news-details
ஆன்மிகம்
சாத்தான் மீதான மரியாவின் நிபந்தனையற்ற பகைமை (Mary’s enmity towards satan was absolute) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 21

தனது மகனின் மீட்புப் பணியில் மரியாவின் ஒத்துழைப்பானது, அவர் பாவத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவராகவும், கிறிஸ்துவின் அருளை முழுவதும் பகிர்ந்துகொள்ள கூடியவராகவும் இருக்கவேண்டுமென்பது பொருத்தமுள்ளதாகும். 

1. கிழக்கத்தியத்  திரு அவையின் (Eastern Church) கோட்பாட்டுச் சிந்தனையில் ‘அருள் நிறைந்தவர் என்பது முந்தைய மறைக்கல்வியில் கூறியதைப் போன்று, மரியாவின் வாழ்வு முழுவதும் அவர் அனுபவித்த தனித்துவமான புனிதத்தின் வெளிப்பாடே என்று ஆறாம் நூற்றாண்டு முதலே அதற்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் ஒரு புதியதொரு படைப்பைத் தொடங்கி வைக்கின்றார்.

கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பற்றிய தூய லூக்கா நற்செய்தியோடு, திரு அவையின் பாரம்பரியம் மற்றும் ஆசிரியம் போன்றவை திருவிவிலியத்தின் முதல் நூல் என்றழைக்கப்படும் தொடக்கநூலில் மரியாவின்  அமல உற்பவத்தின் உண்மைத் தன்மைக்கான திருவிவிலிய மூலத்தைக் கண்டன. ‘அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற பழைய கிரேக்க மொழி திருவிவிலியத்தை (Septuagint or Greek Old Testament) அடிப்படையாகக் கொண்டு தனது குதிங்காலினால் பாம்பை நசுக்குவதைப் போன்ற அமல உற்பவ மாதாவின் சித்தரிப்புகள் (depictions) பல உருவாக இந்தத் திருவிவிலிய வாசகம்தான் காரணமாக இருந்தது.

இதற்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பானது எபிரேய மொழியில் உள்ள திருவிவிலியத்தோடு ஒத்துப்போகவில்லையெனவும், எபிரேய திருவிவிலியத்தின் அடிப்படையில் பாம்பின் தலையை நசுக்குவது பெண்ணல்ல; மாறாக, அவளது பிள்ளை எனவும் காணமுடியும். இந்த எபிரேய ஏடு சாத்தான் மீதான வெற்றியை மரியாவுக்கு  அல்ல; மாறாக, அவரின் மகனுக்கே குறித்துக் காட்டுகின்றது. இருப்பினும், திருவிவிலியக் கருத்தானது பெற்றோருக்கும் பிள்ளைக்குமிடையேயான ஓர் ஆழமான ஒற்றுமையை ஏற்படுத்துவதால், தலையை நசுக்குவதைப் போன்ற அமல உற்பவியின் சித்தரிப்பானது, அவர் அதை அவரின் சொந்த வல்லமையினால்  அல்ல; மாறாக, அவரின் மகனுடைய அருளின் வழியாகவே செய்தார் என்பது அதன் மூலத்தோடு ஒத்துப்போகின்றது.

தீமையை எதிர்ப்பதற்கான ஆற்றல் மரியாவுக்குக் கொடுக்கப்பட்டது

2. அதே திருவிவிலிய ஏடானது ஒரு பக்கம் பெண்ணுக்கும் அவரின் வழித்தோன்றலுக்கும் இடையேயான பகைமையையும், மறுபக்கம் பாம்புக்கும் அதன் வழித்தோன்றலுக்கும் இடையேயான பகைமையையும் எடுத்துக் கூறுகின்றது. மரியாவின் சொந்தப் புனிதத்தன்மை பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொண்டால், தனிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்ற இந்தப் பகைமையானது வெளிப்படையாகவே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.  பாம்பிற்கும், அதன் வழித்தோன்றலுக்கும் இடையேயான சரிசெய்ய முடியாத பகையாளியாக இருப்பதற்காக மரியா பாவத்தின் எல்லாச் சக்திகளிலுமிருந்து விடுபட்டவராக இருக்கிறார். அதுவும் அவரின் பிறப்பிலிருந்தே அவ்வாறு இருந்தார்.

