தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பார்த்து வியந்து உள்ளேன். சில அரசியல் தலைவர்கள் தம் தொகுதியில் நடக்கும் குழந்தையருக்குப் பெயர் வைத்தல், காதுகுத்து, கல்யாணம் என அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர். அவர்களுக்குக் கட்சி வேறுபாடு கிடையாது. இறப்பு வீடுகளில் கண்ணீர் விட்டு அழுததையும் பார்த்திருக்கிறேன்.
அவர்களின்
ஒரே நோக்கம் அடுத்தத் தேர்தலில் அவ்வீட்டு
ஓட்டு தமக்கு என்பதாகும். இதை ‘பிண அரசியல்’ என்று கூறுவதே சரியானதாகும்.
செப்டம்பர்
27, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். அடுத்த நாள் (செப். 28) கரூர் சென்ற தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு மற்றும்
த.வெ.க. கட்சிமீது
குற்றம் சுமத்தி சமநிலையில் பேசினார். அவர் அதில் மூச்சுக்கு முண்ணூறு முறை தான் தொலைக்காட்சியில் பார்த்துப் பேசுவதாகக் கூறினார். அவர் முதலமைச்சராக இருந்தபோதே தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் அறிந்த அறிவாளி
என மக்கள் ஏளனம் செய்தனர்.
செப்டம்பர்
30, நடிகை ஹேமமாலினி தலைமையிலான எட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கரூர் வருகிறது. மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த மேதைகள் குழு ‘நடிகருக்குப் பிரச்சாரம் செய்ய கொடுத்த இடம் குறுகலானது; முழு தவறும் தமிழ்நாடு அரசுமீதே உள்ளது’ எனக் கண்டறிந்தது. அக்குழுவினர் பேசிய ஒருமணி நேரத்திற்குள், “நான் வீட்டில்தான் இருக்கிறேன்; முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்”
என நடிகரிடமிருந்து வீடியோ பதிவு வருகிறது.
கூடவே தனக்கு இந்தத் துயரநேரத்தில் ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் நடிகர் தெரிவிக்கிறார்.
41 பேர்
இறந்த இழவு வீட்டில், பா.ச.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி
என்ற துண்டைப் போடுகிறார்கள். இதைத்தான் ‘பிண அரசியல்’ என்று கூறுகிறோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நடிகரின்
கட்சியை விட்டுவிட்டு,
தமிழ்நாடு அரசுதான் கரூர் சம்பவத்திற்குக் காரணம் என மறுநாள் முதல்
உரக்கப்பேசுகிறார். த.வெ.க.
சட்ட சபையில் இருந்தால் கூட இவ்வளவு பதற்றப்பட்டிருக்காது; அவ்வளவு பதற்றமும் கோபமும் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அக்டோபர்
9, ‘புரட்சித் தமிழரின்’
எழுச்சிப் பயணம்
திருச்செங்கோடு குமாரபாளையத்தில் நடக்கிறது. அக்கூட்டத்தில் த.வெ.க.
கொடி பறக்கிறது. வாயெல்லாம் பல்லாக, முகம் மலர்ந்து, பெரும் மகிழ்வாய், “நமக்குக் கூட்டணிக்கு சமிச்ஞை கிடைத்தாயிற்று” என எடப்பாடி திருவாய்
மலர்கிறார். இவரைவிட ஒருபடி மேலே சென்ற பா.ச.க.
கட்சியின் தேசிய மகளிர் பிரிவு தலைவர் வானதி சீனிவாசன், “எங்கள் கட்சியுடன் ஸ்ட்ராங்கான கட்சி கூட்டணிக்கு வரப்போகிறது” என
முகம் மலர்ந்தார். இவர்களுக்கு ஒருபடி மேலே சென்ற எந்தப் பதவிகளும் இல்லாத தமிழிசை சௌந்தரராஜன், ‘நானும் உள்ளேன்’ பாணியில் “கூட்டணிக்குப் பொதுவெளியில் அழைப்பு விடுவதில் தவறு ஒன்றுமில்லை” என்றார்.
அடுத்து
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரிடம் பேசி துணை முதல்வர் பதவிக்கு நடிகரைச் சமாதானம் செய்ததாகத் தகவல் பரவுகிறது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் பற்றிப் பேசலாம் என அமித்ஷா கூறியதாகவும்
கூறப்பட்டது. இதைவிட காங்கிரஸ் கட்சியின் மறுபக்கமும் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. நடிகர் தன் வருமான வரி பிரச்சினை மற்றும் ஜெயலலிதா நெருக்கடிகளால் முன்பே காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஆறுதல் பெற்றிருக்கிறார்.
