தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவரின் கிறிஸ்துமஸ் செய்தி
நமது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களினாலும், பளிச்சிடும் அலங்காரங்களாலும், விற்பனை சார்ந்த நுகர்வுகளாலும் தனது அடிப்படைத்தன்மையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் இக்காலத்தில், திருத்தந்தை லியோ அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருத்தூதருக்குரிய ஊக்கவுரையான ‘திலெக்சிட் தே’ கிறிஸ்து பிறப்புத் திருநாளின் அர்த்தத்தைத் தெளிவூட்டுகிறது.
கிறிஸ்துமஸ்
என்பது வசதியாக வாழ்பவர்களுக்கான அமைதியான இரவு அல்ல; அது ஒரு தீவனத்தொட்டியிலிருந்து முழங்கும் புரட்சிகர அறிவிப்பு. ஏழைகள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் துன்புறுத்தப்படுபவர்கள்மீது
கடவுள் கொண்ட அற்புதமான அன்பின் சாட்சியம். கொண்டாட்டத்திலிருந்து ஒன்றிப்பிற்கும், வழிபாட்டிலிருந்து சாட்சியத்திற்கும் நம்மை அழைக்கும் அழைப்பாக அது விளங்குகிறது. முதலில், இச்செய்தி நமக்கு நினைவூட்டுவது, கிறிஸ்துமஸ் நிகழ்வின் மையத்தில் இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுத்ததன் சிறப்பினைக் கொண்டாடுவது. அதிகாரமும் பெருமையும் கொண்ட சத்தத்தால் நிரம்பிய உலகில், எல்லாம் வல்லவரான இறைவன் தமது வருகையைப் பிலாத்துவின் அரண்மனையிலும், எருசலேம் கோவிலின் முற்றங்களிலும் அறிவிக்கவில்லை; மாறாக, மனித வடிவத்தை ஏற்று, தம்மைத் தாழ்த்திக்கொண்டு, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் ஒரு குழந்தையின் எளிய நிலையையே அவர் தேர்ந்தெடுத்தார் (பிலி 2:7). ‘திலெக்சிட் தே’ இந்த அதிசய உண்மையைத் திடமாக உறுதிப்படுத்தி, “ஏழைகளின்மீது கூர்ந்த கருணை காட்டப்படுவதிலேயே தேவனின் இரக்கமிக்க அன்பு வெளிப்படுகிறது” என்று
கூறுகிறது.
மேலும்,
ஏழைகள் நம்முடைய இரக்கப்பணியைப் பெறுபவர்கள் மட்டுமல்லர்; அவர்கள் இறைவார்த்தையைத் தாங்குபவர்களும் ஆவர் என்பதை ‘திலெக்சிட் தே’ வலியுறுத்துகிறது. இந்த ஆவணம் அவர்களை ‘நற்செய்தி அறிவிக்கும் ஆசிரியர்கள்’ (எண்
79) என அழைக்கிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை அவர்கள் தங்கள் பண்பாட்டை வடிவமைக்கத் தகுதியான உள்ளடக்கமானவர்கள் என நாம் அறிந்துகொள்ளவேண்டும்
(எண் 100). துன்பங்களில் வழிநடத்தப்பட்ட அவர்களின் அனுபவங்கள் ‘மற்றவர்கள் காணாத மேலான ஞானத்தை’ அவர்களுக்கு அளிக்கிறது (எண் 102). இந்த அன்றாட உறுதிமொழியும், கடினச் சூழ்நிலைகளில் இறைவனைத் தேடும் நிலையும், அவர்களின் பற்றும் அவர்களை உண்மையான ‘நற்செய்தி பரப்புபவர்கள்’ ஆக்குகிறது.
பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளத்துடன் வந்த ஞானிகள், திருக்குடும்பத்தின் வறுமையிலே தமது உண்மையான செல்வத்தைக் கண்டதுபோல, ஆலயத் தொன்மையான போதனைகள் கூறுவதைப் போலவே ஏழைகளிடம் சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டியவை இருப்பதை உணர்கிறோம். முழுமையாக மனிதப் பிரிவினை சார்ந்திருந்த குழந்தை இயேசுவே இந்த முதல் ஆசிரியர். பலவீனத்தில் இறைவனின் வல்லமை வெளிப்படுவதை வெளிப்படுத்துபவர். பெத்லகேம் காட்சியே நமது மனத்தை அசைக்கிறது; அதிகாரத்திற்கு முன் அல்ல; அன்பால் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமையின் ஞானத்திற்கு முன் நம்மைத் தாழ்த்த அழைக்கிறது.
கிறிஸ்துமஸ்
காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய அன்புச்செயலும் தீவனத்தொட்டியின் முன் வைக்கப்பட்ட காணிக்கைகளின் தொடர்ச்சியே. ஆகவே, நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடிவாக அல்ல; ஆரம்பமாகக் காணும்படி இந்த மடல் நம்மை அழைக்கிறது. இறைவன் மனிதரான மறையுண்மையை, ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பின் மூலம் எதிரொலிக்குமாறு உற்சாகப்படுத்துகிறது. இந்தக் கிறிஸ்துமஸில் ‘திலெக்சிட் தே’ தீவனத்தொட்டியை நமது கைகளில் ஒப்படைக்கிறது. அது ஓர் அலங்காரம் அல்ல; நம்பிக்கையின் மாறாத அளவுகோல். இங்கே நாம் வசதியானோருக்கான தாலாட்டுகள் கேட்பது இல்லை; ஏழைகளுடன் நிற்க வேண்டிய இறைவனின் முழக்கத்தையே கேட்கிறோம். இந்த எளிய மாட்டுத்தொழுவத்தில் சமுதாயத்திற்கு இறைவார்த்தையைக் கற்பிக்கும் தகுதியைப் பெற்றவர்களையும், அதனை உலகனைத்திற்கும் பரப்புபவர்களையும் கண்டடைகிறோம். இங்கு கிறிஸ்துமஸ் ஒரு செயற்பாட்டு வினையாகிறது. உலகில் இயங்கும் கிறிஸ்துவைக் காண அழைக்கிறது. நம் கிறிஸ்துமஸ் கீதங்களில் பாடப்படும் அன்பு, ஆடையின்றி இருப்போரை உடுத்துவிக்கவும், பசித்திருப்போருக்கு உணவு கொடுக்கவும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கவும் வேண்டும்; ஏனெனில், அவர்களிலே ஒரு காலத்தில் வீடற்றிருந்த குழந்தையாகிய கிறிஸ்துவையே நாம் வரவேற்கிறோம் என்பதை உலகிற்கு மெல்ல உரைக்கிறது ‘திலெக்சிட் தே.’
அனைவருக்கும்
ஆசிர் நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துகளையும், அருள் மிகுந்த 2026-ஆம் ஆண்டின் இறையாசிரையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.