news
தலையங்கம்
இன்றைய அரசியல் களம்: மாற்று அரசியலா? வணிக முதலீடா?

அண்மைக்கால இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பாக, தமிழ்நாட்டின் தேர்தல் களங்களில்மாற்று அரசியல்என்ற சொல் வழக்கு மிக அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு கவர்ச்சி சொல்லாடலாக மாறியுள்ளது. ஆனால், நடைமுறை அரசியலின் எதார்த்தம், இந்தச் சொல்லின் ஆன்மாவை முற்றிலும் சிதைப்பதாகவே உள்ளது.

கோட்பாடுகளும் கொள்கைசார் அர்ப்பணிப்புகளும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற காலம் மறைந்து, இன்றுஅளவுகடந்த இருப்புஅதாவது பணபலம், படைபலம், ஊடக ஆதிக்கம் ஆகியவையே ஒரு கட்சியின், அதன் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக உருவெடுத்துள்ளன.

நடந்து முடிந்த 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரங்கேறிய பணப் புழக்கமும், அதனைத் தொடர்ந்து அரங்கேறும் அன்றாடக் காட்சிகளும் குறிப்பாக, கட்சித் தாவல்களும் நம் சனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன. இச்சூழலில், நாம் காண்பது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இறையாண்மைமிக்க ஆட்சியா? அல்லது பெரும் முதலாளிகள் இலாபம் ஈட்டுவதற்காக முதலீடு செய்யும் ஒரு கார்ப்பரேட் வணிகமா? என்பதுதான்.

இந்தியத் தேர்தல்களில் பணத்தின் ஆதிக்கம் என்பது ஏதோ ஒருசில தொகுதிகளோடு நின்றுவிடுவதில்லை. அது ஒட்டுமொத்த அமைப்பையும் தன்வயப்படுத்திய ஒரு பெரும் நோயாகவே இன்று மாறியுள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரையிலான நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தன் விவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 330% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைச் சரிசெய்து பார்த்தாலும், உண்மை மதிப்பில் இந்த உயர்வு 116% ஆகும். 2014 தேசியத் தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 23.8 இலட்சமாக இருந்தது, இது அன்றைய இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட (ரூ. 88,533) சுமார் 27 மடங்கு அதிகமாகும். 2026-இன் தற்போதைய தேர்தல் களங்களில் இந்த இடைவெளி பல மடங்கு அதிகரித்துள்ளது.

 தேர்தல் ஆணையம் விதிக்கும் செலவு வரம்புகளுக்கும், களத்தில் கட்சிகள் செய்யும் நேரடிச் செலவுகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1954)-இன் விதிகளை முற்றிலுமாக மீறி, கோடிக்கணக்கான பணம் தேர்தல்களில் இறைக்கப்படுகின்றன. குறிப்பாக, வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள், சாதாரண வேட்பாளர்களைவிடச் சராசரியாக 20 மடங்கு அதிகச் சொத்து மதிப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

தேர்தல் களத்தில் பணத்தின் செல்வாக்கு என்பது வாக்காளர்களின் வாக்குத் தெரிவை நேரடியாக மாற்றியமைக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, தேர்தல் களங்களில் கொடுக்கப்படும் பணம் சுமார் 15.83% வாக்காளர்களின் வாக்குத் தெரிவை நேரடியாகத் தீர்மானிக்கிறது. இதில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்களே பணத்தின் செல்வாக்கிற்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.

இங்கே, வாக்கிற்குக் காசு வாங்கும் வாக்காளர்கள் தாங்களாகக் கேட்காமல் கட்சிகள் கொடுக்கும்போதுஇயல்பாகபெற்றுக்கொள்பவர்கள் எனவும், தேர்தல் களச்சூழலைப் பயன்படுத்தி, வேட்பாளர்களிடமிருந்தோ அல்லது இடைத்தரகர்களிடமிருந்தோ பணத்தைக் கோரிப் பெறுபவர்கள் எனவும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். மாற்றுக்கருத்துகளாலும், நலமான விவாதங்களாலும் ஈர்க்கப்படவேண்டிய வாக்காளப் பெருமக்கள், இன்று தற்காலிகப் பணப் பயன்களுக்காகத் தங்களின் ஐந்தாண்டு கால எதிர்காலத்தையே அடகுவைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதச் செயல் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டுத் தார்மீக வீழ்ச்சி.

தேர்தலுக்கு முன் வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பின் தங்களின்முதலீட்டைஅசுர வேகத்தில் திரும்பப் பெற முனைகிறார்கள். அண்மைக்காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டு, கட்சி மாறும்குதிரைப்பேரகலாச்சாரம் தமிழ் நாட்டிலும், அதன் அண்டை மாநிலங்களிலும் அதிகம் அரங்கேறி வருகின்றது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் போன்ற சட்டக் கட்டமைப்புகள் இருந்தபோதிலும், ஆளும் வர்க்கமும் அதிகார மையங்களும் அச்சட்டங்களின் துளைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காகவும், கட்சியின் சின்னத்திற்காகவும் வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவரோ தன் சுய இலாபத்திற்காக மக்கள் அளித்த வெற்றியை விற்று, வேறொரு முகாமிற்குத் தாவுகிறார். இது ஒட்டுமொத்தச் சனநாயகக் கோட்பாட்டையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

ஆகவே, உண்மையான மாற்று அரசியலுக்குத் தேவைப்படுவது அர்ப்பணிப்பா? அல்லது அளவு கடந்த இருப்பா? என்ற கேள்வி இன்று தமிழ்நாட் டில் எல்லாருடைய மனத்திலும் எழத்தொடங்கியுள்ளது. காரணம், அர்ப்பணிப்பு இங்கே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு, அளவுகடந்த இருப்பே அடிப்படை அலகாக முன்னிறுத்தப்படுகிறது.

இந்திய அரசியலில் சில கட்சிகளில் வேட்பாளர் தேர்வைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கிறது. பல நேரங்களில் தேர்தல் சீட்டுகள் பெரும் பணக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன. இதனால் எளிய பின்னணியைக் கொண்ட மக்களுக்காக உழைக்கின்றவர்கள் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.

ஒரு வேட்பாளர் தனக்குச் சாதகமாகக் களச் சூழலை மாற்றியமைக்க, தன்வசம் உள்ளஅளவு கடந்த இருப்பைகாட்ட வேண்டியுள்ளது. ஆடம்பரப் பேரணிகள், பிரம்மாண்ட விளம்பரங்கள், சமூக ஊடகப் பக்கங்களை விலைக்கு வாங்குதல் என அனைத்தும் பணத்தால் மட்டுமே சாத்தியமாகிறது. இதன் விளைவாக, மக்கள் பணி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுயநிதி பங்களிப்புச் செய்யக் கூடிய பண முதலைகளின் புகலிடமாக நாடாளுமன்றமும் சட்டமன்றமும் மாறுகின்றன.

பணமே அரசியலையும் அதன் அதிகாரத்தையும் தீர்மானிக்கும் பட்சத்தில், அங்கு விளையும் ஆட்சி ஒருபோதும்மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியாகஇருக்க முடியாது. அது முற்றிலும் ஒருவணிக முதலீடாகவேமாறும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலாளி எவ்வாறு இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வாரோ, அதே போலத் தேர்தலுக்காக ரூ. 50 கோடியும், ரூ.100 கோடியும் செலவழிக்கும் வேட்பாளர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தன் முதலீட்டைவிடப் பல மடங்கு இலாபம் ஈட்டவே முயல்வார்!

