து, அதில் நல்ல பல கருத்துகளை இழையோட விட்டிருக்கின்றனர். அத்தகைய தமிழ் மொழியின் இலக்கியங்கள் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பிரித்தறியப்பட்டு காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய தமிழர் இலக்கியங்கள், வாழ்வியல் அறநெறிப் பெட்டகங்கள். எல்லாச் சூழல்களிலும் மனிதன் அறம் சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை, வாழ்வியல் நெறிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழர் இலக்கியங்கள் மெய்யியல் நூலகங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் அடைந்த வாழ்வியல் மெய்மைகள் அனைத்தும் ஒருசேரக் கோர்க்கப்பட்ட அழகுப் பாமாலையே தமிழர் இலக்கியங்கள்.

நம் தாய்மொழி இமயம் தொடும் இலக்கியச் செழுமை கொண்டது! தமிழ்மொழியின் இனிமையையும் அழகையும் அளந்துகாட்ட முடியாது. தமிழ் மொழிக்கென்று தனியழகு இருப்பது உலகம் அறிந்த பேருண்மை!

நம் தாய்மொழி தமிழ், இலக்கியச் செழுமை கொண்ட செம்மொழி. இம்மொழியில் இலக்கியங்களுக்குப் பஞ்சமில்லை; அதன் இனிமைக்கும் எல்லை இல்லை. தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும்தான் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

இலக்கியம் தாய் என்றால் இலக்கணம் சேய்இலக்கியம் தேமாங்கனி என்றால், இலக்கணம் தீஞ்சுவைச்சாறு; இலக்கியம் பெருவிளக்கு என்றால், இலக்கணம் அதன் ஒளி; இலக்கியம் எள் என்றால், இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை அறிந்த நம் முன்னோர்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்

எனக் கூறி வியந்தனர். இத்தகைய வளம் செறிந்த இலக்கியக் கருவூலத்தை நமது இளையத் தலைமுறையினரே நாளைய உலகிற்குச் சுமந்து செல்ல வேண்டியவர்கள். ஆகவே, நாம் மொழியை இறுகப் பற்றிக்கொள்வோம்! அதன் சிறப்பை உலகறியச் செய்வோம்! தமிழினத்தின் வளமை அறிவோம்! தமிழர் எனப் பெருமை கொள்வோம்!

வாழ்க தமிழ்! வளர்க அதன் இலக்கியப் பண்பாட்டுப் பெருமை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வரலாறு படைத்திருக்கும் ‘நம் வாழ்வே’நீ வாழ்க! வளர்க!

உலகை மாற்றவல்ல உன்னத ஆயுதம்  எழுத்துஎன்றார் இங்கிலாந்து நாடக எழுத்தாளர் டாம் ஸ்டபோர்டு. ஒலி, உடல் மொழிக் கூறு, எழுத்து, ஓவியம், காட்சி என ஊடகம் பரிணாமப்பட்டாலும்எழுத்துஎன்பது எல்லாத் தளங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று; அது தனிப்பெரும் ஆற்றல் கொண்டது.

ஊடகம் - சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; கலாச்சாரப் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் கருவி; ஒரு சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றும் புரட்சிமிகு ஆயுதம். ஊடகத்தின் இந்த முக்கூறுகளும் சமூகத்தையே மையம் கொண்டவை; சமூக மாற்றத்தையே இலக்காகக் கொண்டவை. இங்கு வரலாறு வாசிக்கப்படுகிறது; வாசிப்பு வாழ்வாக்கப்படுகிறது! ஆகவேதான், “இதழியல் துறை, வாசகர்களைத் தங்கள் வரலாற்றைச் சுவாசிக்கச் செய்கிறதுஎன்கிறார் அமெரிக்க இதழியலாளர் ஜான் ரிச்சர்ட் ஹர்சி.

அவ்வாறே, நேற்றைய நிகழ்வு இன்றைய செய்தியாகி, நாளைய தலைமுறைக்கு ஆவணமாகிறதுவரலாறாகப் பதிவாகிறது! அவ்வகையில், தனது 50 ஆண்டுகாலப் பதிவுகளைச் செய்தியாக்கி, எதிர்வரும் தலைமுறைக்கு ஆவணமாக்கும் வகையில், தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழும் இன்று வரலாறு படைத்திருக்கிறது.

