news-details
ஆன்மிகம்
பேறுபெற்ற கன்னியானவள் கடவுளின் அருளால் நிரம்பியிருந்தாள்! (Blessed Virgin was filled with God’s Grace) (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 19)

அருளினால் நிரம்பியிருக்கின்றமரியாவின் நிலை அவருடைய தகுதியினால் (Human merit) கிடைத்தது அல்ல; மாறாக, முற்றிலும் கடவுளின் வியக்கத்தக்க செயலினால் விளைந்த ஒன்று (wholly the result of god’s wonderful work) என்பதை புனித லூக்கா நற்செய்தியாளர் தெளிவாக விவரிக்கின்றார்.

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பற்றிய விவரிப்பில்மகிழ்ந்திடுஎன்ற வானதூதரின் வாழ்த்தொலியானது பழைய ஏற்பாட்டில்சீயோனின் மகளைநோக்கிக் கூறப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான அழைத்தலின் இறைவாக்குகளை நமக்கு நினைவூட்டுகின்றது. இதை நான் இதற்கு முந்தைய எனது மறைக்கல்வியில் சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும், இந்த அழைப்பிற்கான பின்வரும் காரணங்களையும் விளக்கியுள்ளேன்: ‘கடவுளின் மக்களிடையே அவருடைய இருத்தல், மெசியாவாகிய அரசரின் வருகை மற்றும் தாய்வழிப் பலன்(Marternal fruitfulness) இந்தக் காரணங்கள்  மரியாவில்  நிறைவடைகின்றனகபிரியேல் தூதர் நாசரேத்தூர் கன்னியை நோக்கி ‘Chaire’ அதாவதுமகிழ்ந்திடுஎன்று வாழ்த்துவதில் அவரை ‘kecharitoméne’ அதாவதுஅருளால் நிறைந்தவரேஎன்று அழைக்கின்றார். கிரேக்கத் திருவிவிலிய மூலத்தினுடைய ‘Chaire’ மற்றும் ‘kecharitoméne’ போன்ற சொல்லாடல்கள் ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான தொடர்புடையவை. ஆண்டவருடைய தாயாவதன் பொருட்டு கடவுள் அவரை அன்பு செய்வதாலும் அருளால் நிறைப்பதாலும் அதனைக் குறித்து மகிழ்ந்திட மரியா அழைக்கப்படுகின்றார்!

இறையருளானது மகிழ்ச்சிக்கானதொரு காரணம் மற்றும் அந்த மகிழ்ச்சியானது கடவுளிடமிருந்து வருகின்ற ஒன்று என்று திரு அவையின் நம்பிக்கையும் புனிதர்களின் அனுபவங்களும் கற்பிக்கின்றன. கிறித்தவர்களின் வாழ்வில் நிகழ்கின்றவாறே மரியாவிலும் அந்தத் தெய்வீகக் கொடையானது ஆழமானதொரு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது.

2. Kecharitoméne: மரியாவை நோக்கிச் சொல்லப்பட்ட இந்தச் சொல்லாடலானது இயேசுவின் தாயாக இருக்கின்றதொரு பெண்ணை விவரிப்பதற்குரிய மிகச் சரியானதொன்றாகத் தெரிகின்றது. இதை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானஇறைத்திட்டத்தில் திரு அவைபின்வருமாறு விவரிக்கின்றது: “கருவான முதல் நொடியிலிருந்தே தனிச்சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியைக் கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர்அருள்மிகப் பெற்றவரே (காண். லூக் 1:28) என்று வாழ்த்துகின்றார் (ஒப்பிடுக: இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56). 

வானதூதர் மரியாவை இவ்வகையில் வாழ்த்தும் நிகழ்வானது இறைத்தூதரின் வாழ்த்தொலி மதிப்பை உயர்த்துகின்றது. மரியாவைப் பொருத்தவரை இது கடவுளின் மறைமுகமான மீட்புத்திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதையேநான் மீட்பரின் தாய்(Redemptoris Mater) என்கின்ற எனது சுற்றுமடலில் இவ்வாறு கூறியிருக்கிறேன்: “அருளால் நிறைந்தவளே!’ என்ற வாழ்த்தானது கிறிஸ்துவின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டு தேர்ந்துகொள்ளப்பட்டதனால் மரியாவுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்புச் சலுகைகளான இயற்கைக்கு அப்பாற்பட்ட  அனைத்து நன்மைகளையும் குறிக்கின்றது (மீட்பரின் தாய், எண். 9).