இதன் விளைவாக, அரசின் திட்டங்களும் டெண்டர்களும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக வகுக்கப்படாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வேட்பாளரின் சொந்தத் தொழில்களுக்கும் சாதகமாக வளைக்கப்படும். உட்கட்டமைப்புத் திட்டங்கள், சாலை மேம்பாடு, பொதுப்பணித்துறைச்  செயல்பாடுகள் என அனைத்திலும் முறைகேடுகள் மலிந்து, தரம் குறைந்த திட்டங்களே செயலாக்கம்பெறும். ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களை எளிய மக்களின் பிரதிநிதியாகக் கருதாமல், தங்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் மேல்தட்டு வர்க்கமாகவே தங்களைக் கருதுவர்.

மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.கே. திரிவேதி குறிப்பிட்டதுபோல, “தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு என்பது செலவழிக்கப்படும் பணத்தின் அளவிற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்ற விதியை அரசியல் கட்சிகள் கண்டறிந்துள்ளன. இது நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் மட்டங்களைச் சீரழிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.”

பேரதிர்ச்சி தரும் இந்தச் சீரழிவிலிருந்து நமது சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், போர்க்கால அடிப்படையில் நாம் சில இலட்சிய மாற்றங்களைச் செய்தாகவேண்டும். அரசியல் கட்சிகளின் வரவு-செலவுக் கணக்குகள், தேர்தல் பத்திரங்களின் உண்மைத் தன்மை ஆகியவை உடனுக்குடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்; வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்களையும், வாங்கும் வாக்காளர்களையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யவும், வெற்றிபெற்ற பிறகு பணத்திற்காக விலைபோகும் உறுப்பினர்களையும், முறையான காரணமின்றி தானாக முன்வந்து பதவியைத் துறக்கும் உறுப்பினர்களையும் மீண்டும் போட்டியிடாதவாறு தடைசெய்யும் அளவிற்குக் கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, தங்களின் வாக்கு என்பது ஒரு நாட்டின் ஐந்தாண்டு காலத் தலையெழுத்து என்ற விழிப்புணர்வு மக்களிடையே விதைக்கப்படவேண்டும்.

இறுதியாக, சனநாயகம் என்பது சாமானிய மனிதனின் கையில் இருக்கும் மிக உயரிய அதிகாரம். அந்த அதிகாரத்தை ஒருசில தாள்களுக்காகவும், தற்காலிகப் பரிசுப் பொருள்களுக்காகவும் விற்கும் சமூகம், ஒருபோதும் தன் உரிமைகளைக் கோரிப் போராட முடியாது. இவ்வேளையில்,

முடிவுகள் வந்த பின்னரே

வாழ்க்கைத் தேர்வின்

வினாத்தாள் முன் வைக்கப்படுகிறது!’

எனும் கவிஞர் தமிழகனின்கருப்பு நதிகவிதைதான் நினைவுக்கு வருகிறது. ஆகவே, தமிழ்நாட்டிற்கு இன்று தேவைப்படுவதுஅளவுகடந்த இருப்பைகாட்டி மக்களை ஏமாற்றும் தற்காலிக அரசியல் அல்ல; மாறாக, எளிய மக்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் தூய கொள்கை கொண்ட மாற்று அரசியல் மட்டுமே! பணபலம் வெல்லும் என்ற மாயையை மக்கள் தங்களின் வாக்குரிமையின் மூலம் உடைத்தெறியாத வரை, சனநாயகம் என்பது பணக்காரர்களின் முதலீட்டுப் பெட்டியாகவே என்றும் நீடிக்கும் என்பது தவிர்க்க இயலாததே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
மும்மொழித் திட்டம்: கல்விக்கொள்கையா? காவிக்கொள்கையா?

இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்ட கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் அதிகாரக் கரங்கள், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் கல்விச் சுவர்களில் மோதி நிற்கின்றன.

மே மாதத்தில், கல்விக்கூடங்கள் கோடை விடுமுறையில் அயர்ந்திருந்த வேளையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விடுத்த அந்த ஐந்து பக்கச் சுற்றறிக்கை, ஒரு நிர்வாக அறிவிப்பு மட்டுமல்ல; அது பன்மொழிச் சமூகம் ஒன்றின்மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதலாகும்.

2026 ஜூலை 1 முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் அந்த ஆணை கட்டளையிடுகிறது. ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், அது அந்த இரண்டு இந்திய மொழிகளின் கணக்கில் வராது என்பதுதான் இந்தச் சூழ்ச்சியின் உச்சம். மேலோட்டமாகப் பார்க்கையில், ‘அதிக மொழிகளைக் கற்பது அறிவு வளர்ச்சிக்கு உதவும்எனும் பொதுவான வாதத்தை முன்வைக்கும் இந்தத் திட்டம், அதன் உட்புறத்தில் இந்தி ஆதிக்கத்தை ஊடுருவச் செய்யும் ஒரு நச்சு வேராகும்.

நிர்வாக ரீதியான ஒரு சாதாரண மாற்றமாகத் தோற்றமளிக்கும் இச்செயல்பாட்டின் பின்னணியில், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்டஇந்தி-இந்து-இந்துஸ்தான்எனும் கருத்தியலைத் திணிக்கும்காவித் திட்டத்தின்நீண்ட நிழல் படிந்திருப்பதை நாம் உணரத் தவறக்கூடாது. இது வெறும் கல்விக்கொள்கை அல்ல; இது மொழிவழித் தேசியங்களை நசுக்கும் ஓர் அதிகாரக் கொள்கை.

தமிழ்நாட்டின் மேனாள் முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, இது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டமொழித் திணிப்பே!’ தென்னிந்திய மாநிலங்களில் வாழும் ஒரு மாணவன், தன் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு, மூன்றாவது மொழியாக எதைத் தேர்ந்தெடுப்பான்? ஆசிரியர் பற்றாக்குறை, பாடப்புத்தகக் கட்டமைப்பு, தேசிய அளவில் நிலவும் இந்திச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், அந்தத் தெரிவு இயல்பாகவே இந்தியை நோக்கியே தள்ளப்படும். ஆனால், இதே கேள்விக்கு மறு பக்கம் என்ன பதில்? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ், தெலுங்கு அல்லது மலையாளத்தைக் கற்கவேண்டிய கட்டாயம் உண்டா? இல்லவே இல்லை. அங்குள்ளவர்கள் சமஸ்கிருதத்தையோ அல்லது வேறு ஏதேனும் வட இந்திய மொழியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம், இந்த விதியை மிக எளிதாகக் கடந்து விட முடியும். இந்தசமநிலையற்ற தன்மைதான் தமிழ்நாட்டின் கோபத்திற்குக் காரணம். சட்டப் புத்தகத்தில் சமமாகத் தோன்றும் இந்த விதி, நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள்மீது மட்டும் கூடுதல் சுமையை ஏற்றுகிறது.

மொழி என்பது யாவருக்கும் அடையாளம்; அது நம் முகம்; முகவரி. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மொழி என்பது வெறும் பாடத் திட்டம் அல்ல; அது ஒரு வரலாற்றுத் தழும்பு. 1937-இல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோதுதான், இந்த மாநிலத்தின் சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. பெரியார் .வெ. இராமசாமி அவர்களின் தலைமையில் தாளமுத்து, நடராசன் போன்றோர் தங்கள் இன்னுயிரைத் தந்து காத்த மொழிப்போர் வரலாறு நம் இரத்தத்தில் ஊறியுள்ளது.

