உரோமை, அவென்டைன் மலையில் உள்ள தூய அன்செல்மோ ஆலய அர்ப்பணிப்பின் 125-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பெனடிக்டைன் அருள்பணியாளர்கள் மத்தியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை லியோ, “கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாகக்கொண்டு, இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். “சமூகத்தில் நாம் காணும் திடீர் மாற்றங்கள் நம்மைத் தூண்டிவிடுவது மட்டுமின்றி, கேள்வி எழுப்பவும் செய்கிறது” எனக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கு முன்பு நாம் சந்திக்காத பிரச்சினைகளைத் தற்போது சந்தித்து வருகிறோம் எனவும் கூறினார். இத்தகைய சூழலில், “கிறிஸ்துவை நமது இருப்பு மற்றும் நமது பணியின் மையத்தில் வைப்பதன் மூலமாக மட்டுமே, நமது அழைப்புப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்” எனவும் அவர் நினைவூட்டினார்.