‘இறைவனின் ஊழியர்’ என்று தன்னையே அறிவிப்பதன் வழியாக, புனித கன்னி மரியா இறைவனின் விருப்பத்திற்கான தனது முழு கீழ்ப்படிதலைக் காட்டுகிறார். மேலும், அவரது எல்லாத் தனிப்பட்ட பண்புகளுடனும் அதைத் தனதாக்கிக் கொள்கின்றார்.
1.
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது கூறப்பட்ட “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற கன்னி மரியாவின்
வார்த்தைகள், யூத மத பக்தியின் பண்பைக் குறிக்கின்றது. பழைய உடன்படிக்கையின் தொடக்கத்தில்,
இறைவனின் அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக மோயிசன் தன்னைத் தானே ஊழியனாக அறிவித்துக்கொள்கின்றார்
(ஒப்பிடுக. விப 4:10-14,31). புதிய உடன்படிக்கையின் வருகையுடன் மரியாவும் இறைவனுடைய
ஊழியராக இருப்பதற்கு முழுமனச் சுதந்திரத்தோடு அடி பணிந்து, இறை விருப்பத்திற்குத் தன்னையே
கையளிக்கின்றார்.
பழைய
ஏற்பாட்டில் ‘ஆண்டவரின் அடிமை’ என்கிற தகுதியானது, தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களுக்காகப் பணிசெய்ய அழைக்கப்பட்ட அனைவரையும் இணைக்கின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது.
ஆபிரகாம் (தொநூ 26:24), ஈசாக்கு (தொநூ 24:14), யாக்கோபு (விப 32:13; எசே 37:25), யோசுவா
(யோசு 24:29), தாவீது (2சாமு 7:8) மற்றும் சிலர். இறைவனின் உண்மையுள்ள பணியில் மக்களை
உருவாக்குகின்ற வேலையைச் செய்கின்ற இறைவாக்கினர்களும் குருக்களும் கூட ஊழியர்களே ஆவர்.
பலருடைய பாவங்களுக்கான மீட்பின் நம்பிக்கையில் கடவுளுடைய நம்பகத்தன்மையின் மாதிரியான
‘துன்புறும் ஊழியரின்’ பண்பை எசாயா புத்தகமானது உயர்த்திப்
பேசுகின்றது (ஒப்பிடுக. எசா 42:53). யூதர்களின்
மீட்புக்காகப் பரிந்து பேசுவதற்கு முன், “உம்முடைய ஊழியர்” (எஸ் 4:17) என்று தன்னையே பலமுறை அழைத்து கடவுளிடம் வேண்டுதல்
செய்த அரசி எஸ்தர் போன்ற சில பெண்களும் நம்பிக்கையின் மாதிரிகளாக இருக்கின்றனர்.
‘அப்படியே
ஆகட்டும்’ என்கிற
மரியாவின் வார்த்தைகள் அவரது முழுமையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறது
2.
அருளால் நிறைந்த மரியா, ‘ஆண்டவருடைய அடிமை’ என்று
தன்னையே அறிவித்ததன் வழியாகத் தனிப்பட்ட முறையில் அவரும் மற்றும் ஒட்டுமொத்தமாக எல்லா
மக்களும் ஆண்டவர் எதிர்பார்க்கின்ற பணியை நிறைவேற்ற தன்னையே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென
விரும்புகின்றார். “இதோ, ஆண்டவருடைய அடிமை” என்கின்ற
வார்த்தைகள் தன்னைப் பற்றியே சொல்லவிருக்கின்ற ஒருவரை முன்னறிவிக்கின்றன. “மானிட மகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாக, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக்
கொடுப்பதற்கும் வந்தார்” (மாற் 10:45, ஒப்பிடுக. மத்
20:28). இவ்வாறு, தூய ஆவியானவர் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒன்றுபட்டதொரு மனப்பான்மையைக்
கொண்டு வருகிறார். இது ஊழியர் என்கின்ற வகையில், தனது மகனின் பணியில் உடன் நடப்பதற்காக
அவரது தாய் என்கின்ற பங்கை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கின்றது.
இயேசுவின்
வாழ்வில் பணி செய்வதற்கான எண்ணமானது நிலையானதாகவும் வியப்பானதாகவும் இருக்கின்றன. கடவுளின்
மகன் என்கின்ற வகையில், அவர் பணிவிடை செய்யப்பட வேண்டும் என்று முறையாகக் கோரியிருக்கலாம்.
தானியேல் புத்தகம் கூறுகின்ற, “எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட
வேண்டும்” (தானி 7:14) என்கின்ற வார்த்தையின்படி,
‘கடவுளின் மகன்’ என்கின்ற பட்டத்தைத் தமக்குத்தாமே குறிப்பிடுகின்றார்.
