திருத்தணிக்கு அருகில் உள்ள ஆர்.கே.பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர் திருநங்கை ஜென்சி என்பவர். தனது இளங்கலைப் பட்டத்தைத் திருத்தணியில் உள்ள அரசுக் கல்லூரியிலும், தனது முதுகலைப் பட்டத்தை அம்பேத்கர் அரசுக் கல்லூரி வியாசர்பாடியிலும், தொடர்ந்து தனது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை ஆங்கிலத்துறையில் சென்னை, இலயோலா கல்லூரியிலும் முடித்தவர். இன்று அவர் இலயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய இந்தச் செயலுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய ‘X’ வலைத்தளத்தில், “வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி, உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும், தடைகளும் புறக்கணிப்பும் கல்வி என்னும் பேராற்றலால் வெல்லட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருச்சி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் ‘இலயோலா மாற்றங்களுக்கான திறவுகோல்’ என்று அக்கல்லூரியைப் பாராட்டியுள்ளார்.