“ஏப்பா சேவியர், எப்படியாவது இந்தக் குழந்தைக்காகவாவது நீ கல்யாணம் முடிக்கணும்ல” என்றாள் தாய்.
“ஆமாண்ணே, அண்ணி இறந்த கவலையிலேயே காலம் கடந்திருச்சு. இனியாவது ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் முடிச்சுக்கிறதுதான் நல்லது” என்றாள் தங்கை அமலி.
“இப்ப அதைப்பத்தி நான் யோசிக்க முடியாதும்மா. எனக்கு மருத்துவப் பணியைச் செய்யவே நேரம் பத்தலே. காலையிலே சர்ச்சுக்குப் போய் பாத்திமா மாதாவைக் கும்பிட்டுட்டு வாரேன். வந்து குளிச்சு சாப்பிட்டுட்டு, கொஞ்சம் நேரம்தான் ஓய்வு. கீழே பேஷண்ட் வந்திட்றாங்க. அவங்களைப் பார்த்திட்டு நுங்கம்பாக்கம் போகணும். மதியம் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட், பிறகு ஆஸ்பத்திரி, திரும்பி வந்து கிளினிக் வேலை. இப்படி இருக்கும்போது எப்படிக் கல்யாணம் பத்தி யோசிக்கிறது?” என்றார் சேவியர்.
“வேலைன்னாக்கா அப்படித்தாம்பா! நாங்களெல்லாம் தூத்துக்குடியில் பஸ் ஏறி கிராமங்களில் போய் வாத்தியார் வேலை பார்த்திட்டு திரும்பலையா? வாழ்க்கையிலே டாக்டர் வேலைங்கிறது உயிர்காக்கும் வேலைதானே?” என்றாள் தாய் அருளம்மா.
“வேலையோட வேலையா ஒரு பெண்ணைப் பாருண்ணே! இல்லைன்னா தூத்துக்குடியில் நம்ப சொந்தக்காரப் பெண்ணைக் கூடப் பார்க்கலாம்ல” என்றாள்
தங்கை.
“சேவியர், உனக்குக் கல்யாணம் முடிஞ்சபிறகு, உன்னோட தங்கச்சிக்குக் கல்யாணம் முடிக்கணும். அது வேற இருக்கு. எல்லாத்தையும் மனசுல வெச்சு யோசிச்சுச் சீக்கிரமாய் முடிவெடு”
என்றாள் தாய் கவலையுடன்.
“பார்ப்போம்மா. அவசரப்படாமல் நல்ல பெண் அமையுதான்னு பார்ப்போம். இருக்கிற நெருக்கடி நேரத்தில் நான் இதுக்காக அலைய முடியாது. நீங்கதான் போய் பார்க்கணும். நான் காலையில் அண்ணா பார்க்கில் வாக்கிங் போகக்கூட நேரம் இல்லாமல் திண்டாடுறேன்” என்றார்
சேவியர்.
அப்பொழுது
தூத்துக்குடியிலிருந்து
அருளம்மாவின் தம்பி வந்தார்.
“வாப்பா ஆல்பர்ட், எப்படி இருக்கீங்க? வீட்லே எல்லாரும் சௌக்கியம்தானே?” என்றாள் அருளம்மா.
“எல்லாரும் சௌக்கியம்தான் அக்கா! இங்கே என் சம்சாரத்தோட தம்பி வீட்டிலே கல்யாணம், அதுக்காக நேத்து வந்தேன். அப்படியே ஓர் எட்டு உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு இங்கே வந்தேன்” என்றார் ஆல்பர்ட்.
“தம்பி ஆஸ்பத்திரிக்குக் கிளம்புது. உட்காருங்க சாப்பிட்டுட்டு பேசலாம்” என்றாள் அருளம்மா.
“அதுசரி, சேவியர் போகட்டும். அவரோட கல்யாணம் பத்தி என்ன முடிவிலே இருக்கீங்க? பேசாமல் இருந்தா நாள் அப்படியே இருக்குமா... ஓடுதில்ல?” என்றார் ஆல்பர்ட்.
“பார்க்கணும் தம்பி, சேவியர்ட்டே சொல்லிக்கிட்டே இருக்கோம். அதோட இவளுக்கொரு பையனையும் பார்க்கணும்” என்றாள்
அருளம்மா.
“எல்லாம் டீச்சராத்தான் கேட்கிறானுங்க. இது என்ன முடிச்சிருக்கு?” என்றார் ஆல்பர்ட்.
“பி.ஏ. முடிச்சிருக்காள்.
கரெஸ்பாண்டன்டில் பி.எட். படிக்கிறாள்.
இப்ப பரீட்சை முடிஞ்சிரும்” என்றாள்
அருளம்மா.
“அப்ப பிரச்சினை இல்லே! பி.எட். டீச்சர்னா
நான் நீன்னு போட்டிப் போட்டு வருவானுங்க. நம்ப தெருவிலேயே பசங்க இருக்கானுங்க” என்று
சிரித்தார் ஆல்பர்ட்.
“அப்ப சாப்பிடுங்க” என்றாள்
அமலி.
(தொடரும்)