news-details
ஆன்மிகம்
ஆனந்தப் பரவசம்! (நீங்கா நினைவுகள் – 02)

பல தேசங்கள், பல நாடுகள், பல ஊர்கள் நடந்த அந்தக் கால்களைக் காண ஆசை!

சின்னஞ்சிறு குழந்தையைக் கூட அன்பொழுகக் கட்டித்தழுவும் அந்தத் தோள்களைக் காண ஆசை!

யாரும் நேரில் பார்க்கவே அச்சப்படும் அந்த வித்தியாசமான நபரைக் கட்டி அணைத்து முத்தமிட்ட அந்த முகத்தைக் காண ஆசை!

பன்னிரண்டு சீடர்களாகப் பெரு வியாதிக்காரர்களின் கால்களைக் கழுவிய அந்தக் கைகளைக் காண ஆசை!

காண்பவர் எல்லாம் மயங்கும் அந்த இனிய முகத்தைக் காண ஆசை!

என்றும் எளிமை; என்றும் பகட்டை விரும்பாத தாழ்மை கொண்ட அந்த உள்ளத்தைக் காண ஆசை!

இறையொன்றிப்பில் வாழவும் பயணிக்கவும் வலியுறுத்திய அந்த மாண்பைக் காண ஆசை!

வகைவகையாய்த் திருமடல் அனுப்பித் திரு அவையைப் புதுப்பிக்கும் அந்த விரல்களைக் காண ஆசை!

எதையும் தாங்கும், யாவரையும் ஈர்க்கும் அந்தப் புன்சிரிப்பை நேரில் காண ஆசை!

தொற்றுத் தொடராதிருக்க நற்கருணையுடனே நடந்த உறுதியைக் காண ஆசை!

உலகப் போர் மேகங்களை நற்சொல்லால் நிறுத்த முயற்சித்தத் திருவாயைக் காண ஆசை!

கத்தோலிக்கத் திரு அவையை அர்த்தத்துடன் வழிநடத்தும் ஞானக் கண்களைக் காண ஆசை....

இப்படி எண்ணற்ற ஆசைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்திக்க மிகவே ஆவலாக இருந்த கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களில் அடியேனும் ஒருவன். இனி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நான் என்று காண்பேன்?

எனது இளம்வயதில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் சென்னைக்கு வந்திருக்கும் பொழுது அந்தக் கூட்டத்திற்கு உதவி செய்த தன்னார்வப் பணியாளர்களில் நானும் ஒருவன். எங்கள் வீட்டிலேயே அதற்காக மறைமாவட்டத்தால் தந்த ஒரு படம் சாட்சியாக உள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஒரு தாக்கம் எங்களுக்குள்ளே என்றும் இருந்தது. எங்களின் நீண்ட நாள் கல்லூரி நண்பர் திரு. ஆரோன் இன்பராஜ் சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் பல வருடங்களாக  என்னையும், என் மனைவியையும் அழைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன். 2024, செப்டம்பர் 7-ஆம் தேதி  திருத்தந்தை பங்கேற்கும் திருப்பலியைக் காண அயல்நாட்டுக்காரர்கள் என்ற தொகுப்பில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், 45 ஆயிரம் பேர் பார்க்கும் அந்த ஸ்டேடியத்தில் அயல்நாட்டுக்காரர்களுக்கான பிரிவில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

பிறகு இரண்டு மூன்று தந்தையர்கள் மூலமாகச் சிங்கப்பூரில் இருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த தந்தையர்களை நான் தொடர்பு கொண்டேன். ஆனாலும் முடியவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் எங்கள் முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. எப்படியாவது நாம் திருத்தந்தையைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால், குறிக்கப்பட்ட தேதியில் நாங்கள் சிங்கப்பூருக்குப் பயணம் ஆனோம்.

பயணமாகும் அந்த நாளும் வந்தது. அந்த ஸ்டேடியத்தின் மையவாசலுக்குச்  சென்றுவிட்டோம். அங்கே போனபிறகுதான் தெரிந்தது, அங்குள்ள பாதுகாப்பும், அங்கு அவர்களின் நடவடிக்கைகளும்! ஓர் , காக்கை கூட அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மிக மிகப் பாதுகாப்பான ஒரு சூழல் காணப்பட்டது. அந்த ஸ்டேடியத்தைச் சுற்றிலும் எப்படியாவது பார்க்க முடியாதா? என்று பல கோணங்களில் முயற்சித்தோம். ஆனால் ஏமாற்றமே!