1965-இல் மாணவர்கள் நடத்திய அந்த மாபெரும் அறப்போர், லால் பகதூர் சாஸ்திரி போன்ற அன்றைய தலைவர்களையே பணிய வைத்தது. “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும்என்ற நேருவின் வாக்குறுதி ஒரு சட்டப் பாதுகாப்பாகப் பெறப்பட்டது. 1968-இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் இயற்றப்பட்டஇருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளது. உலக வெளியில் நம் மாணவர்கள் போட்டியிட ஆங்கிலமும், நம் பண்பாட்டு வேர்களைக் காக்கத் தமிழும் போதுமானவை என்பதைத் தமிழகத்தின் வளர்ச்சி எண்கள் உரக்கக் கூறுகின்றன.

ஆயினும், ஒன்றிய பா.. அரசு முன்வைக்கும் தேசியக் கல்விக் கொள்கை, ‘மாணவர்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதுஎன்று வாதிடுகிறது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களை ஆராய்ந்தால் அந்தச் சுதந்திரம் ஒரு மாயை என்பது நன்கு புரியும். ஒரு தனியார் பள்ளியில் 50 மாணவர்கள் ஒன்பது வெவ்வேறு மொழிகளைத் தேர்ந்தெடுத்தால்ஒன்பது ஆசிரியர்களை நியமிக்க அந்தப் பள்ளி முன்வருமா?

நிச்சயமாக வராது. அங்கே ஏற்கெனவேதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாபோன்ற அமைப்புகள் மூலம் இந்தி ஆசிரியர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். மத்திய அரசு இந்தி ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கும்; ஆனால், தமிழ் ஆசிரியர்களை வடமாநிலங்களில் நியமிக்க அதே ஊக்கத்தைக் காட்டாது. விளைவாக, ‘வேறு வழியின்றிமாணவர்கள் இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும். ஆகவே, இது ஒருகட்டமைப்புச் சார்ந்த விபத்து(Structural Accident) அல்ல; மாறாக, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டகட்டமைப்புச் சார்ந்த திணிப்பு (Structural Imposition) இது.

இந்த மொழித் திணிப்பு வெறும் கல்விக் கொள்கையோடு நிற்கவில்லை. இது ஒரு நிதி ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவது வெட்கக் கேடு! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதி, ‘சமக்ர சிக்ஷா அபியான்திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கிடையாது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையை, நிதியைக் கொண்டு விலை பேசுவது, ஆரோக்கியமான சனநாயகத்திற்கு அழகல்ல.

ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கல்வி கற்பது என்பது உலகளாவிய மனித உரிமை. மும்மொழிக் கொள்கை என்பது ஏற்கெனவே சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருகிறது. ஒரு புதிய மொழியைக் கற்பதற்கானஅறிவாற்றல் திறன்குழந்தைகளுக்கு உண்டு எனும் வாதம், அந்த மொழியைக் கற்பதற்கான சூழலும், வளங்களும் இல்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருந்தாது. ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக் கல்வியே ஒருவரைச் சிறந்த குடிமகனா(ளா)கவும், உலகக் குடிமகனா(ளா)கவும் மாற்றப் போதுமானது.

ஒன்றிய பா..  அரசு இந்தியைத் திணிப்பதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவதன் பின்னணியில் ஓர்ஒற்றைப் பண்பாட்டுஅரசியல் மறைந்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்துஒரே நாடு, ஒரே மொழிஎன்பதன் மூலம் மற்ற மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்க முடியும் என்பதே அவர்களின் கணக்கு. இந்தியா என்பது ஒற்றைக் கல்லால் ஆன தூண் அல்ல; அது பல வண்ணக் கற்கள் இணையும் ஓர் அழகிய ஓவியம். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது மற்ற மொழிகளின் மீதான வெறுப்பினால் அல்ல; மாறாக, தன் அடையாளத்தைச் சிதைக்கும் ஆதிக்கத்திற்கு எதிரான தற்காப்பு அரண் என்பதே உண்மை.

தன்னார்வமாக ஒரு மொழியைக் கற்பதை யாரும் தடுக்கவில்லை; ஆனால், கட்டாயமாகத் திணிப்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. ‘தமிழே எமது உயிர்; ஆங்கிலமே எமது இணைப்பு மொழிஎனும் எமது தெளிவான நிலைப்பாடு, வெறும் உணர்ச்சியல்ல; அது அறிவியல்பூர்வமான, வளர்ச்சிகரமான கொள்கை. ஆகவே, மத்திய அரசு தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.

கல்வியின் பெயரால் வரும் இந்தக் காவிக் கொள்கையை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வீழ்த்தும் என்பதே எமது எதிர்நோக்கு. 1965-இன் நெருப்பு இன்னும் அணையவில்லை என்பதையும், மொழிப்போர் என்பது இனப்போர் என்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் நன்கு உணர வேண்டிய தருணம் இது. நம் மொழி, நம் உரிமை, நம் அடையாளம் - இதில் சமரசத்திற்கு என்றுமே இடமில்லை!

தாய்மொழி காப்போம்! மாநில உரிமை மீட்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
நாட்டு நலனும் - நாகரிக அரசியலும்: புதிய விடியலுக்கு ஓர் அறைகூவல்

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் துருவங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த மாநில அரசியல், இன்று ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (.வெ..) தலைவர் திரு. . ஜோசப் விஜய், மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு சாதாரண அதிகார மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறை மாற்றத்தின் வெளிப்பாடே!

இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய  அறிவார்ந்த முதிர்ச்சியைப் பறைசாற்றுகின்றன என்று ஒருசாராரும், கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருந்தாலும் மக்கள் தெளிவற்றே இன்னும் உள்ளனர் என்ற விமர்சனம் மறுபுறம் எழுந்தாலும், ஒரு கட்சிக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கி, ‘அதிகார மதம்தலைக்கேற அனுமதிக்காமல், அதேசமயம் ஒரு புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் .வெ..வைத் தனிப்பெரும் கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது பெரிதும் வியப்பளிக்கிறது. இந்தத் தொங்கு சட்டசபை போன்ற சூழலிலும், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நாகரிக அரசியல் பண்பாடு வெளிப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

மாநிலத்தின் நலன் கருதியும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காக்கும் பொருட்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி..) மற்றும் இந்திய யூனியன் முசுலிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் .வெ.. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன், ஆட்சியிலும் பங்குபெறுவது  அரசியல் தளத்தில் ஒருபுறம் பெரிதும் பாராட்டப்படுகிறது. மறுபுறம், தி.மு..-வுடனான தங்களின் நீண்டகால உறவைத் தொடர்ந்துகொண்டே அதேசமயம், தமிழ்நாட்டில் பா... போன்ற சக்திகள் குழப்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு பல விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

இந்தச் சூழலில், ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் நாம் சற்றே சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். .வெ.. அரசுடன் அமைச்சரவையில் பங்கெடுக்காமல், வெளியே இருந்து ஆதரவளிப்பதாக வி.சி..வும் இடதுசாரிகளும் அறிவித்தபோதும், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குஎன்று வி.சி.. முன்பு முழங்கியது போலவே, மாநில உரிமைகளுக்காக தி.மு.. அணியிலேயே நீடிப்போம் என்றதுடன், இன்று அமைச்சரவையில் பங்கெடுத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஆயினும், .வெ..வுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்த போதிலும், அவர்கள் விதித்த நிபந்தனைகள் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. பா...வை எதிர்க்கவேண்டும் என்ற நிபந்தனை அவசியமானது என்றாலும், அமைச்சரவையில் இடம் கோரியது அவர்களின் அதிகார வேட்கையையே காட்டுகிறது என்றே விமர்சிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தை இழந்த நிலையில், முதுகில் குத்திவிட்டு அணிமாறிச் சென்றார்கள் என்ற விமர்சனத்திற்கு காங்கிரஸ் ஆளாகியுள்ளது. தி.மு..விடம் நாகரிகமான முறையில் விடைபெறாமல் சென்ற அவர்களின் அணுகுமுறை முதிர்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடே!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான .தி.மு.. இன்று சிதறுண்டு கிடக்கிறது. உட்கட்சிப் பூசல்களும், எடப்பாடியார் தலைமைக்கு எதிரான போக்கும் அக்கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று விஜய்க்கு ஆதரவளிக்கும் சூழல் உருவானால், அது .தி.மு..-வின் அடித்தளத்தையே அசைத்துவிடும். மதவாதத்தைச் சுமந்துவரும் கட்சிகளை தமிழ்நாட்டில் மக்கள் என்றும் நிராகரிப்பார்கள் என்பதை .தி.மு.. உணரத் தவறியதன் விளைவே இந்தத் தோல்வி.

