news-details
கவிதை
கவிதைச் சாரல்

உயிரோடு  இருக்கையில்

செல்லமாய் செல்வமாய்

உரிமையில்  பதவியில் 

ஆயிரம் பெயர்கள் !

உணர்வற்றுப் போய் உயிர் பிரிந்திடின்

ஒற்றைப்பெயரில்  உலவும்  உயிர் சுமந்த உடல்

பிணமென்று!

 

வல்லினம் மெல்லினம்

கலந்த இடையினமே அவள்!

கொஞ்சம் கண்ணீரும்

கெஞ்சும் குறுநகையும்

பூக்கும் புன்னகையும்

உயர்ந்த பெண்மையின்

உன்னதத் தாய்மையின்

உரு தரும் அடையாளமும்

உருவாக்கும்

உறவுக் குழாமும்

பெண்மையின்

பெரும் பேறே!

 

ஆயிரமாயிரம் வரிகள்!

பாயிரந்தோறும்

பொருந்தும் கவிகள்!

வாசல் தோறும் பொருந்தாத

தோரணங்களாய்

வீணில் திரியும்

விட்டில்பூச்சிகளாய்

விலை கொடுத்து

வாங்கி விலையில்லாமல்

விலை போகும் மனிதர்கள்!

தேர்தலுக்கு முன்னும்

தேர்தலுக்குப் பின்னும்!

 

சில தடங்களும்

பல தழும்புகளும்

அழித்திட இயலாதவை!

ஆற்றிட ஆறாதவை!

அதை நம்மிடம்

விட்டுச் சென்றவர்களின்

அழுத்தங்களே

அதன் வலிக்கோட்பாடு!

 

மின்மினிப் பூச்சிகளின்

மினுக்குகள் அல்ல நீ!

கண்மணி சொடக்குகளின்

அசைவுகள்  அல்ல நீ!

ஏய்க்கப்படுகிறாய்  என்பதை

அறியாப் பத்தரையாய் நீ

பயணிப்பதில் பயனேதும் உண்டோ?

முத்திரை பதிக்கும்

சித்திரைப் பூவாய் தரைக்கும் தாலிக்கும்

தொடர்பென்றே தூர நிறுத்தும்

தரையர்களைத் தரைமட்டமாக்கிடத்

துணிந்து வா பெண்ணே!

 

எல்லாம் ஆனவனையும்

ஆணாய்க் கருவில் தரித்துக்

கனியாக்கியக் கன்னியவள்!

யாதுமாய் யார்க்கும்

யாத்தும் தாயுமானவள்!

பிரபஞ்சப் புள்ளியின்

உட்கருவாகி உருவாக்கி

உரு தந்து உருக்குலைந்து

புது உரு ஏற்கும் உலகின்

இயக்கச் சக்தி அவள்!

அவளின்றி அவனசையான்!

பெண்மையைப் போற்றுவோம்!

 

மறையும் நிலவைத் தேடி

மறையாத வானோடு

மற்போர் புரிகிறது

மேகக் கூட்டங்கள்!

 

வரிகள் இல்லா வலிகள்!

உடையிலும் நடையிலும்!

மானம் காப்பதற்கே!

தானம் வாழ்வதற்கே!

 

எல்லைகள் தாண்டிடத்

தொல்லைகள் மீறு!

 

இலக்கு மறவாமல்

ஓடுபவனுக்குப் பல வழிகள்!

துரத்துபவனுக்கு ஒரே வழி!

வழிகள் மாறலாம்!

இலக்கு மாறாது!