எண்ணும் எழுத்தும் இரு கண் என்பர் - வாழ்வில்
எளிமையும்
தியாகமும் ‘நல்ல கண்ணு’ என்போம்!
தமிழ்நாட்டு
அரசியல் வானில் ஒரு நூற்றாண்டு காலம் அப்பழுக்கற்ற நேர்மையோடும், சமரசமற்ற உறுதிப்பாட்டோடும் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஒளி அணைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவு என்பது, ஒரு தனிமனிதரின் முடிவு அல்ல; அது நேர்மையெனும் அறத்தின் ஒரு சகாப்தம் நிறைவுற்ற தருணம்.
1925-ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 26-ஆம் நாள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தின் செம்மண்ணில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக்காலத்திலேயே இந்தியத் தேசத்தின் விடுதலைக் கனலை நெஞ்சில் சுமந்தார். தனது 15-வது வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, 18-வது வயதில் முறைப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அன்று அவர் ஏந்திய செங்கொடி, அவர் இறுதி மூச்சுவரை ஒருபோதும் தாழ்ந்ததில்லை என்பதே பேருண்மை.
சுதந்திரப்
போராட்டக் காலத்திலும், அதன் பின்னரும் திரு. நல்லகண்ணு அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் கல்நெஞ்சையும் கரைக்கக்கூடியவை. 1949-இல் தலை மறைவு வாழ்க்கையில் இருந்தபோது, காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். ‘மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுவோம்’
என்று மிரட்டியபோதும், சக தோழர்களைக் காட்டிக்கொடுக்க
மறுத்த மாவீரன் இவர்!
ஆத்திரமடைந்த
காவல்துறை அதிகாரி, இவரது கையில் விலங்கிட்டு, தலைகீழாகத் தொங்கவிட்டு, மீசையையும் கன்னத்தையும் தீயிட்டுக் கொளுத்திய அந்த வன்முறைச் செயல், இவர் மீசை வளர்க்காததற்கான வரலாற்றுச் சாட்சியானது. நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, தன் இளமையின் ஏழு ஆண்டுகளைச் சிறைக்கதவுகளுக்குப் பின்னே கழித்தபோதும், ‘மக்களுக்காகத் தியாகம் செய்வதில் ஒரு பேரின்பம் உண்டு’ என்று கொண்ட கொள்கையில் பாறையென
உறுதியாக நின்றார்.
“நல்லகண்ணு போன்ற தலைவர்கள் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லையே” என்பது
அரசியல் விமர்சகர்களின் கசப்பான ஆதங்கமாக இருக்கலாம். 1967, 1977 சட்டமன்றத் தேர்தல்களிலும், 1999 மக்களவைத் தேர்தலிலும் களம் கண்டார். ஆனால், வெற்றி கைகூடவில்லை. உண்மையில் தோற்றது நல்லகண்ணு அல்ல; தகுதியான ஒரு தலைவனை அடையாளம் காணத் தவறிய சமூகமே!
சாதியப்
பிடிப்புகளும் பணபலமும் தாண்டவமாடும் தேர்தல் அரசியலில், கொள்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு துறவிக்கு இடமில்லாமல் போனது காலத்தின் முரண். இருப்பினும், சட்டப்பேரவைக்குச் செல்லாமலேயே தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பல போராட்டங்களை இவர்
முன்நின்று நடத்தினார்.
எளிமைக்கு
ஓர் இலக்கணம் இவர். இவருடைய எளிய வாழ்க்கை நவீன காலத்து அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பாடம். இன்று பஞ்சாயத்துத் தலைவர் கூட சொகுசு காரில் வலம் வரும் வேளையில், 13 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தும், ஒரு சிறிய வாடகை வீட்டிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர் இவர்.
தனது
80-வது பிறந்த நாளின்போது கட்சித் தொண்டர்கள் அன்பளிப்பாக வழங்கிய ஒரு கோடி ரூபாயை அப்படியே கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் இவர். 2022-இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதையும், அதன் பத்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பொதுநிதிக்கே வழங்கிய இந்தப் பெருந்தன்மை ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ என்ற
சங்கத் தமிழ் வரிகளுக்குச் சான்றாக அமைந்தது.
தோழர்
நல்லகண்ணு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றித் தங்கள் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்
அவர்கள் விடுத்த செய்தியில், “எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு’
என்று முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட மகத்தான தலைவர் மறைந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது” என்று
குறிப்பிட்டுள்ளார். மேலும், “கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை இவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமையே. தமிழினத்தின் ஈடு இணையற்ற தியாகச் சுடரான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்”
என்று முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காங்கிரஸ்
கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, “தமிழ்நாட்டு அரசியலில் அரிதாகிப்போன நேர்மை மற்றும் தூய்மையின் வரலாற்றுச் சாட்சியாகத் திகழ்ந்தவர் நல்ல கண்ணு; அவரது மறைவு சமூக நீதிக்கான போராட்டங்களுக்குப் பேரிழப்பு”
என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, “எங்கள் இயக்கத்தின் இதயம் நின்றுவிட்டது; கடைசி மூச்சு வரை செங்கொடி ஏந்திய ஒரு மாபெரும் போராளியை இழந்து தவிக்கிறோம்” என்று
இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல்
போராட்டங்களுக்கு அப்பால், அவருடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்த போராட்டமாக இருந்தது; தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் காப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க, 80 வயதைக் கடந்த நிலையிலும் அவரே நேரில் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடித் தடை பெற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டமாகட்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாகட்டும், நல்லகண்ணுவின் குரல் எப்போதும் முதல் குரலாக ஒலித்தது.
“பார்வை ஒரு கண்ணில் குறைந்தாலும், அகக்கண் கொண்டு மக்கள் நலனைக் காண்பவர்”
என்று போற்றப்பட்ட நல்லகண்ணுவின் 101 ஆண்டுகாலப் பயணம் இன்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் தியாகம் ஆகிய விழுமியங்கள் தமிழ்நாட்டு அரசியலின் திசைக் காட்டியாக என்றும் நிலைத்திருக்கும். அதிகாரத்தின் நிழல்படாத, ஆடம்பரத்தின் வாடை தீண்டாத ஒரு மகத்தான மனிதரைத் தமிழ்நாடு இன்று இழந்து நிற்கிறது. அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கலாம்; ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் ஆயிரமாயிரம் புதிய நல்ல கண்ணுகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது உடல் அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படும் வேளையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அவருக்குச் ‘செவ்வணக்கம்’ செலுத்துகிறது.
இவ்வேளையில்,
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று’
(குறள் 236)
எனும்
ஐயன் வள்ளுவரின் வாக்கே நம் சிந்தையில் எழுகின்றது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்