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நீதியை உள்ளடக்கியதிராவிட மாடல்வளர்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. விஜய் தலைமையிலான புதிய அரசு, இந்த முற்போக்கான திட்டங்களைச் சிதைக்காமல் தொடரவேண்டும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு இன்று தேசிய அளவில் மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்குத் திராவிட இயக்கங்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே காரணம் என்றால் அது மிகையல்ல. விஜய் அரசு இந்த வளர்ச்சிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டுமே தவிர, அதைச் சீர்குலைத்துவிடக் கூடாது.

நான் தவறு செய்யமாட்டேன்; மற்றவர்களைத் தவறு செய்யவிடமாட்டேன்என்று முழங்கிய விஜய், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்றத் தன்மையையும் நேர்மையையும் நிலைநாட்டவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். வெறும் பரப்புரைகளால் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது; களப்பணியும் நேர்மையான செயல்பாடுகளுமே நிலைத்து நிற்கும் ஆட்சியைத் தரும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.

இந்தப் புதிய ஆட்சியின் தற்போதையதேன்நிலவுக் காலங்களின்மகிழ்ச்சியில்ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்?’ என்ற கேள்வியையும் நாம் மறந்துவிடக்கூடாதுபாரம்பரியக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மக்களை குறிப்பாக, இளைய தலைமுறையை நெருங்கத் தவறிவிட்டனவோ என்பதையும் மீளாய்வு செய்து பார்க்கவேண்டியுள்ளது. மேடைப்பேச்சுகளும், பழைய முழக்கங்களும் இன்றைய எண்மத் தொழில்நுட்பத் (டிஜிட்டல்) தலைமுறைக்கு உவப்பானதாக இல்லை என்பதையும் நாம் புரிந்தாகவேண்டும்.

.வெ..வினர் வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தையும் உணர்வுப்பூர்வமாக நெருங்கியதே அவர்களின் வெற்றியின் இரகசியம் என்றும் கணிக்கப்படுகிறது.

அறிவார்ந்த வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தி.மு.. அரசு கொண்டு வந்த போதிலும், அதை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கத் தவறியதும், அடிமட்ட அளவில் நடந்த ஊழல்களுமே அதிருப்திக்குக் காரணமாயின என்றும் விமர்சிக்கப்படுகிறது.

அதேசமயம், சாதி அரசியலைத் தவிர்த்துவிட்டு ஓர் அமைதிக் கிளர்ச்சி மூலம் மக்கள் மதவாதத்தையும் சாதியப் பாகுபாட்டையும் தேர்தல் பணப் புழக்கத்தையும் நிராகரித்திருக்கிறார்கள் என்பதே உண்மை!

தமிழ்நாட்டிற்கு இன்று தேவைப்படுவது, தனிநபர் துதிபாடும் அரசியலோ அல்லது வசைபாடும் அரசியலோ அல்ல; மாறாக, மாநில நலம் சார்ந்த நிலைப்பாடும் நாகரிக அரசியலுமே! வாரிசு அரசியல் என்பது இந்தியச் சமூக அமைப்பில், ஒன்றிய, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், வாரிசாக வருபவர் தகுதியோடும், மக்களுக்கான சேவை மனப்பான்மையோடும் வருகிறாரா? என்பதே கேள்வி. வாரிசு என்பதற்காக மட்டுமே ஒருவரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் நலமான அரசியலாகாது

விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மேனாள் முதலமைச்சரையும், அரசியல் முன்னோடிகளையும் சந்தித்தது ஒரு நல்ல அரசியல் பண்பின் வெளிப்பாடே. இத்தகைய நாகரிகமான அணுகு முறைகள் தொடரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நிறை மரியாதையுடன் செயல்படுவதே ஓர் ஆரோக்கியமான மக்கள் அரசியலுக்கு அழகாகும்.

தமிழ்நாட்டு மக்கள் .வெ..மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். கோட்-சூட் அணிந்து நவீனத்துவத்தின் அடையாளமாகப் பதவியேற்ற விஜய், தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரம், பண்பாடு, மரபுகளைக் காக்கவேண்டும்; கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறைகளில் உண்மையான நவீனத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முற்போக்கான திட்டங்களைத் தொடர்வதும், மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்பதுமே அவருக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கும் மக்களுக்கும் அவர் செய்யும் உண்மையான கைம்மாறு.

இறுதியாக, மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளி விவர எண்களில் அல்ல; மாறாக, அது எளிய மக்களின் புன்னகையில் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் நலம் சார்ந்ததொரு மாநிலமாகவும், இந்தியாவிற்கே வழிகாட்டும் நாகரிக அரசியலின் தளமாகவும் திகழவேண்டும்.

புதிய அரசு மக்களின் நம்பிக்கையைக் காத்து, சமத்துவத்தையும் சமூக நீதியையும் என்றும் நிலைநிறுத்தட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
சமூக ஊடகப் போராளிகளின் (Virtual Warriors) போலிப் பிம்பங்களும் பொய்யான கட்டமைப்புகளும்

இன்றைய இந்திய அரசியலிலும், உலகளாவிய சமூகக் கட்டமைப்பிலும்சமூக ஊடகங்கள்என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக மட்டும் இல்லாமல், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல!

முன்பெல்லாம், ஒரு தலைவரின் தகுதி என்பது அவரது களப்பணி, தியாகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டங்கள் வாயிலாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இன்றுமெய்நிகர் போராளிகள் (Virtual Warriors) எனப்படும் எண்ணிமத் தொழில்நுட்பப் (டிஜிட்டல்) போராளிகள், ஒரு தனிமனிதனை ஒரே இரவில் மகாத்மாவாகவும், அடுத்த இரவிலே துரோகியாகவும் சித்தரிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளனர். இந்த மெய்நிகர் போர்வீரர்கள் கட்டமைக்கும் பிம்பங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை? அவர்களின் சமூக-அரசியல் பொறுப்புணர்வு என்ன? என்பது குறித்த ஓர் ஆழமான விமர்சனப் பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.

 யார் இந்த மெய்நிகர் போராளிகள்? இவர்கள் ஓர் அரசியல் ஆளுமையை முன்னிறுத்துவதற்காக இணையதளங்களில் திட்டமிட்டுச் செயல்படும் ஒத்த நோக்கம் கொண்ட ஒரு குழு, ஓர் அமைப்பு. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், தனது இரசிகர்களை வெறும்இரசிகர்கள்என்று அழைப்பதை விடுத்து, அவர்களைமெய்நிகர் போராளிகள்என்று தனது பதவியேற்பு விழாவில் அறிவித்தபோது, இந்தச் சொல் இன்று சமூக-அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இவர்கள் சமூக ஊடகங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் தங்களின் தலைவருக்காக ஒரு தற்காப்பு அரணாகச் செயல்பட்டவர்கள்; இன்றும் செயல்படுபவர்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிப்பதும், தங்களின் தலைவரை ஒரு குறையற்ற ஆளுமையாகக் காட்டுவதுமே இவர்களின் முதன்மையான பணி.

