திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பினை ஏற்று ‘யூபிலி-2025’ -ஆம் ஆண்டின் மையச்சிந்தனையான ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ திருப்பயணத்தை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை, கருத்தரங்குகளை, கலந்துரையாடல்களை திரு அவை, விவிலியம், இறையியல் தளங்களில் மக்கள் உலகெங்கும் சிந்தனைப் பரிமாற்றம் மேற்கொண்டு வரும் சூழலில், சென்னை - பழஞ்சூர், MMI இறையியல் கல்லூரி, தனது 12-வது இறையியல் கலந்துரையரங்கத்தை ‘இறை நம்மில் ஆன்மிகம்: எதிர்நோக்கின் திருப்பயணத்தில் இன்றைய திரு அவையும் அதன் செயல்பாடுகளும்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 15-ஆம் நாள் மிகச் சிறப்பாக நடத்தியிருந்தது. இந்த இறையியல் கலந்துரையரங்கத்தின் சிறப்புக் கருத்துரையாளராக ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் கலந்துகொண்டு இரு அமர்வுகளை வழிநடத்தினார். இவ்வமர்வுகளைப் புனித பிரான்சிஸ் சவேரியார் மறைமாநிலத் தலைவர் அருள்பணி. ஆண்டனி ஜெரால்டு MMI நெறிப்படுத்தினார். மேலும், ‘எதிர்நோக்கின் திருப்பயணமும் துறவற வாழ்வும்’ என்ற தலைப்பில் அருள்சகோதரி சகாயராணி DMI அவர்களும், ‘ஆன்மிக வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்’ என்னும் தலைப்பில் அருள்சகோ. ஆரோக்கியசாமி அவர்களும், ‘குடும்ப வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்’ என்ற தலைப்பில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பெண்கள் பணிக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜாய்ஸ் ஜென்சன் அவர்களும் கருத்துகளை வழங்கினார்கள். ஏறக்குறைய 400 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த இறையியல் கருத்தமர்வு, மக்களின் கேள்வி நேரம், கலந்துரையாடல் எனச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வினை MMI இறையியல் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கிய சார்லஸ் தலைமையில், அருள்பணி. டேவிட் மற்றும் இறையியல் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.