“ஏம்மா யாழினி, நீ எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கே?” என்றாள் தாய் இந்திரா.
“ஏம்மா, இப்ப நான் அவசரமாய் கல்யாணம் பண்ணியாகணுமா?” என்றாள் யாழினி.
“ஏய், கல்யாணத்தைக் காலாகாலத்தில் முடிக்கணும்; பிள்ளைகளையும் காலாகாலத்தில் பெத்துக்கணும்மா” என்றாள்
தாய்.
“நீங்க அந்தக் காலத்தில் பதினைஞ்சு வயசில் கல்யாணம் முடிச்சு, அஞ்சு பிள்ளைகளைப் பெத்திட்டீங்க; அதுமாதிரி இப்ப முடியாது. என்னோட டாக்டர் வேலை அப்படி...” என்றாள் மகள்.
“இந்தா உங்கப்பா வந்திட்டார். அவர்ட்டேயே நீ பேசிக்க, நான்
சொல்றது உன் காதில் ஏறாது யாழினி” என்றாள் எரிச்சலுடன் தாய் இந்திரா.
தந்தை
கருணாகரன் ‘உஷ்’ என்றபடி சோபாவில் வந்து உட்கார்ந்தார். “ஏங்க உங்க மகள் சொல்றதைக் கேளுங்க” என்றாள் இந்திரா.
“ஏய், நான் வெயில்லே போய் மாத்திரை, மருந்தெல்லாம் வாங்கிட்டு வர்றேன்; உனக்கும் சேர்த்துதான் சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வர்றேன். கொஞ்சம் பேசாமல் இரு” என்றார் கருணாகரன்.
“வெயில்லே போறது நல்லதுதான்ப்பா” என்று
சிரித்தாள் யாழினி.
“அது சரிதான். எனக்கு என்ன வயசு? இந்த வய சிலே போய்
வர்றது எவ்வளவு சிரமம்னு உனக்கெங்கே தெரியப் போகுது?” என்றார் தந்தை.
“சரிங்க, உங்களோட உதவிக்கு ஒரு காபியைப் போட்டுத் தர்றேன். மகள்ட்ட கல்யாணம் பத்திப் பேசுங்க” என்றாள் இந்திரா.
“அதைத்தான் நீ பேசியிருப்பியே... பிறகு நான்
என்ன பேசுறது? பொம்பளப் பிள்ளையப் பெத்தவள் நீதானே? பையன்னா நான் சண்டை போடலாம்” என்றார் கருணாகரன்.
“யாழினி இல்லாதப்ப என்னோட
கட புடான்னு கத்துறீங்க. இப்ப யாழினிட்ட நேர்லே பேச வேண்டியதுதானே?” என்று கேட்டாள் தாய்.
“சரி, நீ சொன்னதுக்கு ஒத்திக்கிட்டு
இப்ப நான் யாழினிட்டே கேட்கிறேன். ஏம்மா யாழினி, நீ எப்ப கல்யாணம்
பண்றதாய் நினைச்சிருக்கே? அதை இப்ப நீ என்கிட்டே சொல்லியாகணும்” என்றார்
கருணாகரன்.
“கரெக்ட், இப்படிக் கேளுங்க. உங்க தங்கச்சி மதுரையிலிருந்து பேசினதையும் சொல்லுங்க. இந்தா காபி கொண்டாரேன்’ என்று
உள்ளே போனாள் தாய்.
யாழினி
சிரித்தபடி “நான் கல்யாணம் பண்ண நாளாகும்பா. இப்ப அந்தப் பேச்சே பேசாதீங்க?” என்றாள் மகள்.
“உன்னோட அத்தை போன் பண்ணிக்கிட்டே இருக்காள். மகன் முத்து கனடாவில் எஞ்சினியராய் இருந்து மாதம் ரெண்டு இலட்சம் வாங்குறானாம். அவனுக்கு உன்னை முடிக்கணும்னு அடிக்கடி அவளும் பேசுறாள், மாப்பிள்ளை இராமசாமியும் பேசுறார்”
என்றார் தந்தை.
“அந்த ஆளை நான் கட்ட முடியாது. அது எப்பவும் தண்ணி போடுற பார்ட்டி. அதோட நான் மாரடிக்க முடியாது. நான் ஒரு டாக்டரைத்தான் கட்டணும்”
என்றாள் யாழினி சிரித்தபடி.
“அப்படியா யாழினி, அவன் தண்ணி போடுறது உனக்கும் தெரிஞ்சு போச்சா?” என்று பலமாய் சிரித்தார் தந்தை.
“அதெல்லாம் பார்த்துக்கலாம். நாளைக்கு நாம் டாக்டர் சேவியர் வீட்டுக்குப் போறோம். அவரோட மூணு வயது மகளுக்குப் பிறந்த நாள் விழா. நீங்க ரெடியாய் இருங்க. நாம் போயிட்டு வரலாம்” என்று பேச்சை முடித்தாள் யாழினி.
(தொடரும்)