அகவை 50 என்பது ஓர் இதழுக்கு நீண்ட நெடிய பயணம்; அது ஒரு வரலாற்றுச் சாதனை. அதுவும் சமூக மதிப்பீடுகளை, கிறிஸ்துவின் இறையரசு விழுமியங்களைத் தழுவிக்கொண்டுஉண்மையை உரக்கச் சொல்லிசமரசமின்றிப் பயணிப்பது என்பது ஒரு சவால்; அதில்நம் வாழ்வுவெற்றி கண்டிருக்கிறது. ‘நம் வாழ்வுவார இதழ் இந்த அளவுகோலில் 50 ஆண்டுகாலம் பயணித்திருப்பதே மிகப்பெரிய சாதனை!

ஊடக உலகம் அனுப்புநர் - பெறுநர் என்ற தளத்தில் பயணித்தாலும், ஒரு செய்தி எங்கிருந்து வருகிறது அல்லது யாரிடமிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதனுடைய முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது; கவனிக்கப்படுகிறது.

சமநீதிச் சமத்துவம் கொண்ட சமூகச் சிந்தனைகளை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிந்தனையில் தளம் கண்ட அரசியல் சாசன வழி நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டும் அரசியல் கட்டுரைகளை, அறநெறிச் சமூகம் பேணும் வாழ்வியல் நெறிமுறைகளைத் திருவிவிலிய, ஆன்மிக, உளவியல் தளங்களில் உரசிப் பார்த்து, கருத்துகளைச் சுமந்து வரும்நம் வாழ்வுபலராலும் இன்று வரவேற்கப்படுகிறது; பாராட்டப்படுகிறது. காரணம், இது பொதுச் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கிறது; ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகள் கொண்ட செயல்பாடுகளை முன்வைக்கிறது; ‘நம்எனும் அடைமொழியே அதற்குச் சான்று. மானுட இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் அடி நாதம்வாழ்வு.’ இந்த வாழ்வு ஒரு மாபெரும் கொடை! அதைப் பொருளுள்ள வகையில் தனதாக்கிக்கொள்ள இச்சமூக உறுப்பினர்களுக்கு வழிகாட்டும் ஒரு புரட்சிக் குறியீடே (Revolutionary Icon) ‘நம் வாழ்வு!’

இத்தகையச் சிறப்புமிக்க கத்தோலிக்க வார இதழானநம் வாழ்வுஇன்று பொன்விழாக் கண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. ‘சேர்ந்தே இருப்பது மதுரை மண்ணும் தமிழ் மனமும்எனப் பெருமை கொள்ளும் வகையில், முச்சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் வார இதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழா மதுரையில் நிகழ்ந்தது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியது. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த நல் உள்ளங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு எண்ணிப் பார்க்கிறேன். சிறப்பாக இவ்விழாவின் நன்றித் திருப்பலிக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், பாராட்டு விழாவிற்குத் தலைமை வகித்த மதுரை மேனாள் பேராயர் மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்களுக்கும், விழாவிற்கு முன்னிலை வகித்த பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழ்நாடு கிறித்தவர்களின் முகமாய், முகவரியாய், இளையோரின் எழுச்சி நாயகனாய், கிறித்தவ நல்லிணக்கத்தின் அடையாளமாய் விளங்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ் அவர்களுக்குச் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொன்விழா ஆண்டில் முதன்மை ஆசிரியராக இவ்விழாவை முன்னெடுத்துச் செல்ல என்னே யான் பெற்ற பெரும் பேறு! இவ்விதழோடு கொண்ட பற்றாலும், என்னோடு கொண்ட நட்பாலும் இவ்விழாவில் கலந்து கொண்ட நம் வாழ்வின் மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்கத் தலைவர்கள், மேனாள் முதன்மை ஆசிரியர்கள், மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவற சகோதரர்கள், இவ்விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், வர்த்தக நிறுவனத்தார், பெருந்திரளாகக் கூடியிருந்த இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சம்நிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க விழா, சீரும் சிறப்புமாக நடைபெற ஆசியும் ஆலோசனையும் வழங்கிய மதுரை உயர் மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகி மேதகு ஆயர் அந்தோணிசாமி (பாளை மறைமாவட்ட ஆயர்) அவர்களுக்கும், பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் நல்கிய மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. பால் பிரிட்டோ அவர்களுக்கும், தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருள்பணி. லூயிஸ் அவர்களுக்கும், ஞானஒளிவுபுரம் பங்கு-தூய வளனார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. A. ஜோசப் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவின் பல்வேறு ஏற்பாடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாராளமான பொருள் உதவி நல்கிய நன்கொடையாளர்கள், வர்த்தக நிறுவனத்தார் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, இவ்விழாவிற்குத் திட்டமிட்ட முதல் நாளிலிருந்து இந்நாள் வரையிலும் எமக்கு வழிகாட்டுதலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து, இவ்விழாவின் வெற்றிக்குப் பெரிதும் துணையிருந்தநம் வாழ்வுவெளியீட்டு சங்கத்தின் தலைவரும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணைந்து இறைவனுக்கு நன்றிகூறும் இப்பொன்விழா தருணத்தில், வாருங்கள்... இணைந்து பயணிப்போம்! கூர்முனை புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வாசிப்பை நேசிப்போம்