இதைப் பொறுத்தவரை, அமல உற்பவக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 1953-ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதரால் (Pius XII) வெளியிடப்பட்ட (Fulgens corona) என்ற சுற்றறிக்கை இவ்வாறு கூறுகிறது: “அவருடைய பரம்பரையின் பாவக்கறைகளினால் கருத்தரித்தலில் அவர் தீட்டாக்கப்படிருந்ததன் காரணமாக, கன்னி மரியா குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அந்தத் தெய்வீக அருளின்றி விடப்பட்டிருந்தால், எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இந்தக் காலத்திலாவது, தொடக்க காலத்திலிருந்து அமல உற்பவக் கோட்பாடு வரையறுக்கப்படும் வரை பேசப்பட்ட அவருக்கும் அந்தப் பாம்பிற்குமிடையேயான நிரந்தர பகை இருந்திருக்காது.  மாறாக, அது ஒரு வகையான அடிமைத்தனமாகவே இருந்திருக்கும் (ஒப்பிடுக. AAS 45 [1953], 579).

இவ்வாறு, பெண்ணுக்கும் சாத்தானுக்குமிடையே வைக்கப்பட்ட இந்தத் தனிப்பட்டப் பகைமையானது மரியாவின்  அமல உற்பவத்தைத் தேவையான ஒன்றாக்குகிறது. அதாவது, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே (கருவாக உருவான முதல் நொடியிலிருந்தே) பாவத்திலிருந்து முழுமையானதொரு விடுதலை தேவையானதொன்றாக இருந்தது. மரியாவின் மகன் சாத்தானை நிரந்தரமாக வெற்றி கொண்டு முன்னதாகவே மரியாவை ஆதிப் பெற்றோரின் பாவத்திலிருந்து (original sin) பாதுகாத்து, அவரின் தாயை அந்த மீட்பின் அனைத்துக் கொடைகளாலும் நிரப்பினார். அதன் விளைவாக, சாத்தானை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அவரின் மகன் அவருக்குக் கொடுத்தார். இவ்வாறு அவருடைய மீட்புப் பணியின் குறிப்பிடத்தக்க அநேகப் பலன்களை அந்த அமல உற்பவ மறைபொருளினால்  நாம் அடைகின்றோம்.

3. ‘அருள் நிறைந்தவரே என்ற சிறப்பு அடைமொழியும் விலக்கப்பட்ட நற்செய்தியும் மரியாவின் சிறப்புமிக்க புனிதத்தன்மை மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தான முழு விடுதலை இவைமீது நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது கடவுளால் மரியாவுக்கு வழங்கப்பட்ட தனித்துவமான சலுகையை, கடவுளுடனான நட்பின் கனியாகவும், அதன் விளைவாகப் பாம்பிற்கும் மனிதர்களுக்கும் இடையே ஆழமான பகைமையை ஏற்படுத்துவதாகவும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றது.

சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண் (திவெ 12:1) பற்றிப் பேசுகின்ற திருவெளிப்பாட்டு நூலின் 12-வது அதிகாரமானது, அமல உற்பவக் கோட்பாட்டிற்கான திருவிவிலியச் சான்றாக அடிக்கடி மேற்கோள்காட்டப்படுகிறது. தற்போதைய திருவிவிலிய விளக்கங்கள், இந்தப் பெண்ணில் கடவுளுடைய மக்களின் குழுமமானது உயிரோடு எழுந்த மெசியாவை வலியோடு பெற்றெடுப்பதைக் காண்பதில் உடன்படுகின்றன.

இருப்பினும், இந்தக் கூட்டு விளக்கத்தோடு அந்தக் கோட்பாட்டு ஏடானது தனிப்பட்ட ஒருவரையும் பரிந்துரைக்கின்றது: “எல்லா நாடுகளையும் இரும்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்திற்குப் பறித்துச் செல்லப்பெற்றது (திவெ 12:5). குழந்தை பிறப்பைப் பற்றிய இந்தக் குறிப்புடன், சூரியனை ஆடையாக அணிந்த பெண் மெசியாவைப் பெற்றெடுத்தப் பெண்ணான மரியாவுடன்  ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் அடையாளம் காணப்படுகிறார் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் குழுமமானது உண்மையில் இயேசுவின் தாயான அந்தப் பெண்ணின் இயல்புகளோடு விவரிக்கப்படுகிறது.