கரூர்
சம்பவங்கள் குறித்து முதல்வரிடம் பேசிய இராகுல் காந்தி அவரிடம் ‘நான் நடிகரிடமும் பேசுகிறேன்’ எனக்
கூறினார். நடிகரிடம் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு, “தைரியமாக இருங்கள்”
என நடிகரைத் தேற்றுகிறார். இதனிடையே பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுசாமியின் பேச்சுகள், தி.மு.க.-
காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்துகிறது. கரூர் சம்பவங்களுக்குப் பிறகு நடிகருக்கு ‘மாஸ்’ கூடி விட்டதாக எண்ணிய காங்கிரஸ், “சாறு உங்களுக்கு, சக்கை எங்களுக்கா?” என மேனாள் காங்கிரஸ்
தலைவர் அழகிரி மூலம் ஆட்டம் காட்டினர். எப்பொழுதும் தி.மு.க.வைத் திட்டும் மாணிக் தாகூர், கார்த்திக் சிதம்பரம் போன்றோரும் அதிகம் பேசினர். இராகுல் காந்தி நடிகரிடம் பேசி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு நடிகர்
கட்சி கூட்டணி என்ற தகவல் பரவியது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் காங்கிரஸ் பங்கு பெற்றுவிடும் எனப் பகல் கனவு கண்டனர்.
41 பேர்
மரணமடைந்தும், 100 பேர் படுகாயமடைந்தும் நடிகருக்கு மக்கள் செல்வாக்கு கூடுகிறது எனத் தவறுதலாக அனுமானிக்கப்பட்டுப் பிண அரசியல் நடக்கிறது. கூட்டணி குறித்த பொய்கள் பரப்பப்படுகின்றன. 40 நாள்கள் மௌனம் காத்த நடிகர், மகாபலிபுரத்தில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடத்தி, கூட்டணி குறித்து முடிவுகளைத் தானே வைத்துக்கொள்கிறார். பிண அரசியலின் பலனைப் பிறருக்கு விடுவாரா? என்ன?
நவம்பர்
5-இல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய த.வெ.க.
இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார்
தெளிவாக, “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என எடப்பாடியின் கனவைப்
போட்டு உடைத்தார். எடப்பாடி முட்டுச்சந்தில் நிற்கிறார். இருந்தாலும், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல, “என்றும் நாங்கள் த.வெ.க.வுடன் கூட்டணி பேசவில்லை”
என்றார். ஆனால், நடிகர் கட்சித் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர், “நாங்கள் 40 சீட்டுகளுக்காகக் கட்சி ஆரம்பிக்கவில்லை” என்றார்.
மேலும் ஆதவ், “அ.தி.மு.க. தொண்டர்கள் த.வெ.க.வுக்கு
வந்துவிட்டதால் எங்களுக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி
என்ற பேச்சே எழவில்லை”
என்றார். இதற்குப் பதிலடியாக அ.தி.மு.க.வின் திண்டுக்கல்
சீனிவாசன் ஆயிரமாயிரம் கோடிகளில் பணம் கேட்டுப் புதிதாக ஆரம்பித்த கட்சி பேரம்பேசியது என்று போட்டு உடைத்தார்.
எது
எதுவாயினும், தேர்தல் வேட்பாளர் மனுத்தாக்கல் திரும்பப் பெறும் நாள்வரை கூட்டணிகள், அதற்கான பேரங்கள் பேசப்படலாம். 41 பேர் மரணத்திற்கு இன்றுவரை தார்மீகப் பொறுப்பு ஏற்காத பிண அரசியல் நடத்தும் புதிய கட்சியுடன், பிற கட்சிகளுக்கு ஏன் இந்தக் கூட்டணி மோகம் என்றால், பதவி ஆசை வெட்கம் அறியாது என்பதே பதிலாகும். புதிய கட்சியின் நடிகர் தமிழ்நாடு சிறுபான்மை மக்களின் வாக்குகளை ‘இந்தியா’ கூட்டணிக்கு விழுவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு என்றால், நாம் அவரை அடையாளம் காண்போம். நமது வாக்கு ஒன்றிணைந்த வலிமையை மீண்டும் நிரூபிப்போம். பிண அரசியலை வீட்டிற்குள்ளேயே
வைத்திருப்போம்.