இன்றைய இளைஞர்கள்காட்சி அடிமைகளாக (Visual Addicts) மாறிப்போயினர். வாசிப்புப் பழக்கம் குறைந்து, வெறும் 30 வினாடிரீல்ஸ் (Reels) மற்றும்ஷார்ட்ஸ் (Shorts) மூலம் உலகத்தைப் புரிந்துகொள்ள முயலும் தலைமுறை இது. இந்தப் பலவீனத்தை மெய்நிகர் போராளிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் திரையில் தோன்றும் ஆவேசமான வசனங்கள், ஏழைகளுக்காக அவர் சிந்தும் கண்ணீர், அநீதியைத் தட்டிக்கேட்கும் சண்டைக் காட்சிகள் போன்றவை நடைமுறை வாழ்க்கையிலும் அவர் அப்படியே இருப்பார் என்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன.

பொய்கள் ஒருமுறை சொல்லப்பட்டால் அது பொய்; ஆயிரம் முறை சொல்லப்பட்டால் அது உண்மைஎன்ற கோயபல்ஸ் தத்துவத்தின் நவீன வடிவமே இந்த மெய்நிகர் பிம்பக் கட்டமைப்பு. ‘நாசிஆட்சியாளர்கள் குறிப்பாக, நாசி - ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபல்ஸ் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்தி ஹிட்லரை அனைத்து ஆற்றலும் கொண்ட பேராளுமையாகக் காட்டினார்; எதிரிகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் ஆளுமைத்திறன் கொண்டவராகவே இருந்தாலும், இதுவரை உண்மை வாழ்க்கையின் சமூக - அரசியல் வாழ்வியல் தளத்தில் எவ்வித நிர்வாக அனுபவமும் இல்லாதபோது, திரையில் அவர் காட்டும் பிம்பத்தை வைத்து மட்டுமே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் தகுதியானவர் என்று மக்கள் நம்பவைக்கப்படுவது சனநாயகத்தின் மிகப்பெரிய சரிவாகும்.

இந்தியா ஒளிர்கிறது, ‘குஜராத் மாடல்எனும் முழக்கங்கள் வாயிலாக இந்திய அளவில் பிரதமர் மோடியும், ‘மாற்றம் வேண்டும், ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் வருகிறேன்எனும் முழக்கங்கள் வாயிலாக, தமிழ்நாடு அளவில் தற்போது விஜய் அவர்களும் இந்த மெய்நிகர் போர்வீரர்களின் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.

2014-இல் நரேந்திர மோடியின் வருகையின்போதுதகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) என்பது ஒரு புதிய ஆயுதமாக அறிமுகமானது. ‘குஜராத் மாடல்என்பது ஒரு வளர்ச்சிக்கான குறியீடாகச் சித்தரிக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக அது இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அதே வழிமுறையை இன்று தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் கையாண்டுள்ளார்.

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் மிகக் குறைவான நாள்களே நேரடியாகக் களப்பணியாற்றினார். ஆனால், திரைக்குப் பின்னால் இருந்த 85,000 இரசிகர் மன்றங்களும், ஆயிரக்கணக்கான மெய்நிகர் போராளிகளும் இடைவிடாது உழைத்தனர். மதுரையில் ஒரு சாதாரண இறைச்சிக் கடை உரிமையாளரான மதார் பதுருதீன், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி செல்வாக்குமிக்க ஜாம்பவான்களை வீழ்த்த முடிந்தது என்றால், அதற்குப் பின்னால் இருந்த ஒரே சக்தி சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் பிம்பம் மட்டுமே!

ஊடக நேர்காணல்கள், நேரடிப் பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே இல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ஒருவழிப் பாதையாகச் சமூக ஊடகங்களில், திரைகளில் மட்டுமே உரையாற்றுவது ஒரு தலைவரை வியக்கத்தக்கவராகவும் தெய்வீகமானவராகவும் காட்டக்கூடியது. விஜய் இதையே செய்தார். அவரது ஒருசெல்ஃபிவீடியோ 24 மணி நேரத்தில் 90 மில்லியன் பார்வைகளைப் பெறுவது என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வு அல்ல; அது திட்டமிடப்பட்ட ஓர் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) மேலாண்மை.

இங்கே, மெய்நிகர் போராளிகளின் சமூக-அரசியல் பொறுப்புணர்வும் உண்மைத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க இயலாதது. இவர்களின் மிகப்பெரிய ஆபத்தே அவர்களின்உண்மைத்தன்மைஇன்மைதான். ஒரு தலைவரைப் பற்றி வரும் எதிர்மறையான செய்திகளைத் தகர்ப்பதற்கும், போலியான வெற்றிக் கதைகளைப் பரப்புவதற்கும் இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட அல்லது தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் வாதங்களில் தர்க்கத்தைவிட உணர்ச்சிவசப்படுதலே அதிகமாக இருக்கும்.

தொடர்பு கொள்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், அது நடந்துவிட்டது என்ற மாயைதான்என்கிறார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. மெய்நிகர் போராளிகள் மக்களுக்கும் தலைவருக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் ஒரு திரையையே உருவாக்குகிறார்கள். அந்தத் திரைத் தலைவரின் குறைகளை மறைத்து, மிகைப்படுத்தப்பட்ட நிறைகளை மட்டுமே காட்டுகிறது.

தேர்தல் களத்தில் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், ஆட்சி செய்வது ஒரு பொறுப்பு. ‘ஜோசப் விஜய் எனும் நான்...’ என மெய்நிகர் போராளிகள் ஒருவரை அரியணையில் அமர்த்தலாம்; ஆனால், அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அதே சமூக ஊடகங்கள் அவரை வீழ்த்தவும் தயங்காது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மெய்நிகர் உலகம் என்பது ஒரு கண்ணாடி மாளிகை போன்றது. அது அழகாகத் தெரிந்தாலும், உண்மையான வெயிலின் வெப்பத்தையோ அல்லது மழையின் குளிர்ச்சியையோ அது தராது. ஒரு தலைவரின் தகுதியைத் தீர்மானிக்க வேண்டியது அவரது கொள்கை அறிக்கைகளும், களப்பணிகளுமே தவிர, அவரது யூடியூப் பார்வைகளோ அல்லது இன்ஸ்டாகிராம் தொடர்பாளர்களோ அல்ல.

நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் எனக்கு மேலானவன்; அவரிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொள்கிறேன்என்றார் இரால்ப் வால்டோ எமர்சன். இன்றைய இளையோர் மெய்நிகர் திரைகளைக் கடந்து, உண்மையான அரசியலைக் கற்கவேண்டும். மெய்நிகர் போராளிகள் கட்டமைக்கும் பொய்ப் பிம்பங்களில் வீழ்ந்து கிடக்காமல், ஒரு தலைவரின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்கும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது இளையோருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே!

