2026 - தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்க வேண்டும்? சமூக நீதியா? மனு நீதியா? சமத்துவமா? சனாதனமா? மதச்சார்பின்மையா? மதவெறியா? வெறுப்பு அரசியலா? சகிப்பு அரசியலா? மக்களா? மதமா? எப்படி இருக்கவேண்டும்?
மையக்கரு
மறைந்துபோனது. தமிழ்நாடு அரசியல் களம் மக்களை மறந்து, ‘யார் முதல்வர்?’ என்ற வாக்கு அரசியல், முதல்வர் பதவி எனும் வெறி அரசியல் நடக்கிறது. ஒரு புதிய கட்சி ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்’
என முழக்கமிடுகிறது. காமெடி நடிகர் கவுண்டமணி கூறுவதுபோல ‘அந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டை’ மட்டுமே கேட்கிறது. அந்த நான்காவது அணி ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என ஆடித் தள்ளுபடி
ஆஃபர் கொடுத்தும், லெட்டர்பேடு கட்சிகள்கூட அவர்களை நோக்கி நகரவில்லை. தோற்றுத் தோற்றுப் பயிற்சி எடுக்கும் மூன்றாவது அணியின் முதல்வர் கனவு வேட்பாளரும் பேசிப் பேசியே மக்களை ஈர்க்கிறார். நேருக்கு நேர் போட்டியிடும் முதல் இரண்டு அணிகளை மட்டுமே இங்கு
நாம் பார்ப்போம். ஆட்டத்தில் இல்லாதவர்கள் குறித்து நமக்கு என்ன கவலை?
ஆளும்
தி.மு.க. முழுவதும்
மக்கள் ஆதரவைத் தக்க வைத்துள்ளதா? இல்லை! 2021 - தி.மு.க.
தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றைச் செய்யவில்லை என்பதே உண்மை. தமிழ்நாடு அரசு அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகம் என்பதால் அவர்கள் அரசுக்குக் கெட்ட பெயர் வர என்ன செய்ய
வேண்டுமோ, அனைத்தையும் செய்து விட்டார்கள். முதல்வர் இதை உணரும்போது தலைக்கு மேல் வெள்ளம்
போய்விட்டது. ‘சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?’ என ‘நம் வாழ்வு’ இதழில் அட்டைப்படக் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.
‘உங்களுடன் ஸ்டாலின்’
என அரசுத் துறைகள் மக்கள் வாழ்விடங்களில் முகாமிட்டு, ஆட்சியின் இறுதிநேர மக்கள்
நலப்பணிகள், அடிப்படைத் தேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திட்டப் பணிகளை மாவட்டந்தோறும் முதல்வரே நேரில் சென்று விரைவுபடுத்துகிறார். இடையே அப்பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’
என மக்களைச் சந்தித்து ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். ஆளும் கட்சி என்பதால் உள்கட்சி பூசல்கள்
அதிகம்; அதைக் கட்டுப்படுத்த தி.மு.க.
நிர்வாகிகளை முகத்திற்கு முகம் பார்க்கும் பணியும் தேர்தல் பணியில் உள்ளடக்கம்.
ஓராண்டுக்கு
முன்பே மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வாக்குச் சாவடி முகவர்கள் என ஆளுங்கட்சி
தேர்தலுக்குப்
பரபரப்பாகி விட்டது. சில முக்கிய நிர்வாகிகளுக்கு ‘நீங்கள் தான் தொகுதி வேட்பாளர், தொகுதியில் பணியைப் பாருங்கள்’
என அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளன. அவ்வேட்பாளர்கள் இப்போதே களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில்
‘இந்தியா’ கூட்டணி
கட்டமைப்பாக இருக்க முதல்வர் ஸ்டாலின் பல சமரசங்களுக்கு உட்படுகிறார்;
கூட்டணி கட்சிகளின் குரல்களுக்குக் காதுகொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலினை ஜூலை
கடைசி வாரம், ஆகஸ்டு முதல் வாரங்களில் சந்தித்த தே.மு.தி.க. பிரேமலதா, முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வம், தொலைப்பேசியில் பேசிய மருத்துவர் இராமதாஸ் என வரிசை நீள்கிறது.
ஸ்டாலின் அ.தி.மு.க, பா.ச.க, த.வெ.க. தவிர்த்த அனைவரோடும்
இணக்கம் காட்டுகிறார். 2026 - சட்டசபை சீட்டுகளோடு, 2026 - மாநிலங்களவைச் சீட்டுகளையும் பகிர்ந்து அளித்து, புதிய கட்சிகளையும் அரவணைப்பார் என்பது நடப்பு அரசியல்.
கிராமங்களில்
‘அவர் பெரிய தலைக்கட்டு’ என
அசைக்கமுடியாத பெரும் மனிதர்களைச் சிலாகிப்பார்கள். தமிழ்நாடு அரசியலில் ஸ்டாலின் பெரிய தலைக்கட்டு என்பது தொடர்ந்து உறுதியாகிறது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறுகிறார்: “ஆளுங்கட்சியின் அதிகாரப் பலம், பணபலத்தை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி அமைப்பது பெரும் சவாலாக உள்ளது.” உண்மை நிலையும் அவ்வாறே உள்ளது. அ.தி.மு.க.-வை நோக்கி லெட்டர் பேடு கட்சிகள் கூட நகரவில்லை.
