news-details
ஆன்மிகம்
மரியா காட்சி அனுபவங்கள்: திரு அவையின் புதிய விதிமுறைகள் (5 புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்)

சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்குதடை இல்லைஎன்ற சான்று வழங்க ஒப்புதல் கேட்டு மறைமாவட்ட ஆயர்கள் நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயத்திற்கு அனுப்புகின்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதில்கள் அனுப்பப்படுகின்றன. மேற்கண்ட புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி நம்பிக்கை கோட்பாட்டுப் பேராய முதல்வர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அண்மைக்காலமாக ஆயர்களுக்கு அனுப்பியுள்ள சில பதில் கடிதங்களின் சுருக்கத்தைக் கீழே பார்க்கலாம்.

1) தென் இத்தாலி நாட்டில் லோகிரி-ஜெரச்சே (Lori-Gerace) மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ள 2024, ஜூலை 5 தேதியிட்டதடை இல்லைகடிதம். கலாபரியாவில் உள்ள சாந்தா தொமினிக்கா தி பிளாகானிக்கா (Santa Domenica di Placanica) என்ற இடத்தில் கொசிமோ பிரகோமெனி (Cosimo Fragomeni) என்ற 18 வயது விவசாயி பெற்ற மலை மாதா (Modonna dello Scogolio) காட்சி அனுபவங்கள்;

2) ஸ்பெயினில் மெரிதா-படஜோஸ் (Merida -Badajoz) உயர் மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு 22 தேதியிட்டதடை இல்லைகடிதம். சந்தவிலா என்ற இடத்தில் மார்சலினா பரோசொ எக்ஸ் போசித்தோ (Marcelina Baroso Exposito) மற்றும் ஆப்ரா பிரிஜிதொ பிளான்கோ (Modonna dello Scoglio) ஆகியோர் வியாகுல அன்னையிடம் தனித்தனியாகப் பெற்ற காட்சி அனுபவங்கள்.

3) பிரான்சின் பூர்ஜெ (Bourges) உயர் மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு  22 தேதியிட்டதடை இல்லைகடிதம். பெல் லெவுசின் (Pellevoisin) திருத்தலத்தில் எஸ்தெல் பகுட்டே (Estelle Faguette) இரக்கத்தின் அன்னையிடம் பெற்ற காட்சி அனுபவங்கள்;

4) வட இத்தாலியின் பிரெஷா (Brescia) மறைமாவட்ட ஆயர் பியர் அந்தோணியோ திரெமொலதா (Pierantonio Tremolada) அவர்களுக்கு 2024, ஜூலை 8 தேதியிட்டதடை இல்லைகடிதம். போந்த நெல்லெ தி மோந்திகியாரி (Fontanelle di Montichiari) என்ற இடத்தில் பியரினா ஜில்லி (Pierina Gilli) என்பவர் இரகசிய ரோசா அன்னையிடம் (Our Lady of Mystical Rose) பெற்ற காட்சி அனுபவங்கள் மற்றும் செய்திகள்;

5) ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அனைத்து நாடுகளின் அன்னையிடம் (Our Lady of all Nations) ஈடா பியர்டெமென் (Ida Peerdeman) 1945-இல் பெற்ற காட்சி அனுபவங்களைப் பற்றி 2024, ஜூலை 11 தேதியிட்ட அறிவிப்புக் கடிதம். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வுகள் இயல் நிலை கடந்ததல்ல (non-supernatural) என்று 1974-இல் திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இப்பொழுது இக்கடிதத்தின் வழியாகப் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது;

6) புவர்த்தோ ரிக்கோவில் (Puerto Rico) ககுவாஸ் (Caguas) மறைமாவட்ட ஆயர் எசுபியோ ரமோஸ் மொராலெஸ் (Eusebio Ramos Morales) அவர்களுக்கு எழுதியுள்ள 2024, ஆகஸ்டு 1 தேதியிட்ட கடிதம். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எலெனிட்டா தெ ஜீசஸ் (Elenita de Jesus) என்ற பெண் அன்னை மரியாவிடம் மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், மேய்ப்புப் பணியில் அக்கறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும், கார்மெல் மலையில் மரியன்னைக்கு ஒரு திருத்தலம் கட்டியதாகவும், பின்னர் ஆண்டவர் கிறிஸ்துவோடும், அன்னை மரியாவோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வுகளில் இயல்நிலை கடந்த இயல்பு எதுவும் இல்லை (Constat de non-supernaturalitate) என்றும், இலெனிட்டா கன்னிமரி அன்னை அல்லள் என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