வெற்றி என்பது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. திரை ஈர்ப்பு கொண்ட திரு. விஜய் போன்ற புதிய தலைவர்களுக்கும், அவர்களது மெய்நிகர் போராளிகளுக்கும் இருக்கும் சவால் இனிமேல்தான் தொடங்குகிறது. எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) உலகில் கிடைத்த வெற்றி, உண்மை உலகப் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றில் எதிரொலிக்கிறதா என்பதை வரலாறு உற்று நோக்கும். மெய்நிகர் போர்வீரர்கள் வெறும் பிம்பங்களை மட்டுமே உருவாக்குபவர்களாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான உண்மையான தூதர்களாக, இறைவாக்கினர்களாக, சமூகப் போராளிகளாக, களப் பணியாளர்களாகக் களமாட வேண்டிய தருணம் இது!

ஆகவே, உள்ளத்தில் உரக்கக் கூறுங்கள்...

பொய்மைமறுநாள் மிளிராது;

உண்மைநெடுநாள் உறங்காது!

பொய்மை மறைத்தாலும் உண்மை அழியாது;

சங்காய் முழங்கும் அதன் குரல் அடங்காது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வாக்குப் புரட்சியும் மக்களாட்சியின் மகோன்னதமும்!

திராவிடக் கருத்தியல் ஆழமாக வேரூன்றிய தமிழ் மண்ணில், அறுபது ஆண்டுகளாகக் கோலோச்சிய இருபெரும் துருவங்களான தி.மு.. மற்றும் .தி.மு.. கூட்டணிகளைத் தனித்து எதிர்கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் (.வெ..) ஈட்டியுள்ள வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்! மக்களாட்சியின் மாண்பினை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், வன்முறையற்ற முறையில்ஒற்றை விரல் புரட்சிவாயிலாகப் புதியதோர் அரசியல் விடியலை ஏற்படுத்திய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!

எனினும், இந்த வெற்றி வெறும் கொண்டாட்டத்திற்குரியதா? அல்லது ஆழமான அரசியல் ஆய்வுக்குரியதா? என்பதை நடுநிலையோடு அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 இளைய தலைமுறையின் வீரியமிக்கப் பங்களிப்பால் ஒரு மாபெரும் வாக்குப் புரட்சியைக் கண்டுள்ளது. போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் குருதி சிந்தும் கலவரங்கள் வாயிலாக உலகெங்கிலும் ஆட்சி மாற்றங்கள் அரங்கேறும் வேளையில், தமிழ்நாடு அமைதியான முறையில் வாக்களிப்பின் மூலம் ஆட்சி-அதிகார மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்த வெற்றி  ‘ஏமாற்றம் தந்த மாற்றமா?’ அல்லதுமாற்றம் தரவுள்ள ஏமாற்றமா?’ என்ற வினா அரசியல் அரங்கில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய உணர்வுநிலை என்பது மகிழ்ச்சி, ஆரவாரம் ஆகியவற்றைத் தாண்டி அதிர்ச்சி, கலக்கம், பேரச்சம் மற்றும் கவலை எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கிறது. தூய நீர் சுமந்துவரும் நதி, சாயக்கழிவுகள் கலந்துவரும் கால்வாய், பசுமை தந்து தாகம் தீர்த்துவரும் ஆறு, அழுக்கு நிறைந்த கூவம் என யாவற்றையும் உள்வாங்கித் தன்னுள் கரைத்துக்கொள்ளும் கடலைப் போன்றதொரு விசித்திரமான சூழலில் இன்று தமிழ்நாடு சமூக - அரசியல் களம் நிலவுகிறது.

வெறும் தரவுகளைச் சேகரித்து விமர்சனப் பார்வையை முன்வைப்பது மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் அடி மனத்து எண்ணங்களைப் பிரதிபலிப்பதே ஒரு நேர்மையான ஊடகவியலாளனின் அறம். ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் .வெ..வின் அரசியல் நிலைப்பாடு, அவர்களின் தேர்தல் உத்திகள், திரைப்பிம்பத்தின் அதீத தாக்கம், அதன் பின்னே இயங்கும் பெரும் முதலாளிகளின் நிழல், ‘தீய சக்தி - கொள்கை எதிரிஎன்ற முழக்கங்கள் மற்றும் இரசிகர் (தொண்டர்) கூட்டத்தின் செயல்பாடுகள் எனப் பல்வேறு பரிமாணங்களை நாம் நுணுகி ஆராயவேண்டும்.

.வெ..வின் வெற்றி குறித்து குறிப்பிடும் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், “உணவில் உப்பு அதிகமானால்உப்புஎன்று சொல்கிறோம்; குறைவானால்உப்புஎன்று கேட்கிறோம். இரண்டிலும் எங்கோதப்புநடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. வெற்றி பெற்றவர்களையும் வாக்களித்தவர்களையும் ஆட்டிசம் குறைபாடுள்ள அழகிய குழந்தைகளாகவே பார்க்கிறேன். ஒதுக்கித் தள்ளவும் முடியாது; பெரிய பொறுப்பை ஒப்படைக்கவும் முடியாது. இவர்களுக்குத் தேவை அரவணைப்புடன் போதுமான சிகிச்சை. ஒரே உடலில் ஒருபுறம் குளிர்ச்சியும், மறுபுறம் வெப்பமும் கொண்ட உணர்வு. மறுபுறமும் குளிரப் போகிறதா? அல்லது சுட்டெரிக்கப் போகிறதா? என் பதை இவர்களது அடுத்தடுத்த செயல்பாடுகளை வைத்தே தீர்மானிக்க முடியும். அறிஞர் அண்ணா தொடங்கி செல்வி ஜெயலலிதா வரையிலான பேராளுமை மிக்கவர்களைப் பார்க்கிறோம். அப்படி ஒருவரின் தேவையுமுண்டு. ஆனால், அவர் திரைத்துறையில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவின்மை ஒரு பற்றாக்குறைதான்என்கிறார்.

சுவாமிகளின் இக்கருத்து, ஆளுமைமிக்கத் தலைவர்களின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில், திரையுலகை மட்டுமே தலைவர்களை உருவாக்கும் தொழிற்சாலையாகக் கருதும் மக்களின்பொது அறிவின்மையைமிகக் கடுமையாகச் சாடுகிறது.

அதேபோல மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் அவர்களின் எச்சரிக்கை மிகவும் கவனிக்கத்தக்கது: “பினராயி  விஜயன், மு.. ஸ்டாலின், மம்தா பானர்ஜி எனும் மூன்று முக்கிய எதிர்க்குரல்களின் தோல்வி, இந்திய அரசியலை ஓர் அபாயகரமான கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இனி பா...வின் ஆட்டம் அதிகமாகும். இன்று கொண்டாடும் எத்தனை பேர், இந்த அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அனுபவம் பல பாடங்களைக் கற்றுத்தரும்என்கிறார். இது தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்படப் போகும் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுகிறது.

அவ்வாறே, “அடுத்து என்ன நடக்கும்... விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகக் கூட்டணி அமைத்துப் பதவியேற்பார்; அக்கூட்டணியைப் பா... பின்னிருந்து இயக்கும். அவர் வாக்களித்த எந்த உறுதி மொழியையும் அவரை நிறைவேற்றவிடாமல் பா... பார்த்துக்கொள்ளும். இரண்டு மாதம் கழித்துகரூர் வழக்குகையில் எடுக்கப்படும். விஜய்யும் அவர் கூட்டாளிகளும் CBI-யால் கைது செய்யப்படுவார்கள். பா... நியமிக்கின்ற ஒருவர் பதவியில் இருப்பார். அன்றிலிருந்து பெரும்பாலான எம்.எல்..-க்கள் பா...-வில் சேருவார்கள். அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டைப் பா... ஆளும். அறுபது ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை விளையாட்டுப் பிள்ளைகள் வேரோடு பிடுங்கி வீதியில் எறிந்துவிட்டார்கள்; இனி விஷச் செடிகள் மட்டுமே இங்கே வளரும். அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழினம் தம் அடையாளத்தை இரண்டே ஆண்டுகளில் இழந்துவிடும்எனும் ஊடகவியலாளர் லூர்துராஜ் அவர்களின் கணிப்பு இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய தலைமுறையினரின் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், நீண்ட காலமாகப் பேணிக்காக்கப்பட்ட சமூக நீதிப் பயிரை வேரோடு அழித்துவிடுமோ என்ற குமுறல் இதில் தெரிகிறது.

