புனித தேவசகாயம் இந்தியத் திரு அவையின் முதல் மறைச்சாட்சி; முதல் பொதுநிலைப் புனிதர்; இன்று ‘பொதுநிலையினருக்குப் பாதுகாவலர்’ என்ற பெருமைகளுக்கு மகுடம் சூடக்கூடியவர் நம் புனிதர் புனித தேவசகாயம். எட்டு மாதங்கள் தன்னைத் தயாரித்து ‘கடவுள் என் உதவி’ (துணை) என்று நீலகண்டபிள்ளையாக இருந்த இந்துமத அரண்மனைக் காப்பாளர் திருமுழுக்குப் பெற்ற ஏழே ஆண்டுகளில், தன்னைக் கிறிஸ்துவுக்காகக் குண்டுகளினால் குருதி சிந்திப் பலியானார்.
ஒரே
நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள் என்பது மன்னர்களின் ஆட்சியில் புதிதல்ல; அதிலும், அவர்களையே கடவுள் என்பது வரலாற்றிற்கு அப்பாற்பட்டது அல்ல; ஆனால்,
“கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை”
(8:4), “நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து...” (8:6) என்று கொரிந்து மக்களுக்குப் புனித பவுலடியார் கூறுவது போல, இவரும் ஆண்டவர் இயேசுவையே ஒரே கடவுளாக, வாழ்வின் ஊற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.
‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற
அதிநவீன காலத்தில், ‘வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்ந்தோம்?’ என்று அலசி ஆராய வேண்டும். வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், இன்றும் பல உள்ளங்களில் வாழ்கிறோம்
என்பது வாழ்வின் உச்சத்தின் பொருளமைந்த இறையருள்.
1712-இல் பிறந்த
இவர், 1745-இல் திருமுழுக்குப் பெற்ற புனித தேவசகாயம், திருமுழுக்கு அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய மறைச்சாட்சி பணியைத் தொடர்ந்தார். தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைக் கிறிஸ்துவுக்காகத் தொடங்கிய இவருக்கு முட்டுக்கட்டுகள் ஏராளம். துன்பமும் வேதனையும் அதிகரிக்கத் தொடங்கின. மனித வாழ்வின் இறுதியும், புனித வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. கருக்கலுக்கும் காரிருளுக்கும் நடுவில் நள்ளிரவில் குண்டின் ஓசையும், குருதியின் ஓட்டமும் “தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்ற
இயேசுவின் வார்த்தையைத் தன்னில் உட்கொண்டு, “இயேசுவே என்னை மீட்டருளும்” என்ற
உச்சரிப்பில் நம் புனிதர் 1752, ஜனவரி 17 அன்று மரணத்தைத் தழுவினார்.
“நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல; மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார்” (1யோவா
4:10) என்கிற செய்தியே நம் நம்பிக்கையின் மையமாக இருப்பதாக என்று மொழிந்த திருத்தந்தை பிரான்சிஸ் மே 15, 2022 உரோமையில் இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இந்தியர்களின் மகிழ்ச்சியும், ஆன்மிக அருளும் பெருகிவரும் இச்சூழலில், இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CCBI) கோரிக்கையின்
பேரில், திருவழிபாடு மற்றும் அருளடையாளங்களுக்கான வத்திக்கான் ஆணையம், புனித தேவசகாயம் அவர்களை ‘இந்தியாவின் பொதுநிலையினரின் பாதுகாவலர்’ எனும்
திருத்தந்தையின் ஆணையை 2025, ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் 15 அன்று வாரணாசி புனித மரியன்னை பேராலயத்தில் முறையாக அறிவிக்கப்பட உள்ளது.
“கிறித்தவர்கள் ஒன்றில் தங்களது மதத்தைக் கைவிடவேண்டும்; இன்றேல் துன்புறுத்தப்பட வேண்டும் என்றால், நானும் ஒரு கிறித்தவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னிடமிருந்து துன்புறுத்தலைத் தொடங்குங்கள்” என்று
மொழிந்த நம் புனிதர், நமக்கெல்லாம் பாதுகாவலராகத் திரு அவையால் உயர்த்தப்பட்டுள்ளார்.
நம்மில்
ஒருவர் நமக்குப் பாதுகாவலர் என்ற பெருமகிழ்வில் நாமும் பயணிப்போம், புனிதர்களாவோம்!