news-details
ஆன்மிகம்
“நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்!” - (திவெ 3:9) திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் திருத்தூது ஊக்க உரை “Dilexi Te”

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசு நம்மீது அன்புகூர்ந்தார் (Dilexit Nos) என்ற தனது 4-வது சுற்றுமடலை 2024-இல் வெளியிட்டார். அதில் இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பை மிக அருமையாக எடுத்துக்காட்டுகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்கு சுற்றுமடல்கள்

1. Lumen Fidei – The Light of Faith’ -  ‘நம்பிக்கையின் ஒளி - திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களோடு இணைந்து 2013-இல் வெளியிட்ட சுற்றுமடல்.

2. ‘Laudato Si’- ‘நம் பொது இல்லமாகிய பூமியைப் பாதுகாத்தல், 2015.

3. ‘Fratelli Tutti’ - ‘அனைவரும் உடன்பிறந்தோர், 2020.

4. Dilexit Nos’ - ‘அவர் நம்மை அன்பு செய்தார்.’ இயேசுவின் திரு இருதய இறை-மனித அன்பு, 2024.

தொடர்ந்து திரு அவை ஏழை எளியவர்மீது கொள்ளவேண்டிய அன்பு, அக்கறை என்ற ஊக்க உரையை தன் வாழ்வின் இறுதிநாள்களில் எழுதத் தொடங்கினார். கிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமும் நேரடியாகப் பேசுவதுபோல - “நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன் (திவெ 3:9) என்ற தலைப்பை, தான் எழுதத் தொடங்கிய ஊக்க உரைக்குக் கொடுத்தார். இதை எழுதி நிறைவு செய்வதற்குமுன் இறைவன் அவரைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். அவர் எழுதத் தொடங்கிய உரையோடு எனது சில சிந்தனைகளையும் சேர்த்துக்கொள்கிறேன். எனது ஆட்சியின் தொடக்கத்தில் புனித பிரான்சிஸ்கு அசிசியாரின் நினைவு நாளாகிய 04.10.2025-இல் இதில் கையொப்பமிட்டு, 9-ஆம் தேதி ‘Dilexi Te’ -  ‘நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன் (திவெ 3:9) என்ற என் திருத்தூது ஊக்க உரையாக வெளியிடுகிறேன்என்கிறார் திருத்தந்தை லியோ அவர்கள்.

எல்லாக் கிறித்தவர்களும் கிறிஸ்துவின் அன்பையும், அதோடு மிக நெருங்கிய தொடர்புடைய கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க இயலாத திரு அவை, ஏழைகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும் இந்தத் திருத்தூது ஊக்க உரையின் மையக்கருத்தாகும். இதை நான் ஐந்து தலைப்புகளில் விரித்துரைக்கிறேன். அவை முறையே:

1. ஒருசில முகாமையான வார்த்தைகள் -A Few Essential Words.

2. கடவுள் ஏழைகளைத் தேர்ந்தெடுக்கிறார் - God Chooses the Poor.

3. ஏழைகளுக்கான திரு அவை - A Church for the Poor.

4. தொடரும் வரலாறு - A History that Continues.

5. நிரந்தர சவால் - Constant Challenge

நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்’ (Dilexi Te)

முகாமையான சில வார்த்தை கள் - A Few Essential Words.

முதல் அதிகாரம் பெண் ஒருவர் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை ஊற்றுவதோடு தொடங்குகிறது (மத் 26:6-13). சில சீடர்கள் இதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே எனக் கோபமடைந்தனர்ஆனால், அப்பெண் இயேசுவில் துன்புறும் மெசியாவைக் காண்கிறார். இன்னும் சில நாள்களில் இத்தலையில் முள்முடி வைத்து அழுத்தப்படும். எனவே, இப்பெண் இப்போதே இயேசுமீது தனது முழு அன்பையும் பொழிகிறார். இச்செயல் இயேசுவுக்கு அதிக ஆறுதல் அளித்திருக்க வேண்டும்.

ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்; ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. என்னுடைய அடக்கத்திற்கு இப்பெண் என்னை ஆயத்தம் செய்திருக்கிறார்என்றார் இயேசு. மேலும், “உலகில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார்என்றார். இதனால் ஏழைகளுக்கு துன்பத்தில், பிரச்சினைகளில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் மிகச்சிறிய அன்புச் செயலும் மறக்கப்படாது; மாறாக, நினைவுகூரப்படும். இத்தனைக்கும் இப்பெண் ஊர் பேர் தெரியாத ஒருவர்.

ஆண்டவரை அன்பு செய்வதென்பது ஏழைகளை அன்பு செய்வதாகும். “சின்னஞ் சிறியோருக்குச் செய்தது, எனக்குச் செய்தது...” (மத் 25:40) என மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகக் கூறுகிறார் ஆண்டவர்.