கடவுள் மரியாவுக்கு  அருளை முழுமையாகக் கொடுத்துள்ளார்!

அருளால் நிறைந்தவரேஎன்பது கடவுளின் பார்வையில் மரியா பெற்றிருக்கின்ற ஒரு பெயராகும். உண்மையில் தூய லூக்கா நற்செய்தியாளரைப் பொருத்தவரை வானதூதர்மரியாஎன்கின்ற பெயரைச் சொல்வதற்கு முன்பே இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இவ்வகையில் நாசரேத்தூர் கன்னியின் ஆளுமையில் மிகவும் உயர்ந்ததொரு பார்வையை நற்செய்தியாளர் வலியுறுத்துகின்றார். ‘அருளால் நிறைந்தவரேஎன்கின்ற சொல்லாடலானது ‘kecharitoméne’  என்கின்ற கிரேக்கச் சொல்லின் மொழியாக்கமாகும். இது ஒரு வினையின் செயப்பாட்டு இலக்கண வடிவமாகும் (passive participle). ஆகவே, கிரேக்க வார்த்தையின் மிக நுட்பமான வேறுபாட்டைக் காட்டுகின்றவாறு வெறுமனேஅருளால் நிறைந்தவரேஎன்று கூறாமல், அதற்கு மாறாகஅருளினால் முழுமையாக் கப்பட்டவர்என்றோ அல்லது அதையும் கடந்து, கன்னி மரியாவுக்குக் கடவுளால் அளிக்கப்பட்டதொரு கொடை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்ற வகையில்அருளினால் நிறைக்கப்பட்டவர்என்றோ கூறவேண்டும். வினையின் செயப்பாட்டு (perfect participle) இலக்கண வடிவத்தில் இருக்கின்ற இந்தச் சொல்லாடலானது முழுமையைக் குறிக்கின்ற நிறைவான மற்றும் என்றென்றைக்குமான அருளின் பிம்பத்தை மேம்படுத்துகிறது. ‘அருளை வழங்குதல்என்கின்ற அர்த்தத்தில் கடவுளின் அன்பு மகனில் தந்தையால் நமக்குக் கொடுக்கப்பட்ட அபரிமிதமான அருளைக் குறிப்பதற்கும், மீட்பின் கனியாக மரியா பெறுகின்ற அருளைக் குறிப்பதற்கும் (ஒப்பிடுக: மீட்பரின் தாய், எண். 10) இதே வினைச்சொல்லானது எபேசியர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பயன்படுத்தப்படுகிறது (எபே 1:6). 

3.            கன்னி மரியாவைப் பொருத்தவரை, கடவுளின் செயலானது உண்மையிலேயே வியப்புக்குரியதொன்றாக இருக்கின்றது. மெசியாவின் வருகையைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவதற்கு மரியாவுக்கு எவ்விதச் சிறப்புத் தகுதியும் இல்லை. அவர் ஒரு தலைமைக்குருவோ, யூதமதத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியோ அல்லது ஓர் ஆணோ அல்ல; மாறாக, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்தச் சமூகத்தில் எந்தவொரு செல்வாக்கும் பெற்றிராத ஓர் இளம்பெண். அதோடு, பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் குறிக்கப்படாத நாசரேத்து என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். யோவான் நற்செய்தியில்நாசரேத்தூரிலிருந்து நல்லது ஏதும் வரக்கூடுமோ?” (யோவா 1:46) என்று நத்தானியேல் கேட்கின்றவாறு அந்தக் கிராமத்திற்கென்று எந்தவொரு பெருமையோ புகழோ இருந்திருக்கச் சாத்தியமில்லை.

வழக்கத்திற்கு மாறான மற்றும் புரிந்துகொள்ள இயலாத இந்தக் கடவுளின் தலையீட்டின் தன்மையானது லூக்கா நற்செய்தியில் வரும் சக்கரியாவிற்கு நடந்தவைகளை விவரிக்கும் பகுதியோடு ஒத்திருப்பது தெளிவாகின்றது. சக்கரியாவின்குருஎன்கின்ற தகுதியும், அவருடைய முன்மாதிரியான வாழ்வும் குறிப்பிடப்படுவதன் வழியாக அவரும் அவரின் மனைவியான எலிசபெத்தும் பழைய ஏற்பாட்டின் மாதிரிகளாகக் காட்டப்படுகின்றார்கள். “அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் (லூக் 1:6).