சிங்கப்பூரில் எங்களை அழைத்து இருந்த நண்பர் ஒரு சி.எஸ்.. சபையைச் சார்ந்தவர். அவர் எங்களின் ஏமாற்றத்தைப் புரிந்து ஆறுதலளித்தார். அன்று இரவு எங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நண்பர் குடும்பத்தினர் செபித்தனர். நண்பர் எப்படியாவது திருத்தந்தையைப் பார்த்துவிட வேண்டும் என்று  செபித்தது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. நமக்காக அவர் செபித்தது மிக மிக நம்பிக்கை தந்தது.

அடுத்த நாள் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் அவர் பல்சமய உரையாடலுக்கு வருவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அது அவருடைய இல்லத்திலிருந்து மிக அருகில் உள்ள ஒரு கல்லூரி. அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். நண்பரின் மகன் ஆசேர் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கல்லூரி வாசலில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கூடிக்கொண்டே வந்தது. எங்களுக்கு ஒரு பேரானந்தம்! ஒரு பரவசம் எனக்குள்ளே! ஏனென்றால், நாம் கனவில் கண்டு மகிழ்ந்த, படங்களில் பார்த்து மகிழ்ந்த, குறும்படங்களில் இலயித்த அதே திருத்தந்தையை நேரில் பார்க்கப்போகிறோமே என்று!

அங்கே சிங்கப்பூர் வாசிகள்தான் 90%  நின்று கொண்டிருந்தார்கள். மிக மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் அயல்நாட்டினர் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவராக நாங்கள் இணைந்து விட்டோம். தலைவர்கள் வருகிறார்கள் என்றால், இங்கு இருக்கக்கூடிய  கெடுபிடிகள் அங்கு இல்லை. அந்த வாசலில் மட்டும் இரண்டு மூன்று அதிகாரிகள் இருந்தார்கள். கொஞ்சம் தள்ளிச் சில காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே வந்தது. இங்கேயும்நாம் பார்க்க முடியாதோ?’ என்ற அவநம்பிக்கை; ஆனால், ‘பார்ப்பேன்என்ற ஒரு நம்பிக்கை மட்டும் மேலோங்கிக் கொண்டே இருந்தது. சுமார் அரைமணி நேரம் சென்றதுவாழ்க்கையிலே மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று கூறினால், அந்த ஒரு மணி நேரத்தைக் கூறலாம். வந்துவிடுவார் என்று அனைவரும்  வலது பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

சிறிது நேரத்தில் நான்கு கார்கள் முன்னால் இரண்டு போலீஸ் பைலட்டுகள் வந்தார்கள். காவலர்கள் உள்ளே செல்லச் செல்ல அதோ அந்தக் கார் வந்தது. வத்திக்கான் கொடியும், சிங்கப்பூர் கொடியும் இருபுறமும் பறக்க, முன்வரிசையில் நம் திருத்தந்தை! எனக்கும் திருத்தந்தைக்கும் இடைவெளி சுமார் 15 அடி மட்டுமே. கார் கடந்த நேரம் 15 நொடிகள் மட்டுமே. அனைவரிடமும் மகிழ்ச்சிக் குரல்கள்யீயயீய.. யீயயீய....’ என்று.

எனக்கு ஆனந்தத்தில் தொண்டை அடைத்தது. சற்று என்னை மறந்து சத்தமாகபாத்தாச்சு... பாத்தாச்சு...’ என்று மட்டுமே கூவினேன். பதினைந்து நொடிகள்! அத்தனை அருகில்! அந்த ஸ்டேடியத்தில் இத்தனை அருகில் கண்டிப்பாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அப்பப்பா.... போதும் அந்த நினைவுகள்!

அப்பப்பா.... போதும் அந்தப் பொழுதுகள்!

இறைவனுக்கு இன்றும் என்றும் நன்றி கூறுவோம்! திருத்தந்தையின் படிப்பினைகளை  நினைவுகளில் அரங்கேற்றி நனவில் நிறைவேற்றுவோம்.