“பங்குப் பேரவையிலேயே பரபாசை வெச்சிருக்கீங்க. இது கொஞ்சங்கூட நல்லால்ல ஃபாதர்” பொங்கியெழுந்தான் அந்தோணி.
“தீவிரவாதி சீமோனும் இருக்கான்”
போனசாகப் போட்டுக் கொடுத்தான் மாசிலாமணி.
பர்னபாசைத்தான்
‘பரபாஸ்’ என்கிறார்கள்
என்பது பங்குத்தந்தைக்குப் புரிந்தது. கிறிஸ்துமஸ் வந்தாலே அவருக்குத் தலைவலி தொடங்கிவிடும்.
“உங்க பிரச்சினை எப்பத்தான் தீரும்? அவனும் ஆபிரகாமின் பிள்ளைதானே? எத்தனை தடவ விவிலியம் படிச்சிருக்கீங்க? எத்தனை மறையுரை கேட்டிருக்கீங்க? யூதன்னும் கிடையாது, கிரேக்கன்னும் கிடையாது. அடிமை, உரிமைக் குடிமகன்னு எதுவுமே கிடையாது, நாமெல்லாம் ஒண்ணுன்னு... ஏய்யா அடிச்சிக்கிறீங்க?”
“சாமி, இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்குது. நடைமுறைக்கு ஒத்துவராது. காலங் காலமா இருக்கற வழக்கத்தை மாத்த முடியாது. குழந்தை ஏசு சுரூபத்தை அவன் ஆளுக தொட்டா கொலை விழும்.”
பங்குச்
சாமியாருக்குத் தலை கிறுகிறுத்தது.
“மாசில்லாக் குழந்தைகள் திருநாளுக்கு முன்னாடியே குழந்தை ஏசுவைக் கொன்னுப்போடுவானுக போலிருக்குதே” எனக்
கவலையோடு கலங்கினார்.
“இத பாருங்கய்யா, தேவாலயத்தையும்,
தேர்த் திருவிழாவையும் வெச்சிட்டு கலவரம் பண்ணாதீங்க. பூசைக்குப் போறதும், சப்பரம் தூக்கறதும் மட்டுமில்ல கிறித்தவம். பகை, வெறுப்பு ஆதிக்கத்தை விட்டுட்டு எல்லாரையும் அன்பால அரவணைச்சுப் போற வாழ்க்கை முறைதான் கிறித்தவம். பலியைவிட இரக்கம்தாய்யா பெரிசு! சமாதானமா நடத்தறதா இருந்தா தேரை எடுங்க. இல்லேன்னா விடுங்க. மத்தவங்க முன்னாடி வெளிச்சமா இல்லாட்டிக்கூடப் பரவால்லே, இருட்டா இருக்காதீங்க.”
“அதெப்படி சாமி நீங்க சொல்லுவீங்க? காலங் காலமா இருந்த நடைமுறைப்படி குழந்தை ஏசு சப்பரத்தை வழக்கம்போல நாங்கதான் தூக்குவோம். அவனுக தொட்டான்னா கையக் கால...”
“மொதல்ல என்னய வெட்டுங்கடா... கத்திய எடுக்கறவன் கத்திலதான்டா சாவான். காட்டு மிருகங்க மாதிரி கடிச்சு முழுங்கறத நிறுத்தலேன்னா அழிஞ்சு போயிருவீங்கடா... பைபிள்ல அப்படித்தான் எழுதியிருக்கு.”
பவுலடியாரின்
ஆவி புகுந்ததைப்போல பங்குச் சாமியார் ஆவேசமானார். மூச்சு வாங்கி, இருக்கையில் அமர்ந்த அவருடன் பேச விரும்பாமல் அந்தோணியும் மாசிலாமணியும் வெளியேறினர்.
