news-details
கவிதை
திரு இருதய பக்தி!

ஏராளப் பாவங்கள்  மண்ணுலகில் பெருகியதால்

இறைவனே நீர் இதயம் நொந்தீர்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனுக்குலத்தை

ஏந்தியே காக்க வந்தீர் - மனிதர்

எண்ணங்க ளத்தனையும் நம்பிக்கைத் துரோகமாகச்

சிலுவையிலே உயிரைத் தந்தீர் - உம்

இருதயம் முழுக்கவே வலிகள்தாம் எம்மாலே

இன்னலன்றி எதை நீர் கண்டீர்?

 

எது எதையோ அடைவதற்கு தீய வழி என்னவென்று

மனிதர்கள் யாம் இங்கு ஆய்கிறோம் 

இறுகிப்போன சுயநலத்தால் நன்மைகளை விற்றவராய்

பாவ நெருப்பில் குளிர் காய்கிறோம்

எப்படியோ பொருள் சேர்த்துக் கொடிகட்டிப்  பறந்தவராய் 

ஆன்மாவை இழந்து தேய்கிறோம்

ஈட்டியதைக் கூட்டிப் பார்த்து இறுதியிலே சுழியம் கண்டு

இழந்த வாழ்வை எண்ணி மாய்கிறோம்

 

பண்பு கெட்டு நாங்கள் செய்யும் பாவங்கள் எல்லாமே

உம் இதயத்தில் முட்கள் செருகும்

பரமன் உம்  திரு இதயம் பாதிப்புக்குள்ளாகி

இடைவிடா(துகுருதி யொழுகும்

பரிசுத்தத்தனத்தை விட்டுப்  பாதை மாறி நடந்தாலும்      

மன்னித்து இரக்கம் பெருக்கும் - உம்

பாசமதை உணராமல் பாழும் எம் நெஞ்சங்கள்

பாறைபோல் தினமும் இறுகும்!

  

நன்றியில்லா நடத்தை மிக

                     நாளும் பாவ முட்களினால்

நெஞ்சத்தையே குத்திப் பிளந்தோம்

நல்லவராம்  ஆண்டவர் நீர் 

                மன்னித்  தருள்வதனால்

நாங்களுமே வாழ்வை அடைந்தோம்

என்றும் இயேசு திரு இதயப்

                பக்திப்பற்று மிகக்கொண்டு

வணங்குவோருக்கு உயர்வு நிச்சயம்!

இறைவா! நீர் எமக்குச் செய்த நன்றி

                          நினைத்து நடந்தாலே            

எமக்கு நல் வாழ்வுண்டு, இதுவே சத்தியம்!

                          *சுழியம் - பூஜ்யம்