ஒருமைக் கோட்பாடு:
இது
அனுமானமாகயிருக்கலாம்,
மனித செயலாற்றலை மிஞ்சுவதென்பது. ‘குருவுக்கு மிஞ்சிய சீடன்’ என்ற பழமொழியைப்போலவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பமும்
மனிதரின் புத்திசாலித்தனத்தை ஒரு நாள் மிஞ்சுமோ? என்ற கேள்வி இன்று பரவலாகக் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியின் மையத்தில் இருப்பதுதான் ‘ஒருமை’ என்ற கருத்து. நாம் மெதுவாகத் தொழில்நுட்ப நகர்வில் மனிதச் சமுதாயத்திற்குச் சவாலாக இருக்கும் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
ஒருமை
என்றால் என்ன? இப்போது பேசப்படும் ‘ஒருமை’ என்ற கருத்து 1915-இல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘சார்பியல்’ தத்துவத்தில்
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை விவரிக்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் கூறுவது: ‘இப் பிரபஞ்சம் ஒருமையிலிருந்து உண்டானது; அது ஒன்றுமில்லாத, அளவிடப்படாத அடர்த்தியும், புவிஈர்ப்பும் கொண்டது’ என்பதாகும்.
வெர்னர்
விங்கே என்ற கணிதப் பேராசிரியரும், புகழ்பெற்ற விஞ்ஞானக் கற்பனை எழுத்தாளருமான இவர் தன்னுடைய நூலில் “தொழில்நுட்ப ஒருமை என்பது எதிர்காலத்தில் கணினி அறிவாற்றல் வளர்ந்து மனிதனை மிஞ்சும்; இது மனிதனின் கட்டுப்பாட்டிற்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டு, புதிய யுகத்தின் ஆரம்பமாயிருக்கும்; ‘இப்படியும் நிகழலாம்’
என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் மனிதனைவிட திறன் படைத்தவையாக உருவெடுப் பது என்பது மனிதனால் அடையக்கூடாத திறன்” என்று கூறுகிறார்.
இது
ஒரு கைமீறிய தொழில்நுட்ப வளர்ச்சியாக, அதனைத் திரும்ப மீட்க முடியாமல் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று தொழில்நுட்ப நோக்கில் புரிந்துகொள்ளப்படுகிறது.
‘ஒருமை’ விபரீதத்தில்
முடியுமா?
ஏ.ஐ. தானாக அடுத்தடுத்து
மேம்படுத்திக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதிவேகத் தொழில்நுட்பத்தை மனிதனால் ஆய்ந்தறியவும் கட்டுப்படுத்தவும் முடியாத நிலையில் அபார செயற்கைச் செயலாற்றல் மனிதருக்கே சவாலாகவும் மனிதனை அடிமையாக்கிடுதல், ஒழித்திடுதல், என்பது போன்ற ஒரு தீயனவாக இருக்கலாம்.
ஒருவேளை
ஏ.ஐ. முறைகள் இந்த
நிலையை அடையாமல் போனாலும், சில நேரங்களில் ஒரு சிக்கலான கட்டத்தை அடைந்து, அந்த நிலையில் எப்படி இயங்குகிறதென்று புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இவ்வாறு எந்த நோக்கமுமின்றி, ஆனால் வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்பாட்டினால் எவ்வித அல்கோரிதங்கள் மூலம் தீர்வுகளைக் காணமுடியும் என்று திகைக்கும் நேரமும் ஏற்படலாம். இவ்வாறு மனிதன் இயந்திர வேகத்துடன் ஈடு கொடுக்க இயலாத நிலையில் சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை போன்றவைகளில் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை முழுமை பெற்ற தன்னிச்சையான ஏ.ஐ. உருவாகவில்லை
என்றாலும், நவம்பர் 2022-ஆம் ஆண்டில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தால்
அறிமுகப்படுத்தப்பட்ட
பதில்பேசி (chat GPT - Generative
Pre-trained Transformer) என்பது
ஒரு மொழி பேசும் இயந்திரம் (Large Language Model). இந்தப்
படைப்பு ஆராய்ச்சியாளர்களிடையே சற்றுத் திகைப்பை ஏற்படுத்திவிட்டது. மனிதரைப் போன்று உரையாடும் ஏ.ஐ. சாதனமான
பதில்பேசியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவுநரான
சாம் ஆல்ட்மேன், அவருடைய உருவாக்கத்தைக் குறித்து அவரே சிறிது பயப்படுவதாகக் கூறுகிறார்.