அவரின் தாய்மையோடு அடையாளப்படுத்தப்பட்ட “அந்தப் பெண் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும்துயருடன் கதறினார் (திவெ 12:2) என்ற குறிப்பானது, சிலுவையின் அடியில் நிற்கும் இயேசுவின் தாயைக் குறிக்கின்றது (ஒப்பிடுக. யோவா 19:25). இங்கு அவர் வாளினால் குத்தப்பட்ட ஆன்மாவோடு சீடர்களின் குழுமத்தைக் கட்டியெழுப்புவதற்காக அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்கின்றார் (ஒப்பிடுக. லூக் 2:35). துன்பங்களுக்கிடையிலும் “அவர் சூரியனை ஆடையாக உடுத்தியிருந்தார் - அதாவது, அவர் அந்தத் தெய்வீக சிறப்புகளைப் பிரதிபலிக்கின்றார். தம் மக்களுடனான கடவுளின் மண உறவின் ‘மிகப்பெரும் அடையாளமாக அவர் தோன்றினார். 

அமல உற்பவத்தின் சிறப்பை இவ்வகையான உருவகங்கள் நேரடியாகக் குறித்துக் காட்டாவிட்டாலும், கிறிஸ்துவின் அருள் மற்றும் தூய ஆவியாரின் சிறப்புகளோடு மரியாவைச் சூழ்ந்திருக்கும் தந்தையின் அன்பு கரிசனையின் வெளிப்பாடாகவும் இருக்கக்கூடுமென விளக்கப்படலாம்.

இறுதியாக, மரியாவின் ஆளுமையினுடைய திரு அவையியல் பரிணாமத்தை நாம் குறிப்பாக, இன்னும் அதிகமாகக் கண்டுகொள்வதற்கு இந்தத் திருவெளிப்பாட்டு நூல் நம்மை அழைக்கின்றது. சூரியனை ஆடையாக உடுத்திய அந்தப் பெண் தனிப்பட்ட அருளின் ஒழுக்கத்தினால் புனித கன்னி  மரியாவில்  உணரப்பட்ட திரு அவையின் புனிதத்துவத்தைப் பிரதிபலிக்கின்றார்.

4. திரு அவையின் பாரம்பரியம் மற்றும் ஆசிரியத்தினால் அமல உற்பவக் கோட்பாட்டிற்கான தளமாக மேற்கோள்காட்டப்படும் திருவிவிலிய உறுதிப்பாடுகள் பாவத்தின் பொதுத்தன்மையை உறுதிப்படுத்தும் திருவிவிலிய ஏடுகளை முரண்படச் செய்வதாகத் தோன்றுகிறது.

பழைய ஏற்பாடானது “பெண்ணிடமிருந்து பிறந்த...” (திப 50(51)7;யோபு 14:2) ஒவ்வொருவரிலும் பாவ மாசானது பாதிப்பு ஏற்படுத்துவதைப் பற்றிப் பேசுகின்றது. புதிய ஏற்பாட்டில், ஆதாமினுடைய பாவத்தின் விளைவாக “எல்லா மனிதர்களும் பாவம் செய்தார்கள் என்று தூய பவுல் கூறுகின்றார். மேலும், “ஒரு மனிதனுடைய பாவமானது எல்லா மனிதர்களையும் பாவத்திற்கு இட்டுச் சென்றது (உரோ 5:12;18) என்றும் கூறுகின்றார். ஆகவே, மறைக்கல்வி ஏடு கூறுகின்றவாறு ஆதிப் பாவமானது ‘வீழ்ச்சியுற்ற நிலையில் நாம் காண்கின்றவாறு ‘மனித இயல்பைப் பாதித்தது.’ ஆகையினால் தொடக்கத்தில் இருந்த புனிதத்துவம் மற்றும் நீதி நிலையிலிருந்து கைவிடப்பட்டதொரு மனித இயல்பைக் கடத்துவதினால் அதாவது, மனுக்குலம் அனைத்திற்கும் பரப்புவதனால் பாவமானதும் அனைவருக்கும் கடத்தப்படுகின்றது (Catechism of the Catholic Church, எண் 404). 

