news-details
கவிதை
கவிதைச் சாரல்கள்

வாழ்க்கை

உன்னை

உலர்த்திக்

காய வைக்கும்

போதெல்லாம்

பிசுபிசுக்கும்

உன் உப்பு வியர்வையில்

உன்னை நீயே

ஆசுவாசப்படுத்திக் கொள்!

உன் வியர்வைச் சிறகுகளை

நனைத்துக் கழுவிட

சாரல் மழை ஒன்று

விரைவில் வருமெனும்

நம்பிக்கையோடு!

 

நாற்காலியின்

கால்கள்

நீள்தலும்

உழைப்பாளியின்

கரங்கள்

சுருங்குதலும்

நீதியின் முரண்!

 

ஆயிரம்

விளக்குகளைக்

கையில் ஏந்தி

வெளிச்சத்தில்

நிற்பதை விட

ஒரு விளக்கைக்

கையில் ஏந்தி

இருளில் நிற்பதே

மேலானது!

 

வலிகளைத்

தாங்கும்

பொறுமையே

வழிகளைக்

கண்டறிவதற்கான

திறமையே!

 

விலை கொடுத்து

வாங்கப்படும்

எதுவும்

விலை

இருக்கும் வரை

மட்டுமே

விலை போகும் !

 

நேசித்தாலும்

நெகிழ்ந்தாலும்

உடைத்தாலும்

நொறுக்கினாலும்

அடித்தாலும்

அவமானப்பட்டாலும்

கவலைப்பட்டாலும்

கலங்கினாலும்

உனக்காகக்

கடைசிவரை

துடிப்பது

உன் இதயம்

மட்டுமே!

 

விலைமதிப்பற்றவை

எல்லாம்

விலை

போகாதவைகளே!

 

கைப்பேசி

உறவுகளுக்காய்

கைக்கெட்டும்

தூரத்தில் உள்ள

உறவுகளைத்

தொலைவில்

நிறுத்திவைத்துத்

தொலைந்ததென்று

தேடுவதையே

எந்த விண்கலம் கொண்டு

ஆராய இயலும்?

 

அவமானம்

உன்னைக்

கூறு போடும்

போதெல்லாம்

பதில் இல்லா

வெகுமானப்

புன்னகையாலே

அதன் மதில்களை

நொறுக்கி விடு!

 

நினைவுகள்

கடினமானவை!

அதனால்தான்

என்னவோ

நகர்ந்துகொண்டே

இருக்கின்றன

கடினப்பட்டுக்

கடந்திட

கால்கள் இன்றி!

 

பிறந்து விட்டோம்

என்பதற்காய்ப்

பொழுதைக் கழிக்காதே!

இனி பிறக்கப் போவதில்லை

என்றே

இறுதிவரை போராடு!

சாதனைகள்

உன் பிறவிப் பயனாகட்டும்!

சரித்திரங்கள் உன் பெயர்

சொல்லட்டும்!

 

நிலவில் சந்திரயான்!

நிலுவையில் ஆதித்யன்!

நிமிர முடியாக் கடனில்

இந்தியன்!

 

பிறருக்கு

நம்பிக்கையைக் கொடுங்கள்!

அதுவே உங்களையும்

வலிமையாக்கும்!

 

தேடப்படாதவை

தொலைந்து போனதாகவே

இருக்கட்டும்

என்று துணிந்து

முன்னேறுவதே

தன்னம்பிக்கையின்

முன்னெடுப்பு!