‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்ற யூபிலிக்கான ஆணை மடலில், எதிர்நோக்கின் அடையாளங்களாக வறியோரையும் புலம்பெயர்ந்தோரையும் குறிப்பிடுகிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் வறுமையின் புதிய வடிவங்களைப் பார்த்து நாம் பழகிப்போய் விட்டோம். இருப்பினும், உலகின் சில பகுதிகளில் மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் நம்மைச் சுற்றி நாளும் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து நம் கண்களைத் திருப்பிக் கொள்ளக்கூடாது. கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர்களின் துயரம்.
உலகின்
மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் - கோடிக்கணக்கானோர் வறியவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் அவர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் கிடப்பில் போடப்படும் ஆவணங்களின் அடியில் இருந்து விடுகின்றன என்பதை (எண் 15) வேதனையோடு திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
எதிர்நோக்கின்
அடையாளம்
புலம்பெயர்ந்தோர்
வறுமையின்
பல வடிவங்களில் முதல் வடிவமாக நிற்பது புலம்பெயர்ந்தோர் (Dignitas Infinita,40). பன்னாட்டு
மோதல்களால் பாதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போர்கள்-வன்முறைகளினால் பாதுகாப்புக்காக அலைகிற சகோதரர்கள்தான் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள். கல்விக்காக, வேலைவாய்ப்புக்காக, உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக நம்மை அணுகும்பொழுது, அவர்களின் தேவைகளைச் சந்திக்கக்கூடிய சமூகம்தான் கிறித்தவச் சமூகம். தங்கள் இதயக்கதவுகள் தாராளமாய் அவர்களுக்காகத் திறந்திருக்க வேண்டும். இறுதித் தீர்ப்புகள் பற்றிய சிறப்பான உவமையில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் எப்பொழுதும் நம்முடைய இதயங்களில் எதிரொலிக்க வேண்டும்: ‘அந்நியராக இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்கிற
இயேசுவின் அமுதமொழிகள் நமது வாழ்வின் வழிகளாக மாற வேண்டும்.
புலம்பெயர்ந்தோரின்
வலிகள்
புலம்பெயர்ந்தோர்
வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள்; பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்; ஆள்கடத்தலுக்கு உள்ளாகிறார்கள்; உளவியல் வலிகளால் மிகவும் நொறுங்கிப் போய் இருக்கிறார்கள். சொந்த நாட்டை விட்டு வருகிறவர்கள் எல்லாரும் சோகத்தில்தான் தமது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சொந்த நாட்டில் உரிமைகளை, உடைமைகளை இழந்து இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கின்ற ஓர் அனுபவம் அது.
புலம்பெயர்ந்தோர்
எதிர்நோக்கின்
மறைபரப்புப்
பணியாளர்கள்
2025-ஆம் ஆண்டான
இந்த யூபிலி ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளை, வரும் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில்
கொண்டாடத் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டின் மையச்சிந்தனை
‘புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கின் மறைபரப்புப் பணியாளர்கள்’ என்பதாகும்.
1914 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த அவர்களின் சவால்களை முன்வைத்து இறைவேண்டலுக்கும் செயல்பாட்டுக்கும் செல்ல நம்மைத் தூண்டுகின்ற நாள்கள் இவை. புத்துயிர் அளிக்கும் நம்பிக்கையை, மதிப்பீடுகளை உருவாக்கும் பல்சமய உரையாடலை வளர்க்கும் தளமாகப் புலம்பெயர்ந்தோர் தளமானது அமைந்திருக்கிறது.
புலம்பெயர்ந்தோர்
பெரும் உடைமைகளாகத் தங்கள் திருவிவிலியங்களையும் இறைவேண்டல் புத்தகங்களையும் ஆறு, கடல், பாலைவனம் கடந்து சுமந்து செல்கிறார்கள். இதுதான் அவர்களின் நம்பிக்கை வாழ்வு என்பதைப் புலம்பெயர்ந்தோருக்கான
2024-ஆம் ஆண்டு செய்தியில் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
புலம்பெயர்ந்தோருக்குத்
துணை
செய்ய
நல்ல
சமாரியர்கள்
தேவை
திருத்தந்தையின்
சுயசரிதை புத்தகத்தில் அமெரிக்க நாட்டு கர்தினால் ஒருவர் திருத்தந்தையிடம் பகிர்ந்த ஒரு நிகழ்வில், புதிதாய் அருள்பொழிவு பெற்ற இரண்டு அருள்பணியாளர்கள் கர்தினால் அவர்களை அணுகி ‘இலத்தீன் மொழியில் திருப்பலி
நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்’
என்கிறார்கள்.