ஆனால், மரியாவின் தோற்றம் பற்றித் திருவிவிலியத்தில் நமக்கு எந்தவிதமான தகவல்களும் சொல்லப்படவில்லை: “தாவீது குடும்பத்தினராகிய...” (லூக் 1:27) என்பதுகூட யோசேப்புவையே குறிக்கின்றதுமரியாவின்  நடத்தை (Mary’s behaviour) பற்றிய எந்தவிதத் தகவலும் குறிக்கப்படவில்லை. மரியாவைப்  பொருத்தவரை ஒவ்வொன்றும் இறைவனின் அருளிலிருந்து வருவதாக, தூய லூக்கா நற்செய்தியாளர் இலக்கியத் தெளிவோடு வலியுறுத்துகின்றார். மரியாவுக்கு வழங்கப்பட்டதெல்லாம் அவருக்கானதொரு தனிச்சிறப்பின் பலனாக இல்லாமல், கடவுளுடைய சுதந்திரமான மற்றும் விருப்பத்தின் நற்கொடையின் பலனாகவே இருக்கின்றது.

மரியாவில்  கடவுளின் இரக்கமானது உயர் நிலையை அடைகின்றது

4. அவ்வாறு செய்வதில் நற்செய்தியாளர் உண்மையில் கன்னி மரியாவின் தனிப்பட்ட மதிப்பைச் சிறுமைப்படுத்த எண்ணவில்லை. மாறாக, கடவுளுடைய நன்மைத்தனத்தின் தூய்மையானதொரு கனியாகவே மரியாவைக் காட்ட அவர் விரும்புகின்றார். ‘அருள் நிறைந்தவரேஎன்று வானதூதர் பயன்படுத்திய அடைமொழியின்படி அவரால் செய்ய முடிந்ததையே அவர் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது

இவ்வாறு செய்வதன் வழியாக, நற்செய்தியாளர் நிச்சயமாகப் பேறுபெற்ற கன்னியின் சிறந்த, தனிப்பட்ட மதிப்பைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை; மாறாக, மரியாவைக் கடவுளின் நல்லெண்ணத்தின் தூய கனியாகக் காட்ட விரும்புகிறார். வான தூதர் பயன்படுத்திய அடைமொழியானஅருள் நிறைந்தவராக மாற்றுவதற்காக அவர் மரியாவைத் தமதாக்கிக் கொண்டார்.

யாவே கடவுள் பழைய ஏற்பாட்டில் அவரின் அபரிமிதமான அன்பைப் பல வழிகளில், பல நேரங்களில் வெளிப்படுத்துகின்றார். புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், கடவுளுடைய இரக்கத்தின் கொடையானது  மரியாவில்  அதன் உயர்நிலையை அடைகின்றது. அவரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக, தாழ்மையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் காட்டப்படும் கடவுளின் சார்புநிலையானது அதன் உச்சத்தை அடைகிறது.

ஆண்டவரின் வார்த்தையாலும் புனிதர்களின் அனுபவத்தினாலும் உந்தப்பட்டு, திரு அவையானது அதன் நம்பிக்கையாளர்களை மீட்பரின் தாயான  மரியாவில்  அவர்களின் கண்களைப் பதிய வைக்கவும், அவரைப் போன்றே கடவுளால் அன்பு செய்யப்பட்டவர்கள் என்று தங்களையே கருதுவதற்கும் அவர்களைத் தூண்டுகின்றது. மரியாவின் தாழ்ச்சியையும் ஏழ்மையையும் பகிர்ந்துகொள்வதற்குத் திரு அவையானது அவர்களை அழைக்கின்றது. ஏனெனில், அவருடைய எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரையைப் பின்பற்றி அவர்களின் இதயங்களைப் புனிதப்படுத்தக்கூடிய மற்றும் மாற்றக்கூடிய கடவுளின் அருளில் அவர்களாலும் நிலைத்திருக்க முடியும்.

மூலம்: John Paul II, Blessed virgin was filled with God’s grace, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 15 May 1996, p. 11.