அறிவு கண் விழிக்க, ஆதி ஆசானாய் இருப்பது மொழி. அந்த மொழியில் தவழும் ஒவ்வோர் எழுத்தும் வார்த்தைகளும் முக்கியமானவை. அவை சிந்தனைகளைச் செதுக்கிச் செப்பனிடுபவை. நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துகளும் சொற்களும் அமையும்போது அவை மொழிக்கு வலிமை சேர்க்கின்றன. எனவே, ஓர் அறிவுநிறைச் சமூகத்தை உருவாக்க புத்தகமும் அதில் மலரும் வாசிப்பும் மிக மிக அவசியமே!

ஆகவேதான், தமிழுக்குப் புதிய உயிரும் உருவமும் உள்ளடக்கமும் தந்து நவீனப்படுத்திய பாரதி, “பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதால் தமிழ் வளர்ந்துவிடாது: மாறாக, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்; இறவாப் புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் படைக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில்எழுத்துஉயிர் கொண்டு, ‘வாக்குவளமாகி, ‘வாழ்வுவரமாக உருவாகும் அறிவுப் புதையலே புத்தகம். ஒவ்வொரு புத்தகத்திலும் இடம்பெறும் சொற்களில் எழுத்துகள் மட்டுமே கோர்க்கப்படுவதில்லை; மாறாக, எழுத்துகளுக்கு இடையே கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆழமான பொருளுடன், உணர்வுகளும் சிந்தனைகளும் களத்தரவுகளும் பொதிந்து வைக்கப்படுகின்றன. ஆகவேதான், புத்தகம் என்பது ஒரு தனி மனிதனின், சமூகத்தின், தேசத்தின் ஆவணம் எனப்படுகின்றது.

புத்தகத்தின் தாக்கம் அளப்பரியது; புத்தக வாசிப்பு உன்னதமானது. இந்தப் புத்தக வாசிப்பால் உறவுகள் மேம்படும்; நட்புகள் ஆழப்படும்; சிந்தனைகள் கூர்மைப்படுத்தப்படும்; புரட்சிகள் முன்னெடுக்கப்படும்; செயல்பாடுகள் வீரியப்படும்; தன்னிலும் சமூகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரும். ஒரு புத்தகத்தில் பதிந்திருக்கும் கருத்துகளில் உண்மை இருந்தால், இத்தகைய அதிர்வுகளை அது ஏற்படுத்தும்.

எழுத்துத்துறை இன்று முற்றிலும் தளர்ந்து வருகிறது. வாசிப்பு என்பது இச்சமூகத்திலிருந்து முற்றிலும் அப்புறப்படும் வண்ணம் நகர்ந்து செல்கிறது. இச்சூழலில், இளையத் தலைமுறையினர் எழுத்தையும் வாசிப்பையும் இரு கண்ணெனக் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது எந்நாளும் நேசிக்கப்பட வேண்டும்! அறிஞர் பெர்னாட்ஷா தனது நண்பருக்குப் பரிசளித்த புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் கண்டதும், அதை மீண்டும் அந்த நண்பருக்கே அனுப்பிவைத்து, புத்தகத்தின் பெருமை பற்றிக் கடிதம் எழுதினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

