உலக அரசியல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறும் வலிமையான யுத்தம். இடதுசாரி அரசியல், மக்களை மையப்படுத்திய முன்னேற்றம் குறித்த சமத்துவ-சகோதரத்துவ-சமதர்ம தத்துவம் கொண்டது. இதற்கு எதிர்மறையானது வலதுசாரி அரசியல். அது பழமைவாதப் படிநிலைச் சமூகத்தைப் பாரம்பரிய ஒழுங்குகளை, மதம் சார்ந்த நம்பிக்கைகளை, தேசியவாதத்தை, தனிநபர் முன்னேற்றத்தை ஆதரிப்பதே வலதுசாரி அரசியல்.
இந்திய
அரசியலையும், இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகளின் நேரடிப் போட்டியாகக் காணலாம். இந்தியக் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலனாவை, இடதுசாரிச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவை. காங்கிரஸ் கட்சி 2004-இல்
அமைத்த கூட்டணி ஆட்சியால், மையவாத இடதுசாரிச் சித்தாந்தத்தில் இருந்த காங்கிரஸ்,
இடதுசாரிச் சித்தாந்தத்திற்கு மெல்ல நகர்ந்தது. இராகுல் காந்தியின் அரசியல் பாதையும் இடதுசாரிச் சித்தாந்தம் சார்ந்ததே. தேசியச் சனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) பா.ச.க. மற்றும்
அதன் கூட்டணிக் கட்சிகளால் கட்டப்பட்டது. பா.ச.க.
கட்சிக்குத் தனிப்பட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள் இல்லை. பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு என்பதில் ஐயமில்லை.
வலுத்த
வலதுசாரிச் சித்தாந்தம் கொண்ட அமைப்பு பா.ம.க.
என்ற இடதுசாரிச் சாயம் கொண்ட கட்சியானது என்.டி.ஏ. கூட்டணியில்
இருப்பது பெரும் கொள்கை முரணாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இடதுசாரிச் சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சிகள், தி.மு.க.
தலைமையில் 2016 முதல் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. இவை தனித்தனிக் கட்சிகள் எனினும், சித்தாந்தங்கள் ஒன்றே. எதிர் வலதுசாரிச் சித்தாந்தம் கொண்ட கட்சியான பா.ச.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலுவால் பத்து தேர்தல்களில் என்.டி.ஏ. கூட்டணியினர்
தொடர்ந்து தோல்வி அடைகிறார்கள். தமிழ்நாடு மக்கள் கல்வி அறிவும், அரசியல் விழிப்புணர்வும் கொண்டவர்கள் என்பதே இந்த அரசியல் மாற்றத்தின் திசைவழி.
கடல்
எனில் தொடர்ந்து அலை அடிக்கும். எப்பொழுதாவது புயல் அடிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் பா.ச.க.
எதிர்ப்பு எனும் பெரும் புயல் எப்பொழுதும் வீசுகிறது. அதுவே தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணியை நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் 100 விழுக்காடு வெற்றிக்கு வழிநடத்துகிறது.
அ.தி.மு.க.வினர் சிறுபான்மையோர் வாக்கு என்பதைக் குறிவைத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றனர். அ.தி.மு.க.வின் நிலை,
நம்பகத்தன்மை குறித்த ஐயப்பாடுகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது. மக்கள் அ.தி.மு.க.வை நம்பவில்லை.
அது உண்மையானது.
2026-தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ச.க.
கட்சிகள் என்.டி.ஏ. கூட்டணியாகப்
போட்டியிடுவார்கள் என அறிவித்து விட்டனர்.
பா.ச.க.வின்
அமித்ஷா ஒட்டிய பசை கூட்டணியில் ஒட்டவில்லை. முன்பு தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணியிலிருந்த
எந்தக் கட்சியும் என்.டி.ஏ. கூட்டணியில்
இருப்பதாகக்கூட அறிவிக்கவில்லை. அமித்ஷா வழக்கம்போல தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க வழி தேடுகிறார். இவர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த ஒற்றைக் கொள்கை தவிர, வேறு எதையும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகச் செய்யவில்லை. தமிழ்நாடு ஆளும் அரசு, ‘ஒன்றிய அரசு நிதி
தர மறுக்கிறது; எங்களைத் தொடர்ந்து வஞ்சிக்கிறது; தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை’ என்ற
பொதுவெளிக் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசிடம் பதில் இல்லை.