‘பைத்தியக்காரர்கள்; யூதாசாக இருந்துகொண்டு சகோதரனை வெறுக்கும் இவர்கள் பரபாசைப் பற்றிப் பேசுகிறார்கள்!’ பங்குத்தந்தை மனத்தில் நினைத்துக்கொண்டார்.
கிறிஸ்துமஸ்
நாளின் மாலைப்பொழுது சப்பரத்தில் வைப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்க வாட்டசாட்டமான திருத்தொண்டர் ஒருவரைப் பங்குத்தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆலய வளாகம் பரபரப்பும், முணுமுணுப்புமாய்க் காட்சியளித்தது.
திடீரென்று
எங்கிருந்து வந்தானோ அந்தோணி... குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.
“எவனாவது தொட்டா கொலை விழும்”
- கத்தினான் சாராயத்தில் குளித்திருந்த மாசிலாமணி.
பின்னால்
ஒருதரப்புக் கூட்டம் அவனைத் துரத்த, மற்றொரு தரப்பு அவர்களைத் தாக்க ஆலய வளாகம் கலவரக் களமாய் மாறியது.
உச்சக்கட்டமாக...
சிமியோனும் பர்னபாசும் அந்தோணியின் கையிலிருந்த சுரூபத்தைப் பிடுங்க முயற்சிக்க, குழந்தை ஏசுவின் கைகள் ஒடிந்து ஆளுக்கொன்றாக அவர்கள் கைகளில் சிக்க, கைகளில்லாத சுரூபத்தைக் கண்ட கூட்டத்தின் ஒரு பகுதி கதறி அழுதது.
கலவரம்
பெரிதாக, காவல்துறை பலரையும் கைது செய்து அழைத்துப்போக சப்பர ஊர்வலம் நின்றே போனது.
மூர்ச்சையான
பங்குத்தந்தைக்குச் சிகிச்சையளித்து, தூக்க மாத்திரையையும் கொடுத்துச் சென்றிருந்தார் மருத்துவர். விலா எலும்பு பிடுங்கப்பட்டதுகூடத் தெரியாமல் தூங்கிய ஆதாமைப்போல அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார் பங்குத்தந்தை.
எந்த
நினைவுமில்லாத தூக்கத்தில் கனவொன்று வந்தது. கையில்லாத குழந்தை ஏசு கண்ணீருடன்...!
“நண்பனே, நான் பிறந்த போதும் மனிதர்கள் இடம் தரவில்லை. மாட்டுக்கொட்டகைதான் இடம் தந்தது. வாழும்போதும் தலைசாய்க்க இடமில்லாத நிலையில்தானே நான் இருந்தேன். ‘அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்’
என்ற எண்ணம் இங்கு எவனுக்கும் இல்லை. ‘நான் வளர வேண்டும், அவர் எப்படிப் போனால் என்ன?’ என்ற எண்ணம்தான் இங்கே மேலோங்கி இருக்கிறது. சுயநலமும் சாதியமும் ஆதிக்கமும் சமாதானமின்மையும் இருக்கும் இடத்தில் நான் எப்படி இருக்க முடியும்? தன்னையே மறுத்து வாழும் இதயம் எங்கேயாவது இருந்தால் சொல்... அதுவரை ஏதாவதொரு மாட்டுக்கொட்டகையிலேயே இருப்பேன்... என்னைத் தேட வேண்டாம்...”
கனவு
கலைந்து ‘விருட்’டென்று எழுந்தார் பங்குத்தந்தை. அதன்பின் தூக்கம் வரவில்லை.
‘சாதியமும் ஆதிக்கமும் வெறுப்புணர்வும் இல்லாத திரு அவைதானே அவர் கனவு? என் கனவும் அதுதானே? கனவு பலிக்குமா?’
காலையில்
எழுந்த பங்குத்தந்தை முதல் வேலையாக ஆலயத்தின் பின்புற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கைகளில்லாத சுரூபத்தைப் பார்க்கப் போனார்.
உண்மையிலேயே
சுரூபம் அங்கு இல்லை!