எழுத்தாளர் சித்தன் எபி அவர்கள் தேர்தலின் பின்னால் இருக்கும்கார்ப்பரேட்உத்திகளைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரோ, “கட்சிகளே நேரடியாகத் தேர்தலை எதிர்கொண்ட காலமெல்லாம் மாறிக்கொண்டே வருகிறது; தேர்தல் வல்லுநர்கள், தேர்தல் உத்தியாளர்கள், இன்ஃப்ளூவன்சர், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், சமூக ஊடக ஊடுருவல்கள் என இது பெரிய பிரம்மாண்டத் திட்டமாக மாறியிருக்கிறது. யாரை வேண்டுமானாலும் முன்னிறுத்தி எளிய மக்களின் மனத்தை மாற்றிவிட முடியும். ‘மாற்றம், ‘ஆயிரம் கோடியை விட்டுட்டு வருகிறார், ‘ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கலாமேபோன்ற எந்தவித வாக்குறுதியும் கொள்கையும் கோட்பாடும் இல்லாத வார்த்தைகளையே நம் மனத்தில் நம்பிக்கையாக விதைக்கும் பணிகளை அவர்களால் செய்துவிட முடியும்.

முற்றும் முழுவதுமாக எந்தக் கட்சி அடிப்படையும் இல்லாமல், இப்படியான கார்ப்பரேட் நிறுவனங்களின் இமேஜ் கட்டமைப்பு மூலமாக மட்டுமே மக்களின் மனத்தை ஈர்த்து இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றவர் விஜய் மட்டும்தான். இது ஓர் ஆபத்தான தொடக்கம். எளியோரிடமிருந்தும் கொள்கைகளிடமிருந்தும் கோட்பாடுகளிடமிருந்தும் தேர்தலும் அரசியலும் ஆட்சியும் முழுவதுமாகத் தள்ளிப்போவதன் குறியீடு. TVK is the easiest shortcut for RSS and BJPஎன்கிறார். ஆகவே, வெறும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பது சனநாயகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

இத்தனை விமர்சனங்களுக்கும் குமுறல்களுக்கும் மத்தியில் நேர்மறையான பார்வையும் நிலவுகிறது. ஆந்திராவின் என்.டி. ராமராவ் மற்றும் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். போன்ற பேராளுமைகளைப் போல, கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருப்பது மக்களின்மாற்றத்திற்கானதாகத்தைக் காட்டுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்கள் .வெ..வை ஆதரித்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியாகக் கருதப்பட்டாலும், அந்த ஆதரவு ஒருதிரைப்பிம்பத்திற்குவழங்கப்பட்டதா? அல்லதுதிறமையான மேலாண்மைக்குவழங்கப்பட்டதா? என்பது வருங்காலங்களில்தான் தெரியும்.

.வெ.. முன்வைத்தமாற்றம்தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. இனி மாற்றம் எங்கும் நிகழும் என்பது நமது நம்பிக்கை. ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சிமாற்று அரசியல்செய்தாகவேண்டும்; ஆட்சிக் கட்டிலை இழந்த திராவிடக் கட்சிகளும் தங்கள் கட்சியில் மாற்றம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுத்தாகவேண்டும்.

இறுதியாக, மக்களின் வாக்கை வெல்வது எளிது; ஆனால், மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பது கடினம். தமிழ்நாட்டின் இருபெரும் சக்திகளை வீழ்த்தி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ள திரு. விஜய் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் காட்டும் தீவிரத்தில்தான் அவரது உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. ‘திரைக் கலைஞர்என்ற விமர்சனத்தைத் தகர்த்து, ‘விவேகமுள்ள தலைவர்என்று அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தமிழ்நாடு ஒரு பொற்காலத்தை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது ஓர் இருண்ட காலத்தை நோக்கித் தள்ளப்படுகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாணிக்கவாசகர் வாக்குப்படி, “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே - திருவருள் எதைச் செய்யவிருக்கிறது என்பதை வரலாறு தீர்மானிக்கும்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
நீதியின் கண்களை மறைக்கும் மதத்திரை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் கைவிடப்பட்ட தலித் கிறித்தவர்களும்!

இந்தியக் குடியரசு அதன் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய உன்னத விழுமியங்களைத் தனது ஆன்மாவாகக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இந்த விழுமியங்கள்தலித் கிறித்தவர்கள்எனும் பெரும் சமூகத்திற்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.

சாதியப் பாகுபாட்டின் கோரப்பிடியிலிருந்து விடுபட விழைந்து கிறித்தவத்தைத் தழுவிய தலித் மக்கள், இன்று மதத்தின் பெயரால் அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்பிலிருந்தும், நீதியின் கரங்களிலிருந்தும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கியசிந்தாதா ஆனந்த்வழக்கின் தீர்ப்பு, இந்த வரலாற்று அநீதியை மீண்டும் ஒருமுறை ஆழமாக உறுதிப்படுத்தியுள்ளது.

2026, மார்ச் 24 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, ‘சிந்தாதா ஆனந்த் எதிர் ஆந்திரப் பிரதேச அரசுஎன்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர, வேறு மதங்களுக்கு மாறும் தலித்துகள், தங்களது அட்டவணைச் சாதி (SC) அந்தஸ்தை உடனடியாகவும் முழுமையாகவும் இழக்கிறார்கள்என்பதே அந்தத் தீர்ப்பின் சாரம்.

இந்த வழக்கின் பின்னணி மிகவும் வேதனையானது. இந்து மதத்திலிருந்து கிறித்தவத்திற்கு மாறி பத்து ஆண்டுகள் அருள்பணியாளராகப் பணியாற்றிய சிந்தாதா ஆனந்த், உயர் சாதியினரால் தாக்கப்பட்டார். அவர் தனது சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளித்தபோது, அவர் கிறித்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (SC/ST Actஅவருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றம் கைவிரித்துவிட்டது. அதாவது, ஒருவரைத் தாக்குபவர் சாதிய வன்மத்துடன் தாக்கினாலும், தாக்கப்படுபவர் கிறித்தவராக இருந்தால் அந்த வன்மம் சட்டத்தின் பார்வையில் சாதியக் குற்றமாகக் கருதப்படாது என்ற விபரீத தர்க்கம் இங்கே முன்வைக்கப்படுகிறது. சிந்தாதா ஆனந்த்திற்கு வழங்கப்பட்ட  தீர்ப்பு, ஒரு சமூகப் பேராபத்து; இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட பெரும் சவால்!

உச்ச நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு (சமத்துவம்), 15-வது பிரிவு (மத அடிப்படையிலான பாகுபாடின்மை) மற்றும் 25-வது பிரிவு (மதச் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முற்றிலும் முரணானது. ஒரு நபர் தனது ஆன்மிகத் தேடலுக்காகவோ அல்லது சமூக விடுதலைக்காகவோ ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அரசு அவருக்கு வழங்கிய சமூகப் பாதுகாப்பைப் பறிப்பது என்பது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத் தண்டிப்பதற்குச் சமமாகும்.