‘இலத்தீன் புரியுமா? தெரியுமா?’ என்று கர்தினால் கேட்டதற்கு, ‘புரியாது, தெரியாது; ஆனால், நாங்கள் இலத்தீன் கற்றுக்கொள்வோம்’ என்றார்கள்.
“அது சரி, இலத்தீன் படிப்பதற்கு முன்னால் உங்கள் மறைமாவட் டத்தில் உள்ள வியட்நாமைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் என்பதை அறிவீர்களா? வியட்நாம் மொழியைக் கற்றுக் கொள்வீர்களா? ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய உங்கள் மறைமாவட்டத்தில் ஸ்பானிஷ் மொழியையும் நீங்கள் கற்றுத்தேற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முதலில் மக்கள் பணியாற்றுவதற்கு நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் தேவையில் இருக்கக்கூடிய வியட்நாம் மொழியையும் ஸ்பானிஷ் மொழியையும் கற்றுக்கொண்டு வாருங்கள். பின்னர் இலத்தீனைப் பற்றிச் சிந்திக்கலாம்” என்று
வழி அனுப்பி வைத்தாராம் அந்தக் கர்தினால்.
இஸ்ரயேல்
மக்களை அடிமைத்தனம், தீராத தொல்லைகள், பாதுகாப்பற்றத்தன்மை, பாகுபாடு, வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை இவற்றிற்கு மத்தியில் மோசே வழிநடத்தியதைப்போல புலம்பெயர்ந்தோரின் தாகத்தையும் பசியையும் போக்கிப் பாதுகாப்பையும் பராமரிப்பையும் நாமும் இறைத் துணையினால் மோசே போன்று கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர வேண்டும். புலம்பெயர்ந்தோருக்குத் துணை செய்ய, அவர்களைப் பாதுகாக்க நல்ல சமாரியர்கள் இன்று தேவை எனத் திருத்தந்தை பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
புலம்பெயர்ந்து
கொண்டிருப்பவர்
நம்
கடவுள்
2024-ஆம் ஆண்டு
செய்தியில் ‘கடவுள் தம் மக்களோடு நடக்கிறார்’ என்கிற
மையச்சிந்தனையைப் பதிவு செய்து, கடவுள் ஒரு நாளும் ஒரே இடத்தில் அமராதவர் என்றும், கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டபோது “என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் தங்கி இருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.
இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை. நான் என்றுமே திருக்கூடாரத்திலிருந்து ஒரு கூடாரத்தை விட்டு மற்றொரு கூடாரத்திற்கு மாறி வந்துள்ளேன்’ என்கிறார்
ஆண்டவர்” (1குறி 17:5). எனவே, கடவுள் மக்களோடு பயணிக்கிறார் என்பதை உறுதிபட இது கூறுகிறது.
புலம்பெயர்ந்தோரைச்
சந்திப்பது என்பது கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவமாக மாறுகிறது. கடவுள் நம் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கிறார். பசியோடு, தாகத்தோடு, வெளியூர் பயணியாய், உடையில்லாதவராய், நோயாளராய், சிறைக்கைதியாய்க் கதவைத் தட்டுகிறார்.
புலம்பெயர்ந்தோர்
என்றாலே பலருக்கு அதிக பயம் தொற்றிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதை ‘xenophobic mentality’ என்கிறார் திருத்தந்தை (Cf. Fratelli Tutti-39).
கிறிஸ்துவின்
சாயல்கள்
புலம்பெயர்ந்தோர்
தேவையில்
இருப்போர் அனைவருக்கும் கடவுளைத் தரிசிக்கும் வாய்ப்பாக நமது வடிவில் கடவுள் வருகிறார். புலம்பெயர்ந்தோர் உருவில் இறைத் தரிசனத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் இச்சந்திப்பு வழியாகப் பெறுகின்றோம். புலம்பெயர்ந்தோர் இன்னும் பிற நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவராய், கீழானவர்களாய் பார்க்கப்படுகிற போக்கை அறிகிறோம். ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரும் சக மனிதர்கள்தான் என்று
நினைத்து, எச்சூழலிலும் உரிமைகளையும் உரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது நமது கடமை.
சாதி,
இனம், மதம் கடந்து கண்ணியத்தோடு வரவேற்க நாம் கடமைப்பட்டுள்ளோம். புலம்பெயர்ந்தோரைக் காக்க மறுப்பவர்கள் மனச்சாட்சியை ஆய்வுசெய்து, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது (cf. Dignitas Infinita 40, 41).