அண்மையில் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்தது. கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 17 நாள்கள் சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானம் விழாக்கோலம் கொண்டிருந்தது. புகழ்பெற்ற பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றன; சுமார் 900 அரங்குகளில் அவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். சிறுவர் முதல் பெரியவர் வரை யாவருக்குமான சிறப்பான படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், அறிவியல், உலக அறிவு, ஆன்மிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் கதை, கட்டுரை, நாவல், புதினம், சிறுவர்களுக்கான ஓவிய நூல்கள், மொழி ஆய்வு அடிப்படையிலான நூல்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களின் தமிழ்மொழி மற்றும் அகழாய்வு சார்ந்த நூல்கள் எனப் பல நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ்மொழி சார்ந்த படைப்புகள் அதிகம் விற்பனையானது என்னும் தரவு, தமிழ் மரபியல் சார்ந்த படைப்புகள் வாசகர்களின் வாசிப்பு இரசனையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இலக்கணம், இலக்கியம் சார்ந்த நூல்களுக்கு அவர்கள் தரும் மதிப்பையும் வரவேற்பையும் அது சுட்டிக்காட்டுகிறது.

புத்தக வாசிப்பு மட்டுமே என்றும் அழியாத சொத்து. நூல்களை நேசிக்கும் மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவ நிலையிலேயே இருக்கிறார்கள்என்கிறார் சொற்பொழிவாளர் சு. அன்பரசன். புத்தக வாசிப்பு என்பது நம்மை எந்தச் சூழலிலும் கலங்காமல் இருக்கும் மனத்திடத்தைக் கொடுப்பவை. அவை தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும் திகழ்கின்றன. நமது நம்பிக்கைக்கும் நற்சிந்தனைகளுக்கும் புத்தகங்களே வழிகாட்டுகின்றன. ஒருவரது சிறந்த சிந்தனைகளை மற்றவர்களுக்குக் கடத்தக்கூடியதாகப் புத்தகங்கள் உள்ளன.

ஆகவேதான், “மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டு வரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகும். வாழ்க்கையின் தத்துவத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளனஎன்கிறார் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார். புத்தகங்களும் அதில் இழையோடும் கருத்துகளும் மனித வாழ்வையும் சமூகத்தையும் மாற்றி அமைக்கத் தேவைப்படும் தத்துவங்களை எடுத்துரைப்பவை. அவை நமக்குக் கற்கவும் கற்றுத்தரவும் காலத்தால் அழியாத பெட்டகங்களாக இருப்பவை. ஆகவேதான், படைப்பாளிகளும் படைப்புகளும் அமரத்துவம் பெற்றவை என்கின்றனர்.

புத்தகங்களை ஒவ்வொரு முறையும் படிக்கும் போது அவை ஒவ்வொரு விதமான கருத்துகளால் நம்மை ஆட்கொள்கின்றன. கல்வெட்டுகள் போல கடந்த கால வரலாற்றையும், பனித்துளி போல நிகழ்காலச் சம்பவங்களையும் அவை நமக்குக் காட்டுகின்றன. ஆகவே, ஆழ்ந்து வாசிக்கும்போது, உண்மையைக் கண்டுகொள்வோம்; உண்மை வழி நிற்கப் பாதையைக் கண்டுகொள்வோம்; உண்மையின் பாதையில் பயணிக்க உறவுகளைக் கண்டுகொள்வோம்; உறவுகள் ஒன்றிணைந்து புரட்சியைக் கண்டுகொள்வோம்; புரட்சியின் விலை மதிப்பில்லாப் பரிசாக மாற்றங்களைக் கண்டுகொள்வோம்.

தன்னிலும் சமூகத்திலும்  மாற்றத்திற்கான விடியலைத் தருபவை புத்தகங்கள். அதன் அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் நெஞ்சங்களில் சமூக, ஆன்மிக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும்நம் வாழ்வும்அதன் பதிப்பகமும் வெளிக்கொணரும் புத்தகங்களும் அவை முன்வைக்கும் கருத்துகளும் காலத்தால் அழியாதவை.

