தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராக, செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 9 சனிக்கிழமை, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா அன்று நியமனம் செய்துள்ளார். அருள்தந்தை அவர்கள், 1966, மே 3-ஆம் நாள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் உள்ள செய்யூரில் பிறந்தார். 1993, மார்ச் 25 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட தந்தை அவர்கள் சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தொடர்ந்து செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாகச் சிறப்புடன் பணியாற்றினார்.
பெல்ஜியத்தில்
லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப் பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். செங்கல்பட்டு மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்கப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (Jeevan Jyothi Indian Administrative Service - JJIAS), பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் எனப் பல பணிகளைத் திறம்பட
ஆற்றியவர். ஏழு ஆண்டுகள் செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய இவர், தற்போது திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அருள்பொழிவு வருகின்ற டிசம்பர் 09 -ஆம் நாள் வேலூர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
- முதன்மை ஆசிரியர்