சின்னஞ்சிறியோருக்குச் செய்வது வரலாற்று இயேசுவைச் சந்திப்பதற்கு மிக அடிப்படையான வழி என இயேசு இங்கே வெளிப்படுத்துகிறார். ஏழைகள் வழியாக இன்று கிறிஸ்து நம்மிடம் பேசுகிறார்.

கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் அருகில் பிரேசில் நாட்டு கர்தினால் கிளாடியோ ஹமூமஸ் இருந்தார். அவர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோவை அரவணைத்துக் கொண்டு, “ஏழைகளை மறந்துவிடாதீர்கள்என்றார். உடனே புனித பிரான்சிஸ் அசிசியார் இவரது நினைவுக்கு வந்தார். அவருடைய பெயரையே திருத்தந்தை எடுத்துக்கொண்டார். இந்தப் பெயரை இதற்கு முன் எந்தத் திருத்தந்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. புனித பிரான்சிஸ் அசிசி என்ற பெயர் ஏழைகளின் அடையாளம், குறியீடு. ஏழைத் தொழுநோயாளியில் கிறிஸ்துவைச் சந்தித்த நிகழ்வுதானே அசிசியாரின் வாழ்வையே மாற்றியது!

புனித பவுல் எருசலேமுக்குச் சென்றபோது அங்குள்ள மூப்பர்களை, “ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டார். “அதைச் செய்வதிலே நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன் (கலா 2:10) என்றார் பவுல்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருத்தந்தை புனித 6-ஆம் பவுலும் திரு அவை பின்பற்ற வேண்டிய ஆன்மிகத்திற்கு, நல்ல சமாரியர் அடிபட்டுக் கிடந்தவருக்கு உதவிய உவமையை நம் கண்முன் வைக்கின்றனர்.

ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவுவது என்பது திரு அவையையும், நாம் வாழும் சமுதாயத்தையும் புதுப்பிக்கும்; சுயநலத்திலிருந்து நம்மை விடுவிக்கும்; ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்க உதவும்.

இவ்வாறே பழைய ஏற்பாட்டில் யாவே கடவுள் எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த ஏழை இஸ்ரயேலரின் கூக்குரலைக் கேட்டு, மோசே வழியாக அவர்களை விடுவித்தார் (விப 3:7-12).

ஏழைகளின் குரலைக் கேட்கும்போது, நாம் இறைவனின் இதயத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுகிறோம். எப்போதும் இறைவன் ஏழைகள், துன்பப்படுவோர், தேவையில் இருப்பவர்கள் குறித்து மிகுந்த அக்கறை கொள்கிறார். ஏழைகளின் குரலை நாம் கேட்கவில்லையெனில், அவர்கள் ஆண்டவரை நோக்கி நமக்கு எதிராக முறையிடுவர். அது நம்மைக் குற்றத்திற்கு உள்ளாக்கும் (இச 15:9).

பலவகையான ஏழ்மைகள் உள்ளன. அடிப்படைத் தேவையின்றி உழலும் ஏழ்மை, சமுதாயத்தால் ஒதுக்கப்படும் ஏழ்மை, தங்களுடைய மனித மாண்புக்கும் சுதந்திரத்திற்கும் குரலெழுப்ப முடியாத ஏழ்மை, மின்சாரம் இன்றி வாழும் ஏழ்மை (இது ஏழ்மையாகக் கருதப்படுவதில்லை). இத்தகைய ஏழ்மைகள் செய்தித்தாள்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

பெண்கள் இரண்டு மடங்கு ஏழைகளாக்கப்படுகின்றனர். இவர்களைத் தந்தை வழி ஆணாதிக்கச் சமுதாயம் ஒதுக்குகிறது. இவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளை நிலைநாட்ட இயலாதவர்களாக ஆக்கப்படுகின்றனர். இப்படியெல்லாம் இருந்தும் பெண்கள்தான் குடும்பப் பாரத்தைச் சுமந்து நிற்கின்றனர்.

கருத்தியல் முற்சார்புகள், ஏழ்மை என்பது முன்போல் இல்லை, பொருளாதாரத்தில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்கிறது. இது ஒருவகையில் உண்மைதான். ஆனால், இன்று வறுமையும் ஏழ்மையும் மிக அதிகமாகவே கூடியிருக்கின்றன. ஒருங்கிணைந்த முழு மனித வளர்ச்சி இல்லை. உண்மையான எதார்த்தம் நம் கண்களைக் குருடாக்குகிறது.

ஏழைகள்மட்டிலான இரக்கச் செயல்பாடுகளுக்கு நம்மில் ஒருமனநிலை மாற்றம்வேண்டும்.