தரமான புத்தகங்களை இச்சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்து வரும்நம் வாழ்வுபதிப்பகம் இப்பொன்விழா ஆண்டில் - ‘கூர்முனைக் குரல்கள், ‘உண்மையை உரக்கச் சொல்வேன், ‘வாழ்வு வளம் பெற, ‘ஒரு திருக்குடும்பத்தின் பயணம்தெய்வீகத் தடங்கள்எனும் ஐந்து புதிய நூல்களைப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் வெளியிட இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்வீட்டுக்கு ஒரு விவிலியம்என்னும் நமது அறைகூவல், இன்று வீட்டிற்குப் பல திருவிவிலியங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவ்வாறேநம் வாழ்வுஇதழின் இப்பொன்விழா ஆண்டில்வீட்டுக்கு ஒரு நூலகம்என்னும் அறைகூவலை முன்வைக்கிறோம். கருத்து வளமிக்கத் தரமான புத்தகங்களைப் பெற்று, இன்றே நம் வீடுகளில் நூலகம் அமைப்போம்; நாளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர்களை ஏற்றுவோம்!

வாசிப்பை நேசிப்போம்; மாற்றத்தைச் சுவாசிப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
விடைபெறும் இறையியல் விருட்சம்!

சீரிய சிந்தனையும், நேரிய சொல்லும், உயரிய செயலும் கொண்ட ஒருவரின் வாழ்வியல் இந்த மனுக்குலம் மடியும் வரை மறக்கவே முடியாதது. அதுவே ஆகச் சிறந்த  ஆளுமையாக அவரை உயர்த்திப் பிடிக்கிறது. அத்தகையோரின் மரணம் சமூகத்திற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லுகிறது. நீண்ட காலம் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்று நினைப்பவர் மத்தியில், ‘வாழ்க்கையின் பெருமை வாழும் நாள்களில் இல்லை; செய்து முடிக்கும் செயல்களில் இருக்கிறதுஎன்பதை இவர்கள் எண்பிக்கிறார்கள்.

பொய்யாமொழி புலவர் ஐயன் வள்ளுவரின் வாக்கு

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236)

என்னும் குறளில் வெளிப்படும் பொருள், பேராசான் முதுமுனைவர்  இறையியலாளர் தந்தை பெலிக்ஸ்  வில்பிரட் அவர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் பேருண்மையாகவே இருக்கிறது.

மனிதனாகப் பிறந்தால் புகழுக்குரிய செயல்களைச் செய்ய வேண்டும்என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். தன் அறிவாற்றலாலும் முழுமையான அர்ப்பணத்தாலும் அளப்பெரிய இறையியல் புலமையாலும் இச்சமூகத்திற்கும் திரு அவைக்கும் மாபெரும் பங்களிப்பு செய்தவர் தந்தை வில்பிரட் அவர்கள்.

இவரது பிறப்பு மகிழத்தக்கது; வாழ்க்கை புகழத்தக்கது; மரணம் வணங்கத்தக்கது!

அன்பில் சிறந்த பணியாளனாய், அறிவில் சிறந்த சான்றோனாய், பண்பில் சிறந்த மனிதனாய், பணியில் வியக்கும் பேராளுமையாய் பயணித்த ஒரு நதி தன் மூல தர்மத்தில் முழுமையாய்  சங்கமித்திருக்கிறது. இந்த நதி தடம் பதித்த பாதைகளும் தவழ்ந்து வந்த சூழல்களும் போற்றத்தக்கவையே! இறையியல் பேராசிரியராய், குருமாணவர் பயிற்சியாளராய், மிகச்சிறந்த அறிஞராய், எழுத்தாளராய், இந்நூற்றாண்டின் வியத்தகு இறைவாக்கினராய், தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் மாபெரும் அடையாளமாய் அறியப்பட்ட இந்த ஆளுமை தடம் பதித்தத் துறைகள் ஏராளம்.

தத்துவவியல், இறையியலின் கிளைக்கூறுகளான கிறித்தியல், தொகுப்பு இறையியல், திரு அவையியல், விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், பல்சமய உரையாடல், கிறித்தவ ஒன்றிப்புசூழலியல், கலாச்சாரக் கலந்துரையாடல் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து, மானுட நேயம் கொண்டு மனிதகுல விடுதலைக்காகவும், குறிப்பாக, அடித்தட்டு மக்களின், விளிம்பு நிலை மக்களின் குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி வீரியமிக்க எழுத்துகளாலும் விடுதலைக் கூறு கொண்ட முழக்கங்களாலும் தன் சிந்தனைகளை உலகெங்கும் விதைத்து வந்த மாபெரும் சாதனையாளர் இவர்.