எடப்பாடி
பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரை இது ‘வாழ்வா? சாவா?’ என்ற நிலைத் தேர்தல். வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ச.க.-வைப் பொறுத்தவரை 2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி வெல்லாவிடிலும் சரி, அ.தி.மு.க. தோற்கவேண்டும். தொடர்ந்து
தோற்றால் அ.தி.மு.க. தலைவர்களை ஒவ்வொருவராக
இழுத்து அ.தி.மு.க.வை அழிக்கவேண்டும்.
பா.ச.க. கட்சி
அ.தி. மு.க.வுக்கு
மாற்றாக, தமிழ்நாட்டில் தாமரையாக மலர வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம்.
அ.தி.மு.க.
கட்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களாலும்,
புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களாலும் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது. அது மேற்கு மண்டலக் கட்சியாகவும், தன் சாதிக் கட்சியாகவும் மாற்றியதே பத்து தோல்வி பழனிசாமியின் ஒரே வாழ்நாள் சாதனை. எடப்பாடி பழனிசாமி புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் எனப் பேருந்தில் மக்கள் சந்திப்புப் பயணம் நடத்துகிறார். 2 கோடி மதிப்புள்ள அந்த உல்லாசப் பேருந்தைச் ‘சுந்தரா டிராவல்ஸ்’
எனக் கிண்டலடிக்கும் தி.மு.க.வின் விமர்சனம் தவறானது; கண்டிக்கத்தக்கது.
எடப்பாடியாரின்
பிரச்சாரத்தில் தடித்த வார்த்தைகள், முதல்வரை ஒருமையில் பேசுவது, ஆதாரமற்றுப் பேசுவது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது எனக் களமே அதகளமானது. தினமலர், தந்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றி, சாணக்யா சேனல் வழி, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்யும் ரங்க ராஜ் பாண்டே “வெகுமக்கள் இரசிக்கக்கூடியதாக உள்ளது” என்கிறார். அதில் சில சான்றுகளைப் பார்ப்போம்.
எடப்பாடியாரின்
முதல்கட்டப் பிரச்சாரம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. அங்குப் பேசுகிறார்: “பொதுவுடைமைக் கட்சிகள் அழிந்து விட்டன.” பிரச்சாரத்தின் நடுவே சிதம்பரத்தில் பேசிய பழனிசாமி, “பொதுவுடைமைக் கட்சிகளை இரத்தினக் கம்பளம் விரித்துக் கூட்டணிக்கு அழைக்கிறேன்” என்றார்.
அடிப்படை அரசியல் அறனுடைய பொதுவுடமைக் கட்சிகள் மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில், எங்களுக்கு வேலை இல்லை என எடப்பாடியாரின் அழைப்பை
ஏற்க மறுத்தன.
திருவாரூரில்
பேசிய எடப்பாடி “பொதுவுடைமைக் கட்சிகள் தி.மு.க.விடம் காசு வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்” என,
தான் சுட்ட தோசையைத் தானே கருகத் திருப்பிப் போட்டார். பா.ம.க.வைக் கூட்டணிக்கு அழைத்தார். அன்புமணி இராமதாஸ் அவர்கள் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றால் கூட்டணி பேசலாம்” என்றார். எடப்பாடியார், “ஏங்க, எப்ப பா.ம.க.வைக் கூட்டணிக்குக் கூப்பிட்டேன்?” என்று ஜகா
வாங்கினார். எடப்பாடியாரிடமும், தன் தந்தை இராமதாஸ் அவர்களிடமும் கோபித்துக்கொண்டு, அன்புமணி இராமதாஸ், சௌமியா மேடமைக் கூட்டிக்கொண்டு ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க...’ சுற்றுப்பயணம் புறப்பட்டுவிட்டார்.
“ஒரு பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும்” என்றார் எடப்பாடி பழனிசாமி. “த.வெ. க.வா?” என்றால், “பொறுத்துப் பாருங்கள்”
என்றார். அதற்குத் த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அழகாய் பதில் கூறினார்: “அ.தி.மு.க. தொண்டர்கள் த.வெ.க.வுக்கு
வந்துவிட்டார்கள்; ஆகவே, கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.” இப்படியே எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டதால் தட்ட இடமின்றிப் பயணிக்கும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். பா.ச.க.
எனும் கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.
2024 - மக்களவைத் தேர்தலில்
இருந்த எஸ்.டி.பி.ஐ.
மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தற்போது
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இல்லை
என்கிறார்கள். தே.மு.தி.க . பிரேமலதா, ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பிரச்சாரத்தில் தேர்தல் களம் காண்கிறார். ‘தே.மு.தி.க. கூட்டணி பற்றி
சனவரி 2026-இல் அறிவிப்போம்’ எனக்
கூறி தன் பேர வலிமையை அதிகப்படுத்துகிறார்.
2026-ஆம் ஆண்டு
தொடங்கியபின் புதிய கூட்டணிகள் உருவாகும். திரைமறைவு அரசியல்கள் வெளிச்சமாகும். சாதிவாரி, மதவாரி, மொழிவாரி வாக்குகளைக் குறிவைத்த வாக்கு அரசியலில் மக்களுக்கான அரசியலை அடையாளம் காண்பதே சிறுபான்மை மக்களின் அதிகாரமாகும்.