news-details
சிறப்புக்கட்டுரை
விளிம்பு நிலை மக்களின் விடுதலையில் விடியும் இறையாட்சி (தலித் விடுதலை ஞாயிறு)

ஒடுக்கப்பட்ட யூத மக்களின் துயர் கண்டு இறங்கி வந்து விடுதலை அளித்த இறைவன், விடுதலைப் பயண நூலில் (3:7-10) தம்மை ஒடுக்கப்பட்டோரின் கடவுள் என வெளிப்படுத்துகிறார். மீட்பின் வரலாற்றில் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கு விலங்கொடித்து விடுதலை அளித்துக்கொண்டே இருக்கிறார். உலகில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் விடுதலை அடைந்து கொண்டுள்ளன.

இந்தியாவில் தலித் கிறித்தவர் மூன்று நிலைகளிலும் ஒடுக்கப்படுகின்றனர். இந்துவாக இருந்தபோது சாதியத் தீண்டாமையினாலும், கிறித்தவச் சமூகத்திற்குள் காட்டப்படும் வேறுபாடுகளினாலும் பாதிப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசினாலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இறையாட்சியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சமத்துவம், நீதி நிறைந்த சமுதாயம் அமைக்க தலித் மக்கள் விடுதலை பெற வேண்டும். தலித் மக்களின் விடுதலையில்தான் இறையாட்சி விடியும்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்

இந்தியச்  சமூகம் சாதிய அமைப்பின்மீது கட்டப்பட்ட சமூகம். இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. இந்திய வரலாற்றில் வர்ணத்திலிருந்து வளர்ந்த சாதியம் கி.மு. 1500-ஆம் ஆண்டிற்குப்பின் ஆரியர்களால் புகுத்தப்பட்டது. அவர்கள் தலைமையைத் தக்க வைக்க இந்தப் பொய்யான படிநிலை சாதியமைப்புக் கடவுளின் படைப்பு என்று கூறப்பட்டது. வேத நூல்கள் அதைப் புனிதம் ஆக்கியது. சாதி அமைப்பைத்தர்மம்என்று ரிக் வேதம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது (X90.12). இந்த நான்கு வர்ண (Chatur Varba) அமைப்புகளுக்குள்ளும் வராத மக்களைச்சாதிக்குப் புறம்பானவர்கள்என்று தள்ளிவைத்தனர். மனுதர்மச் சட்டம் மண்ணின் மைந்தர்களை அடிமைகள் (தாசர்கள்), பஞ்சமர்கள் (ஐந்தாவது பிரிவினர்), சாதிக்குப் புறம்பானவர்கள், சண்டாளர்கள் என்று பெயரிட்டது. மண்ணின் மைந்தர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர்.

உரிமைகள் மறுக்கப்படுவோர்

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவதற்கு உரிமைகள் அளிக்கப்பட்டன. இந்திய அமைப்புச் சட்டம் 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் ஒதுக்கீட்டையும் அரசு அளித்தது. அரசியல் சாசனப் பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புச் சட்டங்களை அரசு உருவாக்குவது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் உரிமைகளைப் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி மக்களுக்குச் சமூகநீதி அடிப்படையில் அரசு அளிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளில் ஒதுக்கீட்டு உரிமையும் சட்டப் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.

பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் மதம் மாறிய பட்டியலினக் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அமைப்புகள் தலித் சம உரிமைக்காகப் போராடி வருகின்றன. இது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டமாகவும் எதிரொலித்து வருகின்றன.

திரு அவையின் தலித் விடுதலைத் திட்டங்கள்

தமிழ்நாடு தலித் கத்தோலிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, தமிழ்நாடு ஆயர் பேரவை 1990-ஆம் ஆண்டு 10 அம்ச செயல்திட்டத்தினை அறிக்கையிட்டது. அதனைத் தொடர்ந்து 2004-இல் தலித் கத்தோலிக்கக் கிறித்தவர்களை அதிகாரப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான எட்டு அம்சத்திட்டம் ஒன்றை அறிவித்தது. ஆனால், முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பட்டியலின கத்தோலிக்கரின் அதிகாரப்படுத்தலுக்கான கொள்கை வரைவை 2016, டிசம்பர் 26-இல் பிரகடனம் செய்தது. இதில் 12 தலைப்புகளில் 56 செயல்திட்டங்களைக் கத்தோலிக்கத் திரு அவையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, திட்டங்களைச் செயல்படுத்தி, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டது. இதன் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பு நிறைந்த இறையாட்சிச் சமூகத்தை இம்மண்ணில் மலரச் செய்வது ஆகும். எட்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இத்திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. ஆகவே கீழ்க்காணும் தலித் கொள்கை வரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும்.

1. தீண்டாமை, சாதிப் பாகுபாடுகளை ஒழித்து, சமத்துவச் சமுதாயம் உருவாக்குதல்.

2. அரசியல்தளத்தில் சம உரிமை பெற மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயல்படுதல்.

3. பங்கேற்பு அமைப்புகளில் ஆளுமையோடு பங்கேற்று தலைமையேற்கச் செய்தல்.

4. பொதுநிகழ்வுகளில் தலித் கலை, பண்பாட்டுக் கூறுகளை இடம்பெறச் செய்தல்.

5. உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கல்வி அளிக்க வேண்டும்.

6. இளைஞர்கள் நுண்திறன்கள், ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு நல்ல தலைவர்களாக உருவாகச் செய்தல்.

7. அனைத்து நிலைகளிலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல்.

8. பெண்கள் சமப் பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமையேற்க வழிசெய்தல்.

9. திரு அவை, சமூகம், அரசியல் தளங்களில் தலைமையேற்கத் தொடர் பயிற்சித் திட்டங்கள்.

10. ஒடுக்கப்பட்டோருக்கு உரிமையளிக்கும் வலுவுள்ள மக்கள் அமைப்புகளை அமைத்தல்.

11. குறைதீர்ப்பு மையம்.

12. கண்காணிப்புக்குழு.

தலித் விடுதலைக்கு அரசு உரிமைகள்

1921-ஆம் ஆண்டிலிருந்து வகுப்புவாரி ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில்இந்தியக் கிறித்தவர்என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணை 3-வது பத்தி நீக்கப்பட்டு, சமூக நீதி தலித் கிறித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 74 ஆண்டுகளாகப் பேரணி, மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய-மாநிலத் தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதிப் பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு மே, 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில் சேர்க்கப் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள (WP 180/2004) விசாரணைக்குப் பா... அரசு உடனே பதில் தர வேண்டும். நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்கவேண்டும்.

திரு அவையில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, சம உரிமைகளையும் அரசின் பட்டியலின உரிமைகளையும் தலித் கிறித்தவர் பெறுவதற்கு அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள தலித் கிறித்தவ மக்களுக்கு விடுதலை அளிப்பதே யூபிலி ஆண்டின் சிந்தனையாக அமையவேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்க் கிறித்தவர் விடுதலை அடைந்து, அதிகாரப்படுத்தப்பட்டால் இறையாட்சி விடியல் உண்டாகும்.