ஆகவேதான், இந்திய ஆயர் பேரவையின் தலைவரும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் பிலிப்பு நேரி பெரேரோ அவர்கள், “இறையியலாளர் வில்பிரட் அவர்கள் அறிவின், ஆன்மிக ஞானத்தின் அடையாளம்என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிடுகிறார்.

அவ்வாறே, “இவர் இறையியலில் இமயம் தொட்டவர்; இல்லை, இமயங்கள் பல கண்டவர். உலக அளவில் பல பொறுப்புகளை வகித்தவர்; பல சிறப்புகளைப் பெற்றவர்; பல பேர் ஆளுமைகளோடு தொடர்பில் இருந்தவர்; ஆயினும், மிக மிக எளிமையானவர். அடக்கம் என்னும் உயர்தன்மை ஒருவரை அழியாப் புகழ் நிலைக்குச் சேர்க்கும் என்பதற்கு எடுத்துக் காட்டானவர்என்று புகழாரம் சூட்டுகிறார் சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு சூசைமாணிக்கம் அவர்கள்.

இந்த ஞான ஒளி பல விளக்குகளை இச்சமூகத்தில் ஏற்றியிருக்கிறது என்பதே இவ்வொளி கண்ட  பெரும் பேறு! ஏறக்குறைய முப்பது முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும், எழுபதிற்கும் மேற்பட்ட முதுகலைப் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும் உருவாக்கியிருக்கிறார் என்பதே அதற்குச் சான்று.

அத்தகைய வரிசையில், தந்தை வில்பிரட் அவர்களின் மாணவரும் தஞ்சை மறைமாவட்ட ஆயருமான மேதகு T. சகாய ராஜ் அவர்கள், “தந்தை வில்பிரட் அவர்கள் விடுதலை இறையியலின் குரலாகவும், விளிம்பு நிலை மக்களின் தோழனாகவும், ததும்பாத நிறைகுடமாகவும், அமைதியாக வற்றாத இறையியல் நதியாகவும் பயணித்து இறையியலை இயக்கமாகக் கட்டி எழுப்பியவர்என்று புகழாரம் சூட்டுகிறார். “தலத் திரு அவை மக்களை மையப்படுத்திய தலத் திரு அவை, விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவை என்னும் கருத்தியலில் சிந்தனைக் களமும் செயல்பாட்டுத் தளமும் ஒருங்கே கொண்டவர்என்று மேலும் குறிப்பிடுகிறார்.

தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் முகமாக ஒளிர்ந்த தந்தை வில்பிரட் அவர்கள் ஒவ்வொரு சூழலிலும் மக்களின் வாழ்வியலைக் கருவாக, மையமாகக் கொண்டு அம்மக்களின் பண்பாட்டில் வேரூன்றிய இறையியலைக் கட்டமைக்கவே கனவு கண்டார். ஆகவேதான், ஆசியாவுக்கு என்று தனித்துவமான இறையியல் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.

1976-ஆம் ஆண்டு உரோமை உர்பானியா பல்கலைக்கழகத்தில் தனது 28-வது வயதில் இறையியலில் தங்கப் பதக்கத்தோடு முனைவர் பட்டம் பெற்ற இவர், அகில உலக இறையியல் கழகத்தின் உறுப்பினராகவும், ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் மன்ற ஆலோசகச் செயலராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு வருகைதருபேராசிரியராகவும், சிறப்புமிக்க இறையியல் இதழ்களின் ஆசிரியராகவும், 25 -க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு தளங்களில் சமர்ப்பித்துப் பரிணமித்திருப்பது அவருடைய ஞானவெளிப்பாட்டின் அங்கீகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க அருள்பணியாளரை, இறையியலாளரை தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் முகத்தை நாம் இழந்திருப்பது ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் பேரிழப்பாகும்.

தன் மக்களை முறையாகப் பயிற்றுவித்த பின்பு, தலைவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது, தன்னைப் போல புதிய தலைவர்கள் பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றைப் போல, தந்தை வில்பிரட் என்னும் பேரொளி மறைந்தாலும், அவரால் ஏற்றி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் எமக்கு ஐயமில்லை.