அவர் மற்றவர்களைவிடத் தாம் சிறந்தவர் என்று கோரியிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக,
முதன்மை இடத்தைப் பிடிப்பதற்கான சீடர்களின் பதவி வெறியைச் சுட்டிக்காட்டி அவர்களுடைய
மனநிலைக்கு எதிராகவும் (ஒப்பிடுக. மாற் 9:34), பாதம் கழுவும்பொழுது இருந்த தூய பேதுருவின் மறுப்பு மனநிலைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றார்
(ஒப்பிடுக. யோவா 13:6). இவ்வாறு, இயேசு பணிவிடை செய்யப்பட விரும்பவில்லை; மாறாக, அவரின்
வாழ்வையே முழுமையாக மீட்புப் பணிக்காகக் கொடுத்து முழுமையானதொரு பணியைச் செய்ய விரும்புகின்றார்
என அறியலாம்.
3.
மேலும், வானதூதரின் அறிவிப்பில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதையை மரியா அறிந்திருந்தாலும்,
அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், ‘இறைவனின் ஊழியர்’ என்றே
அறிவிக்கின்றார். இப்பணியின் அர்ப்பணிப்பில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்விற்கும்,
எலிசபெத்தம்மாவைச் சந்திக்கும் நிகழ்விற்கும் இடையேயான ஓர் இணைப்பாக, தனது அண்டை வீட்டாருக்குப்
பணி செய்வதற்கான நோக்கத்தையும் அவர் வைத்திருந்தார். எலிசபெத்தின் கர்ப்பம் பற்றி வானதூதர்
வழியாகத் தெரிந்துகொண்ட மரியா, அவரின் உறவினரான எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்க
உதவுவதற்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்க யூதேயாவிற்கு விரைந்து (லூக் 1: 39) புறப்பட்டுச்
செல்கின்றார். இவ்வாறு எல்லாக் காலகட்டங்களிலும் வாழும் கிறித்தவர்களுக்குப் பணி செய்வதன்
முன்மாதிரியாக மரியா விளங்குகின்றார்.
“உம்
சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்ற வார்த்தைகள், ஓர்
ஊழியர் என்று கூறித் தன்னையே கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும்
ஒரு நபரை நம் கண்முன் கொண்டு வருகின்றன. நற்செய்தியாளர் லூக்கா பயன்படுத்துகின்ற genoito- ‘அப்படியே ஆகட்டும்’ என்கிற ஒருவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள்,
தெய்வீகத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி
அத்திட்டத்தைத் தனதாக்குவதில் அவர் வெளிப்படுத்திய அவரின் உறுதியான எண்ணத்தையும் காட்டுகின்றது.
இறைவனின் விருப்பத்திற்கு
இணங்குவதன் வழியாக, மரியா கிறிஸ்துவின் மனநிலையை
முன் நிகழ்த்திக் காட்டுகின்றார்
4.
இறைத்திட்டத்திற்கு இணங்குவதன் வழியாக மரியா கிறிஸ்துவின் மனநிலையை முன்குறித்துக்
காட்டி, அதைத் தனதாக்கிக் கொள்கின்றார். அந்தக் கிறிஸ்துவின் மனநிலையானது எபிரேயருக்கு
எழுதப்பட்ட கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது: “பலியையும் காணிக்கையையும் நீர்
விரும்பவில்லை; ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்... எனவே நான் கூறினேன்...
உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்”
(எபி 10:5-7; திப 40-41, 7-9).
இவ்வாறே,
மரியாவின் பணிவும் கல்வாரி வரை இயேசு தமது பொது வாழ்வின்போது வெளிப்படுத்தியதையே அறிவிக்கின்றது
மற்றும் முன்குறிக்கின்றது. அதாவது கிறிஸ்து, “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும்
அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு”
(யோவா 4:34) என்று கூறுவார். இயேசுவின் இந்த வார்த்தைகளைத் தனது வாழ்வு முழுவதுமே தந்தையின்
விருப்பத்தை எழுச்சியூட்டக் கூடியதொரு கொள்கையாக மரியா ஆக்குகிறார். மேலும், தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்ற தேவையான பலத்தை அதில் தேடுகின்றார்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பின் பொழுது, கிறிஸ்துவின் பணியைக் குறிக்கும் தியாகத்தைப் பற்றி மரியாவுக்கு
இன்னும் தெரியவில்லை என்றாலும், சிமியோனின் தீர்க்கதரிசனம் தன் மகனின் சோகமானதொரு முடிவைக்
காண அவருக்கு உதவி இருக்கும் (ஒப்பிடுக. லூக் 3: 34-35). இருப்பினும், கன்னி மரியா
நெருக்கமானதொரு பகிர்வின் வழியாகத் தன்னைக் கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்துகிறார். இறைவனின்
விருப்பத்திற்கு முழுவதும் கீழ்ப்படிந்ததன் வழியாக, அந்தத் தெய்வீக அன்பானது அவரின்
வாழ்விற்காகத் திட்டமிடக்கூடிய அனைத்தையும், அவரது ஆன்மாவைக் குத்திக் கிழிக்கும் அந்த
‘வாளையும்’ ஏற்று வாழ மரியா தயாராக இருக்கின்றார்.
மூலம்:
John Paul II, Mary offers sublime model of service, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 11 September 1996, p. 15.