எவ்வாறாயினும், தூய பவுலடியார் இந்த உலகளாவியச் சட்டத்திற்கு ஒரு விதிவிலக்கைத் தருகின்றார். அதாவது, கிறிஸ்து ‘பாவம் அறியாதவராயிருந்தும் (2 கொரி 5:21), “பாவம் பெருகிய இடத்தில் (உரோ 5:20) அவரால் அருளைப் பொங்கிவழியச் செய்ய முடிந்தது என்று கூறுகின்றார்.

புனித எரோணிமுஸ் மரியாவைப்  புதிய ஏவாளாகக் காட்டுகின்றார்

இந்தக் கூற்றுகள் மரியா பாவம் நிறைந்த மனிதகுலத்தோடு தொடர்புடையவராக இருந்தார்  என்றதொரு முடிவிற்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டிய அவசியமில்லை. தூய பவுல் அடியாரால் நிலைநிறுத்தப்பட்ட ஆதாம் மற்றும் கிறிஸ்துவுக்கு இடையேயான ஒப்புமையானது ஏவாள் மற்றும் மரியாவுக்கிடையேயான ஒப்புமையோடு நிறைவு பெறுகின்றது. பாவத்தினுடைய நாடகத்தில் பெண்ணின் பங்கானது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு மனுக்குல மீட்பிலும் முக்கியமானதாகும்.

புனித எரோணிமுஸ் மரியாவை அவரின் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் ஏவாளுடைய அவநம்பிக்கை மற்றும் கீழ்ப்படியாமையை ஈடு செய்ய வந்த புதிய ஏவாளாகக் காட்டுகின்றார். மீட்புத் திட்டத்தினை நிறைவேற்றும் இப்பணிக்குப் பாவமற்ற நிலையானது தேவைப்படுகிறது. எவ்வாறு புதிய ஆதாமாகிய கிறிஸ்து, பாவம் அறியாதவராக இருந்தாரோ, அதேபோல புதிய ஏவாளாகிய மரியாவும் பாவத்தை அறியாதவராக இருந்தார் மற்றும் இவ்வாறு மீட்புப் பணியில் ஒத்துழைப்பதற்கான தகுதியையும் பெறுகின்றார்.

வெள்ளப்பெருக்கைப்போல மனுக்குலத்தை அழித்தொழிக்கும் பாவமானது, மீட்பர் மற்றும் அவரது உண்மையுள்ள ஒத்துழைப்பாளரான மரியா முன் நிறுத்தப்படுகிறது. கணிசமான வித்தியாசத்துடன், தெய்வீகமானவரிடமிருந்து பெறப்பட்ட அவருடைய மனித இயல்பால் கிறிஸ்து அருளின நற்பண்புகளால் எல்லாவற்றிலும் புனிதமானவராக இருக்கின்றார். அருளினால் பெறப்பட்ட மீட்பரின் நற்பண்புகளால் மரியா எல்லாவற்றிலும் புனிதமானவராகவே என்றென்றும் இருக்கின்றார்.

மனிதகுலத்தை மூழ்கடிக்கும் ஒரு பெருவெள்ளம்போல பாவம், மீட்பர் மற்றும் அவரது உண்மையுள்ள ஒத்துழைப்பாளரின் முன் நிற்கிறது. ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் கிறிஸ்து தமது மனிதத்தன்மையில் தெய்வீக நபரிடமிருந்து பெறப்பட்ட அருளின் மூலம் முற்றிலும் புனிதமானவராக இருக்கின்றார்; மீட்பரின் நற்பண்புகள் மூலம் பெறப்பட்ட அருளினால் மரியா முற்றிலும் தூய்மையுள்ளவராக இருக்கின்றார்.

மூலம்: John Paul II, Mary’s enmity towards satan was absolute, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 5 June 1996, p. 11.