தந்தை வில்பிரட் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
உலகே போற்றும் உத்தமர்!

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது! (குறள் - 235)

அதாவது, ‘புகழுடன் வாழ்வது, நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இவ்விரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும்; மற்றவர்களுக்குக் கிடைப்பது அரிதுஎன ஐயன் வள்ளுவர் குறிப்பிடும் இக்குறள், மறைந்த பொருளாதார மாமேதை இந்தியத் திருநாட்டின் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போன்று எண்ணத் தோன்றுகிறது.

தங்கள் பெயர் வரலாற்றில் இடம்பெற்றதால் சில ஆளுமைகள் பெருமை கொள்கின்றனர்; ஆனால், சிலருடைய பெயர் வரலாற்றின் பக்கங்களை அணி செய்வதால் வரலாறே பெருமை கொள்கிறது. அத்தகைய வரலாறே பெருமைகொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஆளுமையாக வலம் வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.

தான் வாழ்ந்த காலத்திலும் இறந்த இச்சூழலிலும் உலகமே வியந்து போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவராக, மாமனிதராக  இவர் வாழ்ந்திருக்கிறார் என்பதே இந்த ஆளுமைக்குக் கிடைத்த புகழ்; பெரும்பேறு! இவர் தனி ஆளுமை என்பதையும் கடந்து, இவர் ஓர் அடையாளம் (Icon). உலகில் தலைசிறந்த கல்வி நிலையங்களில், பல்கலைக்கழகங்களில் படித்துப் புலமை பெற்று பேராசிரியராக வலம் வந்த டாக்டர் மன்மோகன் சிங், நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாகவும் அறிவுக்கும் அடக்கத்திற்கும் மாண்புமிகு அரசியல் அடையாளமாகவும் கணிக்கப்படுகிறார்.

இவர் அடக்கத்தின் வடிவம். மகத்தான மனிதர்கள் யாவரும் அடக்கமே வடிவாய் வாழ்ந்தவர்களே! அடக்கம் என்ற வேரிலிருந்தே எல்லா நற்பண்புகளும் கிளைபரப்புகின்றன. ‘அடக்கம் உள்ள இதயத்தில்தான் ஆண்டவனும் குடியிருப்பான்என்பது ஆன்றோர் வாக்கு. அடக்கம் பொதுநலத்தின் ஆலயம். முற்றிய கதிர்கள் மட்டுமே தரை நோக்கித் தலைதாழ்த்தும். முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த மனமே அடக்கத்துடன் பணிந்து நடக்கும். எனவேதான், “எளிமை, அறிவு மற்றும் பணிவின் உருவமான அவர் நாட்டுக்காக முழு மனத்தோடு பணியாற்றிய ஒப்பற்ற தலைவர்எனத் தன் இரங்கல் செய்தியில் பதிவு செய்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி. சோனியா காந்தி.

வர்த்தகத் துறையில் பொருளாதார ஆலோசகராகப் பதவியைத் தொடங்கிய டாக்டர் மன்மோகன் சிங், நிதித்துறையில் பொருளாதாரத் தலைமை ஆலோசகராகவும், மத்திய நிதித் துறைச் செயலராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து, படிப்படியாக உயர்ந்து பின்னாளில், இந்தியத் திருநாட்டின் நிதி அமைச்சராக மிளிர்ந்து, இறுதியில் உலகின் மிகப்பெரிய சனநாயகமான இந்தியத் திருநாட்டின் பிரதமராகவும் பணியாற்றியது அவருடைய கண்ணியத்திற்கும் கடின உழைப்பிற்கும் அறிவாற்றலுக்கும் சீரிய சிந்தனைக்கும் தீர்க்கமான முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த பரிசாகவே கருதப்பட்டன.

ஒவ்வொரு படிநிலைகளிலும் தான் வகித்தது பதவி என்று கருதாமல், அது பொறுப்புமிக்கப் பணி எனக் கருதி முழு மூச்சோடும் முழுமையான அர்ப்பணத்தோடும் அவர் பணியாற்றியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அவருடைய தனிமனித மதிப்பீட்டு வாழ்வியல், ஆழமான பொருளாதார அறிவு, வெற்றி நிறைந்த அரசியல் பயணம் எனும் மும்முனைத் தளங்களில் இப்பேராளுமையைச் சிந்திக்க விழைகிறேன்.