ஒரு
பெரிய அச்சமென்னவென்றால், ‘மனித கட்டுப்பாட்டிற்கு அப்பால்’ என்ற ஆற்றலை ஏ.ஐ. அடைவது.
இதன் விளைவாக இயந்திரம் மனிதனை அவனின் தனித்தன்மையிலிருந்து விடுபடச்செய்வது; ஒரு கட்டத்தில் மனிதனின் இடத்தை இயந்திரமே பிடித்துக்கொள்ளும் என்ற நிலையையும் அடைவது; இதனால் மனிதன் இப்பூவுலக உயிரினங்களிலேயே தனி அதிகாரச் சக்தியாக விளங்கும் இடத்தை இழப்பதோடு, இயந்திரத்திற்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.
ஒருமைக்
கோட்பாட்டின் முன்னோடியான ஜான் வான் நியூமேன் என்பவர், “இயந்திரங்கள் ஒருமை நிலையை அடையும்போது மனித இயல்புகள் இல்லாமல் போகும்” என்று
கூறுகிறார். மற்றொரு வகையில், இது மனிதகுல அழிவிற்கு ஆரம்பமாயிருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இத்தகைய
மனித இயந்திரங்களின் பெருக்கம், உண்மை மனிதர்களை எவ்வாறு சிறுமைப்படுத்தும் என்பதற்கு மூர் கோட்பாடு உதாரணமாகக் கூறப்படுகிறது. மூர் கோட்பாட்டின்படி மைக்ரோ ஃப்ராசஸர்களின் ட்ரான்சஸ்டர்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை செலவு அதிகமில்லாமல் இரட்டிப்படைகிறது என்பது. அதாவது, காலப்போக்கில் இயந்திரங்கள் மிகத்திறன் படைத்தவைகளாகும் என்பது. அறிவாற்றல் கொண்ட மனிதன், தன்னை விட குறைந்த அறிவாற்றலுடைய உலகின் உயிரினங்களைக் குறைவாக மதிப்பதும், தேவைக்கென்று பயன்படுத்துவதும் உலக நடைமுறை. அதுபோன்று, வருங்காலத்தில் அதிக அறிவாற்றல் பெற்ற இயந்திரங்கள், அதைவிட குறைந்த அறிவாற்றல் பெற்றுள்ள மனிதனை எவ்வாறு நடத்தும்? என்ற கேள்வியும் எழுகிறது.
ட்ரான்சென்டென்ஸ்
(Transcendent) என்றால்
என்ன?
ஒருமைக்
கோட்பாடென்பது மனிதச் செயலாற்றலை மிஞ்சுவது. இதையும் மீறிய செயலாற்றலின் தத்துவமே ட்ரான்சென்டென்ஸ். இது இயந்திரங்கள் மனித நுண்ணறிவை அப்படியே பிரதிபலிப்பதோடு, தரத்தில் புதுமை படைத்தல், விண்வெளியில் இதுவரை கண்டறிய முடியாதவற்றை ஆராய்ந்தறிதல், குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வு போன்ற சிக்கலான முடிச்சுகளை அவிழ்ப்பதில் உதவுவது.
இந்நிலையில்,
இயந்திரம் சுயமாக இயங்குதல், மனிதத் திறனுக்கு ஈடு கொடுத்து நிற்பது என்பவை மனோதத்துவ, ஆன்மிக, நெறிமுறை கொண்ட பாரம்பரிய வாழ்வின் முறைக்குக் கேள்வியாய் அமைந்திருப்பது, விஞ்ஞானம் மனிதனுக்கு விட்டிருக்கும் சவால் என்றும் கூறலாம். நம்மை விஞ்ஞானம் வேகமாக நடத்திக் கொண்டு வருகிறது. இன்று ஏ.ஐ. பாதையின்
எல்லையைக் காண இருக்கின்றோம்.
நாம்
நிற்பது ஒளிமயமான எதிர்காலத்தின் வாசலாயிருக்கலாம். ஆனால், இத்துடன் அபாயமும் சேர்ந்து நம்முன் நிற்கிறது என்பதை மறந்துவிடலாகாது. அல்கோரிதம் செயல்பாட்டின் வெளிப்படையின்மையும், இயல்பாகவே காணப்படும் பாரபட்சச் செயலாற்றல் என்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள்
ஒருவேளை, தீங்கிழைப்போர் வசம் சிக்கினால், அதனால் ஏற்படும் சவால்களைக் குறித்து நாம் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டியுள்ளது.