ஆளுநர்
வழி தமிழ்நாடு அரசை முடக்க நடக்கும் சதியும் தமிழ்நாடு மக்களால் பேசுபொருளாகி உள்ளது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.விற்குத் தமிழ்நாடு
மக்கள் தி.மு.க.வைத் தட்டிக்கேட்க எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து அளித்தார்கள். அவர்கள் தி.மு.க.
அரசை எதிர்த்துத் தட்டிக்கூட கேட்கவில்லை. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பேசக்கூட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பேச்சாளர்களை அனுப்புவதில்லை.
தமிழ்நாட்டில் எதற்கும் ஆள் இல்லாத பா.ச.க.கூட, வலதுசாரிகள் என்ற போர்வையில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களைத் தினம் நடத்துகிறார்கள். சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்கள், மக்கள் மன்றத்தில் இல்லை. 2026 -தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்களே உள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியினர்
மந்த நிலையில் தவிப்பது அவர்களின் கையறு நிலையை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணிக்கு
ஆள் பிடிக்க உள்துறை அமைச்சரே களம் இறங்குவது பின்னடைவின் முதல் அடையாளம்.
தமிழ்நாட்டில்
‘இந்தியா’ கூட்டணி
வலுவாக உள்ளது. என்.டி.ஏ. கூட்டணியில்
பா.ச.க., அ.தி.மு.க.
தவிர வேறு கட்சிகள் இல்லை. ஆளும் தி.மு.க.
அரசிற்கு எதிரான, வலுவான என்.டி.ஏ. கூட்டணிக்கு
எந்தத் தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. தனித்துப் போட்டியிட
‘நாம் தமிழர்’ கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் முடிவு செய்து, பிடிகொடுக்காமல் நழுவுகிறார்கள். ‘யார் முதல்வர்?’ என்பதே இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக, முதல் தடையாக உள்ளது. இவர்கள் எவருக்கும் மக்கள் நலன், விட்டுக் கொடுக்கும் பண்பு, தன்னம்பிக்கை இல்லாத மனநிலை, தமிழ்நாடு அரசியலில் பெரும் அவலமாக உள்ளது. இதனால் களநிலவரம் ஆளும் தி.மு.க.விற்குக் கனிகிறது.
கருத்துக்கணிப்புகள்
என்ற தேர்தல் வெற்றி குறித்த கருத்தாக்கமும், ஆளும் தி.மு.க.
அரசிற்கே சாதகமாக வெளியாகிறது. ‘வெற்றி பெறுபவர்களுக்கே எமது வாக்கு’ என்ற சராசரி வாக்காளரின் மனத்தில் தேர்தல் கணிப்புகள் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும். அது தேர்தல் கால தட்பவெப்ப மாற்றங்களுக்கு உட்பட்டது என
எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படுவது நல்லது.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளா?
மூன்றாவது அணியா? நான்காவது அணியா? என்ற கேள்விகள் விடை தெரியாக் கேள்விகள். எப்படி இருப்பினும், தேர்தலைச் சந்திக்க தி.மு.க.
தயாராகி விட்டது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் மாவட்டந்தோறும் தமிழ்நாடு முதல்வர் செல்கிறார்; ஆதரவு திரட்டுகிறார்.
அணிகள்
அதிகமாக அதிகமாக ஆளும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் பெறும் என்பதும் கண்கூடு.
இருப்பினும், தி.மு.க.
தன் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் எனில், கூட்டணியைத் தக்க வைக்க வேண்டும். அதற்காகப் பெரும் தியாகங்களுக்குத் தயாராவது நடைமுறையில் இடியாப்பச் சிக்கல். தி.மு.க.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டும். கிறித்தவச் சிறுபான்மையோர் தி.மு.க.வின் வெற்றிப்பாதையில் மலர்களைத் தூவுகிறவர்கள். கிறித்தவ மக்கள் தங்கள் கோரிக்கைகளைக் கேட்டுப்பெற, முன்னெடுக்க இந்தத் தேர்தல் காலமே சிறந்த காலம்.
நமது
தலைவர்கள் இதில் கவனம் கொள்வதும் கேட்டுப் பெறுவதும் நமது முதல் உரிமையும் முன் கடமையுமாகும்.