எளிய தோற்றம், ஈரமுள்ள இதயம், இனிய உடல் மொழிக்கூறு, அன்பான வார்த்தைகள், அமைதியான உரையாடல், ஆழமான சிந்தனை, கருத்துச் செறிவுமிக்க பேருரைகள், தீர்க்கமான முன்னெடுப்புகள்... இத்தகைய மதிப்பீடுகளின் வரிசையில் ஒருபோதும் தளும்பாத நிறைகுடமாகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

எவரையும் கடிந்துகொள்ளாத இவர், கடைநிலை ஊழியரிடமும் கனிந்த இதயத்துடன் உறவாடுவதும் உரையாடுவதும் தன் ஆளுமையின் தனிச்சிறப்பாகவே கொண்டிருந்ததும், பேச்சிலும் செயலிலும் தன்னால் எவரும் ஒருபோதும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததும் பெரிதும் போற்றத்தக்கதே!

இந்த ஆளுமையின் பொருளாதார அறிவு உலகையே வியப்புக்குள்ளாக்குகிறது. இந்தியாவின் பொருளாதார ஏறுமுகத்திற்கான ஆதாரப் புள்ளி இவர் என்றால் அது மிகையாகாது. 1971 - இல் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பு வகித்த காலத்திலும், 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரத்தைப் புதைகுழியிலிருந்து மீட்டெடுத்த பொருளாதார மாமேதையாகப் புகழப்படுகிறார்.

1991-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றின் பொருளாதார ஏற்றத்திற்கான முக்கிய ஆண்டு. அன்றைய பிரதமர்  பி. வி. நரசிம்மராவும், டாக்டர் மன்மோகன் சிங்கும் இக்கட்டான இந்திய நிதி நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டவர்கள் என்றால், அப்பெருமை அவர்களையே சாரும். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் கூர்மையான சிந்தனைத் தெளிவு பல பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது; பிற நாடுகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுத்தது. இந்தியாவை உலகின் ஐந்தாவது மாபெரும் பொருளாதாரத் தன்னிறைவு கொண்ட நாடாக உயர்த்தியது.

டாக்டர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரச் சிந்தனையும் செயல்பாடுகளும் இந்திய நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமின்றி, உலக அளவிலும் பல்வேறு பலன்களை அளித்துள்ளதுஎன்று புகழாரம் சூட்டுகிறார் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அவ்வாறே, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் லின்டி கேமரூன், “தனது துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் நலன்களை மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றவர். சிறந்த பிரதமராக, நிதி அமைச்சராக, உலக அளவில் சிறந்த அரசியல் தலைவராக மதிக்கப்பட்டவர்எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சர் மோடி  அவர்கள், “போராட்டங்களைக் கடந்து எவரும் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் பாடமாக அமையும். பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் வழங்கிய பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும்என நினைவு கூருகிறார்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு தனிப்பட்ட இழப்பாகச் சிலருக்கு அமைந்தாலும், நம் நாட்டிற்கும் உலகிற்கும் பேரிழப்பே! அவரது இழப்பை நிரப்புவது மிகவும் கடினம். பொருளாதாரம், அரசியல் எனப் பல தளங்களில் அவரது ஆலோசனைகளைக் கேட்க கட்சி பாகுபாடின்றி பறவைகள் போல் பலரும் கூடிய ஆலமரம் இன்று சாய்ந்துவிட்டது. ஆயினும், வாஞ்சையோடு தழுவிக்கொண்ட வரலாறு இத்தகைய பேராளுமையால் பெருமை கொள்கிறது.

எளிமை, உயர்கல்வி, விடாமுயற்சி, கடின உழைப்பு, வெற்றி, உயர்வு, மேன்மை, நேர்மை, நிர்வாகம், சீரிய சிந்தனை, தொலை நோக்குப் பார்வை, பொருளாதாரம், அரசியல், அறிவியல், அறநெறி வாழ்வியல் எனப் பல படிநிலைகளில் இந்நூற்றாண்டின் குறியீடாக முன்னிருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் இன்றைய இளையோர் படிக்க வேண்டிய பேராளுமையே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்