நீதிமன்றம் முன்வைக்கும் வாதம் என்னவெனில், கிறித்தவம் மற்றும் இசுலாம் போன்ற மதங்கள் சாதியக் கட்டமைப்பை மதநம்பிக்கை அடிப்படையில் ஏற்பதில்லை என்பதாகும். ஆனால், சமூகம் என்பது இறையியல் கொள்கைகளால் இயங்குவதில்லை; அது நிலப்பரப்பின் எதார்த்தங்களால் இயங்குகிறது. கிறித்தவத்திற்கு மாறிய பிறகும் ஒரு தலித் அதே நிலப்பரப்பில் (சமூகத்தின் பார்வையில் சேரியில்) வசிக்கிறார்; அதே சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்கிறார்; அதே தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார் என்பதுதான் நிதர்சனம். 1985-ஆம் ஆண்டின்சூசை எதிர் இந்திய ஒன்றியம்வழக்கிலிருந்து இன்றுவரை, “மதம் மாறிய பிறகும் சாதியப் பாகுபாடு தொடர்கிறது என்பதற்கான அனுபவப்பூர்வமான ஆதாரங்கள் இல்லைஎன்று நீதிமன்றம் கூறுவது, எரியும் கொள்ளியை மறைக்கும் செயலே அன்றி வேறல்ல.

உச்ச நீதிமன்றம் சில மதங்களுக்கு மட்டும் (சீக்கியம், பௌத்தம்) சலுகை வழங்கி, கிறித்தவம் மற்றும் இசுலாத்தை விலக்கிவைப்பது பாரபட்சமானது; இது நீதித்துறையின் முரண்பட்ட நிலைப்பாடுகளைக் காட்டுகிறது. 1956 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் சீக்கிய தலித்துகளும், பௌத்த தலித்துகளும் SC அந்தஸ்தைப் பெற்றனர். இந்த மதங்களும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தத்துவ ரீதியாக எதிர்ப்பவைதான். அப்படியிருக்க, கிறித்தவ தலித்துகளுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?

மேலும், ‘கைலாஷ் சோன்கர் எதிர் மாயாதேவி (1983) வழக்கின்படி, ஒரு தலித் கிறித்தவர் மீண்டும்தாய் மதத்திற்கு (இந்து மதம்) திரும்பினால் அவருக்கு மீண்டும் SC அந்தஸ்து கிடைக்கும் என்கிறது நீதிமன்றம். இதுதண்டனை மற்றும் சலுகைஎன்ற அடிப்படையிலான ஒரு மதமாற்றத் தூண்டலாகவே தெரிகிறது. நீதியை வழங்கவேண்டிய நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குத் திரும்புவதை ஊக்குவிப்பது, அதன் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்தியாவில் சுமார் 2.1 மில்லியன் தலித் கிறித்தவர்கள் உள்ளனர். பல்வேறு ஆய்வுகளின்படி, இவர்களில் 70% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பாகுபாடு, இந்து தலித்துகள் எதிர்கொள்ளும் நிலைக்கு இணையாக இருப்பதைசதீஷ் தேஷ் பாண்டே அறிக்கை (2008) உறுதிப்படுத்துகிறது. மேலும், தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பின்தங்கிய நிலை குறித்துப் பல்வேறு ஆணையங்கள் விரிவான அறிக்கைகளைக் கடந்த காலங்களில் வழங்கியுள்ளபோதும் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்? குறிப்பாக, இரங்கநாத் மிஸ்ரா ஆணையம் (2007), SC அந்தஸ்தை மதச்சார்பற்றதாக மாற்ற வேண்டும் என்றும், அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. சச்சார் குழு அறிக்கை (2006), மதம் மாறிய பிறகும் தலித்துகளின் சமூக, பொருளாதார நிலை மாறவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC), 2010-ஆம் ஆண்டில் தலித் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும்  SC அந்தஸ்து வழங்க முழு ஆதரவைத் தெரிவித்தது.

இத்தனை ஆதாரங்கள் இருந்தும், ‘சாதியக் கொடுமை தொடர்வதற்குச் சான்று இல்லைஎன்று கூறுவது தலித் கிறித்தவர்களின் காயங்களில் ஈட்டியைப் பாய்ச்சுவதாகும். இன்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கிறித்தவக் கல்லறைகளில் தனிச்சுவர் எழுப்பப்படுவதும், தேவாலயத் தேர்ப்பவனிகளில் தலித் கிறித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஊரறிந்த உண்மை. மதம் மாறியும் சாதி மாறவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுவேண்டும்?

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பழங்குடியினராக (ST) அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் கிறித்தவத்திற்கு மாறினாலும், அவரது பழங்குடி அந்தஸ்து பறிக்கப்படுவதில்லை. ஏனெனில், பழங்குடி என்பது ஓர் இன அடையாளமாகக் கருதப்படுகிறது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) எந்த மதத்திற்கு மாறினாலும், அவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், தலித் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த மதத்தாலான  வரையறை? தீண்டாமை என்பது ஒரு மதத்தின் சடங்கு அல்ல; அது ஒரு சமூகக் கறை. அந்தக் கறை மதம் மாறியதாலேயே துடைக்கப்பட்டுவிடும் என்று சட்டம் கருதுவது ஒரு மாயையாகும்.

ஒன்றிய அரசு 1950-ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையில் உள்ள 3-வது பத்தியை நீக்கி, SC அந்தஸ்தை மதச்சார்பற்றதாக மாற்றவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதுவரை காலங்கடத்தாமல், மாநில அரசுகள் தலித் கிறித்தவர்களுக்கு உரிய நீதியை வழங்க முன்வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

தற்போது OBC பட்டியலில் உள்ள தலித் கிறித்தவர்களின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்உள் ஒதுக்கீடுவழங்கவேண்டும். இதற்குப் புதிய சட்டங்கள் தேவையில்லை; மாநில அரசே ஓர் அரசாணை மூலம் இதைச் செய்ய முடியும். இது தலித் கிறித்தவர்களின் நீண்டகாலக் கோரிக்கையும் கூட. சமூக நீதியைப் பேசும் அரசுகள் இந்த விளிம்பு நிலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது தங்கள் தார்மிகக் கடமையே!

தலித் கிறித்தவர்கள் தங்களது உரிமைகளுக்காகக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். 2004-ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் (WP 180/2004) இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. நீதி என்பது தாமதப்படுத்தப்படும்போது அது மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.

சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க ஒரு மனிதன் தேடும் புகலிடம், அவனது சட்டப்படியான உரிமைகளைப் பறிக்கும் சிறைச்சாலையாக மாறக் கூடாது. நீதியின் தராசு மதத்தின் பெயரால் ஒரு பக்கம் சாயக்கூடாது. தலித் கிறித்தவர்களின் உரிமை என்பது வெறும் இடஒதுக்கீடு சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு குடிமகனின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு சார்ந்தது. இந்த நீண்டகால அநீதியைக் களைந்து, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வதே ஒரு முற்போக்குச் சமூகத்தின் அடையாளமாகும். நம் உரிமையை நாம் அடையும்வரை நாம் போராடுவோம்.

சில நேரங்களில்

நிதானிப்பவர்களே நிற்கிறார்கள்;

தோற்பவர்களே வெல்கிறார்கள்;

அடிபட்டவர்களே அடிக்கோடிடப்படுகிறார்கள்!”

எனும் இறையன்பு அவர்களின் வரிகள்தான் இங்கு நம் நினைவிற்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்