நெப்போலியன் போனபார்டே ஐரோப்பா முழுவதையும் ஆள்வதற்குக் கனா கண்டார். யுத்த வெறியில் கண்ட களங்கள் எல்லாம் வெற்றி வாகை! இரத்தவெறி ஏறியது. நெப்போலியனுக்கு வாட்டர் லூவில் நடந்த போர் சறுக்கலைத் தந்தது. அவர் தோல்வி எனும் காடியை ருசித்தார்; அது கசந்தது. மாவீரன் நெப்போலியன் தோற்றுப்போனார். தமிழ்நாடு தேர்தல் களம் என்பது பா.ச.க.வைப் பொறுத்தவரை நெப்போலியனின் வாட்டர்லூ போன்றதே.
தமிழ்நாட்டில்
பா.ச.க. எதிர்ப்பு
என்ற புயல் வீசுகிறது. மக்களின் பொதுக்கருத்தாக்கம் என்பது வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த சமூக நீதி, வாழ்வாதாரப் பாதுகாப்பு, பொது அமைதி, மதநல்லிணக்கம் என்பதே. அது தமிழ்ச் சமூகத்தை அறம் சார்ந்த தார்மீகக் கோட்டில், கோட்பாட்டில் இணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதைக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. தமிழ்நாட்டு மக்கள் சகோதர-சகோதரிகளாக அன்பு வாழ்வு, அறவாழ்வு வாழ்கிறார்கள். இதற்கு நேர்மாறாக பா.ச.க.வோ இந்து மதம்
சார்ந்த உணர்ச்சிகளால் மக்களை அணிதிரட்ட முயல்கிறது. இந்து மத வெறியைத் தூண்டுகிறது.
மணிப்பூர்
பற்றி எரிகிறது. அங்கு இனக் கலவரம் 2023, மே முதல் இரண்டு
ஆண்டுகளாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு எனும் மாநிலத் தேர்தல்களில் முழு கவனம் செலுத்துகிறார். ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலில், 2031-தமிழ்நாட்டில் பா.ச.க.
ஆட்சி என்ற இலக்கில் செயல் திட்டங்களை வழிநடத்துகிறார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள்; ஆனால்,
உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதியாமல் மதுரையில் முருகன் மாநாடு நடத்த முனைகிறார்.
தமிழ்நாட்டின்
பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலுக்கு உள்துறை அமைச்சரே தன் கட்சி நிர்வாகிகளோடு மட்டுமல்ல, அனைத்து இந்துத்துவா அமைப்புகளோடும் ஆலோசனை நடத்துகிறார். ‘முருகன் மலையா? சிக்கந்தர் மலையா?’ எனக் கொளுத்திப் போடுகிறார்கள். மதுரை மண் அரசியல் என்பது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர் அவர்களை
அசைத்துப் பார்த்தது. இந்தியாவின் இரும்பு மங்கை எனும், இந்திரா காந்தி அவர்களைக் கறுப்புக்கொடி போராட்டத்தால் கலங்க வைத்தது. தமிழ்நாட்டு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதே தமிழ்நாட்டுக் கள நிலவரம். அ.தி.மு.க.வோ ஏதோ கட்டாயத்தால்
பா.ச.க.வோடு
கூட்டணி என அறிவித்துவிட்டது. பா.ச.க. தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசுபோல
என்.டி.ஏ. கூட்டணி
அரசு என்கிறது. ஆனால், எடப்பாடியோ “இல்லை, அ.தி.மு.க. ஆட்சிதான்” என்கிறார். வெற்றி வாய்ப்புகள் இல்லாத நிலையில், ‘எவர் ஆட்சி?’ என்ற விவாதம் நடக்கிறது. பா.ம.க.,
தே.மு.தி.க.
போன்ற கட்சிகள் தன் பேர வலிமையை வலுப்படுத்த ‘நாங்கள் கூட்டணிக் குறித்து முடிவு செய்யவில்லை’ எனப்
பா.ச.க.வுக்கே
போக்குக் காட்டுகிறார்கள்.
கடந்த
காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் எவருமே கூட்டணியில் இருந்தாலும், மோடி படம் போட்டு ஓட்டுக் கேட்கவில்லை. பா.ச.க.
தலைவர்கள் எவரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. கூட்டணித் தலைவர்கள் ‘பா.ச.க.
மூத்த தலைவர்கள் தங்கள் தொகுதிக்குப் பிரச்சாரத்திற்கு வந்து விடுவார்களோ?’ எனப் பயந்தார்கள். பா.ச.க.
தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கும் கட்சி என அறிந்தாலும், ஏதோ
அச்சுறுத்தல், சுயநலம் காரணமாகத் தேர்தல்
கூட்டு வைக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பொதுக் கருத்திற்கு எதிராக நிற்கிறார்கள். சிறுபான்மையோர் நலன் என்பதில் கபட வேடம் தரிக்கிறார்கள்.
பா.ச.க. அரசியல்,
பொருளாதாரம், மதம் சார்ந்த நம்பிக்கையில் தன் தாய்வீடான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் நிற்கிறது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சிகள் அதற்கு எதிர்மறைக்கொள்கை கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுகிறார்கள். இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கதவுகளைத் திறந்த எம்.ஜி.ஆர். மாளிகைச் சொந்தங்களுக்கு நினைவு
இருக்கலாம். யூடியூப் சேனல்களில் தினம் பேசுகிற எமது பத்திரிகை நண்பர் காட்டமாகக் கூறினார்: “அந்தக் காலத்தில் அவ்வழிச் சென்ற நான்கு கால் பிராணிகள்கூட உள்ளே இழுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் வழிமாறிப் போனதாம்.” அட, நடிகர் மன்சூர் அலிகான்கூட கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி காண இயலவில்லை. அது கட்சியின் கொள்கைகள் நீர்த்துப்போனதன் விளைவு.
அரசியல்வாதிகள்
கெட்ட பின் ஞானம் பெறுவார்கள்; மாற்றுத் தேடுவார்கள். எடப்பாடி பழனிச் சாமியும் அப்படியே. எஸ்.டி.பி.ஐ.
மாநாட்டில் பேசுகிறார்:
“எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்
தேர்தல்களில் பா.ச.க.வுடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறேன். சூழ்நிலை காரணமாகப் பா.ச.க.வோடு கூட்டணி வைத்தோம். அவர்களின் கொள்கை சரியில்லாததால் வெளியே வந்தோம்” என்றார். அ.தி.முக.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வி
அடைய பா.ச.க.
கூட்டணிதான் காரணம் எனக் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ, “நான் என் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.
கூட்டணியால் சிறுபான்மையோர் வாக்குகள் கிடைக்காத காரணத்தால் தோற்றுப் போனேன்” என்றார்.
அ.தி.மு.க.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போட்டது. பா.ச.க.
வோடு கூட்டுச் சேர்ந்தால் இரண்டு கூட்டல் இரண்டு நான்கு அல்ல; அது இருக்கும் வாக்குகளுக்குப் பங்கமாகி, சிறுபான்மையோர் வாக்குகளைப் பெற முடியாமல், அது கழிவில் முடியும் என நம்பினர். எடப்பாடி
உள்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் “எக்காலத்திலும் பா.ச.க.வோடு கூட்டணி இல்லை” என்ற உறுதியில் நின்றனர். பா.ச.க.
வழக்கம்போல சாம, பேத, தண்டத்தைக் கையில் எடுத்து, எடப்பாடியாரை மிரட்டி தில்லி அழைத்தது. ‘பா.ச.க.-அ.தி.முக.
கூட்டணி’ என
அறிவித்தது. பா.ச.க.-அ.தி.மு.க. கூட்டணி அறிவிப்போடு
நிற்கிறது. இரு கட்சியினரும் இணைந்து போராட்டங்களோ, தேர்தல் பணிகளோ செய்யாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.
அ.தி.முக.விற்குப்
பா.ச.க. அழிக்கிற
மாநிலக் கட்சிகளின் பட்டியலில் நாமும் ஒன்றாகி
விடுவோமோ என்ற பெரும் பயம் ஒன்று உண்டு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ச.க.,
அ.தி.மு.க.
பொருந்தாக் கூட்டணி தோல்வியைத் தழுவும். அது கூடா நட்பின் பின்விளைவையே பிரதிபலிக்கும். தேர்தல் தோல்வியைத் தவிர்க்க, பா.ச.க.
மதம் சார்ந்த, மொழி சார்ந்த, சாதியக் கலவரங்களை முன்னெடுக்கலாம் என்பது சாமானியர்களின் கருத்து. இது அவர்கள்
தன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்குச் சொல்லித் தந்த அடிப்படை பாலப் பாடமாகும். தமிழ்நாடு அரசு தனது உளவு அமைப்புகள் வழி விழிப்புணர்வாகச் செயல்படவேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, அதில் சிறுபான்மையோரின் பாதுகாப்பும் உள்ளடங்கி உள்ளது.