6. வேளாங்கண்ணி திருத்தலம்

இந்தியாவின் வேளாங்கண்ணியில் மரியாவின் அன்புஎன்று தலைப்பிட்டு 2024 ஆகஸ்டு 01 தேதியிட்ட கடிதம் ஒன்றைக் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் தஞ்சை மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ளார் (The Diocese of Thanjavur New Lette,  Sep. 2024, பக். 4-5). மேற்கூறப்பட்ட புதிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதில்கள் அனுப்பப்பட்டு வருவதுபோல், வேளாங்கண்ணியில் நடந்ததாகச் சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்குதடை இல்லைஎன்ற ஒப்புதல் இக்கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது (.கா: catholic herald eo./Vatican-approves-devotion-to-India’s -16th century-vailankanni-marian-shrine). ஆனால், அப்படி ஓர் ஒப்புதல் கொடுப்பதற்காக இக்கடிதம் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இத்திருத்தலத்தில் பல நூற்றாண்டுகளாகத் தூய ஆவியாரின் செயல்பாட்டால் விளையும் பல ஆன்மிகக் கனிகளைக் குறிப்பிட்டு, ‘அனைவரின் அன்னையாகஇயேசு நமக்கு விட்டுச்செல்ல விரும்பிய மரியாவின் கனிவும் உடனிருப்பும் வெளிப்படுகின்றன என்றும், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, இந்த இறைநம்பிக்கை திருத்தலத்தின் ஆன்மிக அழகை எண்ணியும், செப்டம்பர் மாத விழாக் கொண்டாட்டங்களைக் கருதியும் அனைத்துத் திருப்பயணிகளுக்கும் இறையாசிர் வழங்குவதாகவும்இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் காணப்படும் மற்றொரு கூற்று கூர்ந்த மதியோடு ஆராய்தற்குரியது. இத்திருத்தலத்திற்குச் செல்லும் கிறித்தவ மற்றும் கிறித்தவரல்லாத பல திருப்பயணிகள் மரியாவின் கரங்களில் இயேசுவைத் தேடி, தங்கள் வேதனையையும் நம்பிக்கையையும் அவரது அன்னையின் இதயத்திடம் ஒப்படைக்கிறார்கள் என்றும், இதைப் பல சமயங்களின் ஒத்திசைவு அல்லது கலவை என்று கருதக்கூடாது என்றும் இக்கடித்தில் கூறப்பட்டுள்ளது (This should not be considered as a form of syncretism or mixing of religions). ஆனால், பெண் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்து சமயத்தாரும், இந்து சமயத்திலிருந்து மாறிய கிறித்தவர் பலரும் மரியாவைப் பெண் தெய்வமாகப் பாவித்து வணங்கி வருவதை எளிதில் மறுக்க இயலாது (Ancy Donal Modonnaï ‘Velankanni: Where Catholic Faith Blends with Hindu Rituals’, in The Hindu, 19 August 2022). இன்னும் குறிப்பாக, தமிழ்நாடு மீனவர்கள் கடல் தெய்வத்தை நம்புவதாகவும், அத்தெய்வம்கடல் அன்னைஎன்று அழைக்கப்படுவதாகவும், அந்தக் கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டார் என்றும் ஓர் ஆய்வில் கூறப்படுகிறது (நிவேதிதா லூயிஸ், அறியப்படாத கிறித்தவம்).

இந்த நம்பிக்கை. “கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் (இயேசு கிறிஸ்து) ஒருவரே (1திமொ 3:5-6) போன்ற திருவிவிலியப் போதனைகளுக்கு முரண்பாடாகத் தோன்றினாலும், திருப்பயணிகள் வேளாங்கண்ணி அன்னையைத் தெய்வமாகப் பாவித்து வணங்குவதும் போற்றுவதும், வேண்டுவதும் அதற்கான தங்களுக்கே உரிய சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதும் நிதர்சனமாக நடக்கிறது.

1671-ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய வணிகர்களை நடுக்கடலில் வீசிய புயலிலிருந்து காப்பாற்றியதும், அதற்கு முன்னர் நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக்கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவனை நடமாட வைத்ததும் அன்னையின் கனிவு நிறைந்த ஆற்றலினால் என்பது சாட்டியுரைக்கப்படும் இந்நிகழ்வுகளின் மூலக்கதைப் புனைவுகளில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (S.R. Santos, The Shrine Basilica of Our lady of Health, Vailankanni, Thanjavu, Don Bosco Press, 12th Revised and Enlarged Edition, 1983).

எனவே, மரியாவின் கரங்களில் இருக்கும் இயேசுவைத் தேடித் திருப்பயணிகள் செல்கிறார்கள் என்பதும், அவர்களது தேவைகள் அனைத்தையும் தமது அன்னையின் பரிந்துரையால் இயேசு நிறைவேற்றித் தருகிறார் என்பதும், அவர்களது பக்தியைபல மதங்களின் ஒருவித ஒத்திசைவு அல்லது கலவை என்று கருதப்படக் கூடாதுஎன்பதும் வலிந்து கூறப்படுவதாகவே தோன்றுகிறது.

(தொடரும்)